பக்கங்கள்

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்


பிற்காலச் சோழர்களின் மூன்று பெருங் கலைக்கோயில்களில் ஒன்றான தாராசுரம் கோயிலை நேற்று ஒருவழியாக பார்த்தேவிட்டேன். தஞ்சைப் பெரியகோவிலையும், கங்கைகொண்ட சோழபுரக் கோயிலையும் ஏற்கனவே பார்த்தாகிவிட்டது. இது மட்டும் தட்டிப்போய்க்கொண்டே இருந்தது. சென்ற ஆண்டு பிப்ரவரியில் காரைக்காலில் அண்ணன் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு கும்பகோணம் வரும்வழியில் என் புதிய திறன்பேசியை தொலைத்துவிட்டேன். அது தொலைந்ததைவிட அதில் ஏற்றப்பட்டிருந்த தகவல்களின் பாதுக்காப்பு என்னை நிம்மதி இழக்கச் செய்ததால் தாரசுரம் செல்லாமலேயே சென்னை வந்துவிட்டேன். இவ்வாண்டு நேற்று மீண்டும் காரைக்கால் சென்றிருந்தேன். அங்கிருந்து மதியம் பேருந்து ஏறி கும்பகோணம் வரும்போது அந்திசாயும் நேரமாகிவிட்டது. நான் ஏறிய பேருந்து 60 கி. மீட்டருக்கு இரண்டரை மணிநேரம் எடுத்துக்கொண்டது. சென்ற ஆண்டும் இவ்வாறே ஆனது. இதற்கு நான் மயிலாடுதுறை வழியாகவே கும்பகோணம் சென்றிருந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். மேலும் காரைக்கால் – கும்பகோணம் வழித்தடத்தில் பேருந்துகளும் குறைவு. புதுச்சேரி யூனியன், நாகை மாவட்டம், திருவாரூர் மாவட்டம் இறுதியாக தஞ்சை மாவட்டம் என நான்கு அரச நிர்வாக பகுதிகளை கடந்து வரவேண்டியதாகிவிட்டது. அரசாலாறு, நாட்டாறு மேலும் அவற்றின் கால்வாய்களில் தண்ணீர் நிறைய ஓடுகிறது. பல இடங்களில் நெல் வயல்கள் செழிப்புற்றிருந்தன. பனங்காடை (Indian Roller), பஞ்சுருட்டான் (Green Bee eater), கழுகு என பறவைகள் பலவற்றை வழியில் பார்க்க நேர்ந்தது. ஆயினும் மனம் தாராசுரத்திலேயே லயித்திருந்ததாலும், தொடர்ந்த பயணங்களால் தூக்கம் தொலைந்த சோர்வாலும் மனம் இவற்றில் ஈடுபடவில்லை. ஒருவழியாக கும்பகோனத்தை மாலை 6 மணிக்கு பேருந்து அடைந்தது. ஓட்டமும் நடையுமாக  எதிரிலிருக்கும் நகரப் பேருந்து நிலையத்தை அடைந்து கிளம்பத் தயாரக இருந்த தாராசுரம் பேருந்தை பிடித்தேன். தாராசுரத்தை அடையும் போது மாலை 6.15. நடத்துனர் என்னை கோயிலினருகிலேயே இறக்கிவிட்டார். 






முதல்பார்வையில் கோயில் என்னை ஈர்க்கவில்லை. தஞ்சை, மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு நிகரான பிரம்மாண்ட விமானம் தாராசுர ஐராவதீஸ்வரருக்கு இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அந்தப் பிரம்மாண்டம் நம்மை முதல் பார்வையிலேயே கட்டிப்போட்டுவிடும். எனது முதல் DSLR கேமராவில் நான் படம் எடுக்கும் முதல் பழங்கால கோயில் இதுவே. நமது வரலாற்றுத் தொண்மை வாய்ந்த கோயில்களை புகைப்படம் எடுக்கவேண்டும் என்பதும் நான் DSLR வாங்க முதன்மையான காரனங்களில் ஒன்று. கேமாராவை வெளியில் எடுக்கும்போது கிட்டத்தட்ட இரவாகிவிட்டது. மஞ்சள் ஒளி விளக்குகளால் கோயில் அதன் அழகின் வேறொரு பரிமாணத்தை காட்டியது. கோனார்க் சூரியன் கோயிலைவிட சிறிய அளவிலான தேர்ச்சக்கரங்கள் கொண்ட முகப்பு மண்டபம். தேரை கிழக்கு மேற்கு பகுதிகளில் யானைகளும், வடபுறம் குதிரைகளும் இழுக்கும்படியான சிற்ப வேலைப்பாடுகள். குதிரைகளின் முகங்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. முகப்பு மண்டபத்தின் தூண்களின் அடிப்பகுதிகளில் யாளிகள் உள்ளன. ஒருவகையில் யாளிகளே தூண்களான மண்டபம். மற்ற கோயில்களில் யாளிகள் தூண்களின் மேற்புறத்தில் தனியாக நீட்டிக்கொண்டிருக்குமாறு செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு யாளிகளின் தலைப்படுதியே தூண்களாக மாற்றப்படிருக்கிறது. எந்த ஒரு குறிக்கோளுமில்லாமல் பார்க்கும் சிற்பங்களையெல்லாம் படம் எடுத்துக்கொண்டிருந்தேன். எந்தச் சிற்பத்தையும் உற்று நோக்கி அறிய முற்படும் முன் புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என்ற ஆசையே மேலோங்கி இருந்தது. இரவாகிவிட்டதும், கோயில் நடை சாத்திவிடுவார்களே என்ற அச்சமும், அவற்றை எல்லாம் விட இந்த சிற்பங்களை பற்றி பெரிதாக ஏதும் தெரியாது என்பதும் இதற்குக் காரணம். இந்த நுண்ணிய சிற்பங்களே இந்தக்கோயிலை தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரக் கோயில்களிலிருந்து வேறுபடுத்துகிண்றன. இவ்வாளவு நுண்ணிய சிற்பங்களைக் கொண்ட தூண்கள் மற்ற இரு புகழ்பெற்ற பிற்கால சோழர்களின் கலைப்படப்புகளில் இல்லை என்றே நினைக்கிறேன். 




கோயிலின் வெளிப்புறகாரத்தில் பாவப்பட்டுள்ள கருங்கற்களில் பல உடைந்த சிற்ப வேலைப்பாடு கொண்ட தூண்களின் பகுதிகளாக உள்ளன. இந்தக் கோயிலை சமீபகாலத்தில் சீரமைத்தபோது பொருத்தமுடியாத தூண்களை இவ்வாறு பாவுகற்களாக பயன்படுத்திக் கொண்டனர் போலும். கோயிலின் ஈசான மூலையில் பூட்டப்படிருந்தஒரு மண்டபம் உள்ளது. அருகிலிருந்த காவலாளி இதில் ஓவியங்கள் உள்ளன பார்க்கிறீர்களா என்று உடைந்த ஆங்கிலத்தில் கேட்டார். சரி என்றவுடன் திறந்து உள்ளே கூட்டிப்போனார். டார்ச் வெளிச்சத்தில் கோயிலின் சிதிலமைடைந்த சிற்பங்களை காட்டி கோயில் வரலாற்றை அவரது ஆங்கிலத்தில் சொல்லத்தொடங்கினார். தமிழிலேயே சொல்லுங்கள் என்றதும், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தாராசுரத்திலிருந்து டெல்லி என அதிகாரம் மாறியது என ஏதேதோ முன்னுக்குப் பின் முரணாக அவரது ஆங்கிலத்திலேயே பேசினார். அந்தக்கால தமிழர்கள் இவ்வாறு ஆங்கிலத்திலேயே பேசினார்கள் என்றார். இப்போது இந்த இடம் பவர் சோப்புக்காரகளுக்கு பட்டா போட்டுவிடப்பட்டுள்ளது, கோர்ட்டில் கேஸ் நடக்கிறது என்று உளற ஆரம்பித்துவிட்டார். அவரிடமிருந்து தப்பித்துவர பெரும்பாடாகிவிட்டது. பாவம் என்ன மனக்கோளாறோ அவருக்கு. பேச்சின் நடுவே லட்சுமணன் என்று அடிக்கடி சொன்னார். அவரது பெயரோ என்னமோ!











கோயிலின் அர்த்த மண்டபம்(?) மிகச்சாதாரணமாக இருக்கிறது. முகப்பு மண்டபதிலுள்ள தூண் சிற்பங்கள் இங்கு இல்லை. கேமாராவுடன் தயங்கி நின்ற என்னை உள்ளே வாங்க என்று குருக்கள் அழைத்தார். லிங்கத்தை கர்ப்பக்கிருகம் அருகில் சென்று பார்க்கலாம். லிங்கம் கங்கை கொண்ட சோழபுரத்தை விட சிறியதுதானே என்றதற்கு இது நான்காவது பெரிய ஆவுடை என்று குருக்கள் சொன்னார். முதலில் கங்கை கொண்ட சோழபுரம், இரண்டாவது தஞ்சை பெரியகோயில், மூன்றாவது ஏதோ ஒரு கோயில் பெயர் சொன்னார் மறந்துவிட்டேன். ஆவுடைக்கு தீபாராதனை காட்டி பிரசாதம் வழங்கினார். அவரது மன திருப்திக்காக நெற்றியில் இட்டுக்கொண்டேன். சென்னை போரூர் பகுதியிலிருந்து வருகிறேன் என்றதும் தன் சித்தப்பா மற்றும் பல உறவினர்கள் அங்கு இருப்பதாகச் சொன்னார். பெண் எடுத்தது மாங்காடு என்றார். 250 வருடங்களுக்கு முன்பு எங்களது பூர்வீகமும் மாங்காடுதான் என்றேன் அவரிடம். 30 களில் இருக்கும் அழகிய குருக்கள். வெளியே தெற்கு பார்த்தவாறு பெரிய நாயகி அம்மன் கருவறை. அங்கிருந்த குருக்களிடம் மூன்று பிற்கால சோழ்ர்கால கோயில்களிலும் அம்மன் பெயரும் பெரியநாயகிதானே என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். கருவறை மூடியிருந்தாலும் கோயிலின் பிறபகுதிகளை நீங்கள் எப்போது வந்தாலும் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்றார். கோயிலை விட்டு வெளிவந்ததும் வடபுறம் மற்றொரு தனிக்கோயில் இருக்கக் கண்டு அங்குசென்றேன். அதற்குள் கோயில் குருக்களும், காவலாளியும் கதவைப் பூட்டிக்கொண்டிருந்தனர். இது அம்மன் கோயில் என்றும், அம்மன் பெயர் தெய்வநாயகி என்றும், இதுவே பிரதான அம்மன் என்றும் சொன்னார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக