பக்கங்கள்

வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்


பிற்காலச் சோழர்களின் மூன்று பெருங் கலைக்கோயில்களில் ஒன்றான தாராசுரம் கோயிலை நேற்று ஒருவழியாக பார்த்தேவிட்டேன். தஞ்சைப் பெரியகோவிலையும், கங்கைகொண்ட சோழபுரக் கோயிலையும் ஏற்கனவே பார்த்தாகிவிட்டது. இது மட்டும் தட்டிப்போய்க்கொண்டே இருந்தது. சென்ற ஆண்டு பிப்ரவரியில் காரைக்காலில் அண்ணன் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு கும்பகோணம் வரும்வழியில் என் புதிய திறன்பேசியை தொலைத்துவிட்டேன். அது தொலைந்ததைவிட அதில் ஏற்றப்பட்டிருந்த தகவல்களின் பாதுக்காப்பு என்னை நிம்மதி இழக்கச் செய்ததால் தாரசுரம் செல்லாமலேயே சென்னை வந்துவிட்டேன். இவ்வாண்டு நேற்று மீண்டும் காரைக்கால் சென்றிருந்தேன். அங்கிருந்து மதியம் பேருந்து ஏறி கும்பகோணம் வரும்போது அந்திசாயும் நேரமாகிவிட்டது. நான் ஏறிய பேருந்து 60 கி. மீட்டருக்கு இரண்டரை மணிநேரம் எடுத்துக்கொண்டது. சென்ற ஆண்டும் இவ்வாறே ஆனது. இதற்கு நான் மயிலாடுதுறை வழியாகவே கும்பகோணம் சென்றிருந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். மேலும் காரைக்கால் – கும்பகோணம் வழித்தடத்தில் பேருந்துகளும் குறைவு. புதுச்சேரி யூனியன், நாகை மாவட்டம், திருவாரூர் மாவட்டம் இறுதியாக தஞ்சை மாவட்டம் என நான்கு அரச நிர்வாக பகுதிகளை கடந்து வரவேண்டியதாகிவிட்டது. அரசாலாறு, நாட்டாறு மேலும் அவற்றின் கால்வாய்களில் தண்ணீர் நிறைய ஓடுகிறது. பல இடங்களில் நெல் வயல்கள் செழிப்புற்றிருந்தன. பனங்காடை (Indian Roller), பஞ்சுருட்டான் (Green Bee eater), கழுகு என பறவைகள் பலவற்றை வழியில் பார்க்க நேர்ந்தது. ஆயினும் மனம் தாராசுரத்திலேயே லயித்திருந்ததாலும், தொடர்ந்த பயணங்களால் தூக்கம் தொலைந்த சோர்வாலும் மனம் இவற்றில் ஈடுபடவில்லை. ஒருவழியாக கும்பகோனத்தை மாலை 6 மணிக்கு பேருந்து அடைந்தது. ஓட்டமும் நடையுமாக  எதிரிலிருக்கும் நகரப் பேருந்து நிலையத்தை அடைந்து கிளம்பத் தயாரக இருந்த தாராசுரம் பேருந்தை பிடித்தேன். தாராசுரத்தை அடையும் போது மாலை 6.15. நடத்துனர் என்னை கோயிலினருகிலேயே இறக்கிவிட்டார். 






முதல்பார்வையில் கோயில் என்னை ஈர்க்கவில்லை. தஞ்சை, மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு நிகரான பிரம்மாண்ட விமானம் தாராசுர ஐராவதீஸ்வரருக்கு இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அந்தப் பிரம்மாண்டம் நம்மை முதல் பார்வையிலேயே கட்டிப்போட்டுவிடும். எனது முதல் DSLR கேமராவில் நான் படம் எடுக்கும் முதல் பழங்கால கோயில் இதுவே. நமது வரலாற்றுத் தொண்மை வாய்ந்த கோயில்களை புகைப்படம் எடுக்கவேண்டும் என்பதும் நான் DSLR வாங்க முதன்மையான காரனங்களில் ஒன்று. கேமாராவை வெளியில் எடுக்கும்போது கிட்டத்தட்ட இரவாகிவிட்டது. மஞ்சள் ஒளி விளக்குகளால் கோயில் அதன் அழகின் வேறொரு பரிமாணத்தை காட்டியது. கோனார்க் சூரியன் கோயிலைவிட சிறிய அளவிலான தேர்ச்சக்கரங்கள் கொண்ட முகப்பு மண்டபம். தேரை கிழக்கு மேற்கு பகுதிகளில் யானைகளும், வடபுறம் குதிரைகளும் இழுக்கும்படியான சிற்ப வேலைப்பாடுகள். குதிரைகளின் முகங்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. முகப்பு மண்டபத்தின் தூண்களின் அடிப்பகுதிகளில் யாளிகள் உள்ளன. ஒருவகையில் யாளிகளே தூண்களான மண்டபம். மற்ற கோயில்களில் யாளிகள் தூண்களின் மேற்புறத்தில் தனியாக நீட்டிக்கொண்டிருக்குமாறு செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு யாளிகளின் தலைப்படுதியே தூண்களாக மாற்றப்படிருக்கிறது. எந்த ஒரு குறிக்கோளுமில்லாமல் பார்க்கும் சிற்பங்களையெல்லாம் படம் எடுத்துக்கொண்டிருந்தேன். எந்தச் சிற்பத்தையும் உற்று நோக்கி அறிய முற்படும் முன் புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என்ற ஆசையே மேலோங்கி இருந்தது. இரவாகிவிட்டதும், கோயில் நடை சாத்திவிடுவார்களே என்ற அச்சமும், அவற்றை எல்லாம் விட இந்த சிற்பங்களை பற்றி பெரிதாக ஏதும் தெரியாது என்பதும் இதற்குக் காரணம். இந்த நுண்ணிய சிற்பங்களே இந்தக்கோயிலை தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரக் கோயில்களிலிருந்து வேறுபடுத்துகிண்றன. இவ்வாளவு நுண்ணிய சிற்பங்களைக் கொண்ட தூண்கள் மற்ற இரு புகழ்பெற்ற பிற்கால சோழர்களின் கலைப்படப்புகளில் இல்லை என்றே நினைக்கிறேன். 




கோயிலின் வெளிப்புறகாரத்தில் பாவப்பட்டுள்ள கருங்கற்களில் பல உடைந்த சிற்ப வேலைப்பாடு கொண்ட தூண்களின் பகுதிகளாக உள்ளன. இந்தக் கோயிலை சமீபகாலத்தில் சீரமைத்தபோது பொருத்தமுடியாத தூண்களை இவ்வாறு பாவுகற்களாக பயன்படுத்திக் கொண்டனர் போலும். கோயிலின் ஈசான மூலையில் பூட்டப்படிருந்தஒரு மண்டபம் உள்ளது. அருகிலிருந்த காவலாளி இதில் ஓவியங்கள் உள்ளன பார்க்கிறீர்களா என்று உடைந்த ஆங்கிலத்தில் கேட்டார். சரி என்றவுடன் திறந்து உள்ளே கூட்டிப்போனார். டார்ச் வெளிச்சத்தில் கோயிலின் சிதிலமைடைந்த சிற்பங்களை காட்டி கோயில் வரலாற்றை அவரது ஆங்கிலத்தில் சொல்லத்தொடங்கினார். தமிழிலேயே சொல்லுங்கள் என்றதும், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தாராசுரத்திலிருந்து டெல்லி என அதிகாரம் மாறியது என ஏதேதோ முன்னுக்குப் பின் முரணாக அவரது ஆங்கிலத்திலேயே பேசினார். அந்தக்கால தமிழர்கள் இவ்வாறு ஆங்கிலத்திலேயே பேசினார்கள் என்றார். இப்போது இந்த இடம் பவர் சோப்புக்காரகளுக்கு பட்டா போட்டுவிடப்பட்டுள்ளது, கோர்ட்டில் கேஸ் நடக்கிறது என்று உளற ஆரம்பித்துவிட்டார். அவரிடமிருந்து தப்பித்துவர பெரும்பாடாகிவிட்டது. பாவம் என்ன மனக்கோளாறோ அவருக்கு. பேச்சின் நடுவே லட்சுமணன் என்று அடிக்கடி சொன்னார். அவரது பெயரோ என்னமோ!











கோயிலின் அர்த்த மண்டபம்(?) மிகச்சாதாரணமாக இருக்கிறது. முகப்பு மண்டபதிலுள்ள தூண் சிற்பங்கள் இங்கு இல்லை. கேமாராவுடன் தயங்கி நின்ற என்னை உள்ளே வாங்க என்று குருக்கள் அழைத்தார். லிங்கத்தை கர்ப்பக்கிருகம் அருகில் சென்று பார்க்கலாம். லிங்கம் கங்கை கொண்ட சோழபுரத்தை விட சிறியதுதானே என்றதற்கு இது நான்காவது பெரிய ஆவுடை என்று குருக்கள் சொன்னார். முதலில் கங்கை கொண்ட சோழபுரம், இரண்டாவது தஞ்சை பெரியகோயில், மூன்றாவது ஏதோ ஒரு கோயில் பெயர் சொன்னார் மறந்துவிட்டேன். ஆவுடைக்கு தீபாராதனை காட்டி பிரசாதம் வழங்கினார். அவரது மன திருப்திக்காக நெற்றியில் இட்டுக்கொண்டேன். சென்னை போரூர் பகுதியிலிருந்து வருகிறேன் என்றதும் தன் சித்தப்பா மற்றும் பல உறவினர்கள் அங்கு இருப்பதாகச் சொன்னார். பெண் எடுத்தது மாங்காடு என்றார். 250 வருடங்களுக்கு முன்பு எங்களது பூர்வீகமும் மாங்காடுதான் என்றேன் அவரிடம். 30 களில் இருக்கும் அழகிய குருக்கள். வெளியே தெற்கு பார்த்தவாறு பெரிய நாயகி அம்மன் கருவறை. அங்கிருந்த குருக்களிடம் மூன்று பிற்கால சோழ்ர்கால கோயில்களிலும் அம்மன் பெயரும் பெரியநாயகிதானே என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். கருவறை மூடியிருந்தாலும் கோயிலின் பிறபகுதிகளை நீங்கள் எப்போது வந்தாலும் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்றார். கோயிலை விட்டு வெளிவந்ததும் வடபுறம் மற்றொரு தனிக்கோயில் இருக்கக் கண்டு அங்குசென்றேன். அதற்குள் கோயில் குருக்களும், காவலாளியும் கதவைப் பூட்டிக்கொண்டிருந்தனர். இது அம்மன் கோயில் என்றும், அம்மன் பெயர் தெய்வநாயகி என்றும், இதுவே பிரதான அம்மன் என்றும் சொன்னார். 

வியாழன், 24 அக்டோபர், 2013

கங்கைகொண்ட சோழபுரம்

அண்மையில் உடன் பணிபுரியும் நண்பர் ஒருவரது திருமணத்திற்காக பெரம்பலூர் மாவட்டம் தொழுதூர் அருகிலுள்ள கிராமம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். திருமணம் முடிந்தவுடன் அங்கிருந்து கங்கைகொண்ட சோழபுரம், வடலூர், சிதம்பரம் சென்றுவிட்டு சென்னை திரும்புவதாகத் திட்டமிட்டிருந்தேன். கூகிள் வரைபடம் மூலம் வழிகளையும் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். அதன்படி ஒன்றரை மணிநேர பயணத்தில் கங்கைகொண்ட சோழபுரம். ஆனால், அக்கிராமத்திலிருந்து ஜெயங்கொண்டம் செல்ல பேருந்து இல்லை. அரியலூர் சென்றுதான் போகவேண்டும் எனச்சொன்னார்கள். அதற்கும் அதிக பேருந்து வசதியில்லை. எனவே பெரம்பலூர்- அரியலூர்-ஜெயங்கொண்டம்-கங்கைகொண்ட சோழபுரம் என்பதாக என் திட்டம் மாறியது. காலை 10 மணிக்கு பெரம்பலூர் பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர் பேருந்தைப் பிடித்தேன்.

வழியெங்கும் சிறிய கிராமங்கள். புள்ளிவிபரங்களின்படி தமிழகம் இந்தியாவிலேயே நகரமயமாகிவிட்ட மாநிலம். பெரம்பலூர் - அரியலூர் மாவட்டப் பகுதிகள் தமிழகத்தின் 'பின்தங்கிய' பகுதிகளில் ஒன்று. சென்னையில் ஹோட்டல்களில் வேலைபார்க்கும் சிப்பந்திகளில் பலர் இங்கிருந்தே வருகின்றனர். அன்று திருமண நாள். வெயிலில் உழைத்து கறுத்து மெலிந்த கிராமத்து எளிய மனிதர்கள் பேருந்தில் அதிகமிருந்தனர். ஆண்கள் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை; பெண்கள் அளவான ஒப்பனையுடன் பட்டுச் சேலைகளில்.

கிழக்கே செல்லச் செல்ல நிலக்காட்சி மாறிகொண்டே இருந்தது. மரங்களின் அடர்த்தி அதிகமாகியது, கூடவே பசுமையும். பல இடங்களில் மூங்கில் புதர்கள் இருந்தன. மூங்கில் எனக்குப் பிடித்த மர வகைகளில் ஒன்று. என் வீட்டிலும் ஒன்று வைத்துள்ளேன். வீடுகளில் வளர்க்கப்படும் மூங்கிலைவிட இயற்கையாக வளரும் மூங்கில் மரங்கள் மிக அழகு. இங்கு இவற்றின் வளர்ச்சி கட்டுப்படுத்தப் படுவதில்லையாதலால் புதர்களாக வளருகின்றன. ஏற்காடு சென்றிருந்தபோதும் நெடிதுயர்ந்த இவற்றின் அழகில் மயங்கியிருக்கிறேன். வழியெங்கும் தேக்கு மரங்களும் பயிரிட்டிருந்தார்கள். அண்மையில் மழை பெய்திருந்ததால் குட்டைகள், குளங்கள் பழுப்பு நிற தண்ணீரால் பெருகியிருந்தன. ஆலம் விழுதுகள் அதை அள்ளிப் பருகுவதுபோல் தொங்கிக்கொண்டிருந்தன. சில இடங்களில் களிமண் நிலம் மாறுபட்டு செம்மண் நிறைந்திருந்தது.

அரியலூர் பேருந்து நிலையத்தையடைய சிறிய சாலைகள் வழியே பேருந்து சுற்றி சுற்றி சென்றுகொண்டிருந்தது. நாங்குநேரி ஊருக்குள் நுழைந்த பிரமையை அது அளித்தது. நான் வந்த பேருந்து நடத்துனரிடம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வழிகேட்டேன். அவர் ஓட்டுநரிடம் கேட்டார். சிறிது யோசனைக்குப் பின்னர் ஓட்டுநர் மீன்சுருட்டி போய் போகலாம் என்றார். எனக்கு அது தவறாகத் தெரிந்தது. எங்கள் உரையாடலைக் கேட்டபடி இறங்கிகொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி தானும் அங்குதான் செல்வதாகக் கூறினார். உடனே ஓட்டுநர் அந்த அம்மாவுடன் செல்லுங்கள் எனக் கைகாட்டினார்.

கங்கைகொண்ட சோழபுரம் அங்கிருந்து 40 கி.மீ தான். உலகப் புகழ்பெற்ற அவ்விடத்திற்கு பேருந்து ஊழியர்களுக்கே வழி சொல்லத் தெரியவில்லையே என அவர்களின் வரலாற்றுணர்வை மனதில் திட்டிகொண்டே அப்பெண்மணியுடன் நடந்தேன். அக்கிராமத்துப் பெண்மணிக்கு ஒரு அந்நிய ஆடவன் உடன் நடந்து வருவது அசெளகரியத்தைக் கொடுத்திருக்கும்போல. சற்று ஒதுங்கியே நடந்தார். சென்னைவாசியான  எனக்கு அது உரைக்க சற்றுநேரம் பிடித்தது. பின்னர் ஒதுங்கிக்கொண்டேன். அங்கிருந்து ஜெயங்கொண்டம் பேருந்தை பிடித்தேன். வழியில் உடையார் பாளையம் என்று சற்று பெரிய ஊர் வந்தது. ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இறங்கிய உடன் என் அருகில் அமர்ந்து பயணம் செய்த ஒரு கிராமத்து இளைஞர் கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் பேருந்தைக் கைகாட்டினார்.

பேருந்தில் நிற்கக்கூட இடமில்லாமல் கூட்டம். முழுதும் கிராமத்து எளிய மனிதர்கள். இந்த எளிய மனிதர்களின் முன்னோர்களே தென்கிழக்காசிய நாடுகளை வென்ற ராஜேந்திர சோழனின் படை வீரர்கள். பேருந்து கங்கைகொண்ட சோழபுரத்தை நெருங்க நெருங்க ஒருவிதமான பரவசம் தொற்றிக்கொண்டது. கங்கைகொண்ட சோழபுரத்தில் இறங்கியபோது நண்பகல் மணி ஒன்று. சிறிய ஊர்; சாலையின் மேல் நான்கைந்து பெட்டிக்கடைகள். எதிர்புறம் கோயில். பசித்தது, ஆனால் உணவகம் ஏதும் தென்படவில்லை. வாசலிலேயே இருந்த கடையில் மாசா வாங்கிக் குடித்தேன். காலிக் குப்பியை போட குப்பைத் தொட்டியைத் தேடியபோது, நெகிழி பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது என கோயில் வாசலில் இந்திய தொல்பொருள் துறையின் அறிவிப்புப் பலகை கண்ணில்பட்டது. அக்கடையில் விற்கப்படும் எல்லாப் பொருட்களுமே நெகிழியால் பொதியப்பட்டவைதாம்!

கோயிலைப் பார்த்த கணம் தோன்றியது தஞ்சைப் பெரியகோவிலைப் போல் இது கம்பீரமாகத் தோன்றவில்லை என்பதே. ஆனால் அடுத்த மூன்று மணிநேரங்கள் இக்கோயிலின் அழகில் நான் ஒன்றியிருக்கப்போகிறேன் என அப்போது எனக்குத் தெரியாது! வாசலில் இரண்டு பெரிய கல்தூண்கள். பின்னர் ஒரு மொட்டைக் கோபுரம். அதன் பின் பெரிய நந்தி. பின்னர் மையக் கோயில், கருவறையின் மேல் தஞ்சைக் கோயிலைப் போன்றே உயர்ந்த விமானம்.

ஆனால் தஞ்சைப் பெரியகோவிலைப் போல் கலசத்தை நோக்கி ஒரே சீராக கூம்பிச் செல்லாமல் மிக உயரமான சதுரமான அடித்தளத்திலிருந்து நுனியை நோக்கிக் கூம்பிச் செல்லும் கோபுரம். அதனால் 160 அடி உயர கோபுரம் மாதிரியே தெரியவில்லை. தஞ்சைப் பெரியகோவில் கோபுரமே உயரத்திலும், அழகிலும் இதைவிடச் சிறந்தது.

புரட்டாசி வெயில் மண்டையைப் பிளந்தது. (புரட்டாசி பொன் உருக வெயில் காயும்; மண்ணுருக மழை பெய்யும்) வெறுங்காலில் கொதிக்கும் கிரானைட் கற்களில் கால் வைக்கமுடிவில்லை. தொல்பொருள் துறையினர் வளர்க்கும் புல்வெளி இவ்வகையில் மிக உதவிகரமாக இருந்தது. தெளிவான நீல வானத்தின் பிண்ணனியில் கோயில் பிரம்மாண்டமாக வீற்றிருந்தது. புகைப்படங்கள் எடுப்பதற்கு உகந்த காலநிலை என மனம் மகிழ்ந்தது. பிரம்மாண்டமான நந்தி சுதையினால் செய்யப்பட்டது. கோவிலின் உள் வாயிலுக்குச் செல்லும் உயரமான மண்டபத்தின் மேலேறி பார்க்கும்போது அதன் பிரம்மாண்ட முகத்தினருகில் இருப்போம்.

வாசலின் இருபுறமும் பெரிய வாயிற்காப்பாளர்கள். நடை சாத்தியிருந்ததால் ஆவுடையைப் பார்க்க முடியவில்லை. தென்புறத்தில் அடித்தளம் மட்டுமே எஞ்சியுள்ள ஒரு கல் கட்டுமானம் உள்ளது. அதனையடுத்து தஞ்சைக் கோவிலைப் போன்றே திறந்தவெளியில் பல பரிவாரக் கோவில்கள். பிரகாரச் சுவற்றில் அருமையான சிற்பங்கள் - அர்த்தநாரீஸ்வரர், நடராஜர், ஆலமர்ச் செல்வன், லிங்கோத்பவர், துர்க்கை, விஷ்ணு எனத் தெரிந்த சிற்பங்களுடன் தெரியாத பல அழகான சிற்பங்கள்.
கங்கைகொண்ட சோழபுரச் சிற்பங்கள் தஞ்சைச் சிற்பங்களைவிட அழகானவை என்கிறார்கள். ஆனால், 6 ஆண்டுகளுக்கு முன் எனக்கு சிற்பங்கள் குறித்த அறிவு அவ்வளவு இல்லையாதலால் தஞ்சைச் சிற்பங்களை உன்னிப்பாக கவனிக்கவில்லை. ஆகவே என்னால் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை.
தஞ்சை சிற்பங்கள் ஆண் கருங்கல்லிலும், கங்கைகொண்ட சோழபுர சிற்பங்கள் பெண் கருங்கல்லிலும் செதுக்கப்பட்டவையாதலால் இங்கு சிற்பங்கள் நளினமானவை என பிற்பாடு நண்பர் கடலூர் சீனு சொன்னார்.
கோவிலின் வடபுற சுவற்றில் சிவன் தன் காலடியிலுள்ள மனிதனின் கொண்டையைப் பிடித்திருப்பது போல் ஓர் சிற்பம் காணப்பட்டது. அது ராஜேந்திர சோழனாக இருக்கலாம்.
பெரியநாயகி அம்மனின் கோவில் வடபுறம் தனியாக உள்ளது. அதன் முன்னே மற்றொரு சிதலமடைந்த கோவில். அதில் சில சிற்பங்களை வரிசையாக அடுக்கி வைத்திருந்தார்கள். அதனருகில் சில பயணிகள் கோவிலைக் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். அதில் வயதானவர் ஒருவர் சோழ ராஜாக்களுக்கு மண்டையில் மாசலாவேயில்லை, இருந்திருந்தா இப்படி கோயில்களைக் கட்டி பணத்தைச் சீரழித்திருப்பார்களா!? நல்லவேளை பிரிட்டிஷ்காரன் வந்து மேட்டூர் அணை கட்டியதால் இப்போது கும்பகோணம் பகுதியெல்லாம் விவசாயம் செய்யமுடிகிறது எனத் திருவாய் மலர்ந்தருளிக் கொண்டிருந்தார். அருகில் யாளி முகம் கொண்ட சிம்மக்கிணறு.
நம்மக்கள் அதனுள் நெகிழிக் குப்பிகளை வீசியெறிந்து தங்கள் வரலாற்றுணர்வை வெளிக்காட்டியுள்ளார்கள்.

இதற்கிடையில் நண்பர் கடலூர் சீனுவிடமிருந்து வடலூர் எப்போது வரப்போகிறேன் எனக் கேட்டு அழைப்பு. சோழர் சிற்பக்கலையின் உச்சமாக தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் என்ற வரிசையில் சொல்வார்கள். தாராசுரத்தைத் தான் இன்னும் பார்க்கவில்லை. தாராசுரம் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து அதிக தூரமில்லை. ஆயினும் முன்பே வடலூர், சிதம்பரம், சென்னை என பயணத்தைத் தீர்மானித்துவிட்டதால் தாராசுரம் செல்வதைத் தவிர்த்துவிட்டேன். கோவிலிலிருந்து வெளியேறும்போது மாலை நான்காகிவிட்டது. அடுத்த பயணம் வடலூரை நோக்கி.

மேலதிக புகைப்படங்களுக்கு...

சனி, 14 ஜனவரி, 2012

குன்றக்குடி அடிகளார் ஒரு சித்திரம்

யாரிடம் என்ன திறமைகள் இருந்தாலும் – அது பாரதியா இருந்தாலும் அவங்ககிட்டே காலத்தோட அழுக்கு கொஞ்சமாவது ஒட்டியிருக்கும்.. அப்படித்தான் பாரதிக்கும். அதையும் மீறி அவன் எப்படிச் செயல்பட்டிருக்கான்னு தான் பார்க்கணும். காலத்தில் நமக்குப் பிந்திக் கிடைச்ச வசதியிலிருந்தோ, சிந்தனையில் இருந்தோ அவங்களைப் பார்க்கக் கூடாது. பார்க்கிற ஒவ்வொருத்தர் கிட்டேயும் நம்முடைய சாயலைத் தேடிக்கிட்டிருக்கக் கூடாது..” - குன்றக்குடி அடிகளார்

நான் சிறுவனாகயிருக்கும் போதிருந்தே குன்றக்குடி ஆதினத்தின் முந்நாள் ஆதினகர்த்தர் பற்றி நல்ல விசயஙகளையே கேள்விப்பட்டிருக்கிறேன். மடாதிபதிகளில் அவர் த்னித்துவமானவர். அவரைப் பற்றி பத்திரிக்கையாளர் மணா எழுதியுள்ள இக்கட்டுரை ஓர் ஆவணம். படிக்கவும் சுவராசியமானது.

நினைவின் நிழல்கள் : 3 சமூகத்தைத் துறக்காத துறவி ; குன்றக்குடி அடிகளார் | நட்பு - தமிழ் சமூகத்தின் இணையமுகம்

வியாழன், 1 ஏப்ரல், 2010

சுப்ரமணிய பாரதியும் சில பழக்க வழக்கங்களும்

சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தேசிய நாட்டுப்புறவியல் ஆதரவு மையத்தில் தான் எடுத்த பாரதியைப் பற்றிய விவரணப் படத்தை திரு. அம்ஷன் குமார் திரையிட்டார். அதில் அவர் பாரதியாருடன் பழகியவர்களை நேரடியாகச் சென்று சந்தித்து பாரதியார் குறித்த அவர்களது அனுபவங்களை கேட்டறிந்து ஆவணப்படுத்தியிருக்கிறார். அவர் அந்த ஆவணப்படத்தை எடுத்தபோது அப்பெரியவர்கள் தொண்ணூறு வயதைத்தாண்டி விட்டிருந்தார்கள். ஆனால் பாரதியுடன் பழகும்போது அப்பெரியவர்களுக்கு பதினைந்து வயதிற்குள் தான் இருந்திருக்கிறது. அவ்விவரணப் படத்தை எடுத்த விபரம் பற்றியும் குறிப்பாக அவ்விரு பெரியவர்களைச் சந்தித்தது பற்றியும் அம்ஷன் குமார் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை அழியாச் சுடர்கள் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

நான் அப்படத்தை பார்த்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இருக்குமென்று நினைக்கிறேன். ஆனால் இக்கட்டுரையை வாசித்ததும் படக் காட்சிகள் என் கண் முன் விரிகின்றன. நவீன தமிழின் ஆகப் பெரும் கவியின் தனிப்பட்ட குணாதிசியங்கள் சிலவற்றை குறித்து அறிய அம்ஷன் குமாரின் விவரணப் படமும், இக்கட்டுரையும் சிறந்த சான்றாகும். கட்டுரையை வெளியிட்ட காலச் சுவடு இதழுக்கும் அதை மறுபிரசுரம் செய்த அழியாச் சுடர்கள் வலைத் தளத்திற்கும் நன்றி. பாரதியின் போதை பழக்கங்கள் ஏற்கனவே அறிந்தவைதான் எனினும் அதை பார்த்தவர்களின் நேரடிச் சாட்சியம் ஒரு மிகச் சிறந்த சான்றாதாரம் தானே. அதை ஆவணப்படுத்தாவிடில் பிற்காலத்தில் பாரதியார் ஒரு தெய்வப் பிறவியாகச் சித்தரிக்கப் படுவார். அதை உறுதிப்படுத்துவதுபோல் அவ்விவரணப் படம் முடிந்தவுடன் பாரதிய ஜனதாக் கட்சியின் இல. கணேசன் அம்ஷன் குமாரிடம் சென்று பாரதியின் போதைப் பழக்கவழக்கங்கள் குறித்த காட்சிகளை நீக்கிவிடுமாறு சொன்னார். அவரது வாதம், பாரதி போன்ற ஆளுமைகளின் தவறான பழக்க வழக்கங்களை குறிப்பிடுவதின் மூலம் அவர்களைச் சிறுமைப் படுத்துகிறோம் என்பதும், மேலும் பாரதி குறித்து எதிர்மறை விமரிசனம் வைப்பவர்களுக்கு மேலும் ஒரு ஆதாரத்தை அளிக்கிறோம் என்பதுமாகும். அம்ஷன் குமார் அதை ஆதரிக்கவில்லை. நானும் அம்ஷன் குமாரிடம் இப்படத்தைப் பார்த்தபின் எனக்கு பாரதியின் மேலுள்ள மதிப்பு அதிகமாகி உள்ளதே தவிர குறையவில்லை என்று சொன்னேன். இக்கட்டுரையில் அம்ஷன் குமார் அவருக்கு பலரிடம் இருந்தும் பாரதியின் போதை பழக்க வழக்கக் காட்சிகளை நீக்கிவிடும்படி வேண்டுகோள் வந்ததைப் பற்றியும் பதிவு செய்துள்ளார்.

என்னைப் பொறுத்தவரையில் ஞான ராஜசேகரன் எடுத்த பாரதி திரைப்படத்தைவிட (இளையராஜாவின் இசையைத் தவிர்த்து) அம்ஷன் குமாரின் விவரணப் படம் மிகுந்த வீச்சுடையது. விவரணப் படத்தையும், திரைப்படத்தையும் ஒப்பிடக் கூடாதுதான், ஆயினும் பாரதி போன்ற ஆளுமைக்கு அத்திரைப்படத்தைவிட விவரணப் படமே பெருமை சேர்க்கிறது என்பது என் புரிதல். இதன் குறுந்தகடுகளை அம்ஷன் குமார் அந்நிகழ்வில் பலருக்கும் நுறு ரூபாய்க்கு விற்றார். என் முறை வரும்போது காலியாகிவிட்டது. பணத்தைக் கொடுத்துவிட்டு நானே அவர் வீட்டில் வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று சொன்னேன். அவருக்கு எதற்கு சிரமம் என்ற நல்லாசையில்தான். என் சோம்பேறித்தனத்தால் போகவேயில்லை. அவரும் ஒருமுறையோ இருமுறையோ என்னை தொடர்புகொண்டார். தபாலில் அனுப்பட்டுமா எனக் கேட்டார். இல்லை நானே வருகிறேன் என்று சொன்னேன். பின்னர் அவரும் அழைக்கவில்லை, நானும் அதை மறந்தேபோய்விட்டேன். வேறு எங்காவது கிடைத்தால் வாங்கிவைக்க வேண்டும்.

இதை எழுதும்போது, எண்பதுகளில் எனது பெரியப்பா வீட்டிற்கு கடையம் சென்றபோது அவரது வீட்டிற்கு நேர் எதிரே தபால் அலுவலகமாக இயங்கிக் கொண்டிருந்த வீடுதான் பாரதியார் வீடு என்று எனது பெரியப்பா சொல்லி அவ்வீட்டை அதிசயமாகப் பார்த்திருக்கிறேன். அப்போது என் கையில் புகைப்படக் கருவி இல்லையே என இப்போது நினைக்கையில் வருத்தமாக உள்ளது. அன்று நான் கடையம் ஜம்பு நதி மணல் பரப்பில் ஏகாந்தமாக நடந்ததும் கூடவே நினைவிற்கு வருகிறது.

வெள்ளி, 26 மார்ச், 2010

தஞ்சைப் பெருவுடையார் கோவில் - சில குறிப்புகள்

நேற்று ஒரு வலைத்தளத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது இக் காணொளிக் காட்சியைப் பார்த்தேன். ஏற்கனவே டிஸ்கவரி தொலைக்காட்சியிலும், பிறிதொருமுறை மின்னஞ்சலில் யாரோ அனுப்பியும் இதைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் முழுமையாகப் பார்த்ததில்லை. எப்படி நாவல், சிறுகதை படிக்க ஒரு மனப்பதிவு வேண்டுமோ அப்படியே இது போன்ற வரலாற்று ஆவணங்களையும் பார்க்க படிக்க அதற்கென்று ஒரு மனநிலை அவசியம் வேண்டும். நம்ம ஊர் விட்டு வேறு ஊர் வந்தபின்புதான் அதற்கான மனநிலை எனக்கு வாய்க்கப் பெற்றது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடக்கூடிய இக்காணொளி ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோவில் அழகையும் அதன் கம்பீரத்தையும் குறித்து பேசும் அதே வேளையில்அது எவ்வாறு கட்டப்பட்டிருக்க வேண்டும், ஏன் அதை ராஜ ராஜ சோழன் கட்டுவித்தான் என்பதற்கான ஊகத்தையும் அளிக்க முயல்கிறது. வழக்கமாக மேலைத்தேய ஆராய்ச்சியாளர்கள் நம் பண்பாட்டை புரிந்துகொள்வதற்கான முயற்சிதான் எனினும் சில காரணங்களுக்காக இதை இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் அவசியம் பார்க்க வேண்டும்.

காட்டுக்குள் மறைந்துகிடந்த கஜராஹுவா கோயில்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் கண்டுபிடிப்பதிலிருந்து ஆரம்பமாகும் இக் காணொளி பின்னர் இந்தியா என்றாலே தாஜ்மகால் மற்றும் வட இந்தியா என்றளவிலேயே பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கொண்டிருப்பது தவறு என்றும் தென்னிந்தியாவிலேயே இன்னும் நிறைய ஹிந்துக்களின் பண்பாட்டுச் சின்னங்கள் உள்ளன என்ற ரீதியில் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து தஞ்சைப் பெருவுடையார் கோவிலை வாநூர்தியிலிருந்து எடுக்கப்பட்ட காணொளி மூலம் காட்டுகிறார்கள். பிரமிக்க வைக்கும் காட்சியிது. இத்தகைய காட்சிகளுக்காகவே இதைப்பார்க்கலாம்.
கோவில் கோபுர உச்சியில் ஒவ்வொன்றும் நாற்பது டன் எடையுள்ள இரண்டு கிரானைட் கற்களாலான விமானத்தை எவ்வாறு ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அவ்வளவு உயரத்தில் கொண்டு வைத்திருப்பார்கள் என்பதை சில யானைகளைக் கொண்டு ஒரு ஊகம் மூலம் நிகழ்த்திக்காட்ட முயற்சித்திருக்கிறார்கள். நான் மிகச் சிறிய வயதில் இருந்தபோது என் தந்தை பெருவுடையார் கோவிலைக் கட்டுவிக்க ராஜ ராஜன் பல மைல்கள் தொலைவிலிருந்து மலையைப் பெயர்த்து கல்கொண்டுவந்தான் என்று சொல்லியிருக்கிறார்கள். பின்னர் சாரப் பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் கட்டி அதை கோபுர உச்சியில் வைத்தான் என்பதையும் அறிந்திருக்கிறேன். ஆனால் இதில் வெறும் 25 டன் எடையுள்ள ஒரே ஒரு கிரானைட் கல்லை இரண்டடி நகர்த்த மூன்று யானைகளும் பல மனிதர்களும் படும் பிரம்மப் பிரயத்தனத்தைப் பார்த்தபோது நம் முன்னோர்களின் தொழில் நுட்ப அறிவை வியந்து எனக்கு பொல பொலவென்று கண்ணீர் வந்துவிட்டது. நமது அறிவியலும், கலைகளும் ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எவ்வளவு உச்சத்தில் இருந்திருக்கின்றன! இவ்விவரணப் படத்தின் இடையிடையே இவ்வாறு ராஜ ராஜன் இந்தக் கோவிலைக் கட்டுவிக்கும்போது ஐரோப்பா இருண்டு கிடந்தது என்று வரும் வருணனைகளும் நம்மை மேலும் வியக்கவைக்கின்றன.
என்னளவில் ஒரு தமிழனாக இதுவே இந்த விவரணப் படத்தின் வெற்றி என்பேன். பின்னர் வரும், ஏன் தென்னாட்ட்டு கோவில்கள் மேற்கத்தியர்களால் அவ்வளவாக கண்டு கொள்ளப்படவில்லை என்பதற்கு விக்டோரியன் ஒழுக்கவியலைக் காரணம் காட்டி இப்படம் நிகழ்த்தும் ஊகங்கள் சரியல்ல எனினும், என்னளவில் தனது பண்பாடு, அறிவியல், கலை பாரம்பரியம் குறித்து பெருமை கொள்வதற்கான புறவயச் சான்றுகளில் ஒன்றாக உள்ள இக்கோவிலைப் பற்றி எடுக்கபட்டுள்ள இப்படம் ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம். வெறும் 250-300 வருடப் பாரம்பரியமேயுள்ள ஒரு நாட்டில் தற்போது இருந்துகொண்டு இப்படத்தை பார்த்தது மேலும் என்னை ஆட்கொண்டுவிட்டது.
அலெக்ஸ்சாண்டர், நெப்போலியன், அசோகன், அக்பர் போன்ற மன்னர்கள் அறியப்பட்ட அளவிற்கு ராஜராஜன் அறியப்படவில்லை. இந்தியாவில் வேறு எந்த சக்கரவர்த்தியும் செய்யாத சாதனையாய் கப்பற்படை கொண்டு தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றை ஒரே குடையின் கீழ் ஆட்சிசெய்த அவரை நாம் சரியாக தெரிந்துகொள்ளவில்லை என்றே நம்புகிறேன். அசோகர் மரம் நட்டார், குளம் வெட்டினார், சாலைகள் அமைத்தார் என்று வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் படித்த அளவிற்கு ராஜராஜ சோழன் பற்றி அறியவில்லை.

பள்ளிப்படிப்பை முடித்து இத்தனை வருடங்கள் கழித்துத்தான் அருண்மொழித் தேவருடைய நீதி நிர்வாகம், வரிவசூல், ஆட்சியமைப்பு, மருத்துவ சேவைகள், நில அளவை முறைகள்,கப்பற்படை போன்றவற்றை அறிகின்றேன். வரலாறு இன்னும் வடக்கிலிருந்தே எழுதப் படுகிறது என்பதற்கு இதுவே மிகச் சிறந்த சான்று. சில வருடங்களுக்கு முன்பு மருத்துவர் தெய்வ நாயகம் வங்கக் கடல் என்பதே சோழர்களின் வங்கம் (தமிழில் கப்பலுக்கு வங்கம் என்று இன்னொரு பெயருண்டாம்) பாய்ந்து சென்றதால் உண்டான பெயர், நாம் அதை வங்காள விரிகுடா என்று படித்துக்கொண்டிருக்கிறோம் என்றும் சொன்னார். சில மாதங்களுக்கு முன்பு லா ரீயுனியன் தீவில் 150-200 வருடங்களுக்கு முன்பு பிரஞ்சுக்காரர்களால் குடியமர்ததப்பட்ட தமிழர்களின் இன்றைய நிலை குறித்து கலிபோர்னியா பெர்க்கிலி பல்கலைகழகம் வெளியிட்டுள்ள கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தபோது, அத்தீவிற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சோழர்களின் கடற்படை வந்திறங்கி எரிமலைகளைக் கொண்ட அத்தீவை தீமைத் தீவு என்று பெயரிட்டதாகவும், அது பற்றிய குறிப்பு தஞ்சை பெரியகோவில் கல்வெட்டில் இருப்பதாகவும் அறிந்தபோது நான் அடைந்த வியப்பிற்கு அளவேயில்லை. தென்மேற்குப் பருவக் காற்றின் துணைகொண்டு தென்கிழக்காசிய நாடுகளை ராஜராஜனும்,முதலாம் ராஜேந்திரனும் வென்றார்கள் என்று படித்திருந்த போதிலும் தமிழகத்திற்கு மேற்கில் தொலைதூரத்தில் மடகாஸ்கருக்கு அருகிலுள்ள ஒரு சின்னஞ்சிறிய தீவில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சோழர்களின் நாவாய்ப் படை சென்றிரங்கியிருக்கிறது என்று அறியும்போது வியப்பு மேலிடாமலில்லை. ஸ்பானியர்களும், போர்த்துக்கீசியர்களும், ஆங்கிலேயர்களும், பிரஞ்ச்சுக்காரர்களும் கடலாதிக்கம் செலுத்துவதற்கு ஐனூறு ஆண்டுகளுக்கு முன்பே கடற்படையில் சிறந்துவிளங்கிய தமிழர் வீரமும், அறிவியலும் நினைத்துப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது.

நான் பணகுடியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது பள்ளியிலிருந்து தஞ்சைக்கு கல்விச் சுற்றுல்லா கூட்டிச் சென்றார்கள். தென்பாண்டி நாட்டை பூர்வீகமாகக் கொண்டவனும், பாண்டிய நாட்டின் தலைநகரமாய் விளங்கிய மதுரையம்பதியில் 10 வருடங்கள் வாழ்ந்தவனுமாதலால் எனக்கு அப்போதெல்லாம் தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே மிகப்பெரிய அரசன்; மதுரை மீனாட்சியம்மன் கோவிலே மிகப் பெரியதும், சிறந்ததுமான கோவில் என்ற எண்ணம் உண்டு. எனவே வகுப்பு நண்பர்களிடம் தஞ்சை கோவிலின் அமைப்பு பிடிக்காமல் மீனாட்சியம்மன் கோவிலின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லிய நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவரது திருமணத்திற்காக குடும்பத்துடன் தஞ்சை சென்றிருந்த போது இவ்வெண்ணம் முற்றிலும் இல்லாமலாகி திருமணத்திற்குச் செல்வதைவிடவும் எனக்கு பெரிய கோவிலை என் கேமாராவில் படமெடுப்பதில்தான் அதிக ஆர்வமிருந்தது.
சென்னையிலிருந்து கிளம்பும்போதே கோவிலைப் படமெடுக்க தனியாக ஒருநாள் செல்லவேண்டுமென தீர்மானித்து விட்டிருந்தேன். அதன்படியே முதல்நாள் குடும்பத்துடனும், மறுநாள் நான் மட்டும் தனியாகச் சென்றும் கோவிலைப் படமெடுத்துத் தள்ளினேன். எத்தனையோ கோணங்களில் படமெடுத்தாலும் இன்னும் எடுக்க வேண்டும் என்று பேராசை நீடிக்கிறது. நாள் முழுக்க கோவிலின் அழகையும், கம்பீரத்தையும் ரசித்துக் கொண்டிருக்கலாம் எனத் தோன்றியது. எவ்வாறு 15 வருடங்களுக்கு முன்பு தாஜ்மகாலைப பார்த்து அதிசயித்து நின்றேனோ அதற்கிணையான அனுபவத்தை பெரிய கோவில் அளித்தது.
தாஜ்மகாலை விட மனதிற்கு நெருக்கமாக பெரிய கோவிலை உணர்ந்தேன். ஒவ்வொரு படம் எடுக்கும் போதும் கோவிலின் அழகை ரசித்து ரசித்து எடுத்தேன். அன்று பார்த்து வானம் தெளிவாகயில்லையே என வருண பகவானை நினைத்து ஆதங்கப்பட்டேன். மேலும் என் கேமராவினால் நான் நினைத்த மாதிரி சில காட்சிகளை எடுக்க முடியவில்லை. அடுத்தமுறை செல்லும்போது SLR புகைப்படக் கருவி ஒன்றை வாங்கியபின் செல்லவேண்டுமென முடிவெடுத்துள்ளேன். என் மகன் அமுதனை கோவிலின் முகப்பில் வைத்து படம் எடுக்கும்போதும், ராஜராஜன் மனிமண்டபத்திலுள்ள அவரது சிலையின் பீடத்தில் அமுதனை உட்கார வைத்து எடுத்த போதும் மிகுந்த பரவச நிலையை அடைந்தேன். ஆயிரம் வருட பண்பாட்டுத் தொடர்ச்சி என்பதனுடன் அமுதன் பிறந்ததும் அருண்மொழிவர்மன் பிறந்த ஐப்பசி மாத சதய நட்சத்திரம் என்பதும் எனது பரவசத்திற்கு கூடுதல் காரணம்.

நான் எடுத்த மேலும் சில புகைப்படங்கள்









மேலும் விபரங்கள் அறிய:
1. ராஜராஜன் சதய விழா குறித்த தகவல்கள்
2. ராஜராஜன் மற்றும் தஞ்சைப் பெரிய கோவில் அமைப்பு பற்றிய தகவல்களுக்கு
3. கோவிலின் கர்ப்ப கிருகத்தினுள் உள்ள சோழர், நாயக்கர் காலச் சித்திரங்கள், அதை புகைப்படம் எடுத்த முறை குறித்து அறிய
4. அச்சித்திரங்களைப் பார்க்க

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

லா ரீயுனியன் தீவில்...தமிழர்கள்

மடகாஸ்கர் தீவின் அருகிலுள்ள லா ரீயுனியன் தீவில் பிரான்ஸ் காலனியவாதிகளால் கரும்புத் தோட்டங்களில் அடிமைகளாக வேலைசெய்ய புதுச்சேரி பகுதிகளிலிருந்து 150 ஆண்டுகளுக்கு முன்னர் அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் தற்போதைய பண்பாடு, பழக்கவழக்கங்களை குறித்து இக்கட்டுரை பேசுகிறது.