வெள்ளி, 2 மார்ச், 2012

அம்மா இஸ் கோயிங் டு ஹாஸ்பிட்டல், பாப்பா இஸ் கமிங் ஃப்ரம் வயிறு



"அம்மா இஸ் கோயிங் டு ஹாஸ்பிட்டல், பாப்பா இஸ் கமிங் ஃப்ரம் வயிறு" - இவை அமுத மொழிகள்.

"சனிக்கிழமை என் வயிற்றிலிருந்து பாப்பா பிறந்துவிடும், அதனால், அன்று ஸ்கூலுக்கு நீ லீவு போட்டுவிட்டு” என்று அமுதனிடம் என் மனைவி சொன்னாள்.  "நான் லீவு போட்டுவிட்டால் அமுதன் ஏன் வரவில்லை என மேடம் கேட்பார்களே?" எனக் கேட்ட அமுதன் பின் அவனாகவே சொன்னதுதான் மேலே குறிப்பிட்டது.

ஐந்து வருடங்களுக்கு மேல் அமுதன் செல்லமாக வளர்ந்துவிட்டான், அடுத்து போட்டிக்கு ஆள் வரப்போகிறது. தம்பியோ, தங்கையோ பிறந்தபின் அதை அமுதன் எப்படி எதிர்கொள்வான் என்பதைக் கற்பனை செய்து பகிர்ந்துகொள்வதே கடந்த சில மாதங்களாக எங்களது முக்கியமான பொழுதுபோக்கு. நாளையிலிருந்து அதை நேரடியாக அனுபவிக்கப்போகிறோம். 

புதன், 18 ஜனவரி, 2012

கூடங்குளம்: அவதூறும், உண்மையும்

பரப்புரையும் மனித மனங்களும் (Propaganda and the Public Mind) என்றொரு நோம் சோம்ஸ்கியின் புத்தகம் உண்டு. உலகெங்கும் அரசாங்கங்கள் எவ்வாறு தமது மக்களின் மீதான அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றன எனபதைக் குறித்து இப்புத்தகம் பேசும். உண்மையில் பாராளுமன்ற ஜனநாயகம் என்பதே ஊடகங்களைத் தமது பிடியில் வைத்துக் கொண்டு மக்களை மூளைச் சலவை செய்வதின் மூலம் தமது அதிகார, லாப நோக்கங்களுக்கு ஏற்றவகையில் அவர்களின் சிந்த்னையைக் கட்டமைப்பது என்பதே நோம் சோம்ஸ்கியின் கருதுகோள். நமது நாட்டில் தற்போது நடந்துவரும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டஙகளை நடுவணரசு எவ்வகையில் எதிர்கொள்கிறது என்பதைக் கவனித்தாலே சோம்ஸ்கியின் கருத்திலுள்ள உண்மை புலப்படும்.

இவ்வகையில் கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்களியக்கம் மேல் தொடர்ச்சியாக அரசினால் கட்டமைக்கப்பட்டு ஊடகங்கள் மூலமாக நடத்தப்படும் பரப்புரை கவனிக்கப்படவேண்டியது. அண்மையில் தினமலர் மூலம் நடத்தப்பட்ட (நடத்தப்படுகின்ற) இவ்வியகத்திற்கெதிரான தாக்குதலுக்கு நண்பர் சிறில் அலெக்ஸ் தமிழ் பேப்பர் இதழில் பதில் அளித்துள்ளார். "அணு உலை எதிர்ப்பாளார்களுக்கு வெளிநாட்டு பணம் வந்தது அம்பலம்” என்ற தலைப்பிட்டு தினமலர் எழுதியுள்ள கட்டுரை அரசால் இட்டுக்கட்டப்பட்ட கற்பனை என்பதை சிறில் தனக்கு நன்கு தெரிந்த நேரடித் தகவல்கள் மூலம் விளக்கியுள்ளார். பொதுவாக நம் சூழலில் அதீத உணர்ச்சி வசப்பட்டு அக்கட்டுரையை வெளியிட்ட இதழை வாய்க்கு வந்தபடி அர்ச்சித்து பலரும் எழுதுவதுதான் வாடிக்கை. இம்மாதிரியான தகவல்களை அரசாஙகம் வேண்டுமென்றே கட்டமைக்கும்போது அதற்கு உணர்ச்சி வசப்பட்டு எதிர்வினையாற்றாமல் உண்மையைத் தெளிவாகவும், உரத்தும் கூறுவது மிகுந்த அவசியமாகும். அவ்வகையில் சிறிலின் இக்கட்டுரை தனித்து நிற்பதும், பாராட்டப்பட வேண்டியதுமாகும். சிறில் அலெக்ஸிற்கு நன்றி.


சிறில் அலெக்ஸ் கட்டுரை: தினமலரும் இடிந்தகரையும் – விலைபேசப்படும் மக்கள் போராட்டம்

தினமலர் கட்டுரை: அணு உலை எதிர்ப்பாளார்களுக்கு வெளிநாட்டு பணம் வந்தது அம்பலம்

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

மூன்று தமிழ்ச் சொற்கள்

நேற்றிரவு தூங்கப் போகும்போது தற்காலத் தமிழிலக்கியத்தின் மூன்று முக்கிய ஆளுமைகள் வெவேறு சந்தர்ப்பங்களில் பொருள் கூறிய மூன்று தமிழ்ச் சொற்கள் தீடிரென்று என் ஞாபக அடுக்குகளிலிருந்து ஒன்றாகக் கிளம்பி வந்தன.


காலமாகி விட்டார்:


சுந்தர ராமசாமி இறந்த போது சென்னையில் நடந்த இரங்கல் கூட்டமொன்றில் ஜெயகாந்தன் ”சுந்தர ராமசாமி காலமாகி விட்டார் என்று சொல்கிறோம்; காலமாகி விட்டார் என்றால் என்ன? - அவர் காலத்துடன் ஐக்கியமாகி விட்டார், நம்முடன் என்றும் இருப்பார் என்று தானே அர்த்தம். அதனால் நாம் வருத்தமுறக் கூடாது” என்றார். இங்கு காலமாகிவிட்டார் என்ற சொல், அது சுட்டும் பொருள் - காலத்துடன் கலந்து விட்டார் - என்பது எவ்வளவு பொருள் செறிந்த வார்த்தை! காலத்தை மனிதப் புலன்களால் அளந்துவிட முடியுமா என்ன?

தோற்றம் - மறைவு


ஒரு கட்டுரையில் ஜெயமோகன் பிறப்பையும் இறப்பையும் குறிக்க தமிழில் பயன்படுத்தப்படும் இச்சொற்கள் ஆழ்ந்த தத்துவம் செறிந்தது; ஆங்கிலத்திலுள்ள Born and Dead மாதிரி நேரடி அர்த்தம் தருவதல்ல என்றும், வேறு எம் மொழியிலும் இத்தகைய சொற்கள் இயல்பாகப் புழக்கத்திலில்லை என்று சொல்லியிருந்தார். தோன்றினார் என்றால் எங்கிருந்து வந்தார், மறைந்தார் என்றால் எங்கு சென்றார் என்று வினவினோமானால் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் இச்சொற்கள் நம்மை பதிலளிக்க முடியாத பிரம்மாண்டமான தத்துவக் கேள்விகளுக்கு இட்டுச் செல்லும்.

பெற்றோர்:

மேலே சொல்லப்பட்ட சொற்களுக்கிணையாண மற்றொரு சொல் இது. இதுவும் அவற்றோடு தொடபுடையது. அண்மையில் எஸ். ராமகிருஷ்ணன் தான் கலந்துகொண்ட விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் இச்சொல் சுட்டும் பொருள் குறித்துச் சொன்னார். அந்நிகழ்ச்சியில் தந்தை - மகனுக்கிடையான உறவு குறித்து அலசப்பட்டது. பெரும்பாலான தந்தையர்கள் தாம் பெற்ற மகன்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்றஞ்சுவதனால்தான் அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் அளிக்கிறோம் என்றனர். விருந்தினரய் அமர்ந்திருந்த எஸ். ரா. அதற்கு பதிலிறுக்கையில் பேற்றோர் என்றால் என்ன? - நாம் பெற்றோம் என்றால் எங்கிருந்தோ பெற்றோம். நம் வழியாய் அவர்கள் வந்தார்கள் என்றார். இந்த உணர்வு எல்லாப் பெற்றொருக்கும் இருந்தால் தந்தை மகனுக்கிடையிலான பெரும்பாலான பிரச்சனைகளுக்கு வாய்ப்பே இல்லை என்றார்.

சனி, 14 ஜனவரி, 2012

குன்றக்குடி அடிகளார் ஒரு சித்திரம்

யாரிடம் என்ன திறமைகள் இருந்தாலும் – அது பாரதியா இருந்தாலும் அவங்ககிட்டே காலத்தோட அழுக்கு கொஞ்சமாவது ஒட்டியிருக்கும்.. அப்படித்தான் பாரதிக்கும். அதையும் மீறி அவன் எப்படிச் செயல்பட்டிருக்கான்னு தான் பார்க்கணும். காலத்தில் நமக்குப் பிந்திக் கிடைச்ச வசதியிலிருந்தோ, சிந்தனையில் இருந்தோ அவங்களைப் பார்க்கக் கூடாது. பார்க்கிற ஒவ்வொருத்தர் கிட்டேயும் நம்முடைய சாயலைத் தேடிக்கிட்டிருக்கக் கூடாது..” - குன்றக்குடி அடிகளார்

நான் சிறுவனாகயிருக்கும் போதிருந்தே குன்றக்குடி ஆதினத்தின் முந்நாள் ஆதினகர்த்தர் பற்றி நல்ல விசயஙகளையே கேள்விப்பட்டிருக்கிறேன். மடாதிபதிகளில் அவர் த்னித்துவமானவர். அவரைப் பற்றி பத்திரிக்கையாளர் மணா எழுதியுள்ள இக்கட்டுரை ஓர் ஆவணம். படிக்கவும் சுவராசியமானது.

நினைவின் நிழல்கள் : 3 சமூகத்தைத் துறக்காத துறவி ; குன்றக்குடி அடிகளார் | நட்பு - தமிழ் சமூகத்தின் இணையமுகம்

உதிரி எண்ணங்கள்

நேற்று புத்தகக் காட்சியிலிருந்து வெளிவரும் போது சுண்டல் பொட்டலம் வாங்கிச் சாப்பிட்டேன். புற்றீசல்போல புத்தகக் காட்சி வாசலெங்கும் சுண்டல் விற்பவர் பலர் முளைத்திருந்தனர். கூடவே சோப்பு நுரையில் முட்டைவிடும் உபகரணங்கள்,  அமுதனின் மொழியில் பப்ளூஸ், விற்பவர்களும்.  சென்னை போன்ற பெருநகரங்களில் இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் இவர்களே கிராமியத் திருவிழாக்களுக்கான மனநிலையைக் கொண்டுவருகின்றனர். சுண்டல் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தீடிரென்று ஓரெண்ணம் - யாராவது என் துறையைச் சார்ந்த புண்ணியவான் இம்மாதிரி சுகாதாரமற்ற முறையில் தயாரித்து வினியோகிக்கப்படும் சுண்டல்களினால், சுண்டெலிகளால் அல்ல, தான் சென்னையில் பலருக்கும் பேதி நோய் எற்பட்டது என்று ”ஆராய்ந்து” சொல்லிவிடுவோனோ என்று பயம் ஏற்பட்டது. இப்பொதெல்லாம் எனக்கு என் துறை சார்ந்த ஆராய்ச்சி மேல் வெறுப்புதான் வருகிறது. ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவும் இயற்கையிலிலிருந்து நம்மை வெகுவாகப் பிரித்து வெறும் தொழில்நுட்பத்தையே மட்டும் நம்பி வாழும் அடிமைகளாக மாற்றுகிறதோ?!.

இன்று எங்கள் பகுதிக்கு யானை வந்தது. அமுதனை ஸ்கூட்டரில் வைத்து யானை பார்க்க அழைத்துப் போனேன். யானை பழக்க தோஷத்தில் தும்பிக்கை நீட்டியது. ஐந்து ரூபாய் கொடுத்து யானையிடம் இருவரும் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டோம். அந்த கணப்பொழுதில் அடச் சே எவ்வளவு மகத்தான உயிரினம், நாமும் அதை பிச்சை எடுக்க வைக்க உறுதுணயாக இருந்து விட்டோமே என்ற குற்ற உணர்வு பளிச்சிட்டது. ஆயினும் அமுதனின் சந்தோஷத்திற்காக இது தவறில்லெயென மனதிற்கு ஆறுதல் சொல்லிக்கொண்டேன். அமுதனுக்கு தாங்க முடியாத சந்தோஷம். இரண்டுநாள் முன்புதான் அவனுக்கு புத்தகக் காட்சியிலிருந்து யானை புத்தகம் ஒன்று வாங்கிக்கொடுத்திருந்தோம்.

பின்னர் யானைக்கு பழம் வாங்கிக் கொடுக்கலாம் என அருகிலுள்ள கடைகளுக்குச் சென்றோம். எங்கும் பழம் கிடைக்கவில்லை. வாழைக் காய் தார்கள்தான் தொங்கின. வாழைகாய் கொடுத்தா யானை நம்மை அடிச்சிருமாப்பா எனக் கேட்டான், முன்பு சொல்லியிருந்த யானைக்கு தேங்காயில் ஊசி வைத்துக் கொடுத்த கதை ஞாபகம் வந்திருக்கும்போல. திரும்பி வரும்போது அப்பா யானை நமக்கு ஃபிரண்டாப் பா என்றான். ஆமா என்றேன்; அப்படின்னா அதுக்கு நம்ம ஆதவன்னு பேர் வைக்கலாம் என்றான். அப்பெயர் இரண்டு மாதங்களில் அடுத்து எங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணாகயிருந்தால் நாங்கள் வைக்க உத்தேசித்திருக்கும் பெயர்.