பக்கங்கள்

திங்கள், 13 ஜனவரி, 2014

சென்னை புத்தகத் திருவிழாவில்...

இன்று மதியம் (12/01/2014) சென்னை புத்தகத் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். நண்பர்கள் திட்டமிட்டபடி ஏற்கனவே வந்திருந்தார்கள். பாஸ்டனிலிருந்து வந்திருக்கும் அர்விந்தை நான்கு ஆண்டுகள் கழித்து சந்தித்தேன். சீர்மை குறுநாவலின் புகழால் இப்போது ’சீர்மை அரவிந்த்’என அழைக்கப்படுகின்றார். சீனிவாசன் தம்பதியினர் தன்னுடய மகன்களோடு வந்திருந்தனர். அவர்களுடன் செந்தில், சுரேஷ்பாபு, சுனில்கிருஷ்ணன், வினோத் மற்றும் நான் இன்று புத்தகத் திருவிழாவில் சந்திக்கலாம் என ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். பின்னர் ஜாஜா, சாம்ராஜ், ஜடாயு, மணிகண்டன், எழுத்து பிரசுரம் அலெக்ஸ், அசோக்குமார், கவிஞர் இசை, விழியன் என ஏதேச்சையான பல சந்திப்புகள் அரங்கேறின. இதற்கிடையில் எனக்கு மட்டுமே தெரிந்த வேறு சில நண்பர்களையும் தற்செயலாக சந்தித்தேன். அவர்களுள் நிழல் திருநாவுக்கரசு அவர்களை பல ஆண்டுகள் கழித்து சந்தித்தேன். இயல்பாகவே இலக்கியவட்டம் நாராயணன் குறித்தும் அதன் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் பேசிக்கொண்டோம். பின்னர் வெளியேறும் போது இலக்கியவட்டம் மூலம் அறிமுகமான கவிஞர் வெண்ணிலாவையும்  பார்த்தேன். தனது புத்தக வெளியீடு இன்று நடைபெறுவதால் அந்நிகழ்விற்கு வருமாறு அழைத்தார். நேரமாகிவிட்டதால் கலந்துகொள்ள இயலாது என மறுத்துவிட்டேன்.


படம் உதவி: ஜடாயு  

இந்தமுறை எனது தேர்வு பெரும்பாலும் தன் வரலாற்று நூல்கள். உ.வே.சா, நெ.து. சுந்தரவடிவேலு, பம்மல் சம்பந்த முதலியார், தி.சே.செள.ராஜன் போன்றவர்களின் சுயசரிதகளை வாங்கினேன். இவைகள் அனைத்துமே ஜெயமோகனால் பரிந்துரைக்கப்பட்டவை. 10 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல் சுந்தர ராமசாமி பரிந்துரைத்த நூல்களாக தேடிப்பிடித்து வாங்கியிருக்கிறேன். கு. அழகிரிசாமி கதைகள் சாகித்திய அகாடமியில் சகாய விலைக்குக் கிடைத்தது. வெண்முரசின் பாதிப்பினால் பி.கே. பாலகிருஷ்ணனின் இனி நான் உறங்கட்டும், ராஜாஜியின் வியாசர் விருந்து போன்றவற்றை வாங்கினேன். ஜடாயுவின் பரிந்துரையின் பேரில் சுவாமி விவேகானந்தரின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் நூல் ஒன்றை ராமகிருஷ்ண மடம் புத்தக ஸ்டாலில் வாங்கிக்கொண்டேன். கிழக்கு பதிப்பகத்தில் ஹரன் பிரசன்னாவை பார்த்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வாங்கிய ஜெயமோகனின் இந்து தத்துவ மரபில் ஆறு தரிசனங்கள் நூலில் பக்கங்கள் விடுபட்டிருந்ததால் அதற்குப் பதிலாக வேறு புது புத்தகம் கொடுத்தார்.

கே.பி. வினோத்தின் 9 வயது பெண் சைதன்யாவிடம் சிலர் ஆட்டோகிராப் வாங்கினர். நாங்கள் சைதன்யாவின் ’மேனேஜர்’ வினோத்தை கிண்டலடித்துக்கொண்டோம். நண்பர்கள் அனைவரின் பேச்சும் சுற்றி சுற்றி ஜெயமோகனின் வெண்முரசைப் பற்றியே இருந்தது. எங்கள் எல்லோரையும் அது நேர்மறையாக அழுத்தமாக பாதிக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். மணி ஆறு தாண்டியவுடன் அங்கிருந்து கிளம்பினேன். பவானிக்கு வாக்களித்தபடி 7 மணிக்குள் வீடு வந்தடைந்தேன். அமுதன் எனக்கு அமர்சித்திர கதாவின் மகாபாரதம் வாங்கினாயா என வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே கேட்டான். அதற்கு தனியாக இன்னொருநாள் போகலாம்டா என்றேன். உன்மையில் இன்னும் குறைந்தது இரண்டுமுறையாவது புத்தகத் திருவிழாவிற்கு செல்லவேண்டும். இன்னும் தமிழினி, காலச்சுவடு, நற்றிணை போன்ற பிரபலமான ஸ்டால்களுக்குள் போகவேயில்லை. ஆதிரன் எல்லா புத்தகத்தையும் எடுத்து விரித்து வைத்துக்கொண்டு ‘படித்துப் பார்த்தான்’. பின்னர் அவனது போக்கில் கடாசினான்.

புத்தக அலமாரியில் புதிய புத்தகங்களை அடுக்கும்போது என்னிடம் புனைவுகளைவிட அபுனைவு நூல்களே அதிகமிருப்பதை கண்டேன். ஒரு இலக்கிய வாசகனாக நான் இன்னும் ஆரம்பப் படிகளையே தாண்டவில்லை என்ற யதார்த்தம் உரைக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக