பக்கங்கள்

வியாழன், 1 ஏப்ரல், 2010

சுப்ரமணிய பாரதியும் சில பழக்க வழக்கங்களும்

சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தேசிய நாட்டுப்புறவியல் ஆதரவு மையத்தில் தான் எடுத்த பாரதியைப் பற்றிய விவரணப் படத்தை திரு. அம்ஷன் குமார் திரையிட்டார். அதில் அவர் பாரதியாருடன் பழகியவர்களை நேரடியாகச் சென்று சந்தித்து பாரதியார் குறித்த அவர்களது அனுபவங்களை கேட்டறிந்து ஆவணப்படுத்தியிருக்கிறார். அவர் அந்த ஆவணப்படத்தை எடுத்தபோது அப்பெரியவர்கள் தொண்ணூறு வயதைத்தாண்டி விட்டிருந்தார்கள். ஆனால் பாரதியுடன் பழகும்போது அப்பெரியவர்களுக்கு பதினைந்து வயதிற்குள் தான் இருந்திருக்கிறது. அவ்விவரணப் படத்தை எடுத்த விபரம் பற்றியும் குறிப்பாக அவ்விரு பெரியவர்களைச் சந்தித்தது பற்றியும் அம்ஷன் குமார் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை அழியாச் சுடர்கள் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

நான் அப்படத்தை பார்த்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இருக்குமென்று நினைக்கிறேன். ஆனால் இக்கட்டுரையை வாசித்ததும் படக் காட்சிகள் என் கண் முன் விரிகின்றன. நவீன தமிழின் ஆகப் பெரும் கவியின் தனிப்பட்ட குணாதிசியங்கள் சிலவற்றை குறித்து அறிய அம்ஷன் குமாரின் விவரணப் படமும், இக்கட்டுரையும் சிறந்த சான்றாகும். கட்டுரையை வெளியிட்ட காலச் சுவடு இதழுக்கும் அதை மறுபிரசுரம் செய்த அழியாச் சுடர்கள் வலைத் தளத்திற்கும் நன்றி. பாரதியின் போதை பழக்கங்கள் ஏற்கனவே அறிந்தவைதான் எனினும் அதை பார்த்தவர்களின் நேரடிச் சாட்சியம் ஒரு மிகச் சிறந்த சான்றாதாரம் தானே. அதை ஆவணப்படுத்தாவிடில் பிற்காலத்தில் பாரதியார் ஒரு தெய்வப் பிறவியாகச் சித்தரிக்கப் படுவார். அதை உறுதிப்படுத்துவதுபோல் அவ்விவரணப் படம் முடிந்தவுடன் பாரதிய ஜனதாக் கட்சியின் இல. கணேசன் அம்ஷன் குமாரிடம் சென்று பாரதியின் போதைப் பழக்கவழக்கங்கள் குறித்த காட்சிகளை நீக்கிவிடுமாறு சொன்னார். அவரது வாதம், பாரதி போன்ற ஆளுமைகளின் தவறான பழக்க வழக்கங்களை குறிப்பிடுவதின் மூலம் அவர்களைச் சிறுமைப் படுத்துகிறோம் என்பதும், மேலும் பாரதி குறித்து எதிர்மறை விமரிசனம் வைப்பவர்களுக்கு மேலும் ஒரு ஆதாரத்தை அளிக்கிறோம் என்பதுமாகும். அம்ஷன் குமார் அதை ஆதரிக்கவில்லை. நானும் அம்ஷன் குமாரிடம் இப்படத்தைப் பார்த்தபின் எனக்கு பாரதியின் மேலுள்ள மதிப்பு அதிகமாகி உள்ளதே தவிர குறையவில்லை என்று சொன்னேன். இக்கட்டுரையில் அம்ஷன் குமார் அவருக்கு பலரிடம் இருந்தும் பாரதியின் போதை பழக்க வழக்கக் காட்சிகளை நீக்கிவிடும்படி வேண்டுகோள் வந்ததைப் பற்றியும் பதிவு செய்துள்ளார்.

என்னைப் பொறுத்தவரையில் ஞான ராஜசேகரன் எடுத்த பாரதி திரைப்படத்தைவிட (இளையராஜாவின் இசையைத் தவிர்த்து) அம்ஷன் குமாரின் விவரணப் படம் மிகுந்த வீச்சுடையது. விவரணப் படத்தையும், திரைப்படத்தையும் ஒப்பிடக் கூடாதுதான், ஆயினும் பாரதி போன்ற ஆளுமைக்கு அத்திரைப்படத்தைவிட விவரணப் படமே பெருமை சேர்க்கிறது என்பது என் புரிதல். இதன் குறுந்தகடுகளை அம்ஷன் குமார் அந்நிகழ்வில் பலருக்கும் நுறு ரூபாய்க்கு விற்றார். என் முறை வரும்போது காலியாகிவிட்டது. பணத்தைக் கொடுத்துவிட்டு நானே அவர் வீட்டில் வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று சொன்னேன். அவருக்கு எதற்கு சிரமம் என்ற நல்லாசையில்தான். என் சோம்பேறித்தனத்தால் போகவேயில்லை. அவரும் ஒருமுறையோ இருமுறையோ என்னை தொடர்புகொண்டார். தபாலில் அனுப்பட்டுமா எனக் கேட்டார். இல்லை நானே வருகிறேன் என்று சொன்னேன். பின்னர் அவரும் அழைக்கவில்லை, நானும் அதை மறந்தேபோய்விட்டேன். வேறு எங்காவது கிடைத்தால் வாங்கிவைக்க வேண்டும்.

இதை எழுதும்போது, எண்பதுகளில் எனது பெரியப்பா வீட்டிற்கு கடையம் சென்றபோது அவரது வீட்டிற்கு நேர் எதிரே தபால் அலுவலகமாக இயங்கிக் கொண்டிருந்த வீடுதான் பாரதியார் வீடு என்று எனது பெரியப்பா சொல்லி அவ்வீட்டை அதிசயமாகப் பார்த்திருக்கிறேன். அப்போது என் கையில் புகைப்படக் கருவி இல்லையே என இப்போது நினைக்கையில் வருத்தமாக உள்ளது. அன்று நான் கடையம் ஜம்பு நதி மணல் பரப்பில் ஏகாந்தமாக நடந்ததும் கூடவே நினைவிற்கு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக