பக்கங்கள்

செவ்வாய், 20 நவம்பர், 2012

அஞ்சலி - மருத்துவர் தெய்வநாயகம்


என் மூத்த சித்தமருத்துவ நண்பர் மைக்கேல் ஜெயராஜ் அவர்களால் தொடங்கப்பெற்று இன்றுவரை வெற்றிகரமாக நடத்தப்படும் கற்ப அவிழ்தம் இதழ் 1992 - ஆம் ஆண்டில் ஆஸ்த்துமா சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. அதில் அப்போது சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நெஞ்சக நோய் துறைப் பேராசிரியராக இருந்த மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம் ஒரு நீண்ட நேர்காணல் அளித்திருந்தார். அப்போது நான் பாளை சித்தமருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவன். ஒரு ஆங்கில மருத்துவர், அதுவும் சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அவ்வாறு சித்த மருத்துவத்தின்பால் நம்பிக்கை கொண்டிருந்தது எங்கெளுக்கெல்லாம் மகிழ்ச்சியளித்தது. அதன்பின் 1995 இறுதியில் நான் சென்னைக்கு நிரந்தரமாகக் குடியேறுவதற்காக வந்தபோது என் நண்பர் மருத்துவர் சிவராமன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கு ஆஸ்த்துமாவிற்கு சித்த மூலிகைகள் என்ற கருதுகோளை ஆராய்ந்துகொண்டிருந்தார். அவருக்கு மருத்துவர் தெய்வநாயகம் தான் வ்ழிகாட்டுநர். அவ்வாராய்ச்சி இழுத்துக்கொண்டே சென்றது. சிவராமன் தெய்வநாயகத்தைப் பார்ப்பதற்கே அஞ்சி நடுங்கிய காலமது. சிவராமன் மூலம் நான் தெய்வநாயகம் அவர்களின் குணநலன்களை அறிந்திருந்தேன்.

இதற்கிடையில் தெய்வநாயகம் அவர்கள் தாம்பரம் சானடோரியத்தில் மருத்துவக் கண்காணிப்பாளராகப் பணியாற்றத்தொடங்கினார். அங்கு காசநோய் கண்ட நோயாளிகள் மட்டுமல்லாது, தேய்வு நோய் (AIDS) கண்ட நோயாளிகளையும் அனுமதித்து சிகிழ்ச்சையளித்து வந்தார். அக்காலங்களில் உலகிலேயே தேய்வு நோய்க்கு மிக அதிகமானோர் உள் நோயாளிகளாக தங்கி சிகிழ்ச்சை பெற்று வரும் மையங்களில் ஒன்றாக தாம்பரம் சானடோரியம் திகழ்ந்தது. அங்கு தேய்வு நோய்க்கு பெரும்பாலும் சித்த மருந்துகளையே அவர் பரிந்துரைத்து வந்தார். தேய்வு நோய் கண்டவர்கள் சித்தமருத்துகள் சாப்பிட்டபின் நன்றாக தேறிவருவதாகவும், அந்நோயினைச் சித்த மருந்துகள் பெருமளவில் கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்தமிருந்தன. இப்போது டெங்குக் காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீர் எப்படியோ, அப்போது தேய்வு நோய்க்கு ரசகந்தி மெழுகு மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போது நான் வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் நோய்ப்பரவியல் துறையில் முதுகலை பயின்று கொண்டிருந்தேன். வார இறுதிகளில் சென்னைக்கு வரும்போதெல்லாம் நானும், சிவராமனும் மற்ற நண்பர்களும் தெய்வநாயகம் அவர்களின் இம்முயற்சி குறித்து அவ்வப்போது பேசிக்கொள்வதுண்டு. சிவராமனும் அவருடன் ஓரளவு நெருக்கமாகிவிட்டார். தெய்வநாயகம் நோயாளிகளிடம் கனிவாகவும், தன் வேலையச் சரிவரச் செய்யாத மருத்துவமனை ஊழியர்களை மிகக் கண்டிப்பாகவும் நடத்தும் விதம் குறித்து சிவராமன் சொல்வதுண்டு.  என்னுடைய இரண்டாமாண்டு முதுகலைப் படிப்பு பகுதிநேரமென்பதால் 1998-ல் ஆற்காடு அருகில் இசையனூர் கிராமத்தில் பாரதியம்மாள் வைத்திய சேவா கேந்திரத்தில் சித்த மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அது இலவச மருத்துவமனை என்பதாலும், என் மேல் ஒரு நல்லபிப்பிராயம்  ஏற்பட்டதாலும் பல ஊர்களிலிருந்தும் பெருமளவு நோயாளிகள் அங்கு வருவர். அவற்றுள் தாம்பரத்திற்குச் சென்று தெய்வநாயகத்திடம் சிகிழ்ச்சை பெற்று பின்னர் அங்கு தொடர்ச்சியாக செல்லமுடியாமல் இசையனூர் வரும் நோயாளிகள் சிலர் உண்டு. தெய்வநாயகத்தை அவர்கள் மிகவும் சிலாகித்துச் சொல்வதுண்டு. அதில் ஒருவர் ஒருமுறை நோயாளிக்கு சரிவர மருத்துவம் பார்க்காத மருத்துவரை தெய்வநாயகம்  எங்கள் முன்பே அறைந்துவிட்டார் என்றார்.

பின்னர் 1999-ல் சவேரா ஹோட்டலில் நடைபெற்ற தேய்வுநோய்க் கருத்தரங்கு ஒன்றில் தெய்வநாயகம் சானடோரிய ஆராய்ச்சி முடிவுகள் குறித்து கட்டுரை வாசித்தார். எனக்கு அவர் அதில் இன்னும் சற்று சிறப்பாக அறிவியல் முறைமைகளை கையாண்டிருந்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. பின்னர் சிவராமன் மூலம் அவருக்கு புள்ளியியல் முறைமைகளில் அதிக ஆர்வமில்லை எனத்தெரிந்து கொண்டேன். ஓய்வு பெற்றபின் எழும்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தில் மருத்துவ சேவை செய்துவந்தார். அதற்கு அய்ந்து ரூபாய்கள் தான் கட்டணம். சிவராமன் மற்றும் எனது வேறு சில நண்பர்களும் அவருடன் இணைந்து பணியாற்றினர். சித்த மருத்துவ ஆராய்ச்சிகளும் செய்து வந்தனர். ஆங்கில, சித்த மருத்துவ முறைகளை இணைத்து நோயாளிகளுக்கு மருத்துவம் புரிந்தனர். நண்பர் சிவராமனின் மருத்துவத்தொழிலில் அது ஒரு திருப்புமுனையாகும். தெய்வநாயகம் அவர்களது நோய்க்கணிப்பு உத்திகளை சிவராமன் வியந்தோதாத நாட்களே அக்காலங்களில் இல்லை. தனது மருத்துவத் தொழிலுக்கு குருவாக தெய்வநாயகத்தை சிவராமன் ஏற்றுகொண்ட காலமது. எனது உறவினர்கள் சிலர் அக்காலங்களில் அவரிடம் சிகிழ்ச்சைக்குச் சென்றிருக்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் மனம் புண்பட்டிருக்கிறார்கள். ஆயினும் அவரது சிகிழ்ச்சையால் அவர்கள் முழுமையாகக் குணம் அடைந்திருக்கிறார்கள். மக்கள் தொலைக்காட்சியில் அவரது பேச்சுகளைக் கேட்டுவிட்டு என் அப்பா அவரது ரசிகராகவே ஆகிவிட்டார். அவரது அதிரடிப் பாணியும் அப்பாவிற்குப் புரிந்துகொண்டது.

என் பெரிய தங்கை மீனாட்சிக்கு காச நோய் தாக்கியபோது நாங்கள் அவரைத் தான் அணுகினோம். நான், அப்பா, அம்மா, மீனா நால்வரும் அவரது தி. நகர் வீட்டு மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம். எங்கள் முறை வந்தபோது மீனா, அம்மாவுடன் அப்பாவும் செல்ல எத்தனித்தார். தெய்வநாயகம் நீங்கள் வெளியே போங்க என்று தடாலடியாகச் சொல்லிவிட்டார். பின்னர் மீனாவிடம்  உனக்கு என்னம்மா செய்கிறது என்றிருக்கிறார். அம்மா, அவளுக்கு மூளை வளர்ச்சி பூரணமாக இல்லை, அவளால் சொல்லமுடியாது என்றிருக்கிறார்கள். நீங்க சும்மா இருங்கம்மா, அவள் சொல்லுவாள் என்ற அவர், நீ சொல்லு குழந்தை உனக்கு என்ன செய்கிறது என்று மிக அன்பாகக் கேட்டிருக்கிறார். இதுவரை அவளிடம் எந்த மருத்துவரும் அவ்வாறு கனிவுடன் பேசியதில்லை. மனநல மருத்துவர்கள் உட்பட. அம்மா குறுக்கிட்டபோதெல்லாம், நீங்க வெளியபோங்க என்று அதட்டி இருக்கிறார்.

நோய்க்கணிப்பில் மன்னர் அவர். நோயாளிகளிடம் முழுமையாகப் பேசி அவர்கள் சொல்லும் குறிப்புகளைக் கொண்டே நோய்க்கணிப்பு செய்பவர். தேவையற்ற பரிசோதனைளைச் செய்யமாட்டார். ஒருமுறை சிவராமனின் அம்மா மெலிந்துகொண்டே வந்தார்கள். பல்வேறு நிபுணர்கள், எம்.ஆர். ஐ போன்ற பலவிதமான சோதனைகளைச் செய்து அவருக்கு வயிற்றில் புற்று நோய் இருக்குமோ என்ற முடிவிற்கு வந்திருந்தார்கள். ஆனால் தெய்வநாயகம், அவரது குறிகுணங்களை வைத்தே அவருக்கு வயிற்றுத்தமனி சுருங்கிவிட்டதால் இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் எனக்கணித்தார். பின்னர் அப்பகுதியில் எம். ஆ. ஐ ஸ்கேன் செய்ததில் அவரது கணிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

அவருக்கு தமிழ் மேலும், சித்த மருத்துவதின் மேலும் அளவுகடந்த பற்றுண்டு. இதன் காரணமாக பல நேரங்களில் அவர் எல்லை மீறிப் போய்விடுவதுமுண்டு. மிகுந்த பிடிவாதக்காரர். சட்டென்று பிறர் மனம் புண்படும்படி பேசிவிடுவார். ஒருமுறை சிவராமனின் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் முனைவர் SP. தியாகராஜன் தலைமை விருந்தினாராகக் கலந்துகொண்டார். தெய்வநாயகமும் மேடையிலிருந்தார். SP. தியாகராஜன் தனது உரையில் எதையோ சொல்லும்போது குறுக்கிட்ட தெய்வநாயகம், தியாகராஜன் நீங்கள் சொல்வது தவறு. போய் உட்காருங்கள் என்று கூட்டத்தினர் முன்னிலையில் சொல்லிவிட்டார். என்னதான் சித்த மருத்துவத்திற்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தாலும், சித்தமருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் சிலரிடம் அவருக்கு கெட்டபெயர் ஏற்பட்டுவிட்டது. அதற்கு அவரது அதிரடி பாணி காரணமாயிருக்கலாம். ஒருமுறை எனக்கும் அவருக்கும் வாத, பித்த, கபம் குறித்து காரசாரமான ஒரு வாக்குவாதம் நடந்தது. அதன் முடிவில் நான் அவரிடம் இன்னும் உங்களிடம் நிறையச் சண்டையிட வேண்டும், சரிங்களா என்றேன். அவர் சிரித்துக்கொண்டே சரி என்றார்.

அவருக்கு நுரையீரல் புற்றுநோய் என்று சிவராமன் மூலம் எனக்கு ஏற்கனவே தெரியும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவரைப் பற்றி சிவராமனிடம் கேட்கவேண்டும் என நினைத்தேன். அதற்குள் அவர் நேற்று மாலை இறந்துவிட்டார். அவரது மரணத்தை மிகுந்த தைரியத்துடன், ஆர்ப்பாட்டமில்லாமல் எதிர்கொண்டார் என்பதை அறிந்தேன். வணிகமயமாகிவிட்ட இன்றைய மருத்துவ உலகில் அவரைப் போன்ற இன்னொருவரைப் பார்ப்பது அரிது. அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும். 

திங்கள், 19 நவம்பர், 2012

இலக்கியவட்டம் நாராயணன்

1992-ல் என் கல்லூரித் தோழி சுகன்யாவின் தந்தையாக இலக்கியவட்டம் நாராயணன் எனக்கு அறிமுகமானார். அப்போது நாங்கள் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தோம். வேட்டி சட்டை, தோளில் ஒரு ஜோல்னாப் பை, ஒட்டவெட்டப்பட்டத் தலைமுடியுடன் அவர் எனக்கு அறிமுகமானபோது மனதிற்குள் ஒரு நக்கலுடன்தான் நான் அவரை எதிர்கொண்டேன். தோற்றத்தை வைத்து ஆளுமையை எடைபோடும் வயதது. இன்னும் அந்தத் தவறான முன்முடிவுகள் என்னிடமுண்டு. ஆனால், அவரோ எந்தவித அசூசையுமின்றி என்னிடமும், ஜோசப்பிடமும் மிக எளிதில் பழக ஆரம்பித்துவிட்டார். விருதுநகர், கோவில்பட்டி. போன்ற ஊர்கள் எல்லாம் இருபது வருடங்களில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்துவிட்டன என அவரது வெண்கலக் குரலில் பேச்சை ஆரம்பித்துவிட்டார். எப்போதும் எங்கேயும் அந்த வெண்கலக் குரலெடுத்துத்தான் அவர் பேசுவார். எல்லாவற்றைக் குறித்தும் பேசுவார், அதிரடியாகக் கருத்துச் சொல்வார். அப்பா அப்படித்தான் அடிச்சு விடுவார் என சுகன்யா சொல்வாள்.

அதற்கடுத்த வருடம் எனது கல்லூரி மூத்த நண்பர்களோடு திருப்பதி சென்றுவிட்டு என் நெடுநாள் கனவான, எங்கள் சமூகத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த ஊரான, காஞ்சிபுரத்திற்கு முதன்முறையாகச் சென்று அவர் வீட்டில் தங்கினேன். அப்போது அவர் வைகுண்டப் பெருமாள் கோவில் தெருவில் குடியிருந்தார். மறுநாள் காலை என்னை அக்கோவிலுக்குக் கூட்டிச் சென்று அந்தச் சிற்பங்களை விளக்கினார். பின்னர் அங்கிருந்து ஏகாம்பரேசுவரர், காமாட்சியம்மன், சங்கர மடம், தொண்டைமண்டல ஆதினம்,  கைலாசநாதர் ஆலயம், சின்ன காஞ்சிபுரம் போன்ற எல்லாவற்றையும் அவர் சொன்ன வழியில் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். அதன்பின் பலமுறை காஞ்சிபுரம் சென்று அவரது வீட்டில் தங்கி அவர்களது பிள்ளை போலவே ஆகிவிட்டேன். ஆனால் அதுவரை அவர் நடத்தி வந்த இலக்கியவட்ட கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அவரும் அப்படி ஒன்றை தான் நடத்துவது குறித்து எனக்குச் சொன்னதுமில்லை. சுகன்யாதான் சொல்லியிருக்கிறாள். எனக்கு அப்போதெல்லாம் இலக்கியக் கூட்டங்கள் குறித்து ஒன்றும் மதிப்பு இல்லை. காரணம் என் பள்ளி, கல்லூரிகளில் நான் பார்த்த தரமற்ற இத்தகைய கூடுகைகள்.

1997ம் வருடம் அப்படி ஒருநாள் அவரது வீட்டில் தங்கியிருந்தபோது அவர் ஒரு சைக்கிள் ரிக்‌ஷாவில் நான்கைந்து அட்டைப்பெட்டிகளை வைத்து அனுப்பிக் கொண்டிருந்தார். இலக்கியக் கூட்டத்திற்குப் போகிறேன் வருகிறாயா என்றார். சும்மா வீட்டிலிருப்பதற்குப் போய்வரலாமே என்று எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் அவருடன் கிளம்பினேன். ஆனால் அதன்பின் எனக்கு ஒரு புது உலகம் அறிமுகமானது. தமிழ் இலக்கியம், அறிவுலகம் குறித்த என்னுடைய எண்ணங்களைத் தகர்த்தெறிந்தது அது. அதுவரைத் தமிழ்ப்புத்தகங்கள் என்றால் உள்ளடக்கத்திலோ, அமைப்பிலோ  எந்தப் படைப்பூக்கமும் இல்லாத வெகுஜன பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களையே பார்த்துச் சலிப்புற்றிருந்த எனக்கு செம்பதிப்பு என்ற அடையாளத்துடன் அந்தக் காலகட்டத்தில் காலச்சுவடும், கிரியாவும் வெளியிட்ட புத்தகங்கள் கவர்ந்தன. புத்தகத்தின் தலைப்புகளும், அவற்றின் அட்டை வடிவமைப்புகளும் படிக்கத்தூண்டின. காலச்சுவடின் லோகோ என்னைக் கவர்ந்திழுத்த காலமது. அப்படி நான் படிக்க ஆரம்பித்த புத்தகங்களில் ஒன்றுதான் ‘விரிவும் ஆழமும் தேடி’. இன்னும் நன்றாக நினைவிருக்கிறது, அதன் முன்னட்டையில் கோட்டோவியமாகத் தீட்டப்பெற்றிருந்த  உருவம்தான் அதன் ஆசிரியராக இருக்கவேண்டுமென யூகித்திருந்தேன். அந்த கோட்டோவிய முகத்திற்குச் சொந்தக்காரனான சுந்தர ராமசாமியை நேரில் பார்த்து அதை உறுதிசெய்துகொள்ள வேண்டுமெனத் துடித்தேன். அப்புத்தகமும், காற்றில் கலந்த பேரோசையும் என்னை ஆட்கொண்டிருந்த காலமது. பின்னர் சு.ராவை மழித்த முகத்துடன்  அவ்விலக்கியவட்டக் கூட்டமொன்றில் பார்த்தபோது ஏமாற்றமாக இருந்தது தனிக்கதை.

வெ. நாராயணன் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று இலக்கியக் கூட்டம் நடத்துவார். அந்த அமைப்பிற்கு தலைவர், செயலாளர், பொருளாளர், தொண்டர் எல்லாம் அவர் ஒருவரே. பிற நண்பர்கள், குறிப்பாக எக்பர்ட் சச்சிதானந்தம், அமுத கீதன், தரும ரத்தினக்குமார், காமராஜ், சேதுராமன் போன்றவர்கள் அவ்வப்போது உதவினாலும் நாராயணன் எனும் தேர்தான் இலக்கியவட்டத்தை இழுத்துச் சென்றது. இலக்கிய வட்டக் கூட்டங்களை பெரும்பாலும் காஞ்சிபுரம் பூக்கடைச்சத்திரம் PTVS வன்னியர் உயர்நிலைப் பள்ளியில்தான் ஏற்பாடு செய்வார். அந்நாட்களில் காலை 7 மணிக்கே அப்பள்ளிக்குச் சென்று டெஸ்க்குகளை தூக்கி சுவர் ஒரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, பெஞ்சுகளை வரிசையாக வைத்துவிடுவார். டெஸ்க்குகள் புத்தகக் கண்காட்சிக்கும், பெஞ்சுகள் ஆட்கள் உட்கார்வதற்கும் ஏதுவாக அவ்வாறு செய்வார். இவையனைத்தையும் தனியொருவராக அவரே செய்வார். சில நாட்களில் நான் உதவி செய்திருக்கிறேன். 20 வயது  இளைஞனான எனக்கு சில டெஸ்க்குகளுக்கு மேல் தூக்கிவைப்பதற்குள் மூச்சு வாங்கிவிடும். இவற்றைச் செய்துமுடிக்கும்போது அவர் வியர்வையில் குளித்திருப்பார். பின்னர் இலக்கியவட்ட பேனரை பள்ளிக்கு வெளியில் கட்டி வைத்துவிட்டு, கரும்பலகை ஒன்றில் அன்று நடக்கப்போகும்  நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை அவரது மணியான கையெழுத்தில் எழுதிவைத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவார். குளித்துவிட்டு, காலை உணவருந்தியபின், ஐந்தாறு பெரிய அட்டைப்பெட்டிகளில் தன்னிடமுள்ள  புத்தகங்களை ஒரு ரிக்‌ஷா வண்டியில் ஏற்றிக்கொண்டு மீண்டும் PTVS பள்ளிக்குச் செல்வார். பின்னர் புத்தகங்களை வரிசையாக டெஸ்க்குகளில் கண்காட்சிகளில் வைத்துவிடுவார்.  இந்தப் புத்தகங்களை பதிப்பகங்களிலிருந்து 25% தள்ளுபடிக்குப் பெற்று அதே விலைக்கே இலக்கிய வாசகர்களுக்கு விற்பார். மேலும் வாசகர்கள் அப்பணத்தை உடனே செலுத்த வேண்டாம். மூன்று தவணைகளில் செலுத்தினால் போதும். அவ்வாசகர் ஏற்கனவே தெரிந்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை. முதல் தடவையாக அக்கூட்டத்திற்கு வருபராக இருக்கலாம்; அவருக்கு நாராயணனையோ அல்லது பிற நண்பர்கள் யாரையுமோ தெரியாமலிருக்கலாம். அதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டல்ல. இலக்கியப் புத்தகம் வாங்கும் ஆவலிருக்கிறதென்றால் அவரை ஊக்குவிக்கவேண்டும் என்பதே அவரது குறிக்கோள். பலமுறை அவர் ஏமாற்றப்பட்டிருக்கிறார். ஆயினும் அவரது எண்ணத்தில் மாற்றமில்லை.

அதுபோல் ஒருமுறை இலக்கிய வட்டக் கூட்டத்திற்கு ஒருவர் வந்துவிட்டு தன் முகவரியைப் பதிவு செய்துவிட்டால் போதும்.  அதன்பின் தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்கு அந்நபருக்கு அழைப்பிதழ் வரும். அஞ்சலட்டை ஒன்றில் நாராயணனே அம்மூன்று அழைப்பிதழ்களையும் அவர் கைப்பட எழுதி அனுப்புவார். அம்மூன்று நிகழ்வுகளில் ஒன்றில் கூட அந்நபர் கலந்துகொள்ளவில்லை எனில் அதன்பின் அழைப்பிதழ் வருவது நின்றுவிடும். எனக்கே ஒருமுறை அவ்வாறு நடந்திருக்கிறது. அதுபோன்றே புத்தகத்தைக் கடனாக வாங்கிச் செல்பவர்களுக்கும் மூன்று நினைவூட்டல் கடிதங்கள் அஞ்சலட்டைகளில் அனுப்புவார். அதற்குப் பதிலோ, பணமோ வரவில்லையெனில் கவலைப்படமாட்டார்; அப்புத்தகத்திற்கான பணம் அவரது பாக்கெட்டிலிருந்து செல்லும். அவர் அவரது முகவரிக்கு ஒரு ரப்பர் ஸ்டாம்ப் செய்து வைத்திருந்தார். அதில் முகவரி இவ்வாறு தலைகீழாக இருக்கும்.

631502
காஞ்சிபுரம்
39C, காமாட்சியம்மன் கோவில் சன்னதி தெரு
இலக்கிய வட்டம்
வெ. நாராயணன்

உண்மையில் வெ. நாராயணன், இலக்கிய வட்டம், காஞ்சிபுரம் என்று முகவரியிட்டு தமிழ்நாட்டில் எந்த மூலையிலிருந்து அஞ்சல் அனுப்பினாலும் தவறாமல் அது அவர் கைக்கு வந்து சேர்ந்துவிடும்.

இலக்கிய வட்டம் என்றிருந்தாலும் அதில் இலக்கியம் தவிர பிறவற்றிற்கும் இடமிருந்தது. ஒருமுறை நாகசுர வித்வான்கள் வந்து வாசித்தார்கள். ம்ற்றொருமுறை சோடச அவதானி ஒருவர் வந்து அவர் திறமைகளை வெளிக்காட்டினார். நாட்டுப்புறக் கலைஞர்கள் வந்திருக்கிறார்கள். அதுபோன்றே பிற அமைப்புகளுடன் சேர்த்தும் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். சாரு நிவேதிதாவை அழைத்து ஜீரோ டிகிரி குறித்த விமரிசனக் கூட்டமொன்றை தமுஎசவுடன் இணைந்து வேடந்தாங்கலில் ஏற்பாடு செய்திருந்தார். அவர் பெரும்பாலும் இலக்கியக் கூட்டங்களில் பேசுவதில்லை. படைப்பாளி அல்லது விமரிசனம் செய்யப்படும் படைப்பு பற்றி ஒரு சிறு அறிமுகத்துடன் நிறுத்திக்கொள்வார். பிற நண்பர்கள்தான் பேசுவார்கள், விவாதிப்பார்கள். எப்போதாவது அவர் பேசுவதுண்டு.

அதுவரை ஜெயகாந்தன் தவிர வேறு நவீன இலக்கிய ஆளுமைகளை அறிந்திராத எனக்கு இலக்கியவட்டத்தின் மூலம் சு.ரா, அசோகமித்திரன் போன்ற படைப்பாளுமைகளை அருகிலிருந்து கவனிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அசோகமித்திரன் வந்திருந்தபோது மிகுந்த எரிச்சலுடன் காணப்பட்டார். கூட்டம் முடியுமுன்பே நாராயணன் நான் கிளம்புகிறேன் என்றார். அவரை வழியனுப்பும் பொறுப்பு எனக்கு வாயத்தது. பேருந்து நிலையத்திற்கு அவரை கூட்டிக்கொண்டு சென்று நிலையத்திலிருந்து சென்னைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து அவரை ஏற்றிவிட்டேன். ஏறி உட்கார்ந்து ஒரு நன்றிகூட சொல்ல மனமில்லாமல் சென்றுவிட்டார். வரும்வழியிலோ, பேருந்தில் ஏறியபின்போ சம்பிரதாயத்திற்குக் கூட ஒரு முகமன் கூட கூறாத, எப்போதும் எரிச்சலுடனும் பதட்டத்துடனும் இருக்கும், நபர் என்ன பெரிய படைப்பாளி என்று நினைத்து பல வருடஙகள் அ.மியின் ஒரு கதை கூட வாசிக்காமல் இருக்கிறேன். கடந்த சில வருடங்களாகத்தான் ஜெயமோகன் மூலம் அ.மியின் மேல் ஏற்பட்ட அந்த கசப்பு நீங்கியது. இலக்கிய வட்டத்தின் விமரிசனங்கள் ஏதோ சண்டை போட்டுக்கொள்வது போலிருக்கும். நான் கலந்துகொண்ட கூட்டங்களில் சு.ரா வந்தபோது அமுதகீதன், தரும இரத்தினக்குமார் போன்றவர்கள் அவர் மேலும், காலச்சுவடின் மேலும் காரசாரமான விமரிசனங்களை வைத்துப்பேசியதே மிகவும் சூடான கூடுகையாகவிருந்தது.

தொடரும்...

இலக்கியவட்டம் நாராயணன் அவரது 60 ஆம் கல்யாணத்தன்று.
நாளை இரண்டாம் பாகத்தை வெளியிடுவேன்..