பக்கங்கள்

திங்கள், 15 அக்டோபர், 2007

சு.ரா. - சில குறிப்புகள்

2005 ஆம் வருடம், அக்டோபர் மாதம் 16ம் நாள் இந்து செய்தித்தாளில் சுந்தர ராமசாமி மரணம் என்ற செய்தியைப் பார்த்தவுடன் என்னால் நம்பமுடியவில்லை. வேறு ஏதேனும் சுந்தர ராமசாமியாக இருக்கலாமோ என மனது ஒரு கணம் யோசித்தது. (இதை எழுதும்போது, ஒருமுறை, கமல் குமுதம் - தீராநதி செவ்வியில் தனக்குப் பிடித்த எழுத்தாளர் சு.ரா. என்று கூறினதைப் படித்த சு.ரா.வின் பக்கத்து வீட்டுக்காரர் நீங்கள் எழுத்தாளரா எனக்கேட்டதாக - அவருக்கேயுரிய எள்ளலுடன் சு.ரா. குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது.) மீண்டும் செய்தியைப் படித்து உறுதிசெய்து கொண்டபோதும் நம்புவதற்குச் சற்று கடினமாகவேயிருந்தது. பின்னர் பேராசிரியர் ஆ. இரா. வெங்கடாசலபதியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, சு.ரா சிறிதுகாலமாகவே உடல் நலமின்மைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததாகவும், மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாகவும் மிகுந்த சோகத்துடன் கூறினார்.

பத்து வருடங்களுக்கு முன்பு (1996 - 97), எனது தோழியின் தகப்பனார் திரு. நாராயணன் (எனக்கும் தந்தை போன்றவர்) காஞ்சிபுரத்தில் நடத்திவரும் இலக்கிய வட்டம் என்ற அமைப்பின் கூட்டமொன்றில் தற்செயலாகக் கலந்து கொண்டதின் மூலம், எனக்கு நவீனத் தமிழிலக்கியம் அறிமுகமாயிற்று. இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் அந்நிகழ்வு என் வாழ்க்கையின் மிக முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகத் தெரிகிறது; காரணம் அதுதான் எனக்கு தமிழ்ச் சிந்தனை மரபு, குறிப்பாக சிற்றிதழ் சார்ந்த, குறித்து வேறுபட்ட கண்ணோட்டத்தை அளிக்கக் காரணமாயிருந்தது. (அன்று அக்கூட்டத்தில் கலந்துகொள்ளாயிராவிட்டால், நான் தமிழ் வலைப்பதிவே ஒருவேளை ஆரம்பிக்காமல் இருந்திருக்கலாம் - நீங்களும் தப்பித்திருக்கலாம்) பிற்பாடு ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று நடைபெற்றுக் கொண்டிருந்த அவ்விலக்கியக் கூட்டங்களில் நான் தவறாது கலந்துகொள்வதை வழமையாகக் கைக்கொள்ள ஆரம்பித்தேன். அங்கு புத்தக விற்பனையும் 20% தள்ளுபடி விலையில், அதுவும் பல தவணைகளில் திருப்பித்தரும் முறையில், வழங்கப்பட்டு வந்தது. நான் அப்புத்தகங்கள் விற்பதற்கான கல்லாவில் உட்கார்ந்துகொண்டு புத்தகங்களைப் படித்துக்கொண்டும், அவ்வப்போது கூட்டம் நடப்பதைக் கவனித்துக் கொண்டுமிருப்பேன்.

அக்காலங்களில், நான் பார்த்தவரை, தமிழின் பெரும்பாலான வெகுசனப் பதிப்பகங்கள் வெளியிடும், ஆங்கிலப் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகங்களை ஒப்பிடும்போது, படைப்பூக்கமற்ற புத்தகங்கள் - குறிப்பாக உள்ளடக்கம், மேலட்டை, உள்ளிருக்கும் தாள்கள், அச்சுக்கோர்வை முதலியவை, குறித்து எனக்கு நல்ல எண்ணங்கள் ஏதுமில்லை. ஆனால், அக்கூட்டங்களில் நான் காணக்கிடைத்த பெரும்பாலான பதிப்பக நூற்கள் - குறிப்பாக க்ரியா, காலச்சுவடு, தமிழினி - தமிழ்ப் புத்தகங்கள் குறித்த எனது பார்வையை மாற்றியமைத்தன. புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு ஏற்ப அதன் அட்டை, அச்சுக்கோர்வை முதலியனவும் படைப்பூக்கத்தோடு ‘செம்பதிப்பாக’ அமைந்து கவனத்தை ஈர்ப்பதாகயிருந்தன. (இப்போது சில வெகுசன பதிப்பகங்களும் செம்பதிப்புகளை வெளியிடுகின்றன - பெரும்பாலான புத்தகங்களில் சாரம் தான் இல்லை) அப்போதுதான், காலச்சுவடு வெளியீடாக வந்த ‘விரிவும் ஆழமும் தேடி’ என்ற சு.ரா.வின் கட்டுரைத் தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. அதற்கு முன்பு வரை சுந்தர ராமசாமி என்ற எழுத்தாளரைக் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. நவீன தமிழின் தீவிரமான எழுத்தாளர்களாக எனக்கு அதுவரை அறிமுகமாகியிருந்தவர்கள், பலருக்கும் போலவே, ஜெயகாந்தன், கி.ரா., பிரபஞ்சன், சுசாதா போன்றவர்கள் மட்டுமே. (புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி போன்றவர்களும் பள்ளியில் சொல்லித்தரப்படும்? தமிழ்த்துணைபாட நூலகள் மூலம் ஏற்கனவே அறிமுகமாயிருந்தார்கள்)

விரிவும் ஆழமும் தேடி என்ற தலைப்பும், அதன் மேலட்டையில் கோட்டோவியமாகத்? தீட்டப்பட்டிருந்த ஒரு தாடிக்காரரின் முகமும், அதன் அச்சுக்கோர்வையும் என்னை அப்புத்தகத்தை வாசிக்கத் தூண்டியிருக்கலாம் என இப்போது தோன்றுகிறது. அப்புத்தகத்தின் அட்டைப்படத்திலிருப்பவர் சு. ரா. வாகயிருக்கலாம் என்பதனையும் அப்போதே ஊகித்தேன் என ஞாபகம்.



வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து, அதன் மாறுபட்ட தமிழ் உரைநடையால், என்னை அப்புத்தகம் சுண்டியிழுக்க ஆரம்பித்தது. அதன் பின்னர் சு.ரா. எழுதிய பிற புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். கட்டுரைகள் அளவிற்கு புனைகதைகளில் அதிக ஆர்வமில்லாத எனக்கு ‘ஒரு புளியமரத்தின் கதை’ மிகவும் சுவராசியமாக இருந்தது. சு. ரா. அதில் நாகர்கோவில் தமிழை, அவரது பெரும்பாலான புனைகதைகளைப் போல, வெகுவாகக் கையாண்டிருப்பார். நாகர்கோவில் எங்களுருக்கு (பணகுடி) அருகாமையில் உள்ளதால் அந்தத் தமிழை என்னால் இரசிக்க முடிந்தது. மேலும் அதில் கதையின் நாயகமாக வரும் புளியமரம், நாகர்கோவிலில் உண்மையிலேயே உள்ள (இன்றுமுள்ள) வேப்பமூடு (ஜங்ஷன்) என்பதையும் நான் அப்போது ஊகித்து உணர்ந்து கொண்டேன் என்றே எண்ணுகிறேன். ஒருமுறை நேரில் சு.ரா.விடம் இதுபற்றிக் கேட்டபோது அவரும் ஆமாம் என்றே சொன்னதாக ஞாபகம்.

தொடர்வேன்....

குறிப்பு: இன்று சு.ரா. இறந்த இரண்டாவது ஆண்டு நினைவு தினம்.

ஞாயிறு, 7 அக்டோபர், 2007

அறிஞர் சோதிப்பிரகாசம்

நேற்று திண்ணையில் ஜெயமோகன் எழுதிய அறிஞர் சோதிப்பிரகாசம் குறித்த அஞ்சலிக் கட்டுரையை கண்டதும் திடுக்கிட்டேன். ஒரு கணம் மீண்டும் தலைப்பை வாசித்து அது அஞ்சலிக் குறிப்புதான் என்பது உறுதியானவுடன் மிகுந்த கவலையுற்றேன். அவர் திண்ணையில் தொடர்ச்சியாக எழுதிவந்த கார்ல் பாப்பரின் வெங்காயம் குறித்து அவருடன் விவாதிக்கவேண்டுமென நினைத்திருந்தேன்.

முன்பொருமுறை, (3-4 வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன்) சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவொன்றில் தற்செயலாக அவருடன் நேரிடையான அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அதற்குமுன்பு, அவர், ஜெயமோகனின் ஆறு தரிசனங்கள் நூலுக்கு எழுதிய முன்னுரை ஒன்றைப் படித்திருக்கிறேன். அதை எழுதியவர் இவரா என்று அவரைப் பார்த்தமாத்திரத்தில் ஆச்சிரியப்பட்டுப் போனேன். நான் உருவகம் செய்து வைத்திருந்த தோற்றத்திற்கு நேரெதிரான எளிமையான தோற்றம், பேச்சும் அவ்வாறே. அப்போது பார்த்தபோது நல்ல உடல்நிலையிலேயே அவர் காண்ப்பட்டார். அதனால் அவர் கார்ல் பாப்பர் குறித்து எழுதியதை நன்றாக வாசித்துவிட்டு பின்னர் அவரைச் சந்தித்து உரையாடலாம் எனக் காலத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டேவந்தேன். ஜெயமோகனின் அஞ்சலிக் கட்டுரையைப் படித்ததும் அவரைச் சந்தித்து உரையாடமல் காலந்தாழ்த்திவிட்டேனே என்ற வருத்தம் மேலிடுகிறது. மேலும், அவர் எனது ஊருக்கு அண்மைய ஊரான காவல்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் என்ற, அவ்வஞ்சலிக் கட்டுரை மூலம் அறியப்பெற்ற, கூடுதல் தகவலும் வருத்தத்தை மேலும் அதிகமாக்குகிறது.