பக்கங்கள்

சனி, 16 டிசம்பர், 2006

சிறுபான்மையினருக்கு சிறப்பு சலுகைகள் தேவையா?

நீண்ட நாட்களாக எழுத நினைத்திருந்த விசயம், இன்று என் வீட்டருகில் நடந்த நிகழ்வால் உடனே எழுதும்படி தூண்டப்பட்டேன். இன்று காலை ஏழு மணியிலிருந்து என் வீட்டருகில் தீடிரென்று ஒரே சரணம் ஐயப்பா கோஷம். ஏதோ பெரிய இன்னிசை மழைக் கச்சேரியில் (ஸ்பீக்கர்களை அலற வைத்து மக்களை குலை நடுங்க வைக்கும் ஒரு செயலை இன்னிசை மழை என அழைப்பது ஒரு நகை முரண்) வைப்பதுபோல் பெரிய ஸ்பீக்கர்களை வைத்து எங்கள் தெருவையே அல்லோலகல்லோலப் படுத்திக்கொண்டிருந்தார்கள். வீட்டில் ஒருவருக்கொருவர் மிகவும் சத்தமாகப் பேசிக்கொள்ளவேண்டியிருந்தது, அப்போதுதான் ஒருவர் பேசுவது மற்றவருக்குப் புரியும். நியூஸ் கேட்கமுடியவில்லை. தொலைபேசியில் பேச முடியவில்லை. சின்ன வயதில் எனக்கும் ஸ்பீக்கர்கள், அப்பொதெல்லாம் குழாய் ஸ்பீக்கர்கள், அலருவது பிடிக்கும். பின்னர் அதுவே காட்டுமிராண்டித்தனமாகப் புரிய ஆரம்பித்தது.

விசயம் இதுதான், எங்கள் தெருவில் சிலர் சபரிமலைக்குச் செல்கிறார்கள், அதற்குத்தான் இந்த அலப்பரை. என்னதான் இவ்வாறு ஸ்பீக்கர்கள் அலருவது பலருக்கும் இடைஞ்சலாக இருந்தாலும், யாரும் இதை நிறுத்தச் சொல்லவில்லை. இத்தனைக்கும் அருகிலேயே ஒரு பள்ளிவாசல் உள்ளது, முஸ்லீம்களின் வீடுகளும் உள்ளன. அவர்களும் இதைப் பொருட்படுத்தியது மாதிரித் தெரியவில்லை. அப்படியே பொருட்படுத்தியிருந்தாலும் அதைத் துணிச்சலாக வெளிப்படுத்தும் தைரியம் அவர்களில் யாருக்கும் (ஏன், எனக்கே கூட இல்லை) இருந்திருக்காது. ஏனெனில் அப்பகுதியில் அவர்கள் மதச் சிறுபான்மையினர்தானே. சற்று கூர்ந்து கவனித்தோமானால் பெரும்பான்மையினரால், சிறுபான்மையினரின் உரிமைகளும், உணர்வுகளும் புரிந்துகொள்ளப்படாமலோ, புரிந்து கொண்டாலும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாமலோ பல நிகழ்ச்சிகள் இதுமாதிரி தினந்தோறும் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

உதாரணத்திற்குச் சில;

1. நீங்கள் பஸ்ஸில் பயணம் சென்று கொண்டிருக்கிறீர்கள், தீடிரென்று ஒரு கூட்டம் பஸ்ஸை வழிமறித்து தாங்கள் மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுக்க நேர்ந்திருப்பதாகவும் அதற்கு நன்கொடை அளிக்குமாறும் உண்டியல் குலுக்குகிறது.
2. அநேகமாக எல்லா அரசு அலுவலகங்களிலும் ஒரு பிள்ளையார் கோவிலிருக்கும், விநாயக சதுர்த்தியை பிரம்மாண்டமாகக் கொண்டாடுவார்கள்.
3. அதேபோன்று, ஆயுத பூஜையை அலுவலகத்திலேயே கொண்டாடுவார்கள்.

மேற்கண்ட மாதிரி, ஒரு முஸ்லீமோ, கிருத்துவரோ தாங்கள் ஹஜ் செல்வதற்கு நன்கொடை வேண்டியோ, அல்லது புனித மேரிக்கு நேர்த்திக்கடன் செலுத்தவோ என பஸ்ஸை மறிக்கமுடியுமா? அரசு அலுவலகங்களில் ஒரு மசூதியோ, சர்ச்சோ கட்டமுடியுமா? ரம்ஜானையோ, கிறிஸ்துமஸ்ஸையோ கொண்டாடுகிறேன் பேர்வழி என்று ஸ்பீக்கர்களை அலறவைக்க முடியுமா?

முடியாது, ஏனெனில், பெரும்பான்மை மதத்தினரான இந்துக்கள் விரும்ப மாட்டார்கள். அங்கொன்றும், இங்கொன்றுமாக சில நிகழ்ச்சிகள் நடக்க அனுமதிக்கப்பட்டிருக்கலாம். நாங்கள் கூட கல்லூரியில் எங்களுடன் படித்த ஒரு முஸ்லீம் நண்பருக்காக ரம்ஜான் நோன்புக் கஞ்சி ஊற்ற நன்கொடை வசூலித்திருக்கிறோம். ஆனால், பொதுவாக இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தில் இவை அனுமதிக்கப்படுவதில்லை. அதேவேளையில் முஸ்லீம்களோ, கிருத்துவர்களோ பெரும்பான்மையாக உள்ள ஊரில், சிறுபான்மையினரான இந்துக்களின் உரிமைகளும், உணர்வுகளும் புரிந்துகொள்ளப்படாமலிருக்கலாம். இது மனிதனின் இயற்கைகுணம். இதை மனதில் கொண்டே, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் வகையில் அரசியல் சட்டம் இயற்றப்பட்டிருக்க வேண்டும். எனவே சிறுபான்மையினருக்குச் சிறப்புச் சலுகைகள் தேவைதான் என்பது என் எண்ணம். இதுபற்றிய பிறரது கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.

குறிப்பு: மத அடிப்படைவாத கருத்துக்கள் மட்டுறுத்தப்படும்.

புதன், 6 டிசம்பர், 2006

சன் டிவியின் தங்கவேட்டை

சன் தொலைகாட்சியில் சனி, ஞாயிறு இரவுகளில் ஒளிபரப்பப்படும் தங்கவேட்டை நிகழ்ச்சியை அவ்வப்போது பார்ப்பதுண்டு. ஜெயா டிவியில் குஷ்பு நடத்தும் ஜாக்பாட் நிகழ்ச்சிக்கு பதிலடியாக ராதிகாவின் ராடான் நிறுவனத்தால் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை, முதலில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். பின்னர் இடையில் நடிகை ஊர்வசி தொகுத்து வழங்கினார். ஊர்வசியைப் பார்ப்பதற்கே மிகவும் பாவமாக இருந்தது. சுரத்தே இல்லாமல் அவர் நிகழ்ச்சியை நடத்தியவிதம் நன்றாக இல்லை. முன்பு, ராஜ் டிவியில் அவரே பல வேடங்களில் தோன்றி நடத்திய நிகழ்ச்சி ஒன்றை பார்த்திருக்கிறேன். அப்படியிருந்த அவரா இப்படி! எனும் அளவிற்கு ஊர்வசி நிகழ்ச்சியை நடத்தியவிதம் இருந்தது.

பின் சிறிது காலத்திற்குள்ளேயே ஊர்வசி மாற்றப்பட்டு நடிகை கனிகா (பைவ் ஸ்டார்) அமர்த்தப்பட்டார். கனிகாவின் வரவிற்குப் பிறகு தங்கவேட்டை புதுப்பொலிவு பெற்றுள்ளது. என்னைப் பொறுத்தவரை ஒரு தொழில்முறை தொகுப்பாளினியைவிட கனிகா நிகழ்ச்சியை சிறப்பாகவே நடத்துகிறார். ரம்யா, குஷ்புவைப்போல் தேவையில்லாமல் கத்திப்பேசாமல் அதேசமயம், மற்ற பெரும்பாலான (ஆண், பெண்) தொழில்முறை தொகுப்பாளர்களைப் போலல்லாது தேவையற்ற உடல் அசைவுகளை விடுத்து, மிகுந்த யதார்த்தத்துடனும், உயிர்ப்புடனும் நிகழ்ச்சியை நடத்துகிறார். எனக்கு இத்தைகைய நிகழ்ச்சிகளில் பொதுவாக விருப்பம் இல்லாவிடினும், கனிகா நடத்தும் அழகிற்காக இந்நிகழ்ச்சியை சிலமுறைகள் முழுவதும் பார்த்திருக்கிறேன். அவரது தமிழும், சிறு குழந்தையைப்போல் அனைவருடனும் பேசும் பாங்கும் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. மேலும், அவர் பேசும்போது அவரது அழகு இன்னும் அதிகமாகப் பரிமளிக்கிறது.