பக்கங்கள்

புதன், 25 ஏப்ரல், 2007

சிசேரியன் பிரசவங்கள் - ஒரு பார்வை

நீண்ட நாட்களாக எழுத நினைத்து, சோம்பேறித்தனத்தினால் இதுவரை எழுதாமல் இருக்கும் விடயங்களில் இதுவும் ஒன்று. நேற்று CNN IBN தொலைக்காட்சியில் சிசேரியன் பிரசவங்கள் குறித்த ஒரு தொகுப்பு நிகழ்ச்சியைப் பார்த்ததால் தூண்டப்பட்டு இவ்விடுகையை இடுகிறேன்.

உலகம் முழுதும், குறிப்பாக வளரும் நாடுகளில், சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார நிறுவனம் எந்த ஒரு நாட்டிலும், எக்காரணத்தைக் கொண்டும், சிசேரியன் பிரசவங்கள் 15 விழுக்காட்டிற்குமேல் இருக்கக்கூடாது என்று சொல்கிறது. ஆயினும் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் இது உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடும் அளவைவிட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதற்கான முதன்மையான காரணியாக பலரும், குமுகவியலாளர்கள் முதல் பொதுமக்கள் வரை, கருதுவது மருத்துவர்களின் பணம் கொள்ளையடிக்கும் ஆசைதான் என்பது. இது பெரிதும் உண்மைதான் என்றாலும் மேலும் பல காரணிகளும் இவ்விசயத்தில் தொழிற்படுகின்றன.

பொதுவாக சிசேரியன் பிரசவங்கள் மகப்பேறு காலத்தில் தாய், சிசு ஆகிய இருவரின் மரணத்தைத் தவிர்ப்பதற்காகவே (Perinatal death) மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால் மிக அதிக சிசேரியன் பிரசவங்கள் நடைபெறும் நாடுகளில் இன்னமும் மகப்பேறு காலத் தாய், சிசு மரணங்கள் அதிகமாகவேயுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்துள்ள அளவிற்கு மகப்பேறு கால தாய், சிசு மரணங்கள் குறையவில்லை என்பதுதான் உண்மை. அப்படியானால் சிசேரியன் பிரசவங்கள் தேவையற்றமுறையில் செய்யப்படுகிறதா என்ற இயல்பான அய்யத்தை இப்புள்ளி விபரம் எழுப்புகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மருத்துவக் கல்லூரியின் பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் சென்னையின் தனியார் மருத்துவ மனைகளில், அரசு மருத்துவமனைகளைவிட மூன்று மடங்கு சிசேரியன் பிரசவங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவந்தது. இது மருத்துவர்களின் பணம் பண்ணும் ஆசை என்ற வாதத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக உள்ளது. அதேபோல் சென்னை சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷன் நடத்திய வேறு ஒரு ஆய்வில் சென்னை அண்ணாநகரில் உள்ள நடுத்தர, உயர் நடுத்தரக் குடும்பங்களில் சிசேரியன் பிரசவங்கள் பரவலாக உள்ளதாகத் தெரியவந்தது.

மேலும் சில ஆராய்ச்சிகள் இன்றைய நடுத்தரவர்க்கத் தாய்மார்கள் தாங்களாகவே முன்வந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்ற உண்மையையும் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. இதற்கு முதன்மையான காரணம் பிரசவ வலியின் வேதனையை அவர்களால் தாங்கமுடியாததுதான் என்றாலும், சில தாய்மார்கள் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தனது அந்தஸ்த்திற்கான ஒரு குறியீடாகக் கொள்வதாகச் சில ஆய்வுகள் சற்று திடுக்கிட வைக்கின்றன. (அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பெருமையாக சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்).

இன்னொரு முக்கியமான விசயம் ஜோசியம் என்ற மூடநம்பிக்கையினால் விளைவது. சில குடும்பங்கள் தங்கள் ஜோசியர்களிடம் ஆலோசனை கேட்டு சிசேரியன் மூலம் இன்ன நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லது என நினைத்து மகப்பேறு மருத்துவர்களிடம் சிசேரியன் பிரசவம்தான் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதும் நடைபெறுவதுமுண்டு.

இதுகுறித்து முழுமுற்றான அறிவியல் முறையிலமைந்த இடுகையொன்றை விரவில் எழுதலாமென்றிருக்கிறேன்.

இட ஒதுக்கீடு - அரசியல் சுயநலங்களும், குமுகாய நலன்களும்

இவ்விடயம் குறித்து தமிழ் வலையுலகில் ஏற்கனவே பலரும் எழுதிவிட்டார்கள். குழலி இத்தகைய இடுகைகளின் தொகுப்பு ஒன்றை ஒரு தனி இடுகையாகவே இட்டிருக்கிறார். ஜெகத்தும் தன் பொல்லாச் சிறகை வழமைபோல் அருமையான இடுகையொன்றின் மூலம், இவ்விசயத்தில், விரித்துள்ளார்.

நேற்று CNN IBN தொலைக்காட்சியில் இந்தியப் பிரதமர் தனது கூட்டணிக்கட்சிகளிடமிருந்து இடஒதுக்கீடு விசயத்தில் மிகுந்த நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். தமிழக முதல்வரும் நேற்று பலகோடிப்பேரின் வாழ்க்கையை ஒரிருவர் தீர்மானிப்பது சரியானதல்ல என்ற ரீதியில் இடைக்கால்த் தடை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக நாசுக்கான கருத்தைக் கூறியுள்ளார். பேராயக்கட்சியும், பிற கட்சிகளும் பிற்படுத்தப்பட்டவர்களின் ஓட்டுகளைப்பெற இடஓதுக்கீடு விசயத்தில் சுயநலமாகச் செயல்படுவதாக பலர் வாதிடலாம். எனினும், தற்போதைக்கு, இவ்விசயத்தில் அரசியல்வாதிகளின் சுயநலங்களும், குமுகாயத்தின் பொதுநலனில் முடிவது வரவேற்கத்தக்கதுதானே!?

செவ்வாய், 17 ஏப்ரல், 2007

இந்திராவின் வாரிசுகளும் ஏகபோக அரசுரிமையும்

நடந்துகொண்டிருக்கும் உ.பி. சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திருவாளர். ராகுல்காந்தி திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். என்னவோ அவர்கள் குடும்பத்தினர்தான் இந்தியாவை ஆளத் தகுதியானவர்கள் என்ற தொனியில் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. என்ன செய்ய!?, இந்திய அரசியல் சனநாயகத்தன்மை பெறுவதற்கு இன்னும் நீண்டதூரம் பயணிக்கவேண்டியதிருக்கிறது.

மேலதிக விபரங்களுக்கு மேற்குறிப்பிட்ட சுட்டியைச் சொடுக்கவும். அவர் பேசியதின் முதன்மையான சில வரிகள் இங்கே.

"I belong to the family which has never moved backwards, which has never gone back on its words. You know that when any member of my family had decided to do anything, he does it. Be it the freedom struggle, the division of Pakistan or taking India to the 21st century,''

திங்கள், 2 ஏப்ரல், 2007

சென்னையில் மீண்டுமொரு வலைப்பதிவர் சந்திப்பு!!!

நண்பர் பாலபாரதியின் ஒருங்கிணைப்பில், சென்னையில் மீண்டுமொரு வலைப்பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடாகியுள்ளது. ஏப்ரல் 22 அன்று (ஞாயிற்றுக் கிழமை) சென்னை, தி. நகர் நடேசன் பூங்காவில் பிற்பகல் 3.30 முதல் மாலை: 7.30 வரை சந்திப்பு நடைபெறும். இது குறித்த அறிவிப்பொன்றை அவரது வலைப்பதிவில் காணலாம். தமிழ் வலையுலகின் முக்கியமான ஆளுமைகள் சிலர் கலந்துகொள்வார்கள் எனத்தெரிகிறது.

சென்னையில் வசிக்கும் வலையுலக நண்பர்களே நீங்களனைவரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். வெளியூர் நண்பர்களும் முடியுமானால் சந்திப்பில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் பாலபாரதியின் பதிவில் பின்னூட்டம் வழியாகவோ அல்லது அவரது கைத்தொலைபேசியில் (99400 45507) அழைத்தோ தங்கள் வருகையை உறுதி செய்யவும். என்னையும் தொடர்பு கொள்ளலாம். - 98413 90327.
நன்றி