பக்கங்கள்

வெள்ளி, 4 மே, 2007

கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமையை ஏற்பவர் யார்?

கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமையை ஏற்பவர் யார் என்ற கேள்வி இயல்பாகவே எல்லோர் மனதிலும் எழுவதுதான்; காரணம் நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனால் சன் டிவி என்ற பூதம் மூலம் திமுக தற்போது செய்துவரும் அரசியல் கண்டிக்கப்படவேண்டியது. ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவின் தலைமையை ஏற்பவர் யார் என்று சன் தொலைக்காட்சி உலகப்புகழ்பெற்ற?! ஏ.சி. நீல்சன் நிறுவனம் மூலம் ஒரு கருத்துக்கணிப்பை (திணிப்பை) நடத்தி முடிவை வெளியிடப்போகிறதாம். இந்தக் கேள்விக்கான அவசியம் என்ன இப்போது?; சன் டிவி என்ற ஊடக மிருகத்தைக் கொண்டு திமுக வேண்டுமென்றே குட்டயைக் குழப்பிக் குளிர்காய நினைப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

சன் தொலைக்காட்சி ஒரு தனி நிறுவனம் அதற்கும் திமுகவிற்கும் தொடர்பு கிடையாது என யாரும் வாதிட வந்துவிட வேண்டாம். சன் தொலைக்காட்சியால் திமுகவிற்கும், திமுக வினால் சன் தொலைக்காட்சிக்கும் கண்டிப்பாக ஆதாயம் இருக்கிறது. சன் தொலைக்காட்சியின் வளர்ச்சி பின்னொரு காலத்தில் நம் ஜனநாயகத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக விளங்குவதற்குவதற்கான அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது. ஏனெனில் நாம் (பெரும்பாலும் அறம் குறைந்த) ஊடகங்களால் கட்டமைக்கப்படும் அவல உலகில் வாழுகிறோம்; அரசியலும் மதமும் போல் அரசியலுடன் இணைந்த ஊடகம் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்விசயத்தில் (தற்போதைக்கு) ஜெயா தொலைகாட்சி குறித்துப் பயப்பட வேண்டியதில்லை; அவர்கள் சன் தொலைக்காட்சியை விடவும் மோசமான கருத்துத் திணிப்புகளைச் செய்தாலும், அவர்களின் வீச்சு ஒரு சிறு கும்பலைத்தாண்டி வெளியே செல்லப்போவதில்லை என்பதால்.

சன் தொலைக்காட்சியோ அல்லது அதனால், தேவையில்லாமல், தலையில் வைத்துக் கொண்டாடப்படும் ஏசி நீல்சன் அமைப்போ, (ஏ.சி. நீல்சன் நிறுவனம், உலகப்புகழ்பெற்றது என்பதே சன் தொலைக்காட்சியால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு புனைவு!) ஒருபோதும் தன் கருத்துக் கணிப்புகள் குறித்த நெறிமுறைகளை (Methodology) வெளிப்படையாகச் சொன்னதில்லை. பொதுவாகப் பெரும்பாலான ஊடகங்களும் பூடகமாகவே இக்கருத்துக் கணிப்புகளைச்/திரிப்புகளைச் செய்தாலும், சன் தொலைக்காட்சியின் வீச்சு காரணமாக அதன் பாதிப்பு அதிகம் இருக்கும். இவ்வாறு வளார்ந்துவரும், முன்பு நினைத்துப் பார்த்திராத, பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கு அரசு விரைவில் சட்டமியற்ற வேண்டும். இவ்வாறு ஒரு நிறுவனம் மட்டுமே, குறிப்பாக அரசியல் பிண்ணனி கொண்ட, அச்சு, மின்னணு ஊடகத் துறைகளில் ஏகபோக உரிமை கொண்டாட அனுமதிக்காதபடி அச்சட்டம் பார்த்துக்கொள்ளவேண்டும். அதற்காக கலாநிதி மாறனின் திறமையை நான் குறைசொல்லவில்லை. ஆயினும் அரசாங்கத்திடம் எப்போதும் ஒரு கடிவாளம் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.

குழலியின் பின்னூட்டத்திற்குப் பிறகான குறிப்பு: இது சற்றுக் கடினம்தான்; மத்திய மாநில உள்ளாட்சி என்ற மூன்றடுக்குகளிலும் அதிகாரம் செலுத்தும் கட்சியின் ஆதிக்கம் இச்சட்டமியற்றுவதில் சில தடங்கல்களை ஏற்படுத்தலாம். ஆனால் முயன்றால் முடியாததில்லை. இதுகுறித்து அரசியல்வாதிகளிடமோ, சட்ட அறிஞர்களிடமோ ஏதேனும் கருத்துக்கள் இருக்கிறதா என்பதே தெரியவில்லை என்பதுதான் கவலையளிக்கக்கூடிய விடயம்.

பின்னிணைப்பு: தினகரன் நாளிதழை சன் தொ.கா வாங்கியபோது திமுக + சன் தொ.கா வின் ஊடக ஆதிக்கம் குறித்து காலச்சுவடு எழுதிய தலையங்கம். அதை ஆதரித்து எம். கே. குமாரும், மறுத்து ராம்கியும் 2005 ல் தங்களது வலைப்பதிவில் எழுதியவற்றை மேற்கண்ட இணைப்பில் சொடுக்கிப் பார்க்கவும். எம்.கே. குமாரின் பின்னூட்டத்தில் நடந்துள்ள விவாதம் கவனிக்கப்பட வேண்டியது. இவ்விசயத்தில் எம். கே. குமாரின் கருத்துக்கள் என் கருத்துக்களுடன் அப்படியே பொருந்திப்போகிறது.