பக்கங்கள்

வியாழன், 20 டிசம்பர், 2012

விஷ்ணுபுரம் விருது - 2012

நாளை மறுநாள் (22/12/2012) மாலை ஆறு மணிக்கு விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து இவ்விருது படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதலில் ஆ. மாதவனுக்கும், 2011-ல் பூமணிக்கும் விருது வழங்கப்பட்டது. ஜெயமோகன் மீது பற்றும், மதிப்பும் கொண்ட நண்பர்களால் நடத்தப்படுகிறது இவ்விழா. இந்தமுறை விருது வழங்க இளையராஜா வருகிறார் என்பது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி. இன்று மாலை கோவை கிளம்புகிறேன். நாளை தங்கை வீட்டில் தங்கிவிட்டு சனியன்று மதியம் விழா அரங்கத்திற்குச் செல்லலாம் என் இருகிறேன். நண்பர்கள் பலரை நீண்டநாள் கழித்து சந்திக்கப்போகிறேன் என்பதால் உள்ளம் மகிழ்ச்சியாய் இருக்கிறது. சுனில் கிருஷ்ணன் போன்ற சில நண்பர்களை முதன்முறை நேரில் காணப்போகிறேன். சென்றமுறை கோவையில் இருந்தும், தங்கையின் குழந்தை -கோமதி இறந்துவிட்டதால், விருது நிகழ்ச்சிக்குச் செல்லமுடியாமல் போய்விட்டது. 


விழா அழைப்பிதழ்




செவ்வாய், 20 நவம்பர், 2012

அஞ்சலி - மருத்துவர் தெய்வநாயகம்


என் மூத்த சித்தமருத்துவ நண்பர் மைக்கேல் ஜெயராஜ் அவர்களால் தொடங்கப்பெற்று இன்றுவரை வெற்றிகரமாக நடத்தப்படும் கற்ப அவிழ்தம் இதழ் 1992 - ஆம் ஆண்டில் ஆஸ்த்துமா சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. அதில் அப்போது சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நெஞ்சக நோய் துறைப் பேராசிரியராக இருந்த மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம் ஒரு நீண்ட நேர்காணல் அளித்திருந்தார். அப்போது நான் பாளை சித்தமருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவன். ஒரு ஆங்கில மருத்துவர், அதுவும் சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அவ்வாறு சித்த மருத்துவத்தின்பால் நம்பிக்கை கொண்டிருந்தது எங்கெளுக்கெல்லாம் மகிழ்ச்சியளித்தது. அதன்பின் 1995 இறுதியில் நான் சென்னைக்கு நிரந்தரமாகக் குடியேறுவதற்காக வந்தபோது என் நண்பர் மருத்துவர் சிவராமன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கு ஆஸ்த்துமாவிற்கு சித்த மூலிகைகள் என்ற கருதுகோளை ஆராய்ந்துகொண்டிருந்தார். அவருக்கு மருத்துவர் தெய்வநாயகம் தான் வ்ழிகாட்டுநர். அவ்வாராய்ச்சி இழுத்துக்கொண்டே சென்றது. சிவராமன் தெய்வநாயகத்தைப் பார்ப்பதற்கே அஞ்சி நடுங்கிய காலமது. சிவராமன் மூலம் நான் தெய்வநாயகம் அவர்களின் குணநலன்களை அறிந்திருந்தேன்.

இதற்கிடையில் தெய்வநாயகம் அவர்கள் தாம்பரம் சானடோரியத்தில் மருத்துவக் கண்காணிப்பாளராகப் பணியாற்றத்தொடங்கினார். அங்கு காசநோய் கண்ட நோயாளிகள் மட்டுமல்லாது, தேய்வு நோய் (AIDS) கண்ட நோயாளிகளையும் அனுமதித்து சிகிழ்ச்சையளித்து வந்தார். அக்காலங்களில் உலகிலேயே தேய்வு நோய்க்கு மிக அதிகமானோர் உள் நோயாளிகளாக தங்கி சிகிழ்ச்சை பெற்று வரும் மையங்களில் ஒன்றாக தாம்பரம் சானடோரியம் திகழ்ந்தது. அங்கு தேய்வு நோய்க்கு பெரும்பாலும் சித்த மருந்துகளையே அவர் பரிந்துரைத்து வந்தார். தேய்வு நோய் கண்டவர்கள் சித்தமருத்துகள் சாப்பிட்டபின் நன்றாக தேறிவருவதாகவும், அந்நோயினைச் சித்த மருந்துகள் பெருமளவில் கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்தமிருந்தன. இப்போது டெங்குக் காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீர் எப்படியோ, அப்போது தேய்வு நோய்க்கு ரசகந்தி மெழுகு மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போது நான் வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் நோய்ப்பரவியல் துறையில் முதுகலை பயின்று கொண்டிருந்தேன். வார இறுதிகளில் சென்னைக்கு வரும்போதெல்லாம் நானும், சிவராமனும் மற்ற நண்பர்களும் தெய்வநாயகம் அவர்களின் இம்முயற்சி குறித்து அவ்வப்போது பேசிக்கொள்வதுண்டு. சிவராமனும் அவருடன் ஓரளவு நெருக்கமாகிவிட்டார். தெய்வநாயகம் நோயாளிகளிடம் கனிவாகவும், தன் வேலையச் சரிவரச் செய்யாத மருத்துவமனை ஊழியர்களை மிகக் கண்டிப்பாகவும் நடத்தும் விதம் குறித்து சிவராமன் சொல்வதுண்டு.  என்னுடைய இரண்டாமாண்டு முதுகலைப் படிப்பு பகுதிநேரமென்பதால் 1998-ல் ஆற்காடு அருகில் இசையனூர் கிராமத்தில் பாரதியம்மாள் வைத்திய சேவா கேந்திரத்தில் சித்த மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அது இலவச மருத்துவமனை என்பதாலும், என் மேல் ஒரு நல்லபிப்பிராயம்  ஏற்பட்டதாலும் பல ஊர்களிலிருந்தும் பெருமளவு நோயாளிகள் அங்கு வருவர். அவற்றுள் தாம்பரத்திற்குச் சென்று தெய்வநாயகத்திடம் சிகிழ்ச்சை பெற்று பின்னர் அங்கு தொடர்ச்சியாக செல்லமுடியாமல் இசையனூர் வரும் நோயாளிகள் சிலர் உண்டு. தெய்வநாயகத்தை அவர்கள் மிகவும் சிலாகித்துச் சொல்வதுண்டு. அதில் ஒருவர் ஒருமுறை நோயாளிக்கு சரிவர மருத்துவம் பார்க்காத மருத்துவரை தெய்வநாயகம்  எங்கள் முன்பே அறைந்துவிட்டார் என்றார்.

பின்னர் 1999-ல் சவேரா ஹோட்டலில் நடைபெற்ற தேய்வுநோய்க் கருத்தரங்கு ஒன்றில் தெய்வநாயகம் சானடோரிய ஆராய்ச்சி முடிவுகள் குறித்து கட்டுரை வாசித்தார். எனக்கு அவர் அதில் இன்னும் சற்று சிறப்பாக அறிவியல் முறைமைகளை கையாண்டிருந்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. பின்னர் சிவராமன் மூலம் அவருக்கு புள்ளியியல் முறைமைகளில் அதிக ஆர்வமில்லை எனத்தெரிந்து கொண்டேன். ஓய்வு பெற்றபின் எழும்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தில் மருத்துவ சேவை செய்துவந்தார். அதற்கு அய்ந்து ரூபாய்கள் தான் கட்டணம். சிவராமன் மற்றும் எனது வேறு சில நண்பர்களும் அவருடன் இணைந்து பணியாற்றினர். சித்த மருத்துவ ஆராய்ச்சிகளும் செய்து வந்தனர். ஆங்கில, சித்த மருத்துவ முறைகளை இணைத்து நோயாளிகளுக்கு மருத்துவம் புரிந்தனர். நண்பர் சிவராமனின் மருத்துவத்தொழிலில் அது ஒரு திருப்புமுனையாகும். தெய்வநாயகம் அவர்களது நோய்க்கணிப்பு உத்திகளை சிவராமன் வியந்தோதாத நாட்களே அக்காலங்களில் இல்லை. தனது மருத்துவத் தொழிலுக்கு குருவாக தெய்வநாயகத்தை சிவராமன் ஏற்றுகொண்ட காலமது. எனது உறவினர்கள் சிலர் அக்காலங்களில் அவரிடம் சிகிழ்ச்சைக்குச் சென்றிருக்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் மனம் புண்பட்டிருக்கிறார்கள். ஆயினும் அவரது சிகிழ்ச்சையால் அவர்கள் முழுமையாகக் குணம் அடைந்திருக்கிறார்கள். மக்கள் தொலைக்காட்சியில் அவரது பேச்சுகளைக் கேட்டுவிட்டு என் அப்பா அவரது ரசிகராகவே ஆகிவிட்டார். அவரது அதிரடிப் பாணியும் அப்பாவிற்குப் புரிந்துகொண்டது.

என் பெரிய தங்கை மீனாட்சிக்கு காச நோய் தாக்கியபோது நாங்கள் அவரைத் தான் அணுகினோம். நான், அப்பா, அம்மா, மீனா நால்வரும் அவரது தி. நகர் வீட்டு மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம். எங்கள் முறை வந்தபோது மீனா, அம்மாவுடன் அப்பாவும் செல்ல எத்தனித்தார். தெய்வநாயகம் நீங்கள் வெளியே போங்க என்று தடாலடியாகச் சொல்லிவிட்டார். பின்னர் மீனாவிடம்  உனக்கு என்னம்மா செய்கிறது என்றிருக்கிறார். அம்மா, அவளுக்கு மூளை வளர்ச்சி பூரணமாக இல்லை, அவளால் சொல்லமுடியாது என்றிருக்கிறார்கள். நீங்க சும்மா இருங்கம்மா, அவள் சொல்லுவாள் என்ற அவர், நீ சொல்லு குழந்தை உனக்கு என்ன செய்கிறது என்று மிக அன்பாகக் கேட்டிருக்கிறார். இதுவரை அவளிடம் எந்த மருத்துவரும் அவ்வாறு கனிவுடன் பேசியதில்லை. மனநல மருத்துவர்கள் உட்பட. அம்மா குறுக்கிட்டபோதெல்லாம், நீங்க வெளியபோங்க என்று அதட்டி இருக்கிறார்.

நோய்க்கணிப்பில் மன்னர் அவர். நோயாளிகளிடம் முழுமையாகப் பேசி அவர்கள் சொல்லும் குறிப்புகளைக் கொண்டே நோய்க்கணிப்பு செய்பவர். தேவையற்ற பரிசோதனைளைச் செய்யமாட்டார். ஒருமுறை சிவராமனின் அம்மா மெலிந்துகொண்டே வந்தார்கள். பல்வேறு நிபுணர்கள், எம்.ஆர். ஐ போன்ற பலவிதமான சோதனைகளைச் செய்து அவருக்கு வயிற்றில் புற்று நோய் இருக்குமோ என்ற முடிவிற்கு வந்திருந்தார்கள். ஆனால் தெய்வநாயகம், அவரது குறிகுணங்களை வைத்தே அவருக்கு வயிற்றுத்தமனி சுருங்கிவிட்டதால் இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் எனக்கணித்தார். பின்னர் அப்பகுதியில் எம். ஆ. ஐ ஸ்கேன் செய்ததில் அவரது கணிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

அவருக்கு தமிழ் மேலும், சித்த மருத்துவதின் மேலும் அளவுகடந்த பற்றுண்டு. இதன் காரணமாக பல நேரங்களில் அவர் எல்லை மீறிப் போய்விடுவதுமுண்டு. மிகுந்த பிடிவாதக்காரர். சட்டென்று பிறர் மனம் புண்படும்படி பேசிவிடுவார். ஒருமுறை சிவராமனின் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் முனைவர் SP. தியாகராஜன் தலைமை விருந்தினாராகக் கலந்துகொண்டார். தெய்வநாயகமும் மேடையிலிருந்தார். SP. தியாகராஜன் தனது உரையில் எதையோ சொல்லும்போது குறுக்கிட்ட தெய்வநாயகம், தியாகராஜன் நீங்கள் சொல்வது தவறு. போய் உட்காருங்கள் என்று கூட்டத்தினர் முன்னிலையில் சொல்லிவிட்டார். என்னதான் சித்த மருத்துவத்திற்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தாலும், சித்தமருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் சிலரிடம் அவருக்கு கெட்டபெயர் ஏற்பட்டுவிட்டது. அதற்கு அவரது அதிரடி பாணி காரணமாயிருக்கலாம். ஒருமுறை எனக்கும் அவருக்கும் வாத, பித்த, கபம் குறித்து காரசாரமான ஒரு வாக்குவாதம் நடந்தது. அதன் முடிவில் நான் அவரிடம் இன்னும் உங்களிடம் நிறையச் சண்டையிட வேண்டும், சரிங்களா என்றேன். அவர் சிரித்துக்கொண்டே சரி என்றார்.

அவருக்கு நுரையீரல் புற்றுநோய் என்று சிவராமன் மூலம் எனக்கு ஏற்கனவே தெரியும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவரைப் பற்றி சிவராமனிடம் கேட்கவேண்டும் என நினைத்தேன். அதற்குள் அவர் நேற்று மாலை இறந்துவிட்டார். அவரது மரணத்தை மிகுந்த தைரியத்துடன், ஆர்ப்பாட்டமில்லாமல் எதிர்கொண்டார் என்பதை அறிந்தேன். வணிகமயமாகிவிட்ட இன்றைய மருத்துவ உலகில் அவரைப் போன்ற இன்னொருவரைப் பார்ப்பது அரிது. அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும். 

திங்கள், 19 நவம்பர், 2012

இலக்கியவட்டம் நாராயணன்

1992-ல் என் கல்லூரித் தோழி சுகன்யாவின் தந்தையாக இலக்கியவட்டம் நாராயணன் எனக்கு அறிமுகமானார். அப்போது நாங்கள் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தோம். வேட்டி சட்டை, தோளில் ஒரு ஜோல்னாப் பை, ஒட்டவெட்டப்பட்டத் தலைமுடியுடன் அவர் எனக்கு அறிமுகமானபோது மனதிற்குள் ஒரு நக்கலுடன்தான் நான் அவரை எதிர்கொண்டேன். தோற்றத்தை வைத்து ஆளுமையை எடைபோடும் வயதது. இன்னும் அந்தத் தவறான முன்முடிவுகள் என்னிடமுண்டு. ஆனால், அவரோ எந்தவித அசூசையுமின்றி என்னிடமும், ஜோசப்பிடமும் மிக எளிதில் பழக ஆரம்பித்துவிட்டார். விருதுநகர், கோவில்பட்டி. போன்ற ஊர்கள் எல்லாம் இருபது வருடங்களில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்துவிட்டன என அவரது வெண்கலக் குரலில் பேச்சை ஆரம்பித்துவிட்டார். எப்போதும் எங்கேயும் அந்த வெண்கலக் குரலெடுத்துத்தான் அவர் பேசுவார். எல்லாவற்றைக் குறித்தும் பேசுவார், அதிரடியாகக் கருத்துச் சொல்வார். அப்பா அப்படித்தான் அடிச்சு விடுவார் என சுகன்யா சொல்வாள்.

அதற்கடுத்த வருடம் எனது கல்லூரி மூத்த நண்பர்களோடு திருப்பதி சென்றுவிட்டு என் நெடுநாள் கனவான, எங்கள் சமூகத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த ஊரான, காஞ்சிபுரத்திற்கு முதன்முறையாகச் சென்று அவர் வீட்டில் தங்கினேன். அப்போது அவர் வைகுண்டப் பெருமாள் கோவில் தெருவில் குடியிருந்தார். மறுநாள் காலை என்னை அக்கோவிலுக்குக் கூட்டிச் சென்று அந்தச் சிற்பங்களை விளக்கினார். பின்னர் அங்கிருந்து ஏகாம்பரேசுவரர், காமாட்சியம்மன், சங்கர மடம், தொண்டைமண்டல ஆதினம்,  கைலாசநாதர் ஆலயம், சின்ன காஞ்சிபுரம் போன்ற எல்லாவற்றையும் அவர் சொன்ன வழியில் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். அதன்பின் பலமுறை காஞ்சிபுரம் சென்று அவரது வீட்டில் தங்கி அவர்களது பிள்ளை போலவே ஆகிவிட்டேன். ஆனால் அதுவரை அவர் நடத்தி வந்த இலக்கியவட்ட கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அவரும் அப்படி ஒன்றை தான் நடத்துவது குறித்து எனக்குச் சொன்னதுமில்லை. சுகன்யாதான் சொல்லியிருக்கிறாள். எனக்கு அப்போதெல்லாம் இலக்கியக் கூட்டங்கள் குறித்து ஒன்றும் மதிப்பு இல்லை. காரணம் என் பள்ளி, கல்லூரிகளில் நான் பார்த்த தரமற்ற இத்தகைய கூடுகைகள்.

1997ம் வருடம் அப்படி ஒருநாள் அவரது வீட்டில் தங்கியிருந்தபோது அவர் ஒரு சைக்கிள் ரிக்‌ஷாவில் நான்கைந்து அட்டைப்பெட்டிகளை வைத்து அனுப்பிக் கொண்டிருந்தார். இலக்கியக் கூட்டத்திற்குப் போகிறேன் வருகிறாயா என்றார். சும்மா வீட்டிலிருப்பதற்குப் போய்வரலாமே என்று எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் அவருடன் கிளம்பினேன். ஆனால் அதன்பின் எனக்கு ஒரு புது உலகம் அறிமுகமானது. தமிழ் இலக்கியம், அறிவுலகம் குறித்த என்னுடைய எண்ணங்களைத் தகர்த்தெறிந்தது அது. அதுவரைத் தமிழ்ப்புத்தகங்கள் என்றால் உள்ளடக்கத்திலோ, அமைப்பிலோ  எந்தப் படைப்பூக்கமும் இல்லாத வெகுஜன பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களையே பார்த்துச் சலிப்புற்றிருந்த எனக்கு செம்பதிப்பு என்ற அடையாளத்துடன் அந்தக் காலகட்டத்தில் காலச்சுவடும், கிரியாவும் வெளியிட்ட புத்தகங்கள் கவர்ந்தன. புத்தகத்தின் தலைப்புகளும், அவற்றின் அட்டை வடிவமைப்புகளும் படிக்கத்தூண்டின. காலச்சுவடின் லோகோ என்னைக் கவர்ந்திழுத்த காலமது. அப்படி நான் படிக்க ஆரம்பித்த புத்தகங்களில் ஒன்றுதான் ‘விரிவும் ஆழமும் தேடி’. இன்னும் நன்றாக நினைவிருக்கிறது, அதன் முன்னட்டையில் கோட்டோவியமாகத் தீட்டப்பெற்றிருந்த  உருவம்தான் அதன் ஆசிரியராக இருக்கவேண்டுமென யூகித்திருந்தேன். அந்த கோட்டோவிய முகத்திற்குச் சொந்தக்காரனான சுந்தர ராமசாமியை நேரில் பார்த்து அதை உறுதிசெய்துகொள்ள வேண்டுமெனத் துடித்தேன். அப்புத்தகமும், காற்றில் கலந்த பேரோசையும் என்னை ஆட்கொண்டிருந்த காலமது. பின்னர் சு.ராவை மழித்த முகத்துடன்  அவ்விலக்கியவட்டக் கூட்டமொன்றில் பார்த்தபோது ஏமாற்றமாக இருந்தது தனிக்கதை.

வெ. நாராயணன் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று இலக்கியக் கூட்டம் நடத்துவார். அந்த அமைப்பிற்கு தலைவர், செயலாளர், பொருளாளர், தொண்டர் எல்லாம் அவர் ஒருவரே. பிற நண்பர்கள், குறிப்பாக எக்பர்ட் சச்சிதானந்தம், அமுத கீதன், தரும ரத்தினக்குமார், காமராஜ், சேதுராமன் போன்றவர்கள் அவ்வப்போது உதவினாலும் நாராயணன் எனும் தேர்தான் இலக்கியவட்டத்தை இழுத்துச் சென்றது. இலக்கிய வட்டக் கூட்டங்களை பெரும்பாலும் காஞ்சிபுரம் பூக்கடைச்சத்திரம் PTVS வன்னியர் உயர்நிலைப் பள்ளியில்தான் ஏற்பாடு செய்வார். அந்நாட்களில் காலை 7 மணிக்கே அப்பள்ளிக்குச் சென்று டெஸ்க்குகளை தூக்கி சுவர் ஒரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, பெஞ்சுகளை வரிசையாக வைத்துவிடுவார். டெஸ்க்குகள் புத்தகக் கண்காட்சிக்கும், பெஞ்சுகள் ஆட்கள் உட்கார்வதற்கும் ஏதுவாக அவ்வாறு செய்வார். இவையனைத்தையும் தனியொருவராக அவரே செய்வார். சில நாட்களில் நான் உதவி செய்திருக்கிறேன். 20 வயது  இளைஞனான எனக்கு சில டெஸ்க்குகளுக்கு மேல் தூக்கிவைப்பதற்குள் மூச்சு வாங்கிவிடும். இவற்றைச் செய்துமுடிக்கும்போது அவர் வியர்வையில் குளித்திருப்பார். பின்னர் இலக்கியவட்ட பேனரை பள்ளிக்கு வெளியில் கட்டி வைத்துவிட்டு, கரும்பலகை ஒன்றில் அன்று நடக்கப்போகும்  நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை அவரது மணியான கையெழுத்தில் எழுதிவைத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவார். குளித்துவிட்டு, காலை உணவருந்தியபின், ஐந்தாறு பெரிய அட்டைப்பெட்டிகளில் தன்னிடமுள்ள  புத்தகங்களை ஒரு ரிக்‌ஷா வண்டியில் ஏற்றிக்கொண்டு மீண்டும் PTVS பள்ளிக்குச் செல்வார். பின்னர் புத்தகங்களை வரிசையாக டெஸ்க்குகளில் கண்காட்சிகளில் வைத்துவிடுவார்.  இந்தப் புத்தகங்களை பதிப்பகங்களிலிருந்து 25% தள்ளுபடிக்குப் பெற்று அதே விலைக்கே இலக்கிய வாசகர்களுக்கு விற்பார். மேலும் வாசகர்கள் அப்பணத்தை உடனே செலுத்த வேண்டாம். மூன்று தவணைகளில் செலுத்தினால் போதும். அவ்வாசகர் ஏற்கனவே தெரிந்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை. முதல் தடவையாக அக்கூட்டத்திற்கு வருபராக இருக்கலாம்; அவருக்கு நாராயணனையோ அல்லது பிற நண்பர்கள் யாரையுமோ தெரியாமலிருக்கலாம். அதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டல்ல. இலக்கியப் புத்தகம் வாங்கும் ஆவலிருக்கிறதென்றால் அவரை ஊக்குவிக்கவேண்டும் என்பதே அவரது குறிக்கோள். பலமுறை அவர் ஏமாற்றப்பட்டிருக்கிறார். ஆயினும் அவரது எண்ணத்தில் மாற்றமில்லை.

அதுபோல் ஒருமுறை இலக்கிய வட்டக் கூட்டத்திற்கு ஒருவர் வந்துவிட்டு தன் முகவரியைப் பதிவு செய்துவிட்டால் போதும்.  அதன்பின் தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்கு அந்நபருக்கு அழைப்பிதழ் வரும். அஞ்சலட்டை ஒன்றில் நாராயணனே அம்மூன்று அழைப்பிதழ்களையும் அவர் கைப்பட எழுதி அனுப்புவார். அம்மூன்று நிகழ்வுகளில் ஒன்றில் கூட அந்நபர் கலந்துகொள்ளவில்லை எனில் அதன்பின் அழைப்பிதழ் வருவது நின்றுவிடும். எனக்கே ஒருமுறை அவ்வாறு நடந்திருக்கிறது. அதுபோன்றே புத்தகத்தைக் கடனாக வாங்கிச் செல்பவர்களுக்கும் மூன்று நினைவூட்டல் கடிதங்கள் அஞ்சலட்டைகளில் அனுப்புவார். அதற்குப் பதிலோ, பணமோ வரவில்லையெனில் கவலைப்படமாட்டார்; அப்புத்தகத்திற்கான பணம் அவரது பாக்கெட்டிலிருந்து செல்லும். அவர் அவரது முகவரிக்கு ஒரு ரப்பர் ஸ்டாம்ப் செய்து வைத்திருந்தார். அதில் முகவரி இவ்வாறு தலைகீழாக இருக்கும்.

631502
காஞ்சிபுரம்
39C, காமாட்சியம்மன் கோவில் சன்னதி தெரு
இலக்கிய வட்டம்
வெ. நாராயணன்

உண்மையில் வெ. நாராயணன், இலக்கிய வட்டம், காஞ்சிபுரம் என்று முகவரியிட்டு தமிழ்நாட்டில் எந்த மூலையிலிருந்து அஞ்சல் அனுப்பினாலும் தவறாமல் அது அவர் கைக்கு வந்து சேர்ந்துவிடும்.

இலக்கிய வட்டம் என்றிருந்தாலும் அதில் இலக்கியம் தவிர பிறவற்றிற்கும் இடமிருந்தது. ஒருமுறை நாகசுர வித்வான்கள் வந்து வாசித்தார்கள். ம்ற்றொருமுறை சோடச அவதானி ஒருவர் வந்து அவர் திறமைகளை வெளிக்காட்டினார். நாட்டுப்புறக் கலைஞர்கள் வந்திருக்கிறார்கள். அதுபோன்றே பிற அமைப்புகளுடன் சேர்த்தும் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். சாரு நிவேதிதாவை அழைத்து ஜீரோ டிகிரி குறித்த விமரிசனக் கூட்டமொன்றை தமுஎசவுடன் இணைந்து வேடந்தாங்கலில் ஏற்பாடு செய்திருந்தார். அவர் பெரும்பாலும் இலக்கியக் கூட்டங்களில் பேசுவதில்லை. படைப்பாளி அல்லது விமரிசனம் செய்யப்படும் படைப்பு பற்றி ஒரு சிறு அறிமுகத்துடன் நிறுத்திக்கொள்வார். பிற நண்பர்கள்தான் பேசுவார்கள், விவாதிப்பார்கள். எப்போதாவது அவர் பேசுவதுண்டு.

அதுவரை ஜெயகாந்தன் தவிர வேறு நவீன இலக்கிய ஆளுமைகளை அறிந்திராத எனக்கு இலக்கியவட்டத்தின் மூலம் சு.ரா, அசோகமித்திரன் போன்ற படைப்பாளுமைகளை அருகிலிருந்து கவனிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அசோகமித்திரன் வந்திருந்தபோது மிகுந்த எரிச்சலுடன் காணப்பட்டார். கூட்டம் முடியுமுன்பே நாராயணன் நான் கிளம்புகிறேன் என்றார். அவரை வழியனுப்பும் பொறுப்பு எனக்கு வாயத்தது. பேருந்து நிலையத்திற்கு அவரை கூட்டிக்கொண்டு சென்று நிலையத்திலிருந்து சென்னைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து அவரை ஏற்றிவிட்டேன். ஏறி உட்கார்ந்து ஒரு நன்றிகூட சொல்ல மனமில்லாமல் சென்றுவிட்டார். வரும்வழியிலோ, பேருந்தில் ஏறியபின்போ சம்பிரதாயத்திற்குக் கூட ஒரு முகமன் கூட கூறாத, எப்போதும் எரிச்சலுடனும் பதட்டத்துடனும் இருக்கும், நபர் என்ன பெரிய படைப்பாளி என்று நினைத்து பல வருடஙகள் அ.மியின் ஒரு கதை கூட வாசிக்காமல் இருக்கிறேன். கடந்த சில வருடங்களாகத்தான் ஜெயமோகன் மூலம் அ.மியின் மேல் ஏற்பட்ட அந்த கசப்பு நீங்கியது. இலக்கிய வட்டத்தின் விமரிசனங்கள் ஏதோ சண்டை போட்டுக்கொள்வது போலிருக்கும். நான் கலந்துகொண்ட கூட்டங்களில் சு.ரா வந்தபோது அமுதகீதன், தரும இரத்தினக்குமார் போன்றவர்கள் அவர் மேலும், காலச்சுவடின் மேலும் காரசாரமான விமரிசனங்களை வைத்துப்பேசியதே மிகவும் சூடான கூடுகையாகவிருந்தது.

தொடரும்...

இலக்கியவட்டம் நாராயணன் அவரது 60 ஆம் கல்யாணத்தன்று.
நாளை இரண்டாம் பாகத்தை வெளியிடுவேன்..


வெள்ளி, 2 மார்ச், 2012

அம்மா இஸ் கோயிங் டு ஹாஸ்பிட்டல், பாப்பா இஸ் கமிங் ஃப்ரம் வயிறு



"அம்மா இஸ் கோயிங் டு ஹாஸ்பிட்டல், பாப்பா இஸ் கமிங் ஃப்ரம் வயிறு" - இவை அமுத மொழிகள்.

"சனிக்கிழமை என் வயிற்றிலிருந்து பாப்பா பிறந்துவிடும், அதனால், அன்று ஸ்கூலுக்கு நீ லீவு போட்டுவிட்டு” என்று அமுதனிடம் என் மனைவி சொன்னாள்.  "நான் லீவு போட்டுவிட்டால் அமுதன் ஏன் வரவில்லை என மேடம் கேட்பார்களே?" எனக் கேட்ட அமுதன் பின் அவனாகவே சொன்னதுதான் மேலே குறிப்பிட்டது.

ஐந்து வருடங்களுக்கு மேல் அமுதன் செல்லமாக வளர்ந்துவிட்டான், அடுத்து போட்டிக்கு ஆள் வரப்போகிறது. தம்பியோ, தங்கையோ பிறந்தபின் அதை அமுதன் எப்படி எதிர்கொள்வான் என்பதைக் கற்பனை செய்து பகிர்ந்துகொள்வதே கடந்த சில மாதங்களாக எங்களது முக்கியமான பொழுதுபோக்கு. நாளையிலிருந்து அதை நேரடியாக அனுபவிக்கப்போகிறோம். 

புதன், 18 ஜனவரி, 2012

கூடங்குளம்: அவதூறும், உண்மையும்

பரப்புரையும் மனித மனங்களும் (Propaganda and the Public Mind) என்றொரு நோம் சோம்ஸ்கியின் புத்தகம் உண்டு. உலகெங்கும் அரசாங்கங்கள் எவ்வாறு தமது மக்களின் மீதான அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றன எனபதைக் குறித்து இப்புத்தகம் பேசும். உண்மையில் பாராளுமன்ற ஜனநாயகம் என்பதே ஊடகங்களைத் தமது பிடியில் வைத்துக் கொண்டு மக்களை மூளைச் சலவை செய்வதின் மூலம் தமது அதிகார, லாப நோக்கங்களுக்கு ஏற்றவகையில் அவர்களின் சிந்த்னையைக் கட்டமைப்பது என்பதே நோம் சோம்ஸ்கியின் கருதுகோள். நமது நாட்டில் தற்போது நடந்துவரும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டஙகளை நடுவணரசு எவ்வகையில் எதிர்கொள்கிறது என்பதைக் கவனித்தாலே சோம்ஸ்கியின் கருத்திலுள்ள உண்மை புலப்படும்.

இவ்வகையில் கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்களியக்கம் மேல் தொடர்ச்சியாக அரசினால் கட்டமைக்கப்பட்டு ஊடகங்கள் மூலமாக நடத்தப்படும் பரப்புரை கவனிக்கப்படவேண்டியது. அண்மையில் தினமலர் மூலம் நடத்தப்பட்ட (நடத்தப்படுகின்ற) இவ்வியகத்திற்கெதிரான தாக்குதலுக்கு நண்பர் சிறில் அலெக்ஸ் தமிழ் பேப்பர் இதழில் பதில் அளித்துள்ளார். "அணு உலை எதிர்ப்பாளார்களுக்கு வெளிநாட்டு பணம் வந்தது அம்பலம்” என்ற தலைப்பிட்டு தினமலர் எழுதியுள்ள கட்டுரை அரசால் இட்டுக்கட்டப்பட்ட கற்பனை என்பதை சிறில் தனக்கு நன்கு தெரிந்த நேரடித் தகவல்கள் மூலம் விளக்கியுள்ளார். பொதுவாக நம் சூழலில் அதீத உணர்ச்சி வசப்பட்டு அக்கட்டுரையை வெளியிட்ட இதழை வாய்க்கு வந்தபடி அர்ச்சித்து பலரும் எழுதுவதுதான் வாடிக்கை. இம்மாதிரியான தகவல்களை அரசாஙகம் வேண்டுமென்றே கட்டமைக்கும்போது அதற்கு உணர்ச்சி வசப்பட்டு எதிர்வினையாற்றாமல் உண்மையைத் தெளிவாகவும், உரத்தும் கூறுவது மிகுந்த அவசியமாகும். அவ்வகையில் சிறிலின் இக்கட்டுரை தனித்து நிற்பதும், பாராட்டப்பட வேண்டியதுமாகும். சிறில் அலெக்ஸிற்கு நன்றி.


சிறில் அலெக்ஸ் கட்டுரை: தினமலரும் இடிந்தகரையும் – விலைபேசப்படும் மக்கள் போராட்டம்

தினமலர் கட்டுரை: அணு உலை எதிர்ப்பாளார்களுக்கு வெளிநாட்டு பணம் வந்தது அம்பலம்

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

மூன்று தமிழ்ச் சொற்கள்

நேற்றிரவு தூங்கப் போகும்போது தற்காலத் தமிழிலக்கியத்தின் மூன்று முக்கிய ஆளுமைகள் வெவேறு சந்தர்ப்பங்களில் பொருள் கூறிய மூன்று தமிழ்ச் சொற்கள் தீடிரென்று என் ஞாபக அடுக்குகளிலிருந்து ஒன்றாகக் கிளம்பி வந்தன.


காலமாகி விட்டார்:


சுந்தர ராமசாமி இறந்த போது சென்னையில் நடந்த இரங்கல் கூட்டமொன்றில் ஜெயகாந்தன் ”சுந்தர ராமசாமி காலமாகி விட்டார் என்று சொல்கிறோம்; காலமாகி விட்டார் என்றால் என்ன? - அவர் காலத்துடன் ஐக்கியமாகி விட்டார், நம்முடன் என்றும் இருப்பார் என்று தானே அர்த்தம். அதனால் நாம் வருத்தமுறக் கூடாது” என்றார். இங்கு காலமாகிவிட்டார் என்ற சொல், அது சுட்டும் பொருள் - காலத்துடன் கலந்து விட்டார் - என்பது எவ்வளவு பொருள் செறிந்த வார்த்தை! காலத்தை மனிதப் புலன்களால் அளந்துவிட முடியுமா என்ன?

தோற்றம் - மறைவு


ஒரு கட்டுரையில் ஜெயமோகன் பிறப்பையும் இறப்பையும் குறிக்க தமிழில் பயன்படுத்தப்படும் இச்சொற்கள் ஆழ்ந்த தத்துவம் செறிந்தது; ஆங்கிலத்திலுள்ள Born and Dead மாதிரி நேரடி அர்த்தம் தருவதல்ல என்றும், வேறு எம் மொழியிலும் இத்தகைய சொற்கள் இயல்பாகப் புழக்கத்திலில்லை என்று சொல்லியிருந்தார். தோன்றினார் என்றால் எங்கிருந்து வந்தார், மறைந்தார் என்றால் எங்கு சென்றார் என்று வினவினோமானால் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் இச்சொற்கள் நம்மை பதிலளிக்க முடியாத பிரம்மாண்டமான தத்துவக் கேள்விகளுக்கு இட்டுச் செல்லும்.

பெற்றோர்:

மேலே சொல்லப்பட்ட சொற்களுக்கிணையாண மற்றொரு சொல் இது. இதுவும் அவற்றோடு தொடபுடையது. அண்மையில் எஸ். ராமகிருஷ்ணன் தான் கலந்துகொண்ட விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் இச்சொல் சுட்டும் பொருள் குறித்துச் சொன்னார். அந்நிகழ்ச்சியில் தந்தை - மகனுக்கிடையான உறவு குறித்து அலசப்பட்டது. பெரும்பாலான தந்தையர்கள் தாம் பெற்ற மகன்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்றஞ்சுவதனால்தான் அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் அளிக்கிறோம் என்றனர். விருந்தினரய் அமர்ந்திருந்த எஸ். ரா. அதற்கு பதிலிறுக்கையில் பேற்றோர் என்றால் என்ன? - நாம் பெற்றோம் என்றால் எங்கிருந்தோ பெற்றோம். நம் வழியாய் அவர்கள் வந்தார்கள் என்றார். இந்த உணர்வு எல்லாப் பெற்றொருக்கும் இருந்தால் தந்தை மகனுக்கிடையிலான பெரும்பாலான பிரச்சனைகளுக்கு வாய்ப்பே இல்லை என்றார்.

சனி, 14 ஜனவரி, 2012

குன்றக்குடி அடிகளார் ஒரு சித்திரம்

யாரிடம் என்ன திறமைகள் இருந்தாலும் – அது பாரதியா இருந்தாலும் அவங்ககிட்டே காலத்தோட அழுக்கு கொஞ்சமாவது ஒட்டியிருக்கும்.. அப்படித்தான் பாரதிக்கும். அதையும் மீறி அவன் எப்படிச் செயல்பட்டிருக்கான்னு தான் பார்க்கணும். காலத்தில் நமக்குப் பிந்திக் கிடைச்ச வசதியிலிருந்தோ, சிந்தனையில் இருந்தோ அவங்களைப் பார்க்கக் கூடாது. பார்க்கிற ஒவ்வொருத்தர் கிட்டேயும் நம்முடைய சாயலைத் தேடிக்கிட்டிருக்கக் கூடாது..” - குன்றக்குடி அடிகளார்

நான் சிறுவனாகயிருக்கும் போதிருந்தே குன்றக்குடி ஆதினத்தின் முந்நாள் ஆதினகர்த்தர் பற்றி நல்ல விசயஙகளையே கேள்விப்பட்டிருக்கிறேன். மடாதிபதிகளில் அவர் த்னித்துவமானவர். அவரைப் பற்றி பத்திரிக்கையாளர் மணா எழுதியுள்ள இக்கட்டுரை ஓர் ஆவணம். படிக்கவும் சுவராசியமானது.

நினைவின் நிழல்கள் : 3 சமூகத்தைத் துறக்காத துறவி ; குன்றக்குடி அடிகளார் | நட்பு - தமிழ் சமூகத்தின் இணையமுகம்

உதிரி எண்ணங்கள்

நேற்று புத்தகக் காட்சியிலிருந்து வெளிவரும் போது சுண்டல் பொட்டலம் வாங்கிச் சாப்பிட்டேன். புற்றீசல்போல புத்தகக் காட்சி வாசலெங்கும் சுண்டல் விற்பவர் பலர் முளைத்திருந்தனர். கூடவே சோப்பு நுரையில் முட்டைவிடும் உபகரணங்கள்,  அமுதனின் மொழியில் பப்ளூஸ், விற்பவர்களும்.  சென்னை போன்ற பெருநகரங்களில் இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் இவர்களே கிராமியத் திருவிழாக்களுக்கான மனநிலையைக் கொண்டுவருகின்றனர். சுண்டல் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தீடிரென்று ஓரெண்ணம் - யாராவது என் துறையைச் சார்ந்த புண்ணியவான் இம்மாதிரி சுகாதாரமற்ற முறையில் தயாரித்து வினியோகிக்கப்படும் சுண்டல்களினால், சுண்டெலிகளால் அல்ல, தான் சென்னையில் பலருக்கும் பேதி நோய் எற்பட்டது என்று ”ஆராய்ந்து” சொல்லிவிடுவோனோ என்று பயம் ஏற்பட்டது. இப்பொதெல்லாம் எனக்கு என் துறை சார்ந்த ஆராய்ச்சி மேல் வெறுப்புதான் வருகிறது. ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவும் இயற்கையிலிலிருந்து நம்மை வெகுவாகப் பிரித்து வெறும் தொழில்நுட்பத்தையே மட்டும் நம்பி வாழும் அடிமைகளாக மாற்றுகிறதோ?!.

இன்று எங்கள் பகுதிக்கு யானை வந்தது. அமுதனை ஸ்கூட்டரில் வைத்து யானை பார்க்க அழைத்துப் போனேன். யானை பழக்க தோஷத்தில் தும்பிக்கை நீட்டியது. ஐந்து ரூபாய் கொடுத்து யானையிடம் இருவரும் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டோம். அந்த கணப்பொழுதில் அடச் சே எவ்வளவு மகத்தான உயிரினம், நாமும் அதை பிச்சை எடுக்க வைக்க உறுதுணயாக இருந்து விட்டோமே என்ற குற்ற உணர்வு பளிச்சிட்டது. ஆயினும் அமுதனின் சந்தோஷத்திற்காக இது தவறில்லெயென மனதிற்கு ஆறுதல் சொல்லிக்கொண்டேன். அமுதனுக்கு தாங்க முடியாத சந்தோஷம். இரண்டுநாள் முன்புதான் அவனுக்கு புத்தகக் காட்சியிலிருந்து யானை புத்தகம் ஒன்று வாங்கிக்கொடுத்திருந்தோம்.

பின்னர் யானைக்கு பழம் வாங்கிக் கொடுக்கலாம் என அருகிலுள்ள கடைகளுக்குச் சென்றோம். எங்கும் பழம் கிடைக்கவில்லை. வாழைக் காய் தார்கள்தான் தொங்கின. வாழைகாய் கொடுத்தா யானை நம்மை அடிச்சிருமாப்பா எனக் கேட்டான், முன்பு சொல்லியிருந்த யானைக்கு தேங்காயில் ஊசி வைத்துக் கொடுத்த கதை ஞாபகம் வந்திருக்கும்போல. திரும்பி வரும்போது அப்பா யானை நமக்கு ஃபிரண்டாப் பா என்றான். ஆமா என்றேன்; அப்படின்னா அதுக்கு நம்ம ஆதவன்னு பேர் வைக்கலாம் என்றான். அப்பெயர் இரண்டு மாதங்களில் அடுத்து எங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணாகயிருந்தால் நாங்கள் வைக்க உத்தேசித்திருக்கும் பெயர். 

வியாழன், 12 ஜனவரி, 2012

சென்னை புத்தகக் காட்சியும், பழைய புத்தகங்களும்

கடந்த பல வருடங்களாக சென்னை புத்தகக் காட்சிக்கு சென்று கொண்டிருக்கிறேன். 1995- ஜூலையில் நான் சென்னையில் நிரந்தரமாக வாழும் எண்ணத்துடன் வந்தேன். அப்படியாயின் கிட்டத்தட்ட 17 வருடங்களாக இப்புத்தகக் காட்சிக்கு ஒரு சடங்கு மனநிலையுடன் வருகிறேன். இடையில் சில வருடஙகள் இந்த முறை புத்தகங்கள் ஏதும் வாங்கக் கூடாது, ஏற்கனவே வாங்கியவைகளை படிக்காததால்,  என்று சங்கல்பம் செய்து கொண்டு வருவேன். ஆயினும் குறைந்த அளவிலாவது புத்தகங்கள் வாங்காமல் திரும்பிப் போனதில்லை. இப் புத்தகக் காட்சி முன்பு காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் நடந்தபோதும், இப்போது புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடக்கும்போதும் பழைய புத்தகங்கள் நடைபாதைக் கடைகளில் வைத்து விற்கப்படும். சென்னையிலும், வேறு பல ஊர்களிலுமிருந்தும் பலர் வந்து இக்கடைகளை விரித்திருப்பர். நான் பழைய புத்தகங்கள் வாங்கக் கூடாது என்ற கொள்கை உடையவனில்லை. முன்பு சிற்சில பழைய புத்தகங்கள் வாங்கியுள்ளேன். ஆனால் புத்தகக் காட்சி நேரங்களில் பழைய புத்தகக் கடைகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்ற கொள்கை வைத்திருந்தேன்.

என் கல்லூரிக்கால நண்பன் ஒல்லி பாலாஜிக்கு, குண்டு பாலாஜி என்று வேறொரு நண்பனும் உண்டு, நான் cheap and best என்று பெயர் வைத்திருந்தேன். காரணம், அவன் பற்பசை முதற்கொண்டு எந்தப் பொருள் வாங்கினாலும் உள்ளதிலேயெ குறைந்த விலையுள்ள பொருளைத்தான் வாங்குவான். ஒருமுறை பற்பசை ஒரு டஜன் வாங்கினால் அதிகத் தள்ளுபடி தருகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு இரண்டு டஜன் வாங்கிக் கொண்டு வந்தான். எதுக்குடா இரண்டு டஜன் என்றால், ஒன்று சித்தி வீட்டுக்காம். இப்பேர்ப் பட்ட ஒல்லி பாலாஜி புத்தகங்களையுமா விட்டுவைப்பான்!? அவனும் புத்தகக் காட்சிக்குச் செல்வான். ஆனால் வெளியிலேயே நின்றுவிடுவான். அங்கு ரோட்டோரக் கடைகளில் கிடைக்கும் பழைய புத்தகங்களை பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்குவதில் கில்லாடி அவன். அதுதான் அவனுக்கு புத்தகக் காட்சி. புத்தகக் காட்சி என்று மட்டுமில்லை, எங்கு பழைய புத்தகக் கடையைப் பார்த்தாலும் நுழைந்துவிடுவான். எனக்குத் தெரிந்து அவன் எந்தப் புத்தகத்தையும், பாடப் புத்தகங்கள் உட்பட, புத்தம் புதிதாக வாங்கியதில்லை. இதில் அவனுக்கு உள்ளூரப் பெருமையுண்டு. எனக்கு மற்ற விசயத்தில் எப்படியோ ஆனால் புத்தக விசயத்தில் அவனது கொள்கை சற்றும் ஏற்புடையதல்ல. அதுவும் புத்தகக் காட்சிக்கு வந்துவிட்டு பழைய புத்தகங்களை வாங்கிச் செல்வதென்பது ஏளனமான செயலாகவே எனக்கு இதுவரை இருந்து வந்துள்ளது.

அப்படிப்பட்ட நான் இப்போது என் விதிகளைச் சற்று தளர்த்திக்கொண்டேன். காரணம்: கடந்த ஒரு வருடத்தில் நான் மிக அதிகமான பணம் செலவழித்து  புத்தகங்களை வாங்கிவிட்டேன். இரண்டாவது காரணம் நவீனத் தமிழிலக்கியப் புத்தகங்கள் பெரும்பாலும் பழைய புத்தகக் கடைகளிலிருக்காது என்ற எண் எண்ணம். ஆனால் சமீபத்தில் நண்பர் உமாநாத் செல்வன் @ விழியன் அவரது முக நூலில் முதலில் பழைய புத்தகக் கடைகளுக்குச் சென்றுவிட்டு பின்னர் புத்தகக் காட்சிக்குச் செல்க என்று எழுதியிருந்தார். மேலும் பாலபாரதியும் நவீன இலக்கியப் புத்தகங்கள் எல்லாம் அங்கு கிடைக்கின்றன என்று என் கேள்விக்கு பதிலிறுத்திருந்தார். எனவே நேற்று அங்கு முதலில் செல்லலாம் என முன்பே தீர்மானித்திருந்தேன். ஆனால் என் ராசி தீடிரென்று மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது. வண்டியை நிறுத்திவிட்டு நடைபாதையோரக் கடைகளுக்குச் சென்றால் வியாபாரிகள் தார்பாலின் போட்டு கடைகளை மூட ஆரம்பித்துவிட்டனர். என்னருகில் நின்ற ஒருவர் அப்போதுதான் அசோகமித்திரன் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை அங்கு வாங்கிமுடித்திருந்தார்.   கட்டுமானமும் குலையாமல் நன்றாகயிருந்தது. எனக்கு வயிற்றெரிச்சாலாகி விட்டது. மழை விடுவதாயில்லை, கைக்குட்டையை குடையாக்கிக் கொண்டு, குளிர் காலத்தில் பெய்யும் மழையை சபித்துக்கொண்டே, புத்தகக் காட்சி நோக்கி நடக்கலானேன்.

அவ்வளவு மழை பெய்தும் மேற்கூரை நன்றாக இருந்ததால் ஒன்றும் பெரிதாக ஒழுகவில்லை.காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் முன்பு புத்தகக் காட்சி நடந்தபோது இதுபோல் ஒரு பனிக்கால மழையில் கடைக்குள்ளும் பெய்த மழையில் புத்தகங்கள் நனைந்துவிடாமல் இருக்க பதிப்பாளர்கள் பட்ட சிரமங்களை நான் ஒருமுறை நேரில் பார்த்திருக்கிறேன். நானே ஒரு கடையில் இதற்கு உதவியிருக்கிறேன். புத்தகக் காட்சி என்றால் இம்மாதிரி நினைவுகளே எனக்கு முதலில் மனதிற்குள் வரும். அக்காலங்களில் இவ்வளவு கூட்டமிராது. பொறுமையாக புத்தகங்களைப் படித்துப் பார்த்து வாங்கலாம். கடந்த சில வருடங்களாகத்தான் இவ்வளவு கூட்டம் அம்முகிறது. புத்தக விரும்பியான எனக்கு ஒருவகையில் இது ஏமாற்றம்தான்.  ஆனால் அதே சமயம் ஒரு பதிப்பாளருக்கு இது மகிழ்ச்சியான விசயம்.

இந்த வருடத்தில் நேற்று இரண்டாவது முறையாக புத்தகக் காட்சிக்குச் சென்றிருந்தேன். முதலில் பவானியுடனும், அமுதனுடனும் போனவாரம் சென்றிருந்தேன். அது இரண்டாவது நாள் என்பதால் அதிகக் கூட்டமில்லை. இந்தமுறை நான் மட்டும் தனியாக பலத்த முன் தயாரிப்புகளோடு சென்றிருந்தேன். முதலில் ஸ்டால் லிஸ்டையும், லே அவுட்டையும் பபாஸி (BAPASI) இணைய தளத்திலிருந்து பெற்று செல்ல வேண்டிய பதிப்பகங்களை  லே அவுட்டில் குறித்துக் கொண்டேன். வாங்க வேண்டிய புத்தகங்களையும் லிஸ்ட் போட்டுக்கொண்டேன். மேலும் பல்கலையிலிருந்து வரும் போதே அமைந்தகரை ஆறுமுக பவனில் பசித் தொல்லையால் புத்தகக் காட்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறாமலிருக்கச் சிற்றுண்டியையும் முடித்துக் கொண்டேன். பின்னே புத்தகக் காட்சி சிற்றுண்டிச் சாலையில் அநியாய விலை என பலரும் புகாரளித்துள்ளனரே!

முதலில் கண்ணில்பட்டது ஐந்திணைப் பதிப்பகம். ஜெயகாந்தன், ஜானகிராமன் புத்தகங்கள் அதிகமும் இருந்தன. ஏசியன் எஷுக்கேசனல் சொசைட்டியின் ’அபிதான சிந்தாமணி’ பதிப்பும் இருந்தது. அது எனது வாங்க வேண்டிய லிஸ்டில் இருந்ததால் புரட்டிப் பார்த்தேன். அட்டை பிரம்மாதமாக இருந்தது. ஆனால் உள்ளே தாளும், எழுத்துருவும் மிக மோசம். விலையும் 645 ரூபாயகள்; ஆனால் அவர்களது இணையதளத்தில் 400 என்று போட்டிருந்தார்கள். உடுமலை. காமில் சீதை பதிப்பக ’அபிதான சிந்தாமணி’ 700 ரூபாய் எனப் போட்டிருந்தது. எனவே அதையும் பார்த்துவிட்டுத் தீர்மானிக்கலாம் என நடையைக் கட்டினேன். வழியில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் நோட்டமிடலாமென நுழைந்தேன். அங்கு என்னுடன் முன்பு பணிபுரிந்த இரு நண்பர்களைப் பார்த்து சிறிது அளாவளாவி விட்டு ஆக்ஸ்போர்டு பல்கலை பதிப்பகத்தைத் தேடினேன், அப்போது சீதை பதிப்பகம் கண்ணில்பட்டது. அங்கு பல புத்தகங்கள் ஐம்பது சதவிகித தள்ளூபடியில் போட்டிருந்தார்கள். 700 மதிப்புள்ள ’அபிதான சிந்தாமணி’ ரூபாய். 400 க்கும், 1000 ரூபாய் மதிப்புள்ள ’போரும் அமைதியும்’ 500 ரூபாய்க்கும் இருந்தது. மூளை துருதுருத்தது. போரும் அமைதியும் டி. எஸ். சொக்கலிங்கத்தின் மொழிபெயர்ப்புதானே என பதிப்பகத்தாரிடம் உறுதி செய்து கொண்டேன். அபிதான சிந்தாமணி ஒரளவு நல்ல தாளில், நல்ல எழுத்துரு அளவில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. ஆனால் போரும் அமைதியும் புத்தகத்தில் மொழிபெயர்ப்பு டி. எஸ். சொக்கலிங்கம் என்றிருந்தாலும், அதையடுத்த tag line-ல் பதிப்பகத்தாரால் செம்மைப் படுத்தப்பட்டது என்று காணப்பட்ட சொற்கள் சற்று பீதியை வரவழைத்தது. ஆயினும் 500 ரூபாய் தானே பரவாயில்லை வாங்கிப் பார்க்கலாம் என என்னைத் தள்ளியது.

’போரும் அமைதியும்’ நான் பழைய புத்தகக் கடையில்தான் வாங்கவேண்டுமென நினைத்திருந்தேன். மழையினால் புதுப் புத்தகமே 500 ரூபாய்க்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியாகயிருந்தது. சீதை பதிப்பகத்தில் சதாசிவ ப் பண்டாரத்தார், மயிலை. வேங்கிடசாமி நாட்டார் புத்தகங்கள் பலவும் 50 சதவீத தள்ளூபடிக்கு வைக்கப்பட்டிருந்தன. வாங்கிய இரண்டு புத்தகங்களுமே அதிக பளுவாகிவிட்டபடியால் இன்னொரு நாள் வாங்கிக் கொள்ளலாமென நினைத்து இதே தள்ளூபடியை உங்கள் பதிப்பகத்திற்கே வந்து வாங்கினால் தருவீர்களா எனக் கேட்டேன். அவர் வருடத்தில் மூன்று நாட்கள், பொங்கல், கருணாநிதி பிறந்த நாள், அவரது அம்மாவின் பிறந்த நாளான நவம்பர் 19 ஆகிய தினங்களில், இத்தகைய தள்ளுபடி விலைக்கே புத்தகங்கள் கிடைக்குமெனக் கூறினார்.

பின்னர் அடையாளம் பதிப்பகத்தில் ’டாக்டர் இல்லாத இடத்தில்’ புத்தகம் பார்த்தேன். உடனேயே வாங்கிவிட்டேன். உண்மையில் கடந்த சில நாட்களுக்கு முன் இணையத்தில் இப்புத்தகம் குறித்துத் தேடியதில் இப்போது இப்புத்தகம் கிடைப்பதில்லை என அறிந்து வருத்தமுற்றேன். ஆனால் இதன் மின்னூல் இலவசமாக இவ்விணைய தளத்தில் கிடைக்கிறது. ஆயினும் இம்மாதிரிப் புத்தகங்கள் எப்போதும் கைவசமிருப்பது நன்று. இது இவ்வகையில் ஒரு சிறந்த செவ்வியல் புத்தகம். நான் வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போது எங்கள் துறை நூலகத்தில் இதன் பல பிரதிகளைப் பார்த்திருக்கிறேன். பொதுமக்கள் சுகாதாரத் துறையில் உள்ளோருக்கும்,  பொதுமக்களுக்கும் இது பைபிள் போன்றது. சென்ற வருடம் இப்புத்தகம் கிடைக்காமல் இதே அடையாளம் பதிப்பகத்தின் மற்றொரு வெளியீடான ’மோயோ கிளினிக் - உடல்நலக் கையேடு’ புத்தகம் வாங்கினேன். அதைவிட ’டாக்டர் இல்லாத இடத்தில்’ சிறந்த புத்தகம்.

அகரம் பதிப்பகத்தில் ’பொய்த்தேவு’ வாங்கிக்கொண்டேன். ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து விற்று தீர்ந்துவிட்டதாகக் கூறிவிட்டார்கள். சாகித்ய அகாடமியில் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ‘திரு.வி.க’ ’வெள்ளகால் ப. சுப்பிரமணிய முதலியார்’ புத்தகங்களை வாங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிலிருந்து அமுதனிடமிருந்து அழைப்பு. என்னை ஏன் பெரிய லைப்ரரிக்குக் கூட்டிச் செல்லவில்லை என ஆதங்கப் பட்டான். வீட்டிற்கு வரும்போது Ben 10 புத்தகமும், Bubbles -ம் (சோப்பு நுரையில் முட்டைவிடும் விளையாட்டுச் சாமான்) வாங்கிவர வேண்டுமென ஆணையிட்டான். அவனிடம் சரி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி கிழக்கில் அரவிந்தன் நீலகண்டனின் ’பஞ்சம், படுகொலை, பேரழிவு - கம்யூனிசம்’ வாங்கிவிட்டு தமிழினியை அடைந்தேன். அங்கு வசந்தகுமாருடன், சு.வெங்கடேசனும், கரு. ஆறுமுகத் தமிழனும் பேசிக்கொண்டிருந்தார்கள். எனது புத்தக மூட்டையை அங்கு வைத்துவிட்டு அலைகள் பதிப்பகம் தேடிச் சென்றேன். அங்கு நா. வானமாமலையின் மார்க்சியம் குறித்த 5 புத்தகங்கள் மேலும் எஸ். வையாபுரிப் பிள்ளையின் ’தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம்’ புத்தகமும் வாங்கிக் கொண்டேன்.

நேரமாகிக் கொண்டேயிருந்தது, அமுதனுக்கு புத்தகம் வாங்க வேண்டுமே என மனது அடித்துக் கொண்டது. Ben 10 புத்தகம் Scholastic பதிப்பகத்தில் இருப்பதை போனவாரம் வந்தபோதே பார்த்திருந்தோம். ஆனால் என்னால் அதை அவசரத்தில் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. 15 நிமிடங்கள் அலைந்தபின் அது தமிழினிக்கு எதிரேலேயே இருப்பதைக் கவனித்தேன். Ben 10  புத்தகம் ஒன்றும், காட்டு யானை படங்கள் கொண்ட புத்தகம் ஒன்றும் வாங்கிக் கொண்டேன். மீண்டும் தமிழினிக்கு வந்தபோது இரவு 9 மணியாகிவிட்டதால் கடைகளை மூடுமாறு விசிலடித்துக் கொண்டேயிருந்தனர். எதிரிலிருந்த காலச் சுவடுவில் ’கலங்கிய நதி’ வாங்கிக் கொண்டேன். தரம்பாலின் ’காந்தியை அறிதல்’ புத்தகம் இருக்கிறதா எனத் தேடினேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லையாதாலால் சிப்பந்தி ஒருவரிடம் விசாரித்ததில் தீர்ந்து விட்டது எனக் கூறினார்.

வீடு வந்து சேர்ந்தபோது மணி 10.15 ஆகிவிட்டிருந்தது. அமுதன் தூங்கிவிட்டிருந்தான். காலையில் அவன் எழுந்தபோது பவானி அப்பா உனக்காக வாங்கி வந்திருக்கிற புத்தகங்களை பார் எனச் சொல்லியிருக்கிறாள். அவன் வேறு ஒரு புத்தகமும் உன்னை வாங்கிவரச் சொன்னேனே ஏன் வாங்கவில்லை எனக் கேட்டான். எஙகளிருவருக்கும் அவன் சொன்ன அந்தப் புத்தகத்தின் பெயர் விளங்கவில்லை. அடுத்தமுறை வாங்கித் தருகிறோம் எனச் சமாளித்தோம். எனது புத்தகங்களை அமுதன் பார்த்துவிட்டு அப்பா மட்டும் எவ்வளவு புத்தகங்கள் பெரிசு பெரிசாக வாங்கியிருக்கிறான், எனக்கு ரண்டே ரெண்டுதானா?! என பவானியிடம் ஆதங்கப் பட்டுக்கொண்டான். 

வியாழன், 5 ஜனவரி, 2012

காவல் கோட்டம் பாராட்டுவிழா

சென்னையை டிசம்பர் ஜனவரி மாதங்கள் எப்போதுமே புத்தக வெளியீடு சார்ந்த நிகழ்ச்சிகள், பாராட்டு விழாக்கள் நிறைத்திருக்கும். கடந்த இரண்டு நாட்களாக இவற்றில் சிலவற்றில் நான் கலந்துகொண்டேன். முந்தாநாள் தமிழினியின் 6 புத்தகங்கள் வெளியீட்டுவிழாவிலும், நண்பர் அரவிந்தன் நீலகண்டனின் ‘உடையும் இந்தியா’ நூல் வெளியீட்டு விழாவிலும் கலந்துகொண்டேன். அது போல் நேற்று தமிழினி பதிப்பகத்தின் சார்பில் சாகித்திய அகாடமி பரிசுபெற்ற காவல்கோட்ட நாவலாசிரியர் சு. வெங்கடேசன் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவிலும் கலந்துகொண்டேன். இந்த மூன்று நிகழ்வுகளிலும் சு. வெங்கடேசனுக்கு நடந்த பாரட்டுவிழா மிக அருமையாக நடைபெற்றது. அதற்கான காரணம் அழைக்கப்பட்டிருந்த பேச்சாளர்கள்.

நான் இந்த நாவலை கடந்த புத்தகக் கண்காட்சியில் வாங்கி சென்ற ஜூலை மாதம் கிட்டத்த்ட்ட 10 நாட்கள் கால அளவில் படித்து முடித்தேன். எனக்கு நாவல் பிடித்திருந்தது. இது குறித்த என் கருத்துக்களை பின்னர் எழுதவேண்டும். என்வே பிறர் இந்நாவல் குறித்து என்ன பேசுகிறார்கள் என அறிந்துகொள்ளூம் பொருட்டும் விழாவிற்கு சென்றிருந்தேன். எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் கிட்டத்தட்ட அனைவருமே நாவல் குறித்தே பேசினார்கள். விழாவிற்கு தலைமை ஏற்றவர் ராஜேந்திர சோழன். அவரது உரை அவ்வளவாக எனக்கு ஞாபகமில்லை. ஆயினும் அதிகம் அவர் நாவலின் சிறப்பு குறித்து பேசவில்லையென நினக்கிறேன். பின்னர் பேச வந்த ச. தமிழ்ச்செல்வன் தஙக்ளது த.மு.எ. ச சங்க பொதுச் செயலாளரான சு. வெ. அகாடமி பரிசுபெற்றது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்ற ரீதியில் பேசினார்.

செல்வ புவியரசுவின் பேச்சும் நாவல் குறித்து சிலாகிப்பதாக இருந்தது, ஆயினும் அவரது நம்பிக்கை சார்ந்து நாவலில் வெளிப்படும் சில பகுதிகள், ஆரிய ஆதிக்கம்,  குறித்து மகிழ்வதாகக் கூறினார். பின்னர் பேசவந்த கண்மணி குணசேகரன் தனது வழக்கமான ஸ்டைலில் (பாடலுடன்) பேச்சை ஆரம்பித்தார். தான் இதுவரை இந்நாவலின் 100 பக்கங்களை மட்டுமே படித்துள்ளதாகக் கூறினார். ஆயினும் படித்தவரையில் சு. வெ. வின் எழுத்தாளுமை வியக்க வைப்பதாகக் கூறினார். அவரது பேச்சில் அரங்கில் அடிக்கடி சிரிப்பலைகள் எழுந்தன. சு. வேணுகோபால் பேசும்போது தனக்கும் சு.வெ.விற்கும் உள்ள உறவைக் குறித்து விளக்கிவிட்டு இந்நாவல் குறித்து தனது கருத்துக்களை விளக்கினார். இதுவரை பேசியவர்களில் சு. வேணுகோபாலின் உரையே சிறப்பாக இருந்தது. போரும் அமைதியும் போல தமிழில் நேற்றுவரை ஒரு வகைமை இல்லை. இன்று இந்நாவல் அக்குறையைப் போக்கிவிட்டது என்றார். இது மதுரையின் 600 ஆண்டுகால வரலாற்றைப் பேசுவதின் மூலம் தமிழனின் 2000 ஆண்டு காலத் தனிமையை விவரிக்கிறது என முத்தய்ப்பாகச் சொன்னார்.

நாஞ்சில் நாடனுக்கு தொண்டை சரியில்லாததால் அவரது உரையை ‘ஆழிசூழ் உலகு’ ஜோ டி குரூஸ் படித்தார். காவல் கோட்டத்துடன் பரிசிற்காக கடைசி வரை போட்டியிட்டது என அரசல் புரசலாகப் பேசப்பட்ட நாவலின் ஆசிரியரே அதற்கு வாழ்த்துரை வழங்க வந்தது நன்றாக இருந்தது. படிக்கப்பட்ட நாஞ்சிலின் உரையில் நாவல் குறித்த விமரிசனமோ வேறு சிலாகிப்போ அதிகம் இல்லை. பெரிதும் விருதும் அது சார்ந்த மன நிலைகளைப் பற்றியுமே இருந்தது என நினைக்கிறேன். கடைசியாக பழ. கருப்பையா பேச வந்தார். உள்ளதிலேயே அவரது உரைதான் மிகச் சிறப்பாக இருந்தது என எண்ணுகிறேன். தனக்கு நவீனத் தமிழ் இலக்கியத்தின் ஆகச் சிறந்த படைப்புகளை படிக்கச் சொல்லிக் கொடுத்துவர் தமிழினி வசந்தகுமார் என்றாரம்பித்தார். தனக்கு எல்லா புத்தகஙக்ளையும் படித்து சிறந்தவற்றை அடையாளம் காண்பது நேரமின்மையால் இயலாதென்பதால் வசந்தகுமாரிடம் அப்பொறுப்பை ஒப்படைத்திருப்பதாகச் சொன்னார். இவரும் ஆரிய திராவிட ஒப்பீடுகளை நிகழ்த்தினார் எனினும் காவல்கோட்டம் குறித்த முக்கியமான அவதானிப்புகளைக் குறிப்பிட்டார்.

களவும் காவலும் எப்படி ஒன்றையொன்று பதிலீடு செய்துகொண்டன என நாவல் காட்டும் போக்கிலிருந்து உதாரணங்களை அடுக்கியவர், டாவோயிசத்தில் ஒரு மருத்துவன் பணி செய்யும் பகுதியில் நோய்கள் அதிகம் காணப்படும் எனில் அவன் அனைவருக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்றும், எம் மருத்துவனின் நிலப் பகுதியில் நோய்கள் இல்லையோ அம்மருத்துவன் கேட்கும் தொகையை பிணியாளன் கொடுக்கவேண்டும் என்றும் உள்ளதாகச் சொன்னார். அதுபோல் நம் கலாச்சாரத்தில் ஒருவன் காவல் புரியும் பகுதியில் களவுபோனல் காவலாளியே இழந்த பொருட்களை மீட்டுக்கொடுக்கவேண்டும் என்பது அறம். அதைக் காவல் கோட்டத்தின் மூலம் அறியவந்தது என்றும் சொன்னார். அதற்கு மாறாக நவீன காவல்முறையை ஆங்கில ஆட்சியாளார்கள் புகுத்தியதால் ஏற்பட்ட அவலங்களையும் நாவல் காட்டுவதாகச் சொன்னார். இதனால் யாருக்கும் இன்று பொறுப்புணர்ச்சியில்லை என்றார். உதாரணமாக அக்காலத்தில் குளம் வெட்டுவதும், நீர்ப்பராமரிப்பும் அந்தந்த ஊரைச் சேர்ந்தவர்களின் பொறுப்பாகும், ஆனால் பொதுப் பணித்துறை என்ற மைய நிர்வாக முறை வந்ததும் நம் பராம்பரிய நீராதாரஙகளின் இன்றைய நிலைமையை ஒப்பிட்டார்.

ஆரியத்தை நாம் உள்வாங்கிச் செரித்துக்கொண்டோம், இஸ்லாமியத்தை செரித்துக்கொண்டோம் ஆயினும் நம்மால் ஆங்கிலேயனை செரித்துக் கொள்ள முடியவில்லை. கப்பலேறி அவன் போனபின்பும் இன்னும் அவன் நம்மை ஆட்டிப் படைத்துகொண்டிருக்கிறான் என்றார். இன்று நாம் கொண்டாடும் புத்தாண்டு, பிறந்த நாள் விழாக்கள் நம் கலாச்சாரத்தின் மீதான அவனது ஆதிக்கம் விடைபெறவில்லை என்பதையே காட்டுவதாகச் சொன்னார். இறுதியில் சு. வெங்கடேசன் ஏற்புரை வழங்கவந்தார். அப்போது மிகவும் நேரமாகிவிட்டபடியால் சுருக்கமாக தனது உரையை முடித்துக் கொண்டார். வசந்த குமார் தனது காவல் கோட்ட கையெழுத்துப் பிரதியைப் படித்து முடித்தவுடனேயே சு. வெங்கடேசனின் மதுரையைப் பார்க்க காலை வைகை விரைவு வண்டியில் முன்பதிவு செய்யாத கோச்சில் வந்ததைச் சொன்னார். தனது படைப்பிற்கு தன்னைவிடவும் நேர்மையாக இருக்கும் வசந்தகுமாரை வெகுவாகப் புகழ்ந்தார். பொதுவாக எல்லாப் பேச்சாளார்களுமே தமிழினி வசந்தகுமாரைப் பாராட்டினார்கள். அவர் இதற்கு மிகவும் தகுதியானவர்தான். எனக்கும் அவரை நினைத்து பெருமையாக உள்ளது.