பக்கங்கள்

புதன், 5 பிப்ரவரி, 2014

ஜோ டி குரூஸூக்கு பாராட்டுவிழா

சென்ற சனிக்கிழமை நெய்தல் படைப்பாளிகள் சார்பாக நண்பர் சிறில் அலெக்ஸ் முன்னின்று சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸுக்கு பாராட்டுவிழாவை சென்னை லயோலா கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தார். தமிழக முன்னாள் டி.ஜி.பி அலெக்ஸாண்டர், இந்திரா பார்த்தசாரதி, ஜெயமோகன், வறீதையா கான்ஸ்டாண்டின், ஜஸ்டின் திவாகர், டாக்டர் ரெக்ஸ் ஆகியோருடன் ஜோ டி குரூஸும் விழாவில் பேசுவார்கள் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பெயர் குறிப்பிட்டவர்களோடு வேறு பலரும் அன்று பேசினர்.

முதலில் அலெக்சாண்டர் தலைமையுரை ஆற்றினார். பணியிலிருந்த காலங்களில் தனக்கு இலக்கிய புத்தகங்களைப் படிக்க நேரமிருந்ததில்லையெனினும் மீனவர்களை பற்றி எழுதப்பட்டிருப்பதால் ஆழி சூழ் உலகு, கொற்கை ஆகியவற்றை வாங்கியதாகவும் கூறினார்.  மீனவ சமுதாயத்தைச் சார்ந்தவன் ஆயினும் தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் பிறந்து வளர்ந்தவன் ஆதலால் கடலைப் பற்றியோ, அதைச் சாரந்திருப்பவர்கள்  பற்றியோ தனக்கு அதிகம் தெரியாது என்றார். கொற்கையில் பனிமயமாதா தேவாலயத்தில் கூடியிருக்கும்  மனிதர்களில் ஒருவராக வரும் ராஜரத்தினம்  என்பவர் தனக்கு மிகவும் நெருங்கிய உறவினர் என்றும் அதற்காகவே அதை சிலாகித்து படித்ததாகவும் பேசினார்.  அலைந்து திரிந்து சேகரித்த தகவல்களை ஒருமைப்படுத்தி இத்தகைய நாவல் ஒன்றை எழுதிய ஜோவின் மேதமையை வாழ்த்தி  அமர்ந்தார். 

டாக்டர் ரெக்ஸ், ஒரு காலத்தில் மாலைநேர தேநீருடன் உண்பதற்காக கொழும்பிலிருந்து பிஸ்கெட் வரவழைப்போம் என அவரது அம்மா சொல்வதுண்டு என்றும் அவ்வாறு செல்வச் செழிப்பில் திகழ்ந்த மீனவ சமுதாயம் இப்போது வறிய நிலையை அடைந்துவிட்டதாக கூறினார். ஜஸ்டின் திவாகர், நெய்தல் படைப்பாளிகளை ஒருங்கிணைத்து அவரும் வறிதையாவும் நாகர்கோவிலில் நடத்திவரும் அமைப்பு குறித்து கூறினார். பின்னர் வறிதையா கான்ஸ்டாண்டின் அரசியல் கோணத்தில் உணர்சிகரமான உரை நிகழ்த்தினார் - வலம்புரி ஜான் மீனவர் என்றாலும் அந்த அடையாளத்தை மறைத்துக்கொண்டு தான் எழுதினார் என்றார். ராஜம் கிருஷ்ணன் மீனவர்களோடு தங்கியிருந்து நாவல் எழுதினாலும் அது முழுமையாக மீனவர்கள் வாழ்க்கையை சொல்லிவிடவில்லை என்றும், கடல்புரத்தில் எழுதிய வண்ணநிலவன் மீன் பரவர்களை மீன் பறையர்கள் என வேண்டுமென்றே எழுதியதாகக் கூறினார். இதைச் சொல்லும்போது அந்த சாதியை (பறையர்) தான் குறைத்து சொல்லவில்லை என்பதையும் தெளிவாக்கினார். ஆயினும் சாதியை வேண்டுமென்றே வண்ணநிலவன் மாற்றி எழுதியிருப்பதை, அவர்மேல் மதிப்பு இருந்தாலும், கண்டிப்பதாகக் கூறினார். தாம் ஆண்ட பரம்பரை என்பது போன்ற மேட்டிமைத் தனங்களை விட்டுவிட்டு பரதவ சமுதாயங்கள், (பரவர், முக்குவர் இன்னபிற), அனைத்தும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டிய காலமிது எனக்குறிப்பிட்டார். இவர்கள் அனைவரும் கொற்கைக்கு கிடைத்த விருது நம் சமுதாயத்திற்குக் கிடைத்த விருது என்ற கண்ணோட்டத்திலேயே பேசினர்.

பின்னர் ஜோவுக்கு ஒருவர் வந்து பட்டம் (தலைப்பாக) கட்டினார். அதன் தாத்பர்யம் என்ன என விளக்குமாறு அவரிடம் சொல்லப்பட்டது. மைக்கைப் பிடித்த அவர் நமது தாழ்ச்சிக்கு கத்தோலிக்கம் தான்  காரணம் என ஒரே போடாய்ப்போட்டார்.  நெற்றிக் குங்குமம் விபச்சாரிகள் தான் வைப்பார்கள் என பாதிரியார்கள் சொன்னதால்தான் நம் பெண்டிர் அதை தவிர்த்தனர். இவ்வாறு நாம் நம் மரபிலிலிருந்து துண்டிக்கப் பட்டோம் என அதிரடியாக கருத்து சொல்ல ஆரம்பித்தார். அலெக்சாண்டர், பட்டம் கட்டுவது குறித்து உம்மை கருத்து சொல்ல சொன்னால் தேவையில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறேரே என்றார். அதற்கு அவர், பட்டம் ஏன் கட்டுகிறார்கள் என்பது தனக்குத் தெரியாது என்ச் சொன்னார். அப்படின்னா, முதலில் ஓடிப்போய் உக்காரும் என முன்னாள் டி.ஜி.பி. சிரித்துக்கொண்டே சொன்னார். பின்னர் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த மீனவ தலைவர்கள் ஜோவுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். இடிந்தகரையிலிருந்து வந்திருந்த ஒருவர் முன்னர் பேசியவரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து பேசினார். கத்தோலிக்க மதத்தால் நமக்கு விளைந்த நன்மைகளும் உள்ளன எனச்சொன்னார். பொது இடத்தில் இவ்வாறு தடாலடியாக பேசக்கூடாது என அவரை கண்டித்தார். 


பின்னர் ஜெயமோகன் தெளிவான கச்சிதமான உரையாற்றினார். கடல் திரைப்படம் தோல்வி அடைந்ததற்கு அது தமிழ்ச் சமூகத்துடன் ஒட்டாத கலாச்சாரத்தை பிரதிபலித்ததே காரணம் என தமிழின் முண்ணனி பத்திரிக்கைகள் சில எழுதியதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கான காரணத்தையும் சொன்னார். வரலாறு என்பது நடப்பதல்ல; நடந்ததாக எழுதிவைக்கப்பட்டதுதான் வரலாறாக முடியும், தமிழ்ப்பண்பாடு என்று நம்மை உணரவைப்பது பல காலகட்டங்களில் எழுதப்பட்டவைகளின் தொகுப்பே என்றார். எனவே மீனவ சமுதாயங்களின் பண்பாடு என்பதை நீங்கள்தான் எழுதவேண்டும் என்றார். அவ்வாறு எழுதி வரலாறாக்கப்ட்ட பின் அது தமிழ்பபண்பாட்டோடு ஐக்கியமாகிவிடும் என்றார். உதாரணமாக ஜெயகாந்தன் கடலூர்க்காரராக இருந்திருந்தாலும் அவர் அவ்வூரைப் பற்றி எழுதவில்லை. ஆகவே நடுநாட்டின் பண்பாட்டை அறிய நாம் கண்மணி குணசேகரன் வரும்வரை காத்திருக்கவேண்டியிருந்தது என்றார். முன்பு கொல்லங்கோடு கடற்கரையில் மீனவர்கள் மீன்படிக்க செல்லும்போது செம்மீன் படத்தில் சலீல் சவுத்திரி இசையமைத்த பாட்டை பாடிக்கொண்டு செல்வதை தான் பார்த்திருக்கிறேன் என்றார். கோழிக்கோட்டிலிருந்து தூத்துக்குடி வரை மீனவர்களின் பாடலாக ஒரு பெங்காலி இசையமைத்த பாடலே கோலோச்சியது. காரணம் அம்மீனவர்களிலிருந்து அவர்களின் பண்பாட்டைப் பற்றிய பிரபலமான பாடலாசிரியரோ, இசையமைப்பாளரோ இல்லாமல் வெற்றிடமாய் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் சங்க இலக்கியத்திலேயே நெய்தல் திணை பற்றிய வர்ணனைகள் சிறப்பாக இல்லை. ஏனென்றால் அப்பாடல்களை இயற்றியவர்களில் பெரும்போலோர் மருத நிலத்தைச் சார்ந்த கிழார்கள் என்றார். இத்தகைய இரண்டாயிர வருட பின்புலத்தில் ஜோ டீ குரூஸின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர் தமிழிலக்கியத்திற்கு முற்றிலும் புதிய அத்தியாயத்தை எழுதிச் சேர்த்து நெய்தலை அதன் உண்மையான வகையில் பிரதிநிதப்படுத்துவதாக கூறினார். ஜோவின் தொடக்கமே மிகச் சிறப்பாக அமைந்தது என்றும், கவிதை எழுத வந்த அவரை ஆழி சூழ் உலகு எழுத வைத்த ‘தமிழினி’ வசந்த குமாரின் பங்கை குறிப்பிடத்தக்கது என்றும் சொன்னார். ஒரு மீனவன் மட்டுமே எழுதியிருக்கக் கூடிய கடலைப் பற்றியும், மீனகளைப் பற்றியுமான அபாரமான வர்ணனைகள் ஜோ வின் நூற்களில் உள்ளதாகக் குறிப்பிட்டார். உதாரணமாக, ஆழி சூழ் உலகில் உள்ள சுறா வேட்டை வர்ணனை, ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’ நாவலில் வரும் சுறா வேட்டையை விட மிகச் சிறப்பான ஒன்று எனக் குறிப்பிட்டார். அதேபோல் மகாபாரத்தில் மீன்களைப் பற்றிய வர்ணனைகள் நல்ல கவித்துவத்தோடு உள்ளது. அவைகளைத் தொகுத்தால் அது மட்டுமே 400 பக்கங்களுக்கு வரும், ஏனெனில், வியாசர் சத்தியவதி என்ற மீனவப் பெண்ணிற்கு மகனாக யமுனை நதித் தீவில் பிறந்தவர் என்றார்.

சாகித்ய அகாடமி விருது கிடைத்தவுடன் முதல் பாராட்டு விழா விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மூலம் நடத்தலாம் என ஜோவைத் தொடர்புகொண்டபோது முதலில் தயக்கத்துடனேயே ஒத்துக்கொண்ட அவர் பின்னர் மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் - பல சீனியர்கள் இருக்கும்போது தனக்கு கிடைத்த இவ்விருதை தனக்கான தனிப்பட்ட அங்கீகாரமாகக் கருதாமல் தனது சமூகத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுவதாகவும், எனவே தனக்கு விழா எதுவும் எடுக்கவேண்டாம் என ஜோ கூறியதாக ஜெயமோகன் சொன்னார். ஆயினும் ஆழி சூழ் உலகோ, கொற்கையோ மீனவ ச்முதாயத்தை மட்டுமே முன்னிறுத்தவில்லை. அவை தமிழ்ப்பண்பாட்டையே முன்னிறுத்துகின்றன. அவைகள் தமிழ்ப்பண்பாடு என்ற நூலில் ஒரு அத்தியாயம் மட்டுமே என்றார். இதுபோன்ற பல அத்தியாயங்கள் சேர்ந்தே தமிழ்ப்பண்பாடு என்ற நூல் உருவாக்கப்படுகிறது என்ற இலக்கிய, பண்பாட்டு வரலாற்றுணர்வை தான் முன்னிறுத்துவதாக்க் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய அருள் எழிலன் பரதவர்கள் ஆண்ட குலம் என்ற மேட்டிமைத்தனங்களை விட்டுவிட்டு நமது தற்போதைய நிலை குறித்து கவனம் கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார். பின்னர் இந்திரா பார்த்தசாரதி தான் அகடாமி விருதுக் குழுவில் ஜூரியாக இருந்ததால் தனக்கு இவ்விழாவில் கலந்துகொள்ள முதலில் தயக்கம் இருந்தது என்றார். பொதுவாக அகாடமி விருதுகளை ஒரு சமூகமே கொண்டாடி தான் பார்த்ததில்லை என்றும், இவ்விழா தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார். கொற்கை ஒரு வகையில் தால்ஸ்தாயின் போரும் அமைதியும் நாவலை தனக்கு ஞாபகப்படுத்துவதாகக் கூறினார். போரும் அமைதியும் ஒரு நாவலோ, வரலாறோ அல்ல என்றும் அது ஒரு ஆவணம் என்றும் தால்ஸ்தாய் சொன்னது கொற்கைக்கும் பொருந்தும் எனவும் சொன்னார். கடைசியாக ஜோ ஏற்புரை வழங்கினார். அதிகம் அவர் பேசவில்லை. தனக்கு இந்த விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என மிரட்டல்கள் வந்ததாகக் குறிப்பிட்ட அவர் ‘என்ன பாவம் செய்தேன், என் ஜனமே, நான் என்ன பாவம் செய்தேன்’ என்று தொடங்கும் பாடலை அவரது கணீர்க்குரலில் பாடிவிட்டு அமர்ந்தார். இறுதியில் சிறிலின் நன்றியுறையுடன் விழா இனிதே முடிவுற்றது.

மேலும் படங்கள்

திங்கள், 13 ஜனவரி, 2014

சென்னை புத்தகத் திருவிழாவில்...

இன்று மதியம் (12/01/2014) சென்னை புத்தகத் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். நண்பர்கள் திட்டமிட்டபடி ஏற்கனவே வந்திருந்தார்கள். பாஸ்டனிலிருந்து வந்திருக்கும் அர்விந்தை நான்கு ஆண்டுகள் கழித்து சந்தித்தேன். சீர்மை குறுநாவலின் புகழால் இப்போது ’சீர்மை அரவிந்த்’என அழைக்கப்படுகின்றார். சீனிவாசன் தம்பதியினர் தன்னுடய மகன்களோடு வந்திருந்தனர். அவர்களுடன் செந்தில், சுரேஷ்பாபு, சுனில்கிருஷ்ணன், வினோத் மற்றும் நான் இன்று புத்தகத் திருவிழாவில் சந்திக்கலாம் என ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். பின்னர் ஜாஜா, சாம்ராஜ், ஜடாயு, மணிகண்டன், எழுத்து பிரசுரம் அலெக்ஸ், அசோக்குமார், கவிஞர் இசை, விழியன் என ஏதேச்சையான பல சந்திப்புகள் அரங்கேறின. இதற்கிடையில் எனக்கு மட்டுமே தெரிந்த வேறு சில நண்பர்களையும் தற்செயலாக சந்தித்தேன். அவர்களுள் நிழல் திருநாவுக்கரசு அவர்களை பல ஆண்டுகள் கழித்து சந்தித்தேன். இயல்பாகவே இலக்கியவட்டம் நாராயணன் குறித்தும் அதன் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் பேசிக்கொண்டோம். பின்னர் வெளியேறும் போது இலக்கியவட்டம் மூலம் அறிமுகமான கவிஞர் வெண்ணிலாவையும்  பார்த்தேன். தனது புத்தக வெளியீடு இன்று நடைபெறுவதால் அந்நிகழ்விற்கு வருமாறு அழைத்தார். நேரமாகிவிட்டதால் கலந்துகொள்ள இயலாது என மறுத்துவிட்டேன்.


படம் உதவி: ஜடாயு  

இந்தமுறை எனது தேர்வு பெரும்பாலும் தன் வரலாற்று நூல்கள். உ.வே.சா, நெ.து. சுந்தரவடிவேலு, பம்மல் சம்பந்த முதலியார், தி.சே.செள.ராஜன் போன்றவர்களின் சுயசரிதகளை வாங்கினேன். இவைகள் அனைத்துமே ஜெயமோகனால் பரிந்துரைக்கப்பட்டவை. 10 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல் சுந்தர ராமசாமி பரிந்துரைத்த நூல்களாக தேடிப்பிடித்து வாங்கியிருக்கிறேன். கு. அழகிரிசாமி கதைகள் சாகித்திய அகாடமியில் சகாய விலைக்குக் கிடைத்தது. வெண்முரசின் பாதிப்பினால் பி.கே. பாலகிருஷ்ணனின் இனி நான் உறங்கட்டும், ராஜாஜியின் வியாசர் விருந்து போன்றவற்றை வாங்கினேன். ஜடாயுவின் பரிந்துரையின் பேரில் சுவாமி விவேகானந்தரின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் நூல் ஒன்றை ராமகிருஷ்ண மடம் புத்தக ஸ்டாலில் வாங்கிக்கொண்டேன். கிழக்கு பதிப்பகத்தில் ஹரன் பிரசன்னாவை பார்த்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வாங்கிய ஜெயமோகனின் இந்து தத்துவ மரபில் ஆறு தரிசனங்கள் நூலில் பக்கங்கள் விடுபட்டிருந்ததால் அதற்குப் பதிலாக வேறு புது புத்தகம் கொடுத்தார்.

கே.பி. வினோத்தின் 9 வயது பெண் சைதன்யாவிடம் சிலர் ஆட்டோகிராப் வாங்கினர். நாங்கள் சைதன்யாவின் ’மேனேஜர்’ வினோத்தை கிண்டலடித்துக்கொண்டோம். நண்பர்கள் அனைவரின் பேச்சும் சுற்றி சுற்றி ஜெயமோகனின் வெண்முரசைப் பற்றியே இருந்தது. எங்கள் எல்லோரையும் அது நேர்மறையாக அழுத்தமாக பாதிக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். மணி ஆறு தாண்டியவுடன் அங்கிருந்து கிளம்பினேன். பவானிக்கு வாக்களித்தபடி 7 மணிக்குள் வீடு வந்தடைந்தேன். அமுதன் எனக்கு அமர்சித்திர கதாவின் மகாபாரதம் வாங்கினாயா என வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே கேட்டான். அதற்கு தனியாக இன்னொருநாள் போகலாம்டா என்றேன். உன்மையில் இன்னும் குறைந்தது இரண்டுமுறையாவது புத்தகத் திருவிழாவிற்கு செல்லவேண்டும். இன்னும் தமிழினி, காலச்சுவடு, நற்றிணை போன்ற பிரபலமான ஸ்டால்களுக்குள் போகவேயில்லை. ஆதிரன் எல்லா புத்தகத்தையும் எடுத்து விரித்து வைத்துக்கொண்டு ‘படித்துப் பார்த்தான்’. பின்னர் அவனது போக்கில் கடாசினான்.

புத்தக அலமாரியில் புதிய புத்தகங்களை அடுக்கும்போது என்னிடம் புனைவுகளைவிட அபுனைவு நூல்களே அதிகமிருப்பதை கண்டேன். ஒரு இலக்கிய வாசகனாக நான் இன்னும் ஆரம்பப் படிகளையே தாண்டவில்லை என்ற யதார்த்தம் உரைக்கிறது. 

புதன், 1 ஜனவரி, 2014

புத்தாண்டில்...

இன்று எனது இயல்புக்கு மாறான புத்தாண்டு. நான் இன்று மகிழ்ச்சியாய் இருக்கிறேன். ஏனெனில் நான் புத்தாண்டு கொண்டாடத்தை அருவெருப்பவன். ஆகையினால் புத்தாண்டு நாட்களில் அந்த கொண்டாட்டங்களுக்கு எதிர்வினையாக வேண்டுமென்றே உருவாக்கிக்கொண்ட ஒரு எதிர்மறை உணர்வில் இருப்பேன். அதனால் முந்தைய புத்தாண்டுகளில் இவ்வளவு உற்சாசமாக இருந்ததில்லை என்றே நினைக்கிறேன். இன்றும் புத்தாண்டை பலரும் கொண்டாடும் வழக்கமான பாணியில் கொண்டாடவில்லை. நேற்றிரவு 12 மணிக்கு முன்பே தூங்கப் போய்விட்டேன். ஆனால், நேற்று மாலை நானும் பவானியும் எங்கள் குடும்ப வாழ்க்கையில் செய்யவேண்டியன குறித்து பேசிக்கொண்டோம். இதில் எங்கள் இருவரின் தொழிலில் செய்யவேண்டியன குறித்த இலட்சியங்களும் அடங்கும். எங்களுக்கு டிசம்பர் 31 புத்தாண்டைவிட முக்கியமான நாளும் கூட. ஏனெனில், 13 ஆண்டுகளுக்கு முந்தைய டிசம்பர் 31 அன்றுதான் நாங்கள் இருவரும் வாழ்க்கையில் இணைவது குறித்த முடிவை எடுத்தோம்.

இன்று காலை எழுந்தவுடன் நேற்று பேசியவற்றை ஒரு தாளில் குறித்துக்கொண்டேன். 41 வயதைக் கடந்துவிட்டேன். இன்னும் எனது இலட்சியங்களில் பெரும்பாலனவற்றை நான் அடையவில்லை. இன்னும் பத்தாண்டுகளில் நான் அவற்றை அடையவில்லையென்றால் மீதியிருக்கும் எனது வாழ்நாள் மிக துன்பகரமாக இருக்கும் என்றே உணருகிறேன். ஏனெனில் எனது கனவுகளை நான் அடையாதது குறித்த கவலைகள் என்னை அப்போது தினமும் வருத்தும். அவற்றை அடைவதற்கான உடல் வலுவோ, மனத்திடமோ அப்போது இராது. மேலும் 10 ஆண்டுகளில் இரண்டு மகன்களும் வளர்ந்துவிடுவார்கள். ஆகவே இந்த 10 ஆண்டுகளே எனக்கான இலட்சியங்களை அடைய தகுந்தவை. இந்த மனநிலை கடந்த சில மாதங்களாகவே இருந்தாலும் நேற்று பவானியுடன் பேசியபின் தான் திட்டவட்ட வடிவை அடைந்தன. ஆகவே எனது இலட்சியங்களை அடைய புத்தாண்டு என்பது ஒரு உத்தேச தொடக்கம் மட்டும்தான்.

உண்மையில் 1988 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தின் ஒரு மழைநாளில்தான் நான் எனது திறமைகளை உணர்ந்தநாள். அப்போது நான் பிளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்தேன். முந்தைய 10 ஆம் வகுப்பு பரீட்சையில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண். மாநிலத்தில் முதல் நாற்பது மாணவர்களில் ஒருவன். இதற்காக நான் பெரிதாக எந்த முயற்சியும் எடுத்திருக்கவில்லை. சொல்லப்போனால் பரீட்சை நாட்களில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். நன்றாக ஞாபகமிருக்கிறது, அன்று பெருமழை பெய்து பணகுடி அனுமன் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. வெள்ளத்தை ஆற்றின் கரையில் நடந்தவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டு நடந்தபோது நான் மட்டும் முயற்சி செய்திருந்தால் மாநிலத்தில் எளிதாக முதல் மதிப்பெண் பெற்றிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. பிளஸ் டூவில் அத்தகைய முயற்சியை எடுக்கவேண்டும் என எண்ணிக்கொண்டேன். செய்யவில்லை. ஆயினும் பள்ளியின் முதல் மாணவன். இதுபோல் எத்தனையோ முறைகள் இலட்சியங்களை வளர்த்து அவற்றை தெரிந்தே தவற விட்டிருக்கிறேன்.

இதற்கு எனது அவநம்பிக்கையும் அதனால் விளையும் தயக்கம், சோம்பேறித்தனம், செயல்களை ஒத்திப்போடும் மனப்பாங்கு போன்றவை தான் காரணம் என உணர்ந்தே இருக்கிறேன். இவை எனது குடும்பச் சொத்தாகும். எனவே இந்த உணர்வுகளை வென்றால்தான் என்னால் சாதிக்கமுடியும். இந்தமுறை வென்றுவிடுவேன் என உறுதியாக நம்புகிறேன். அதற்கு முக்கியமான காரணம் ஜெயமோகன். அவரது எழுத்துக்கள் என்னுள் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அவரது நண்பர்களில் ஒருவனாகும் பாக்கியம் பெற்றதால் அவரை அருகிருந்து அறியும் பேறும் பெற்றிருக்கிறேன். அவரே இன்றிலிருந்து ஒரு பெரிய செயலில் இறங்கியிருக்கிறார். எனது நல்லூழ், அந்த செயலும் 10 ஆண்டுகள் தொடரப்போகிறது. எனது தேடல்கள், கேள்விகளுக்கு அவரது இந்த முயற்சியின் வழியாக பதில்களைக் கண்டடைவேன் என நம்புகிறேன். எனவே, எனது குருவைப் பற்றிக்கொண்டு இந்தப் பத்தாண்டுகளை வெற்றிகரமாகக் கடந்துவிடுவேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)