பக்கங்கள்

வியாழன், 6 ஜூலை, 2006

சபரிமலை ஐய்யப்பன் கோவில் விவகாரம் - 2

இந்தப் பதிவு நான் செல்வன் அவர்களின் பதிவில் இட்ட பின்னூட்டத்திற்கு எதிர்வினைகள் வந்தபோது, அவற்றிற்குப் பதிலாக இட்டது. பின்னூட்டம் நீண்டுவிட்டதால், தனிப் பதிவாகவும் இங்கு இடுகிறேன். திரு. செல்வனின் பதிவிற்குச் செல்ல இங்கு சொடுக்கவும்.

பெண்களின் மாத விலக்கு நாட்களைக் கருத்தில் கொண்டே அதாவது பெண்களின் நலனை முன்வைத்தே?!, அக்காலப் பெரியோர், மாதவிலக்கு நிற்காத பெண்களுக்கு கடும் விரதமிருந்து, 18 படியேறி வருதல் இயலாது எனும் காரணாத்தாலேயே, மாதவிலக்கு நிற்காத பெண்கள் பின்வழியாகச் செல்லுதல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற ரீதியில் விளக்கம் கொடுத்திருக்கிறார். இது ஒரு பம்மாத்து என்பது என் கருத்து.

ஐயா, பின்பக்கம் வழியாகச் சென்று தரிசிப்பது, என்பதே கடந்த சில வருடங்களில் (வலிந்து) ஏற்படுத்தப்பட்ட ஒரு வழக்கம் என நினைக்கிறேன். அதாவது, கோவில் நிர்வாகம் விதிகளைச் சற்று தளர்த்தியிருக்கலாம் என நான் நினைக்கிறேன். என் யூகம் தவறாகவுமிருக்கலாம்; அதாவது ஆதி காலம் முதற்கொண்டே, சபரி மலையில் பின்வழி தரிசனம் வழக்கத்திலிருந்து வந்திருக்கலாம்.

ஆனால், அதுவல்ல என் வாதம். உண்மையிலேயே, பெண்கள் மீது கரிசனமிருந்திருந்தால், மாதவிலக்கு நிற்காத பெண்களுக்கென்று, தனியாக அரை மண்டலம் (20 அ 24 நாட்கள்) விரதமிருக்க வைத்து, பெருவழிப் பாதைப் பயணம், 18 படியேற்றம் போன்றவற்றை அனுமதித்திருக்காலாமே. பெண்களை அனுமதித்தால் தீட்டுப் பட்டுவிடும் என்ற காலாவதியாகிப்போன நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்களை இன்னும் பெருவழிப்பாதை, 18 படி ஆகியவற்றை பயன்படுத்தவிடாது தடுப்பது தவறானது என்பது என் வாதம்.

மாதவிலக்கு என்பது பெண்களுக்கு மட்டுமே, பிரத்யேகமாக நடைபெறும் ஒரு உடலியக்க நிகழ்ச்சி. எப்படி நாமெல்லாரும், மல, ஜலம் கழிக்கிறோமோ அதுபோன்றே பெரும்பாலான பெண்களுக்கு 28 நாட்களுக்கொருமுறை மாதவிலக்கு ஏற்படும். இது ஒரு இயற்கை நிகழ்வு. என்ன, பொதுவாக பெண்கள் மாதவிலக்கான நாட்களில் சற்று சோர்வாக இருப்பார்கள். அந்த நாட்களில் பெண்கள் சோர்வடைவார்கள் என அறிந்திருந்த பெரியோர்கள் அதற்கேற்றவாறு அரைமண்டல விரதமிருக்க பெண்களை அனுமதித்திருக்கலாமே. அதைவிடுத்து தீட்டு என்று, இன்று முட்டாள் தனமாகத் தெரியும், ஒரு கருத்தாக்கத்தைக்கொண்டு பெண்களைத் தள்ளி வைப்பது மிகவும் தவறான செயல். இது அக்காலத்தில் நிலவிய ஆணாதிக்க மனப்பான்மையின் ஒரு வெளிப்பாடு. அதற்கு எஸ். கே ஐயா போன்றவர்கள் அறிவியல் விளக்கங்களையளித்து வக்காலத்து வாங்குவதும் தவறு.

ஏதோ, அந்தக்காலத்தில் நிலவிய கலாச்சார சூழலில், அவர்களுக்கிருந்த அறிவு வளர்ச்சியைக் கொண்டு சில விதிமுறைகளை ஏற்படுத்தியிருக்கலாம். அதை இன்னும் பிடித்துக்கொண்டு தொங்குவது தான் தவறானது என்பதே என் வாதம். (அப்படியாயின், மல, ஜலம் கழிப்பதும் ஒரு தீட்டுதானே, 40 நாட்களும் மல, ஜலம் கழிக்காதவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றிருந்தால் என்னவாகும்) அதைத்தான், என் முந்தைய பின்னூட்டத்திலும் 'மாற்றத்தால் ஆகியதே உலகம்' என்வே சபரி மையிலும் காலத்திற்கேற்ப மாற்றம் நிகழ வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதியிருந்தேன்.
கடும் விரதம் அனுஷ்டித்துத்தான் ஐய்யப்பனை தரிசிக்கவேண்டும் என இருந்ததால் தான், அக்கோவில் மேல் பலருக்கும் ஒரு ஈடுபாடு ஏற்பட்டு, அக்கோவில் மிகவும் பிரபலமடைந்தது. (30 - 40 ஆண்டுகளுக்குள் தான் இது நடந்தது என நினைக்கிறேன்) மேலும் 'மகரஜோதி?!' போன்ற அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதைகளும் கோவிலின் பிரபலத்திற்கு ஒரு காரணம். பல பழம்பெருங் கோவில்களைப் பின்னுக்குத்தள்ளி விட்டு ஐய்யப்பன் தனது 'மார்க்கெட்டிங் உத்தியால்' பிரபலமடைந்தது இங்ஙனமே. அதைத் தக்கவைத்துக் கொள்ளவே பின்வழி தரிசனமுறை போன்று விதிமுறைகளில் சில 'தள்ளுபடிகள்' செய்யப்பட்டிருக்கலாம். அது போன்றே மாதவிலக்கான பெண்களுக்கும் விதிமுறைகளில் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதே என் அவா. மாற்றத்திற்குட்படாத எவையும் காலத்தால் அடித்துச் செல்லப்படும். இது மதம், ஆன்மீகம், அறிவியல், கலை, சினிமா, மருத்துவம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் எல்லாவற்றிற்கும் பொருந்தும். மேலும் மக்களுக்குத்தான் கடவுளே தவிர, கடவுளுக்காக மக்களில்லை. ஒரு பொம்மலாட்டக்காரன் போல் மக்களை ஆட்டுவிக்கும் கடவுள் எனக்குத்தேவையில்லை என்பது என் கருத்து. அதற்கு எஸ். கே ஐயா போன்றவர்கள், காலத்திற்குதவாத வழிமுறைகளை தூக்கிப்பிடிப்பதற்காக, அறிவியல் முலாம் பூசிய புதிய விளக்கங்களையளிப்பது தவறு என்கிறேன்.

எஸ். கே அவர்கள், கட்டுப்பெட்டித்தனங்களை தான் அப்படியே நம்புகிறேன், அவற்றை இன்றைய அறிவு கொண்டு விளக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறியிருப்பாராயின் அவருடன் வாதம் புரிய வேண்டிய அவசியமெனக்கில்லை. ஆனால், அவர் கடவுளர் மேலிருக்கும் தீவிரப் பற்றுதலினால், காலாவதியாக வேண்டிய கருத்தாக்கங்களை தூக்கிப்பிடிக்கிறார் என நான் நம்புவதால் இப்பின்னூட்டம். 'Old habits die hard' தானே. எனக்கும், நான் நம்பும் சில விடயங்களில், பகுத்தறிவிற்கும், ஜனநாயகத்திற்கும் புறம்பான வழக்கங்களிருக்கலாம் (இருக்காது என நம்பினாலும்). சற்று கார சாராமாக இவ்விடயத்தை கையாண்டிருப்பதின் நோக்கம், சபரிமலையில் நடைபெறும் ஜனநாயகத் தன்மையற்ற போக்கைக் கண்டிக்கும் விததில்தானே தவிர, யாரையும் தனிப்பட்டமுறையில் புண்படுத்தும் நோக்கத்திலல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மேலும், நண்பர். திரு. வஜ்ரா சங்கர் அவர்கள் காரல் மார்க்ஸ் ஒரு Plagirist என போகிறபோக்கில் அவதூற்றை வீசிச் செல்கிறார். மாற்றமே உலகில் நிலையானது எனக் கீதையிலும் சொல்லியிருக்கலாம். மார்க்ஸ் கீதையையும் வாசித்திருந்திருக்கலாம், (எனக்குத் தெரியாது) அதனால் பாதிப்புமடைந்திருக்கலாம். அதற்காக அவர் காப்பியடித்தார் என்று அவதூறு சொல்லக்கூடாது. நான் கீதைக்கோ, மார்க்சுக்கோ காவடி தூக்கவில்லை. ஆயினும் திரு. சங்கர் அவர்கள் ஆதாரங்களைக் காட்டமுடியுமா? யாரும் இங்கு சுயம்பு இல்லை. இது கீதாசிரியருக்கும், மார்க்சுக்கும், ஏன் எனக்கும், உங்களுக்கும் பொருந்தும். நம்முடைய இன்றைய அறிவு, எண்ணங்கள் எல்லாம் நம்மூதாதையரிடமிருந்து வந்ததே. அதற்காக அவற்றையே பிடித்து தொங்கிக்கொண்டிராமல், அவற்றை மேம்படுத்த வேண்டுமெயன்றி, அவர்கள் சொன்னதே வேதம், (இங்கு வேதம் என்பதை கேள்வி கேட்காமல் நம்புவது என்ற பொருளில் கையாண்டுள்ளேன்) முக்காலத்திற்கும் பொருந்தும் உண்மை என நம்பக்கூடாது என்பதே என் கருத்து. அதுவே உண்மையான தத்துவ விசாரம். உண்மையான அறிவியலும், ஆன்மீகமும் போதிப்பது அதையே. நண்பர்கள் என்னைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். என் கருத்தை வலியுறுத்தும் வேளையில், யார் மனத்தையவது நான் புண்படுத்தியிருந்தால் மன்னித்தருள வேண்டுகிறேன்.

Conflict of interest: எனக்கு கடவுள் நம்பிக்கையின் மேல் தற்போதைக்கு நம்பிக்கையில்லை.

குறிப்பு: அதற்காக யாரும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் மத நம்பிக்கைகளில் மூக்கை நுழைக்கவேண்டாம் என எச்சரிக்க வேண்டாம். இதுகுறித்து ஒரு தனிப்பதிவு போடும் எண்ணமுள்ளது.

சனி, 1 ஜூலை, 2006

சபரிமலை ஐய்யப்பன் கோவில் விவகாரம்

கடந்த சில நாட்களாக சபரிமலை ஐய்யப்பன் விக்கிரகத்தைத் தொட்டு நடிகை ஜெயமாலா வணங்கினார் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. கோவிலில் 'பிரசன்னம்' பார்த்த பணிக்கர் (முழுப்பெயர் தெரியவில்லை), இதனால் ஐயப்பன் கோபமடைந்துள்ளதாகவும், விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார். இந்நிகழ்ச்சி ஒருபோதும் நடக்கவில்லையெனவும், பணிக்கர்தான் நடிகையுடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்கிறார் எனவும் கோவில் நிர்வாகம் சொல்கிறது. இல்லை, கோவில் பூசாரிகள் தான் என்னை கர்ப்பக்கிருகத்திற்குள் அழைத்துச் சென்று ஐயப்ப விக்கிரகத்தைத் தொட்டு வணங்குவதற்கு அனுமதியளித்தார்கள் என நடிகையும் தெரிவித்துள்ளார்கள்.
இச்சர்ச்சையிலுள்ள பெரிய கூத்து என்னவெனில், இந்நிகழ்ச்சி ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்பு நடந்தது என பணிக்கர் தனது 'பிரசன்னத்தின்'(!?) மூலம் தற்போது கண்டுபிடித்துள்ளார். 1987-ல், தான் கருவறைக்குள் நுழைந்ததாக ஜெயமாலாவும் தெரிவித்துள்ளார். அப்படியாயின், பணிக்கரின் 'பிரசன்னத்தின்' படி, கோபமடைந்துள்ள ஐய்யப்பன் கடந்த 15 வருடங்களாக ஏன் தனது கோபத்தை வெளிக்காட்டவில்லை என்ற கேள்வியெழுகிறது (ஒருவேளை தவணை முறையில் வெளிக்காட்டுகிறாரோ - என் மனைவியின் பதில்) இந்நிகழ்ச்சி உண்மையில் நடந்ததோ நடக்கவில்லயோ அதுவல்ல நமது ஆதங்கம்; இச்சர்ச்சையின் மூலம் நம் சமூகத்தில் சில விரும்பத்தகாத மற்றும் விரும்பத்தகுந்த விளைவுகள் ஏற்படலாம். முதலில் விரும்பத்தகாத விளைவுகள் என்னவென்று பார்க்கலாம்.
இச்சர்ச்சையை, பரபரபிற்காக ஊடகங்கள் வெளியிடுவதால் மக்களுக்கு சோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளில் மேலும் நம்பிக்கை பெருக வாய்ப்புள்ளது. இதனால் சோதிடர்களுக்கு, குறிப்பாக மலையாள சோதிடர்களுக்கு, அரசியல்வாதிகள், செல்வந்தர்கள், அதிகாரிகள் மற்றும் சாமானியர்கள் மூலம் செல்வம் கொழிக்கும். (தமிழன் மூலம் மலையாளிகளுக்கு செல்வம் சேர்வதை ஒரு தமிழனாக இருந்துகொண்டு நாம் எதிர்க்காமல் இருப்பதா?)
மேலும், பெண்கள் ஐய்யப்பன் கோவிலுக்குள் நுழைவது குறித்து கடுமையான சட்டதிட்டங்களை கோவில் நிர்வாகம் ஏற்படுத்தவேண்டும் என்கின்ற ரீதியில் பொதுவுடைமையாளர்கள் ஆட்சி செய்யும் கேரள மாநில அமைச்சரொருவர் பேசியுள்ளதால், ஏற்கனவே கட்டுப்பெட்டித்தனங்கள் நிறைந்த சபரிமலையில், மேலும் பல, காலத்திற்கு ஒவ்வாத, பெண்களுக்கெதிரான வழிமுறைகள் பின்பற்றப்படவும் வாய்ப்புண்டு.
சாதகமான விளைவு என்னவாகயிருக்கலாம் எனில், கர்நாடக சட்டசபையில் (ஒரு கன்னடப் பெண்ணை முன்வைத்து) நடைபெற்றுள்ள விவாதத்தைச் சொல்லலாம். இதன் எதிரொலியாக (அரசியல் நெருக்கடிகளால்), திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பெண்களும் நுழையலாம் என்று விதிமுறைகளைத் தளர்த்தவும் வாய்ப்புள்ளது.
எது எப்படியோ, சபரிமலை ஐய்யப்பன் கோவில் குறித்து பல மர்மங்கள் மக்களால் தெரிந்தோ தெரியாமலோ காப்பாற்றப்பட்டு வருகின்றன. அவையே இக்கோவில் தொடர்ந்து பிரபலமாக இருப்பதற்கு ஒரு காரணம் எனில் அது மிகையன்று. 'மகர ஜோதி' போன்ற புதிர்கள் அவிழ்க்கப்பட்டாலும், ஐய்யப்பன் தொடர்ந்து தனது பிரபலத்தைத் தக்கவைத்துக் கொண்டுதானிருக்கிறார். பெண்களும் தனது கோவிலுக்குள் நுழையலாம் எனத் தேவஸ்வம் போர்டு முடிவெடுத்தாலும், மணிகண்டன் கோபப்படமாட்டார். மாறாக, சமூகத்தில் சரிபாதியுள்ள ஒரு இனம் தன்னைத் தரிசிப்பது குறித்து மகிழ்ச்சியடைவார்.