பக்கங்கள்

அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஜனவரி, 2012

உதிரி எண்ணங்கள்

நேற்று புத்தகக் காட்சியிலிருந்து வெளிவரும் போது சுண்டல் பொட்டலம் வாங்கிச் சாப்பிட்டேன். புற்றீசல்போல புத்தகக் காட்சி வாசலெங்கும் சுண்டல் விற்பவர் பலர் முளைத்திருந்தனர். கூடவே சோப்பு நுரையில் முட்டைவிடும் உபகரணங்கள்,  அமுதனின் மொழியில் பப்ளூஸ், விற்பவர்களும்.  சென்னை போன்ற பெருநகரங்களில் இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் இவர்களே கிராமியத் திருவிழாக்களுக்கான மனநிலையைக் கொண்டுவருகின்றனர். சுண்டல் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தீடிரென்று ஓரெண்ணம் - யாராவது என் துறையைச் சார்ந்த புண்ணியவான் இம்மாதிரி சுகாதாரமற்ற முறையில் தயாரித்து வினியோகிக்கப்படும் சுண்டல்களினால், சுண்டெலிகளால் அல்ல, தான் சென்னையில் பலருக்கும் பேதி நோய் எற்பட்டது என்று ”ஆராய்ந்து” சொல்லிவிடுவோனோ என்று பயம் ஏற்பட்டது. இப்பொதெல்லாம் எனக்கு என் துறை சார்ந்த ஆராய்ச்சி மேல் வெறுப்புதான் வருகிறது. ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவும் இயற்கையிலிலிருந்து நம்மை வெகுவாகப் பிரித்து வெறும் தொழில்நுட்பத்தையே மட்டும் நம்பி வாழும் அடிமைகளாக மாற்றுகிறதோ?!.

இன்று எங்கள் பகுதிக்கு யானை வந்தது. அமுதனை ஸ்கூட்டரில் வைத்து யானை பார்க்க அழைத்துப் போனேன். யானை பழக்க தோஷத்தில் தும்பிக்கை நீட்டியது. ஐந்து ரூபாய் கொடுத்து யானையிடம் இருவரும் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டோம். அந்த கணப்பொழுதில் அடச் சே எவ்வளவு மகத்தான உயிரினம், நாமும் அதை பிச்சை எடுக்க வைக்க உறுதுணயாக இருந்து விட்டோமே என்ற குற்ற உணர்வு பளிச்சிட்டது. ஆயினும் அமுதனின் சந்தோஷத்திற்காக இது தவறில்லெயென மனதிற்கு ஆறுதல் சொல்லிக்கொண்டேன். அமுதனுக்கு தாங்க முடியாத சந்தோஷம். இரண்டுநாள் முன்புதான் அவனுக்கு புத்தகக் காட்சியிலிருந்து யானை புத்தகம் ஒன்று வாங்கிக்கொடுத்திருந்தோம்.

பின்னர் யானைக்கு பழம் வாங்கிக் கொடுக்கலாம் என அருகிலுள்ள கடைகளுக்குச் சென்றோம். எங்கும் பழம் கிடைக்கவில்லை. வாழைக் காய் தார்கள்தான் தொங்கின. வாழைகாய் கொடுத்தா யானை நம்மை அடிச்சிருமாப்பா எனக் கேட்டான், முன்பு சொல்லியிருந்த யானைக்கு தேங்காயில் ஊசி வைத்துக் கொடுத்த கதை ஞாபகம் வந்திருக்கும்போல. திரும்பி வரும்போது அப்பா யானை நமக்கு ஃபிரண்டாப் பா என்றான். ஆமா என்றேன்; அப்படின்னா அதுக்கு நம்ம ஆதவன்னு பேர் வைக்கலாம் என்றான். அப்பெயர் இரண்டு மாதங்களில் அடுத்து எங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணாகயிருந்தால் நாங்கள் வைக்க உத்தேசித்திருக்கும் பெயர். 

வியாழன், 1 ஏப்ரல், 2010

சான்று சார்ந்த மருத்துவம் சாத்தியமா?!

பொதுவாக மருத்துவப் படிப்பை அறிவியலாகவும் மருத்துவத் தொழிலை கலையாகவும் சொல்வர் (Medicine is a Science to learn but Art to practice). இதன் பொருள் ஒரு மருத்துவன் தான் படித்ததையெல்லாம் நடைமுறையில் பயன்படுத்த முடியாது. வேறுவகையில் சொல்வதானால் வெறும் தருக்கம் மூலம் பெறப்பட்ட அறிவுடன் சற்று உணர்வுகளை கலந்து மருத்துவம் புரிபவனே சிறந்த மருத்துவன் என்பதாகும். ஏனெனில் மருத்துவ அறிவியலில் இன்னும் பல நிச்சயமற்ற தன்மைகள் உள்ளன. இயற்பியல், வேதியல் போன்று உயிரியலையும், மருத்துவத்தையும் கறாரான தருக்கம் மூலம் அணுக முடியாது.

ஆனால் இப்போதெல்லாம் சான்று சார்ந்த மருத்துவம் (Evidence based medicine) என்ற முறை மேலை நாடுகளில் அதிகம் புழக்கத்திற்கு வந்துகொண்டுள்ளது. இம்முறையில் புள்ளியியல் சான்றுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஏற்கனவே புள்ளியியல் முறைகள் மருத்துவ துறையில் அதிகம் பயன்பாட்டிலுள்ளது என்றாலும், இப்புதியமுறை மருத்துவம் புரிவதிலுள்ள கலையம்சத்தை அறவே நீக்கிவிட்டு அதில் புள்ளியியல் சான்றுகளை பதிலீடு செய்கிறது. புள்ளியியலும், அதன் உள்ளடங்கிய நிகழ்தகவு முறையும் நமக்கு பல விசயங்களை அறிவதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதைமட்டுமே கொண்டு மருத்துவம் புரிவதால் சில நேரங்களில் மருத்துவர் செய்யும் தவறுகளை ஜெயமோகனின் இக்கட்டுரை உணர்த்துகிறது.

இதில் அவரது மகனுக்கு (கெட்டுப்போன) லஸ்ஸி சாப்பிட்டதால் ஏற்பட்ட உணவு அழற்சிக்கு கொடுக்கப்பட்ட எதிர் மருந்துகள் மேலும் நோயைத் தீவிரப்படுத்தியதே தவிர குறைக்கவில்லை. தருக்க அறிவியல் முறை மூலம் சிந்தித்த மருத்துவர்கள் மேலும் மேலும் வேறு மருந்துகளை அளித்து எப்படியாவது நோயைக் கட்டுப்படுத்த முயன்றார்களே தவிர வேறுவிதமாக யோசிக்கவில்லை. அவர்களது தருக்க அறிவு அவர்களை அதைத்தாண்டி சிந்திக்க விடவில்லை. அம்மருத்துவர்களின் தந்தையோ ஒரு நாய் திருடன் போனபின்பும் குரைப்பதை ஒரு எடுத்துக்காட்டாகக் கொண்டு ஒருவேளை இந்நோய் முறிவு மருந்துகளும் நோய்க்குக் காரணமான கிருமிகள் அழிந்தபின்பும் தொடந்து உடலைத் தூண்டுவதால் உடலானது எதிவினை புரிகிறது என்பதை குறிப்பால் உணர்ந்து அம்மருந்துகளை உடனடியாக நிறுத்தியதால் பின்னர் நோய் குனமானதாக எழுதியிருப்பார். இது மருத்துவம் செய்வதிலுள்ள கலையம்சத்தை (உள்ளுணர்வை) உணர்த்துகிறது. தருக்க அறிவியலின் நிகழ்தகவுக் கோட்பாடு இதனை ஒரு அரிதாக நடக்கும் நிகழ்வாக சொல்லும் (very rare probability), ஆயினும் எனக்கு தற்போதெல்லாம் உயிரியல் துறையில் தருக்க அறிவியலின் ஆதிக்கம் குறித்தது சற்று எதிர்மறை எண்ணம் தோன்றியுள்ளதால் இதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் முன்பு எழுதிய சித்த மருத்துவமும் நவீன அறிவியலும் என்ற கட்டுரைத் தொகுதிகளில் ஒன்றில் சான்று சார்ந்த மருத்துவத்தை சற்று சிலாகித்து எழுதியிருப்பேன். இந்த இரு வருடங்களுக்குள் என்னில் இந்த மாற்றம்.

திங்கள், 1 மார்ச், 2010

அறிவியலும் சித்த மருத்துவமும் - 4

அறிவியலும் சித்த மருத்துவமும் என்ற தலைப்பில் இவ்வலைத்தளத்திலுள்ள கட்டுரைகள் 2008 ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் எழுதியவை. என் சித்தமருத்துவ நண்பர்கள் சிலர் அவர்கள் ஆரம்பிக்கவிருந்த ஒரு இதழிற்காக என்னிடம் கட்டுரை ஒன்று கேட்டிருந்தார்கள். பெரும்பாலும் சித்தமருத்துவர்களையும், சித்தமருத்துவத்தின் பால் நம்பிக்கையும், ஆர்வமும் கொண்ட சிலரையும் சார்ந்தே அவ்விதழ் ஆரம்பிக்கப்படவிருந்தது. என் நல்லூழா தீயூழா எனத் தெரியவில்லை அவ்விதழ் ஆரம்பிக்கப்படவேயில்லை.

எனக்கு, இப்போதிருப்பதைவிடவும், அறிவியலின் மேல் மிகுந்த நம்பிக்கை அப்போது இருந்தது. மேலும் என் கல்லூரி நண்பர்களில் சிலர் சித்த மருத்துவத்தின் மேல் மிகுந்த வெறியும், அறிவியலின் மேல் ஒருவிதமான இளக்காரமும் கொண்டிருந்தனர். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பு சித்தமருத்துவ வலைக்குழுமமொன்றில் நான் எழுதிய சில கருத்துக்கள் மற்றும் அதற்கு முந்திய சில சித்த மருத்துவ கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் ஆகியவற்றில் நான் சொல்லியவற்றிற்கு எதிரான நண்பர்களின் உரையாடல் ஆகியவற்றைத் தொடந்தே இக்கட்டுரையை எழுதினேன் என நினைக்கிறேன். எனவே இக்கட்டுரைகளிலுள்ள தொணி அவர்களை முன்னிலைப்படுத்தியே இருக்கும். ஆனால் பலரும் வாசிக்கும் இவ்வலைத் தளத்திற்கென்று சில மாற்றங்களைச் செய்து பதிப்பிக்க நினைத்தேன். சோம்பலினால் அவ்வாறு செய்யாமலேயே முதல் மூன்று பகுதிகளை வெளியிட்டு விட்டேன். வெளியிடும்போதே சில கருத்துக்கள் குறித்து முரண்கள் தோன்றியதால் மேற்கொண்டு வெளியிடவில்லை. இப்போது வெளிவிடுவதற்கான காரணம் - இவை என் கருத்துக்கள், இக்கருத்துக்கள் சிலவற்றில் எனக்கு இப்போது முழுமையாக உடன்பாடில்லை எனினும் இவை என் அறிவின் பரிமாணத்தை வெளிப்படுத்தும் என்பதனால் வெளியிடத் துணிந்தேன்.

முந்தைய பாகங்கள்: ஒன்று, இரண்டு, மூன்று.

இனி நான்காவதும் இறுதியுமான பாகம்

சித்த மருத்துவம் நவீன மருத்துவத்திற்கு மாற்றாகுமா?

அண்மையில் தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்குச் சென்றிருந்தேன். 1000 வருடங்களுக்கு முன்னரே, இன்றைய அறிவியல்-தொழிற்நுட்ப வளர்ச்சிகள் இல்லாதபோதும், சுற்றுவட்டாரத்தில் 40 மைல் தொலைவில் எங்கும் கற்பாறைகள் இல்லாத இடத்தில் அவ்வளவு பிரம்மாண்டமான கற்கோவிலைக் கட்டிய நம் முன்னோர்தம் செயலை நினைத்து ஆச்சரியப்பட்டேன். அக்கோவிலைப் பார்க்கும் யாருக்கும் நமது பண்பாடும், கலாச்சாரமும், அறிவியலும் அன்று எவ்வளவு உச்சத்தில் (மற்ற நாடுகளை ஒப்பிடும்போது) இருந்தன என்ற நினைப்பு வராமல் போகாது. மருத்துவமும் நமது பண்பாட்டின் ஒருபகுதிதானே; அதனால் சித்த மருத்துவமும் அக்காலத்தில் ஒரு உயர்ந்த அறிவியலாக இருந்திருக்கவேண்டும். அதற்காக தஞ்சைப் பெரியகோவில் போன்ற ஒரு பிரம்மாண்டத்தை தற்போது கட்டவேண்டுமானால், நாம், நம் முன்னோர் பயன்படுத்திய தொழிற்நுட்பத்தைவிட, தற்போதைய தொழில்நுட்பத்தையே நாடுவோம் என்பதே யதார்த்தம். அது மருத்துவத்திற்கும் பொருந்தும்.

சித்த மருத்துவமும் இன்றைய அறிவியலும்

நம்மிடையே ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அது சித்தர்கள் (முன்னோர்கள்) சொன்னது முழுமுற்றான உண்மை என கண்மூடித்தனமாக நம்புவது. இவ்வாறு நம்புபவர்களில் இருவகையினர் உண்டு. முதல் பிரிவினர் சித்தர்கள் மெய்ஞானம் அடைந்தவர்கள், எனவே அவர்கள் ஞான திருட்டியில் கண்டு சொன்னவற்றை, லெளகீகத்தில் புரண்டுகொண்டிருக்கும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது; நாம் என்று அவர்களைப்போல் ஆன்ம சாதனையை பெறுகிறோமோ அன்று எல்லாம் நமக்கு விளங்கும், அதற்கு அறிவியல் தேவையில்லை அல்லது சித்த மருத்துவம் அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்று நம்பும் கூட்டத்தினர். மற்றொரு சாரார், சித்தர்கள்/முன்னோர் உரைத்ததை இன்றைய அறிவியல் கொண்டு விளக்கமுடியும் என நம்புகிறவர்கள். அவர்களும் சித்தர்கள் சொன்னவற்றை முற்றிலும் ஏற்றுக்கொள்கின்றனர். இரண்டுமே தவறானது எனினும், முதல் பிரிவினர் குறித்து அதிகக் கவலையில்லை; இரண்டாவது பிரிவினர் அதிக ஆபத்தானவர்கள்.

ஏனெனில், முதல் பிரிவினரின் நம்பிக்கைகள் பெரும்பாலும் அவர்களுடனேயே இருந்து விடுகின்றன. பொதுவாக அவர்கள் அரசியல் அதிகாரம் கொண்டிராத ஒரு சிறுபான்மையினர்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர்களில் சிலர் தனிப்பட்ட முறையில் இத்தகைய குருட்டு நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும், அறிவியலின் தீர்க்கமான வாதங்களினால் அவர்களின் மொன்னையான நம்பிக்கைகள் காயடிக்கப்பட்டுவிடும். காட்டாக அறிவார்ந்த வடிவமைப்பு (Inteligent design) எனும் குருட்டு நம்பிக்கை அண்மையில் அமெரிக்காவில் முறியடிக்கப்பட்டதை நினைவு கூர்ந்துகொள்ளலாம். ஆனால், இரண்டாம் வகையினர் எண்ணிக்கையில் பெரும்பான்மையினர்; இவர்கள் பெரும்பாலும் மேலோட்டமான அறிவியல் அறிவு உள்ளவர்கள். அதனால் நமது பண்பாட்டுத் தொன்மங்களுக்கு அறிவியல் முலாம் பூசி அவ்வெற்று நம்பிக்கைகளை விமரிசனத்திற்கு அப்பாற்பட்டதாக கட்டமைக்கின்றனர். இவர்கள் பேசும் மொழி அறிவியல் மொழி போன்ற மயக்கம் தருவதால், இவர்களுக்கு ஆராய்ச்சி நல்கைகள் (Research funding) கிடைக்கின்றன; ஆட்சியதிகாரமும் செவிசாய்ப்பதால் பெரும்பொருட்செலவிலான ஆராய்ச்சித் திட்டங்களும், நிறுவனங்களும் இவர்களால் தொடங்கப்படுகின்றன. ஆகவே தான் இவர்கள் ஆபத்தானவர்கள். இத்தகையவர்களின் வாதம், நம் முன்னோர் சொன்னது அனைத்தும் முழுமுற்றான உண்மை; மறைபொருளில் அவர்கள் சொன்னதை நாம்தான் கண்டறியவேண்டும் - அதைக் கண்டறிய முயற்சிக்காமலேயே அவை பொய் எனக் கூறக்கூடாது (உங்களுக்கு நாடிபிடித்து மருத்துவம் செய்யத் தெரியவில்லை எனில் பிரச்சனை உங்களிடம்தானே தவிர நாடியைக் குறை சொல்லக்கூடாது) என்ற மட்டையடியாகவே இருக்கும். இவர்கள் செய்துவருவது என்னவெனில், இறுகிக் கட்டிதட்டிப்போன வெற்று நம்பிக்கைகளை தொடர்ந்து அறிவியல் கண்டுபிடிப்புகளோடு ஒப்பிட்டு அவற்றிற்கு புத்துருவாக்கம் அளிப்பதாகும்.

இந்த இரண்டாம் பிரிவினர் வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குற்றங்களை முன்பு அசிட்டைல் கோலைன், ஹிஸ்டமின் போன்ற நரம்பு வேதியல் கடத்திகளுடன் (Neuro chemical transmitters) ஒப்பிட்டனர் (K. N. Uduppa). பின்னர் குவாண்டம் இயற்பியல் அவர்களுக்குச் சற்று எடுப்பாகத் தெரியவே அதைக் கையாண்டு முக்குற்றங்களை விளக்கினர் (சிறந்த எடுத்துக்காட்டு - தீபக் சோப்ரா). ஆனால் இன்று அவர்களது மோகம் நானோ தொழிற் நுட்பத்திற்கு தாவிவிட்டது போல் தெரிகிறது; நாளை வேறொன்றிற்குத் தாவும். இதன் நீட்சிதான் பீனியல் சுரப்பியை சிவனின் மூன்றாவது கண்ணோடு ஒப்பிடுதல், நடராஜரின் நடனத்தை பெரும் ஊழிக்காலத்தை குறிப்பாலுணர்த்துவதாக (கால் தூக்கி ஆடும் நடராசர் எனக்குப் பிடித்த கலைவடிவம்) வியாக்கியானம் செய்வது போன்ற அபத்தங்கள். என்னைப் பொறுத்தவரை இப்படி நம்புவது படுகுழியில் விழுவதற்கு ஒப்பாகும்; விழுந்தால் மேலே வருவது கடினம்.

வாத, பித்த, கபம் என்பது ஒரு கருதுகோள். கருத்து முதல்வாதம் கோலோச்சிய காலத்தில் நம் முன்னோர்கள் அவர்தம் தொடர் சிந்தனையின் விளைவாக கண்டடைந்த ஒரு தேற்றமே (Concept), இம்முக்குற்ற சமநிலை குலைவே நோய்கள் ஏற்படுவதற்குக் காரணம் என்ற புரிதல். முன்பே சொன்னது போல் அக்காலத்தில் இத்தேற்றத்திற்கு அவர்கள் வந்தடைந்தது அவர்கள் சிந்தனையில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய பாய்ச்சலாகும். நோய்களை விளங்கிக் கொள்வதில் இம்முறை, அக்காலத்தில், கண்டிப்பாகப் பயனளித்திருக்கும். அதற்காக அதை இன்னும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இன்றைய நம் அறிவின் வீச்சோடு ஒப்பிட்டால் வாத, பித்த, கபமானது மிகவும் மேலோட்டமானது. எப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக வெவ்வேறு காலகட்டங்களில் புழக்கத்திலிருந்த பழக்க வழக்கங்கள் பிற்காலத்தில் வெற்றுச் சடங்காக இறுகி கட்டித்தன்மையடைந்ததோ அவ்வாறே வாத, பித்த கபமும் ஒரு சடங்காகவே இன்று செய்யப்படுகிறது. அவைகளைப் பார்க்காமலேயே மருத்துவம் செய்யலாம். மருந்துகளும் வேலை செய்யும். ஏற்கனவே தெரிந்தோ தெரியாமலோ பட்டம் பெற்ற சித்த மருத்துவர்கள் பலரும் ஒரு நல்ல காரியத்தைச் செய்துவருகிறார்கள். அது, நவீன அறிவியல் துணைகொண்டு நோய்க்கணிப்பு செய்து சித்த மருந்துகளை நோயருக்குப் பரிந்துரைப்பது.

வளி, அழல், அய்யத்தை அடிப்படையாகக் கொண்ட சித்த மருத்துவம் நம்பிக்கை சார்ந்தது. எப்படி சோதிடத்தை நம்பினால் பலன் இருப்பது போல் தோன்றுகிறதோ அப்படி. ஆகவே இம்முக்குற்றத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து மருத்துவம் பார்ப்பவர்கள் எல்லாம் சோதிடர்கள் போன்றவர்கள். அவர்கள் சொல்லும் குறிகுணங்களில் 10 க்கு 5 எல்லாருக்கும் இருக்கும். சென்னையில் நாடி பிடித்து மிகத் துல்லியமாக நோய்க்கணிப்பு செய்து வருபர் என்று பிரபலமாக அறியப்பட்ட மருத்துவர் ஒருவரிடம் சென்றுவந்த நோயர் ஒருவர் என்னிடம் சொன்னார் - சார், அவர் என்னனுடைய நோயை மிகச் சரியாக கண்டுபிடித்துச் சொல்லிவிட்டார் என. தாது நட்டம் தான் அவர் நாடிபிடித்துச் சொன்ன அந்த நோய். பின்னே ‘விந்து கழிதல்’ தானே எல்லா நோய்களுக்கும் அடிப்படை?! இந்த ஒன்றைச் சொல்லியே கிட்டத்தட்ட எல்லா ஆண்களையும் ஒரு சித்த மருத்துவர் தமது மருத்துவத்தை நிலைநாட்டி விடலாம். அதன் வீச்சு அத்தகையது. அதனால்தானே சொப்பன ஸ்கலிதம் என்ற ஒன்றை வைத்தே கோடிஸ்வரனாகிய பல சித்த மருத்துவர்கள் தமிழகத்தில் உள்ளனர். இவர்கள் கையாளும் வேறு சில வார்த்தைகள் - உங்களுக்கு உடல் சூடு அதிகம், இரத்தம் சுத்திகரிப்புச் செய்யவேண்டும், சக்தி (Energy) குறைவாக உள்ளது போன்ற பொருளற்ற அபத்தமான சொற்கள்; சற்று நவீன அறிவியல் தொடர்பிருந்தால், (பித்த)சூடு அதிகம் அதனால் உங்களுக்கு gastritis வந்திருக்கிறது என்று ஜல்லியடிக்கலாம். ஏற்கனவே சூடு, குளிர்ச்சி போன்ற சொல்லாடல்கள் நோயாளிக்கு நன்கு பரிச்சியம், ஆதலால் நமது மட்டையடிகளை அப்படியே நம்பிவிடுவார்.

உடனே முக்குற்றத்தில் எத்தனை ஆராய்ச்சிகள் நடந்துள்ளன, எத்தனை ‘ஆய்வுக் கட்டுரைகள்’ வெளிவந்திருக்கின்றன என்ற கேள்வி எழும். ஒரு கட்டுரை ஒரு ஆய்விதழில் வெளிவந்திருக்கிறது என்றால் மட்டுமே அது அறிவியலாகிவிடாது. இவற்றை நான் நம்பாததற்கு இரண்டு காரணங்கள்; ஒன்று, எத்தகைய குப்பையையும் ஒரு ‘மருத்துவ ஆய்விதழில்’ பிரசுரித்துவிட முடிவதற்கான சாத்தியக்கூறுகள் இன்று அதிகம்; இரண்டாவது காரணம் - கிட்டத்தட்ட வாத, பித்த, கபம் குறித்த எல்லா ஆய்வுகளும் அவை கண்டிப்பாக உண்மையாக இருக்கும் எனும் ஒரு முன் தீர்மானத்தின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது. அதற்குச் சாதகமான சான்றுகள் திரட்டப்பட்டு ஆய்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. வேறு வகையில் சொல்வதானால் ஆராய்ச்சியை ஆரம்பிக்கும் முன்னரே முடிவுகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்படுகின்றன; அதற்கேற்றவாறு அவ்வாராய்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இதன் பெயர் அறிவியல் அல்ல; பித்தலாட்டம். உடனே அவை உண்மையில்லை என்று நம்புவது மட்டும் முன்தீர்மானமாகாதா என்ற கேள்வி எழும். இதற்கான பதில் இக்கட்டுரையின் முந்திய பகுதிகளிலேயே விளக்கப்பட்டுவிட்டது.

முக்குற்றத்தின் காலப் பொருத்தமின்மை

இப்போது மருத்துவத்தை எளிமைப் படுத்தவேண்டும்; அதனை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என பல இயக்கங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. மருத்துவம் புரிவது மருத்துவர் - நோயரிடையே ஒருவழிப் பாதையாக இல்லாமல், இருவரும் சேர்ந்து பங்கேற்கும் ஒரு ஒருமித்த நிகழ்வாக இருக்கவேண்டும் என்ற எண்ணங்கள் வலுப்பட்டு வருகின்றன. இத்தகைய சுதந்திரச் சிந்தனைகளோடு ஒப்புநோக்குகையில் முக்குற்ற அடிப்படையிலான சித்த மருத்துவம் ஆதிக்கச் சிந்தனையுடையது; அது நமது நிலப்பிரபுத்துவ சிந்தனையின் ஒரு எச்சமாகவே இன்னும் தொடர்கிறது. இன்றுகூட சில நோயாளிகள், நாம், உங்களுக்கு உடம்பிற்கு என்ன எனக்கேட்டால், உடனே நீங்கதான் நாடிபிடித்துச் சொல்லவேண்டும் எனக்கூறுவர். இச்சிந்தனை மருத்துவரை ஒரு பீடத்தில் வைத்து பூஜிக்கும் முறை. இம்முறையில் மருத்துவரே முதன்மையானவர்; அவருக்கே நோயருக்கு என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிக்கும் முழு அதிகாரமும் உண்டு. மேலும் ஒருவர் மருத்துவராக வேண்டும் என்றால் அவர் உடல் சுத்தம், மனச் சுத்தம் போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும் (கிட்டத்தட்ட சாமியாராக வேண்டும்), அப்போதுதான் அவருக்கு நாடி பரிசோதனை கைகூடும் என்றும் சொல்வதால் இம்முறை காலப் பொருத்தமற்றது.

சித்த மருத்துவத்தில் தத்துவ நீக்கம் செய்தல்

முக்குற்றமே பயனற்றது என்றாகிப்போனால் சித்த மருத்தும் என்ற முறையே அழிந்துபோகிவிடுமே என்ற அய்யம் வரும். அது உண்மைதான். வளி, அழல், அய்யம் மற்றும் அவற்றோடு தொடர்புடைய தத்துவங்களை (தொன்மங்களை) நீக்கிவிட்டால் சித்த மருத்துவம் என்ற ஒன்றை நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது. எஞ்சியிருப்பது நோயணுகாவிதி போன்ற சில குறிப்பிட்ட ஆதிக்க சாதிகளின் கருத்தியல்கள்; இவைகள் பிற்சேர்க்கைகள் - பட்டம் படிக்கும் சித்த மருத்துவர்களின் அவலம், இத்தகைய குப்பைகளையும், சகுனம் பார்த்தல், வாஸ்து போன்ற மூட நம்பிக்கைகளையும் படித்து வெளிவருவது. (மேலும், இதிலும் ஒரு மாணவனை தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக தேர்வில் தோல்வியுறச் செய்யும் பேராசிரியர்கள்!?) தத்துவங்களையும், கோட்பாடுகளையும் நீக்கிவிட்டால் சித்தமருத்துவம் எனச் சொல்லப்படவேண்டியது அதன் மருந்துகள் மட்டுமே. பல நீண்டகாலங்களுக்கு சித்தமருத்துவம் வாழ்ந்து வருவதற்குக் காரணமாக நான் கருதுவது அதன் தத்துவப் பின்னணியல்ல, மாறாக அதன் மருந்துகளே. பொதுவாக சித்த மருத்துவத்தை வெளிப்படையாகத் தெரியும் குறிகுணங்களுக்கு ஏற்ப மட்டுமே மருந்தளிக்கும் ஒரு முறையாக மட்டுமே (புறவயமான மருத்துவம்) கருதும் பார்வையுமுண்டு. அதற்காக இன்று பயன்பாட்டிலுள்ள எல்லாச் சித்த மருந்துகளும் நன்மை பயப்பவை என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது. சித்த மருந்துகளையும் நம் கலாச்சாரத்தோடு இணைத்தே புரிந்துகொள்ளவேண்டும். விந்துவைக் கெட்டிப்படுத்த தங்கம், காண்டாமிருகக் கொம்பு ஆண்மையைக் கொடுக்கும் போன்ற முட்டாள்தனமான நம்பிக்கை சார்ந்த மருந்துகளைப் புறந்தள்ளவிட்டு மற்ற மருந்துகளை அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிக்குட்படுத்த வேண்டும். இன்று உலகம் முழுதும் புதிதாக மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கு பெருந்தொகை செலவிடப்படுகிறது; அது பெரும் முதலீடுகளைக் கோருகின்ற தொழில். ஆனால், சித்த மருத்துகளில் 10 ல் ஒன்று உண்மையிலேயே பயனளிக்கக்கூடியது என்று அறிவியல் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டாலே அது மொத்த சமூகத்திற்கும் பயனளிக்கக்கூடும்; அது சாத்தியம்தான். இவ்வாறு ஆய்வு செய்வதற்கு ‘முன்முடிவற்ற இரட்டைக்குருடு ஒப்பாய்வு’ (Randomised double-blind controlled clinical trial) முறை மிகவும் உகந்தது. ஏற்கனவே இதுபோன்ற ஆய்வுகள் சீனப் பாரம்பரிய மருந்துகளில் நடைபெற்றுவருகின்றன. ஆனால் இவ்வாறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வெளிவரும் சித்த மருந்து கண்டிப்பாக நவீன மருத்துவத்திற்குள் உள்ளிளுக்கப்பட்டு அது ஒரு நவீன மருத்துவ மருந்தாகவே மாற்றப்பெறும். அல்லது அம்மருந்தின் செயல்வினை மூலங்கள் (Active principles) கண்டறியப்பட்டு அவைகளிலிருந்து ஒரு புது ஆங்கில மருந்து உண்டாக்கப்படும். இதை நம்மால் ஜீரணிப்பது கடினம் தான். என்ன அவற்றின் மூலங்கள் சித்தமருத்துவத்திலிருந்து பெறப்பட்டது என மார்தட்டிக் கொள்ளமுடியும் (நான் அறிவுச்சொத்துடைமை (Intellectual property rights) குறித்து எல்லாம் இங்குபேச முயலவில்லை). சொல்லுவதற்கு இது எளிது; எனினும் இத்தகைய மாற்றம் (தத்துவ நீக்கம் செய்யப்பட்ட சித்தமருத்துவம்) என்றாவது நடக்குமா என்பதில் எனக்கு சற்று சந்தேகம் தான்.

சித்த மருத்துவம் இயற்கையானதா?

இயற்கைக்குத் திரும்புவோம் என்ற கோஷம் இப்போதெல்லாம் அடிக்கடிக் கேட்கிறது. சித்த மருத்துவம் செய்வது இயற்கைக்குத் திரும்புவது என்று யாராவது சொன்னால் சிரிக்காமலிருக்க முடியவில்லை. பல இலட்சக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பரிணாம இயங்கியலின் ஏதோ ஒரு கணத்தில் நிகழ்ந்த அற்புதம் மனித மூளை. ஹோமோ சாப்பியன்களாக நாம் உருமாற்றம் பெற்ற கணத்திலிருந்து நமது மூளை சிந்தித்து வருகிறது. அப்போதிருந்தே இயற்கையை நாம் புரிந்துகொள்ளவும், அடக்கவும் முயன்று கொண்டிருக்கிறோம். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் எப்போது நாம் ஆடையணிய ஆரம்பித்தோமோ, எப்போது சமைத்து உண்ண ஆரம்பித்தோமோ, எப்போது விவசாயம் பண்ண ஆரம்பித்தோமோ, அப்போதே இயற்கையிலிருந்து நாம் வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டோம். சிலர் சொல்லலாம் கடந்த சில நூற்றாண்டுகளாகத்தான் நாம் அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் நம்பமுடியாத முன்னேற்றங்கள் அடைந்து நம் பூவுலகைச் சீரழித்து விட்டோம் என. நான் கருதுவது என்னவெனில், எப்படி கடந்த சில நூற்றாண்டு அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒரு குவாண்டம் தாவலோ (Quantum leap), அதுபோன்றே ஹோமோ சாப்பியன்கள் விவசாயம் செய்யக் கற்றுக்கொண்டதும், ஆடையணியக் கற்றுக் கொண்டதும், சக்கரத்தைக் கண்டுபிடித்ததும். இவை அக்காலங்களில் மிகப்பெரிய குவாண்டம் பாய்ச்சலாக இருந்திருக்க வேண்டும். அவை அக்காலத்தில் நிலவிய இயற்கைச் சமநிலையை, சுற்றுச்சூழலைக் கண்டிப்பாக பாதித்திருக்கவேண்டும். அப்படியே ஒரு பேச்சுக்கு இன்றைய அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் துறந்துவிட்டு காட்டுமிராண்டிகளாக மாறினாலும் நமது கேடுகெட்ட மூளை சும்மாயிருக்காது, தொடர்ந்து சிந்திக்கும்; ஏனெனில் அதுதான் அதன் இயற்கை. வளர்ச்சி எப்படி முதன்மையானதோ அதுபோன்றே சுற்றுச் சூழலும்; ஆனால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பதும் அறிவியல் பூர்வமானதாகவேயிருக்க முடியுமேயன்றி பகுத்தறிவுக்கு மாற்றான வெற்று நம்பிக்கைகளாக இருக்க முடியாது.

சித்த மருத்துவம் இயற்கையானது என்று கூறும்போதே அதில் பின் விளைவுகளோ (அ) பக்க விளைவுகளோ இல்லை என்று எளிதாக பிறரை நம்பவைக்க முடிகிறது; ஆனால், அது உண்மையா என்பதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் கிடையாது. சித்த மருந்துகளில் நஞ்சுத் தன்மையுள்ளதா எனவறிய முன் கூறிய அறிவியல் அய்வுகளுக்கு அவை உட்படுத்தப் படவேண்டும்.

சித்த மருத்துவர்களது பிரச்சனைகள்

பொதுவாக சித்த மருத்துவம் பயின்றவர்களிடம் காணப்படும் ஒரு மனப்பான்மை, நம் மருத்துவத்தில் எல்லாம் இருக்கிறது; நாம் தான் அவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்பது. இன்னொருவிதமான மனப்பான்மை சித்த மருத்துவத்தை பிற அறிவுப்புலத்தைச் சேர்ந்த யாரும் கேள்விக்குட்படுத்துவதை கண்மூடித்தனமாக எதிர்ப்பது. அதிலும் குறிப்பாக அவர் நவீனமுறை மருத்துவராக இருந்துவிட்டால் நம் எதிர்ப்பைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆனால், அதே சமயம் சில நவீன மருத்துவர்கள் சித்த மருத்துவத்தைப் பற்றி புகழ்ந்து சொல்லிவிட்டால் போதும், உடனே அவர்களைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டியது. இது எங்குகொண்டுபோய் விடுகிறது என்றால் நம் கல்லூரிப் பாடத்திட்டத்திலேயே வானியல், பேரண்டவியல், குவாண்டம் இயற்பியல், புவி வேதியியல் (Geochemistry), நானோ தொழிற்நுட்பம் போன்ற இன்னபிற நவீன அறிவியல் துறைகளையும் சேர்க்கவேண்டுமாம்; அப்போதுதான் இவற்றைப் படித்து வெளிவரும் சித்த மருத்துவன் நம் மருத்துவத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மைகளை!? வெளிக்கொண்டு வரமுடியுமாம். இத்துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்களுக்கு சித்த மருத்துவத்தைப் பற்றி ஒன்றும் தெரியாததால் அவர்கள் நம் மருத்துவத்தைக் குறை சொல்லிவிடுகிறார்களாம். இந்த எண்ணம் குருட்டு நம்பிக்கை சார்ந்தது. மனிதனின் அறிவு வளர்ந்தது நம்பிக்கைகளினால் அல்ல, மாறாக அவற்றை கேள்விக்குட்படுத்துவதில்தான். கண்மூடித்தனமாக ஒன்றை நம்புவது நம்மை தேக்கமடையச் செய்துவிடும். இத்தகைய சுயவிமரிசனமற்ற கண்மூடித்தனமான நம்பிக்கைகள் மதம் சார்ந்தது; ஆகவே, நாமும் மதவாதிகளைப் போன்றே செயல்படுகின்றோம். ஆனால், தலாய்லாமா போன்ற மதத் தலைவர்கள் கூட அறிவியலுக்கேற்ற மாதிரி புத்த மதத்தைப் புணரமைக்க வேண்டும் எனக் கூறத்தொடங்கியுள்ளார்கள். (“If scientific analysis were conclusively to demonstrate certain claims in Buddhism to be false, then we must accept the findings of science and abandon those claims." - Dalai Lama)

சித்த மருத்துவத்தை / மாற்றுமுறை மருத்துவத்தை பொதுமக்கள் நாடுவதற்கு நவீன மருத்துவம் குறித்த எதிர்மறை எண்ணங்களே முக்கியப் பங்காற்றுகின்றன என்பதே என் எண்ணம். நேர்மறை எண்ணங்களோடு சித்த மருத்துவதை நாடுபவர்கள் மிகச் சிறுபான்மையினராகவே இருக்கலாம். நவீன மருத்துவம் குறித்த எதிர்மறை எண்ணங்களில் மிக முதன்மையான காரணமாக நான் நினைப்பது நோய்களுக்கான முழுமையான தீர்வுகள் அறிவியலால் இன்னும் கண்டுபிடிக்கப்படாதது; அதுபோன்றே நவீன மருத்துவர்களிடையே பொதுவாக நோயாளிகளை அணுகுவதில் காணப்படும் அலட்சியம்/அராஜகம், தேவையற்ற அறுவை மருத்துவங்கள், மேலும் தேவையற்ற ஆய்வுக்கூட பரிசோதனைகள் - அதற்காக அவர்களுக்குக் கிடைக்கும் அதிகப்படியான வரும்படிகள், இன்று நவீன மருத்துவம் செய்துகொள்வதினால் ஏற்படும் பொருளிழப்பு போன்ற சில காரணிகளும் இவ்வெண்ணத்தைத் தோற்றுவிக்கின்றன. இந்த எதிர்மறை எண்ணங்கள் மாற்றம் பெறும்போது, (இந்த மாற்றம் அறிவியல் ரீதியாகவே இருக்க முடியும்; ஏற்கனவே இதற்கான குரல்கள் நவீன மருத்துவர்களிடையேயும், சில சிந்தனையாளர்களிடையேயும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன) சித்த மருத்துவத்தை நாடுபவர்கள் (இது நடப்பதற்கு பல்லாண்டுகள் ஆகுமெனினும்) குறைந்துபோவார்கள். இந்த யதார்த்தத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அதற்காக சித்த மருத்துவமே வேண்டாம் எனச் சொல்ல வரவில்லை. எல்லா நோய்களுக்கும் முழுமையான தீர்வுகள் கண்டுபிடிக்கப்படும்வரை எல்லா முறை மருத்துவங்களும் வழக்கில் இருக்கும்; இருக்க வேண்டும். எப்படி பல்வேறு மதங்களும், சோதிட முறைகளும் இன்றும் வழக்கிலிருக்கின்றனவோ அவ்வாறே. ஆனால், எப்படி மதமும், சோதிடமும் அறிவியலாகாதோ அப்படியே முக்குற்றத்தை அடிப்படையாகக் கொண்ட சித்த மருத்துவமும் அறிவியலாகாது. முக்குற்றம் போன்றவற்றை அறிவியலோடு ஒப்புமைப்படுத்தி பேசுவது சித்த மருத்துவத்தையும், அறிவியலையும் கேவலப்படுத்துவதற்குச் சமமாகும். இது எப்படியெனில் இராமர் பாலம் என்றழைக்கப்படும் மணல்திட்டுகளை இராமர் கட்டியது என்று காட்டுவதற்குச் செயற்கைக்கோள் படங்களை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இராமாயணம் எனும் பெரும் இதிகாசத்தையும், அறிவியலையும் இழிவுபடுத்துகிறோமோ அப்படியே. இராமாயணமும், சிலப்பதிகாரமும், சித்தமருத்துவமும் நம் பண்பாட்டின் தடங்கள்; நாம் கடந்து வந்த பாதை; ஏறி வந்த ஏணி. அவ்வாறு நாம் கடந்துவரும் பாதையில், காலந்தோறும் பல அனுபவங்களைப் பெறுகின்றோம்; அவற்றால் வளர்கின்றோம். இன்றைய நம் அனுபவங்களைக் கொண்டு பின்னோக்கிப் பார்க்கும்போது நம்முன்னோர் செய்த பல முட்டாள்தனங்கள் நமக்குத் தெரிகின்றன; ஆனால், அன்று, அவை மிகுந்த புத்திசாலித்தனம் ஆனவையாக நம முன்னோர்க்குத் தெரிந்திருக்கும். அவ்வாறு புத்திசாலித்தனமானவையாக நம் முன்னோர்க்குத் தெரிந்திருக்கக்கூடிய வழிமுறைகளில் ஒன்றாக நான் கருதுவது மீப்பொருண்மைத் தன்மைகொண்ட (Metaphysical), அகவயமான (Subjective), ஆன்மீக வழிமுறையையே. அன்று நம் முன்னோர் பயணத்தின் இடையில் தவறவிட்ட பாதை, இதற்கு மாற்றான அறிவியல்பாதை. எனவே இனியாவது அப்பாதையை நாம் தேர்ந்தெடுப்போம்.

துணை நூற்பட்டியல்

இக்கட்டுரையை, நான் இதுவரையிலும் படித்த புத்தகங்கள் / இணையப் பக்கங்கள், கேட்ட செய்திகள், இணையதள விவாதங்கள், நேர்ப்பேச்சில் விவாதித்த பல நபர்கள் என பலவற்றிலும், நான் பெற்ற அனுபவத்தை வைத்தே எழுதியுள்ளேன். எனினும் என் சிந்தனையில் சில குறிப்பிடத் தகுந்த மாற்றங்களைத் தோற்றுவித்த சில புத்தகங்களையும், கட்டுரைகளையும் கீழே கொடுத்துள்ளேன்.

  • Mayr E. What evolution is? Basic Books, New York, 2001.
  • Rothman K, Greenland S. Modern epidemiology. 2nd ed. Lippincott Williams & Wilkins, Philadelphia, PA, 1998.
  • Nanda M. Postmodernism and religious fundamentalism: a scientific rebuttal to hindu science. Navayana, New Delhi, 2003 (இணையத்தில் படிக்கக் கிடைக்கும் இந்த ஆசிரியரது மேலும் சில கட்டுரைகள்)
  • Varma D R. From whitchcraft to allopathy uninterrupted journey of medical science. EPW 2006; August 19: August 19: 3605-11.
  • ஜெயமோகன். பண்பாட்டு மானுடவியலும் தமிழகமும். http://jeyamohan.in/?p=12.

வெள்ளி, 17 அக்டோபர், 2008

அறிவியலும், தமிழரும் (அறிவியலும் சித்த மருத்துவமும் - 3)

அறிவியலும் சித்த மருத்துவமும் - 1
அறிவியலும் சித்த மருத்துவமும் - 2

நம்மிடையே அறிவியல் குறித்த சரிதான புரிதல் இல்லை என்பதே என் எண்ணம். ஆன்மீகம் என்பது புலன் இன்பத்தைக் கடந்த ‘பேரின்பத்தைத்’ தரவல்லது, ஆகவே அது மேலானது. ஆனால் அறிவியல் வெறும் புலன் இன்பம் தரக்கூடியது, ஆகவே அது ஆன்மீகத்தைவிட ஒருபடி கீழானது என்றே நமது பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது எப்படியெனின் கணினிகளுக்கான கட்டளைகளை எப்படி நிரலிகளைக் (Codes) கொண்டு கட்டமைக்கிறார்களோ (Programmed), அப்படியே அறிவியல் என்றவுடன் அது லெளகீக இன்பம் தரக்கூடியது, ஆகவே அது மெய்ப்பொருள் காண்பதற்கு எதிரானது என்ற எண்ணத்தை நமக்கு பல (ஆன்மீகக்) கட்டுக்கதைகளினால் ஆன நிரலிகள் மூலம் கட்டமைத்துள்ளார்கள் நம் இடைக்கால முன்னோர்கள். அதனால் அறிவியல் என்ற பொத்தானை அழுத்தியவுடன், மூளை என்னும் நமது கணினியில் அது லெளகீக இன்பம் தரக்கூடியது என்ற பதில் ஆயத்தமாக வருகிறது. ஆனால் நமது பாரம்பரியத்தில் ஒருகாலத்தில் இன்றைய அறிவியல் சிந்தனைகளின் முன்னோடியான உலகாயுதம் எனப்படும் பொருள் முதல்வாத தத்துவமே மேலோங்கியிருந்தது. மெய்யியல் என்றால் உண்மையை அறிய முயல்தல் எனப்பொருள்படும். உண்மையையறிதல் என்பது, நாம் யார்? ஏன் பிறக்கிறோம்? ஏன் இறக்கிறோம்? இறந்த பின் நம் சிந்தனைகள் என்ன ஆகின்றன? என்பன போன்ற மேலும் பல கேள்விகளுக்கு விடையறிய முயல்தல் ஆகும். இந்த உண்மைகளை அறிவதற்கு ஆன்மீகம் என்ற கருத்து முதல்வாதமும், அறிவியல் என்ற பொருள்முதல்வாதமும் இரண்டு வழிமுறைகள். உயிரும், சிந்தனைகளும் பொருண்மைத்தன்மை வாய்ந்தவையாகவே இருக்கமுடியும் என்ற முடிவிற்கு அறிவியல் வந்துவிட்டபோதே ஆன்மிகப் பாதை தவறாகிவிடுகிறது. இதுபுரியாமல் நாம் இன்னமும் ஆன்மீகமே உண்மை மெய்ஞானம் அடைவதற்கான ஒரேவழி எனத் தொடர்ந்து அபத்தமாக நம்பிக்கொண்டிருக்கிறோம். நம் நவீன கால ஆன்மீக வியாபாரிகளும், பாபாக்களும், மாதாக்களும் இந்த அபத்தத்தைத் (அவர்கள் பிழைப்பிற்காகத்) தொடர்ந்து கூவிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இச்சிந்தனை சித்த மருத்துவர்களிடம் மட்டுமல்ல நம் குமுகாயம் முழுவதுமே புரையோடிப் போயிருக்கிறது. நாம் அறிவியல் எனப் புரிந்துகொள்வது அதன் பயனுறு விளைவான தொழில் நுட்ப வளர்ச்சியின் நீட்சியான அலைபேசி, தொலைக்காட்சி போன்ற இன்னபிற உபகரணங்களையே. என்னே ஒரு அறிவீனம்!!

சித்த மருத்துவம் சில மாற்றுச் சிந்தனைகள்

சித்த மருத்துவம் என்ற பெயர் மிகச் சமீபகாலத்தியதொன்றாகவே இருக்கவேண்டும் என்றே நான் நம்புகிறேன். அதாவது சித்தர்கள் என்று குறிக்கப்படுபவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்ததாகக் கருதப்படும் 13-14 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிற்பாடுதான் இச்சொல் வழக்கிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இம்மருத்துவ முறை கண்டிப்பாக காலத்தால் மிகவும் முந்தியது; தமிழர் பண்பாடு, கலாச்சாரம் என்று தோன்றியதோ அன்றே இம்மருத்துவமும் தோன்றியிருக்கவேண்டும். சித்தமருத்துவம் என்று நாம் இப்போது படிப்பது, குறிப்பாக கல்லூரியில், பல்வேறு வகைகளைத் தொகுத்து அவ்வகைகளை சித்த மருத்துவம் என்ற ஒரே குடையின் கீழ் ஒரு அமைப்பாக மாற்றியதின் வெளிப்பாடே என்பது என் எண்ணம்; எப்படி இந்துமதம் என்று ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளதோ அவ்வாறே. இத்தகைய தொகுப்பு எப்போது நடந்திருக்க வேண்டும் என்பது குறித்து என்னால் ஊகிக்கமுடியவில்லை. ஆனால் இம்முயற்சி ஒருவராலோ அல்லது பலராலோ வெவ்வேறு கால கட்டங்களில் நடந்திருக்க வேண்டுமென நான் நம்புகிறேன். காரணம்: சித்தமருத்துவத்தின் அடிப்படைகளாகக் கட்டமைக்கப்பட்டுள்ள கொள்கைகளிலுள்ள முரண்பாடே.

நான் இன்றைய சித்த மருத்துவத்தை பொருண்மைத் தன்மை வாய்ந்த புறவயமான அடிப்படையைக் கொண்ட ஒருபகுதியாகவும், அரூபமான, குறிப்பாக மீப்பொருண்மைத் தன்மை வாய்ந்ததான, அதனால் அகவயமான மற்றொரு பகுதியாகவும் பிரிப்பேன். தமிழர் பண்பாட்டிலும், சங்க இலக்கியங்களிலும் அவர்கள் பெரிதும் புறவயமான, இன்றைய மொழியில் சொல்வதானால் லெளகீக, வாழ்க்கையையே வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் லெளகீகம் என்பதையே ஒரு கெட்டவார்த்தையாக இன்றைய பெரும்பான்மையான தமிழர்கள் கருதுவது ஒரு நகைமுரண்; இதைப் பின்னர் பார்க்கலாம். சுருக்கமாகச் சொன்னால் இன்று சித்தமருத்துவம் என்று வழங்கப்படுவது பொருள் முதல்வாதத்தையும், கருத்து முதல்வாதத்தையும் கலந்தளிக்கும் ஒரு காக்டெயில்தான்.

மனிதன் தோன்றியபோதே அவனுக்கான நோய்களும் தோன்றிவிட்டன. நோய்களும் இயற்கையின் ஒரு அம்சம்தானே. மனிதனைப் போன்றே எல்லா உயிரிகளுக்கும், குறிப்பாகக் கிருமிகளுக்கும் இப்பூவுலகில் வாழ அனைத்து உரிமையுமுண்டு. ஆனால் இயற்கையின் ‘உன்னதப் படைப்பான’ மனிதமூளை தன்னியல்பிலேயே பேராசை கொண்டது. அது தான் தோன்றியது முதல், தன் உடலை வருத்தியும், மரித்தும் போக வைக்கும் நோய்களைப் புரிந்துகொள்வதின் மூலம் அவற்றை வெல்லத் துடித்துக் கொண்டிருக்கிறது. இச்சிந்தனையின் தொடக்க காலகட்டங்களில், அதாவது, வரலாற்றுக் காலத்திற்கு முன்பு, நோய்கள் ஏற்படுவதற்குக் காரணம் துர் தேவதைகள், பில்லி சூனியங்கள், செய்வினை என்ற நம்பிக்கை எல்லாச் சமூகங்களிலும் பலமாக இருந்திருக்கவேண்டும் என அறிஞர்கள் கருதுகிறார்கள். இவற்றின் எச்சங்கள் இன்னும் எல்லாச் சமூகங்களிலும் உண்டு. இப்படியான நம்பிக்கைகளிலிருந்து விலகி, நோய்கள் உண்டாவது குறித்து இருவேறு விதமான பெரும் சிந்தனைப் போக்குகள் அக்காலத் தமிழ்ச் சமூகத்தில் நிலவியிருந்திருக்க வேண்டும். முதலாவது, பொருள் முதல்வாத அணுகுமுறையான அய்ந்திணைக் கோட்பாடு; இரண்டாவது, கருத்து முதல்வாத அணுகுமுறையான முக்குற்ற சமநிலை குலைதல். இவ்வாறான புரிதலுக்கு நம்முன்னோர் வந்தடைந்தது, அதுவரையிலும் நம்பப்பட்ட பில்லி, சூனிய அடிப்படையையே முற்றிலும் தகர்த்த (Paradigm Shift) நிகழ்வாகும். இவ்வாறே சீனர்களின் யின், யாங் கோட்பாடுகள் போன்றவையும் மனிதர்களின் சிந்தனையில் ஏற்பட்ட குறிப்பிடத் தகுந்த மாற்றங்களாகும்.

தமிழர்களின் அய்ந்திணைக் கோட்பாடு, நானறிந்தவரை, மிகுந்த தனித்துவம் வாய்ந்தது. ஏனெனில் வேறெந்த இனத்திலும் இவ்வளவுதூரம் நிலம், பொழுது ஆகியவற்றையும், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் போன்ற மற்ற உயிரினங்களையும் புறவயமாக (Objective) வகைப்பாடு செய்யும் முறையில்லை. இவ்வகைப்பாடு ஒருவகையில் இன்றைய அறிவியல் சிந்தனைகளுக்கு ஒரு முன்னோடி. இன்றைய அறிவியலில், பூமியின் சில குறிப்பிட்ட பகுதிகளில் சில குறிப்பிட்ட நோய்கள் எல்லாக் காலத்திலுமிருக்கும் (Endemic), அதுபோன்றே சில குறிப்பிட்ட பருவகாலங்களில் சில குறிப்பிட்ட நோய்கள், குறிப்பாக கிருமிகளால் பரவும் நோய்கள், அவற்றின் இயல்பான அளவிலிருந்து அதிகரித்துக் காணப்படும் (Epidemic) என்ற புரிதல் உண்டு. இதை அன்றே குறிஞ்சி தொடங்கி அய்வகை நிலங்களில் வாழ்பவர்களுக்கு இன்னின்ன நோய்கள் வரும் என்றும், அதேபோல் கார்காலம் போன்ற வெவ்வேறு பெரும்பொழுதுகளில் இன்னின்ன நோய்கள் பரவும் என நம்முன்னோர் புரிந்து வைத்திருந்தது, இன்றைய அறிவியலின் நோய்விபரவியல் (Epidemiology) சொல்லும் கருத்துக்களோடு ஒப்புநோக்கத்தக்கது. ஆனால், இம்முறை வளர்த்தெடுக்கப்படவில்லை.

நோய்கள் ஏற்படுவதற்கு வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குற்றங்களின் சமநிலை குலைவதுதான் என்றும் அவைகளை நாடிபிடித்து பார்ப்பதின் மூலம் அறிந்துகொள்ளமுடியும் என்ற புரிதலை கருத்து முதல் வாதக் கோட்பாட்டுடன் பொருத்திக்கொள்ளலாம். இதன் தொடர்ச்சியான முக்குணங்கள், ஆறு ஆதாரங்கள், ஐந்து கோசங்கள், வர்மப் புள்ளிகள் போன்றவற்றையும் இவ்வகையிலேயே அடக்கலாம். வேறுவகையில் சொல்வதானால் கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன; பதில்களும் புதிதாக வந்துகொண்டேயிருக்கின்றன. இயற்கையைப் பற்றிய நமது புரிதல் அதிகரிக்கும்போது நமது பதிலிலும் அதிகத் தெளிவு ஏற்படுகிறது. கேள்விகள் அதேதான், பதில்கள் தான் காலந்தோறும் மாற்றம் அடைந்து கொண்டேயிருக்கின்றன. ஆகவே நோய்கள் குறித்த இன்றைய நமது புரிதல் நாளை மாறலாம். அதற்காகச் சிலர் நினைப்பதுபோல் ‘சித்தர்கள் ஞான திருட்டியில் கண்டு சொன்ன பதில்கள்’ நாளை மீண்டும் உறுதிப்படுத்தப்படமாட்டாது. இயற்கையைப் பற்றிய நமது புரிதல் என்பது ஏணிப்படி போன்றது, அதன் உச்சம் மெய்ஞானமடைதல். அதை என்றாவது அடைவோமா என்பதை, இன்றைய நிலையில், கணிக்க முடியாது என்பதே உண்மை. ஆனால், நாம் வாதம், பித்தம், கபம் என்பவை உண்மை என இன்றும் நம்புவது, ஏணியில் பாதிதூரம் ஏறிவிட்டு அங்கேயே நின்றுவிடுவதற்கு ஒப்பாகும்.

இரண்டுவிதமான போக்குகளும் அக்காலத் தமிழரிடையே இருந்ததா, அன்றி கருத்து முதல்வாதம் வெளியிலிருந்து வந்ததா என்பது போன்ற சிக்கலான விடயங்களுக்குள் நான் நுழையவிரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை முற்றிலும் புறவயமான பொருள் முதல்வாதக் கோட்பாட்டை புறக்கணித்துவிட்டு முற்றிலும் அகவயமான முக்குற்றம் என்ற கருத்துமுதல்வாதக் கோட்பட்டை நம் முன்னோர் கைக்கொள்ள ஆரம்பித்ததை ஒரு பெரும் தீயூழாகக் கருதுகிறேன். கருத்து முதல்வாதத்தின் ஈர்ப்பு அத்தகையதாக இருந்திருக்க வேண்டும் அல்லது அதற்கான புறக்காறணிகளை அக்காலத் தமிழ் பண்பாட்டுச் சூழலுடன் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒரு மருத்துவ வரலாற்றாசிரியனின் வேலை. இன்று சித்த மருத்துவதின் அடிப்படையாக கருதப்படுவது கருத்து முதல்வாதக் கோட்பாடுகளே. ஐந்திணைக் கோட்பாடு முற்றிலும் அருகிவிட்டது. எனவே, இத்தொகுப்பில் இன்று சித்த மருத்துவமாகப் புரிந்துகொள்ளப்படும் முக்குற்றத்தை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத்தை என் புரிதலில் விளக்க முயல்கின்றேன்.

தொடர்வேன்...

செவ்வாய், 14 அக்டோபர், 2008

அறிவியலும் சித்த மருத்துவமும் - 2

அறிவியலும் சித்த மருத்துவமும் - 1

மருத்துவம் - அறிவியலா?! கலையா?!

உண்மையில் மருத்துவம் அறிவியலா அல்லது கலையா என்பது இன்றும் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்படும் விடயம். வேறு எந்தத் துறையிலும் இந்தளவு சர்ச்சைகளுக்கு இடமில்லை. உயிரியலின் சிக்கலான அமைப்புதான் (Complexity) இந்த சர்ச்சைகளுக்குக் காரணம். இதே காரணத்தால்தான் நவீன மருத்துவமான ஆங்கில மருத்துவத்திற்கிணையாக மரபு மருத்துவ முறைகளும் இன்னும் பயன்பாட்டிலுள்ளன என்றால் அது மிகையாகாது. இதைப் பின்னர் பார்க்கலாம். பொதுவாக மருத்துவம் கற்பதை அறிவியலாகவும், பயன்படுத்துவதைக் கலையாகவும் கருதுவது நடைமுறை உண்மை (Medicine is a science to learn and an art to practice). ஒரு மருத்துவர் கைராசியான மருத்துவர் எனப் பெயர் வாங்குவதற்கு அவர் நோயாளியிடம் காட்டும் பரிவு உட்பட மேலும் பல மனித மனத்தோடு தொடர்புடைய காரணிகள் தொழிற்படுகின்றன. (உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளின்படி மருத்துவத்தைக் கலையாகக் கையாள்வதில் மாற்று முறை மருத்துவர்கள் சிறந்தவர்கள்).

ஆயினும், தரவு சார்ந்த மருத்துவம் (Evidence based medicine) என்ற ஒருமுறை இப்போதெல்லாம் பரவலாக பயன்பாட்டிற்கு, குறிப்பாக மேலைநாடுகளில், வந்துகொண்டிருக்கிறது. இம்முறையானது மருத்துவம் குறித்த நமது புரிதல்களை அதிகப்படுத்தியுள்ளது; வேறுவகையில் சொன்னால், நோய்கள், அதற்கான காரணீகள், சிகிச்சைமுறைகள் குறித்து நாம் இதுகாறும் கொண்டிருக்கும் நம்பிக்கைகளைக் கட்டுடைக்கின்றது. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்வதானால், வைரஸ் கிருமிகளால் ஏற்படும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றிற்கு ஆன்டிபயாட்டிக்குகளைப் பரிந்துரைப்பதின் அவசியமின்மையை இம்முறை தெளிவுறுத்தியதைக் குறிப்பிடலாம். தரவு சார்ந்த மருத்துவத்தின் முதன்மையான குறிக்கோளே மிகவும் சிக்கலான, நிச்சயத்தன்மையற்ற சூழ்நிலைகளில் முடிந்த அளவிற்கு புறவயமான முடிவுகளை மருத்துவர்கள் எடுப்பதற்கு உறுதுணை புரிவதேயாகும். இம்முறையானது மருத்துவம் செய்வதிலுள்ள கலை அம்சத்தை, குறிப்பாக மருத்துவரது சொந்த முன்தீர்மானங்களைக், குறைத்துவிட்டு அவ்விடத்தில் அறிவியலைப் புகுத்துகின்றது. எனவே இனிவரும் காலங்களில் மருத்துவம் புரிவது மிகுதியும் அறிவியற் சார்ந்ததாகவே இருக்குமேயன்றி கலையாக இராது.

ஏன் இத்தனை மருத்துவ முறைகள்?

சின்ன வயதில் ‘இங்கிலீஸ்’ மருந்துக்கடை என்ற பெயர்ப் பலகைகளைக் காணும்போதெல்லாம் அதென்ன ‘இங்கிலீஸ்’ மருந்துக்கடை என நான் வியப்புற்றிருக்கிறேன். இதற்கான விளக்கம் அநேகமாக நான் சித்த மருத்துவக் கல்லாரியில் சேர்ந்த பிற்பாடுதான் கிடைத்திருக்குமென நினைக்கிறேன். அப்போதுதான் நாட்டு மருந்துக்கடை என்ற ஒன்றிருக்கிறது என்பதே எனக்குத் தெரியவந்தது. இப்போதெல்லாம் ‘இங்கிலீஸ்’ மருந்துக் கடைகளிலேயே அம்மருந்துகளைப் போன்றே பொதி செய்யப்பட்டு நாட்டு மருந்துகளும் கிடைக்கின்றன. ஆங்கில மருந்துக்கடைகளின் பெயர்ப் பலகைகளிலேயே இங்கு சித்தா, ஆயுர்வேத மருந்துகளும் கிடைக்கும் என எழுதப்பட்டுள்ளன. எனவே ‘இங்கிலீஸ்’ மருந்துக்கடை என்ற பெயர்ப்பலகைகளைத் தற்போதெல்லாம் அரிதாகவே காணமுடிகிறது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக நன்றாக உள்ளதால், இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த நிறுவனப் பங்கிலும் கண்ணைமூடிக் கொண்டு முதலீடு செய்தாலும் அது 'நீண்டகால அடிப்படையில்' உறுதியாகப் பலன் தரும் என்று சொல்கிறார்கள். அதுபோன்றே எம்மருந்தை எந்நோயாளிக்குக் கொடுத்தாலும் பெரும்பாலான நேரங்களில் அந்நோய் குணமாகிவிடும் அல்லது கட்டுப்படுத்தப்படும்; இது அம்மருந்தின் உண்மையான வீரியத்தால் அல்ல, மாறாக பெரும்பாலான நோய்கள் தன்னியல்பாகவே குணமாகிவிடுதலாலோ/குறைந்துவிடுவதாலோ அல்லது மனிதமூளை அம்மருந்தை அந்நோய்க்குறியதாகப் பாவித்துக்கொள்வதால் ஏற்படும் விளைவினாலோ இருக்கலாம். இவ்விளைவை மருந்துப்போலி விளைவு (Placebo effect) என்பர். புதிய மருந்துகளின் வீரியமறிய நடத்தப்படும் ஆராய்ச்சிகளில் (Randomised double blind controlled clinical trials) இப்போலிகள் (Placebo) இன்றியமையாத பங்காற்றுகின்றன. மருந்தறிவியலின்படி (Pharmacology) ஒவ்வொரு மருந்திற்கும் நோயைக் குணப்படுத்தவேண்டிய வீரியமிருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக போலிவிளைவும், பக்கவிளைவும் எல்லா மருந்துகளுக்கும் உண்டு.

சீன இயற்பியல் என்றோ அல்லது அரபு வேதியல், ஜெர்மானிய வானியல், இந்திய விலங்கியல் என்றோ அறிவியலில் பிரிவுகள் இல்லை. ஆனால் மருத்துவ முறைகளில் மட்டும் ஏன் இத்தனை பிரிவுகள்? (ஆனால், இப்போது நம்நாட்டில் வேத கணிதம் (Vethic mathematics), வேத வானியல் என்று சொல்லி ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது ஒரு முரண்) இதற்கு, முன்பே விளக்கியது போல, உயிரியலின் இயல்பான சிக்கல்தன்மையும் அதனால் நம் அறிதலில் உள்ள நிலையற்றதன்மையுமேயாகும். உயிரியியல் செயல்கள், வேதியியலிலோ இயற்பியலிலோ பொருள்களுக்கிடையே நடைபெறும் ஒற்றை பரிமாண தன்மையுடைய வினைகளைப் போலல்லாது, பல பரிமாணத் தன்மையுடையவை. விளக்கமாகச் சொன்னால் தண்ணீரை சூடுபடுத்தும்போது 100c செல்ஷியஸில் அது கொதிநிலையை அடைகிறது. இங்கு தண்ணீருக்கும், வெப்பத்திற்குமிடையேயான உறவைக் குலைக்கும் ஒரே காரணி ஆக்சிஜன் அடர்த்தி மட்டுமே. (ஆக்சிஜனின் அடர்த்தி கடல்மட்டத்திலிருந்து ஒரு இடத்தின் உயரத்தினைப் பொறுத்து மாறுபடும்) அதைச் சீராக வைத்துக்கொண்டால் உலகின் எந்தப்பகுதியிலும், எந்த நேரத்திலும் 100 C வெப்பத்தில் தண்ணீர் கொதிநிலையை அடைகிறது. ஆனால் நோய்கள் ஏற்படும்விதம், அவற்றிற்கான மருந்துகள் செயல்படும்விதம் போன்றவை முன்பே குறிப்பிட்டதுபோல் பல பரிமாணத்தன்மையுடையவை. அவற்றை இயற்பியல், வேதியியல் போன்றவற்றை மாதிரிகளாகக் கொண்டு, உயிரியலானது இயற்பியல், வேதியியலின் குறுக்கப்பட்ட வடிவாக இருந்தாலும், மட்டுமே புரிந்துகொள்ள இயலாது.

நோய்களைக் குணப்படுத்துவதைப் பொறுத்தவரை நாம் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற இயல்புள்ளவர்கள். இன்று பெரும்பாலானோர் முதலில் நாடுவது அலோபதி, திருப்தியளிக்காவிட்டால் சித்தா, ஹோமியோபதி. இவற்றிலும் திருப்தியடையாவிட்டால் மசூதிக்குச் சென்று மந்திரித்துக் கொள்வது, பில்லி சூனியம் எடுப்பது என்றளவில் நமது செயல்பாடுகள் இருக்கும். இவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் பெரும்பாலான நோய்கள் கட்டுப்படுத்தப்படுவது போல் தோன்றுவது முன்னர் குறிப்பிட்ட காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். எங்களூர்ப் பகுதிகளில் பார்வை பார்த்தல் என்ற ஒரு ‘மருத்துவம்’ உண்டு. தீராத தோல்நோய்கள், குறிப்பாக கரப்பான், போன்றவற்றிற்கு ‘மருத்துவர்’ ஒரு குச்சியால் நோய்கண்ட இடத்தில் சில மந்திரங்களை முனுமுனுத்துக்கொண்டே தடவுவார். வேறு ஏதும் மருந்துகள் கொடுப்பதில்லை. சென்னையில் சில இடங்களில் சாதாரணக் காய்ச்சல் போன்றவற்றிற்கு மசூதிக்குச் சென்று மந்திரித்துக் கொள்ளும் வழக்கம் உண்டு. இதுபோன்று பல்வேறு பகுத்தறிவிற்கு முரணான, எந்தக் குறிப்பிட்ட முருத்துவ முறையையும் சாராத, பழக்கவழக்கங்கள் எல்லாக் குமூகங்களிலும் உண்டு. அறிவியல் முன்னேறிய இக்காலத்திலும் இத்தனை முறைகளும் புழக்கத்திலிருப்பது, உயிரியலில், பிற அறிவியல் துறைகளோடு ஒப்பிடும்போது, மனிதனுக்கிருக்கும் அறிதல் குறைபாடுதான் (Gaps in knowledge).

தொடர்வேன்...

திங்கள், 13 அக்டோபர், 2008

அறிவியலும் சித்த மருத்துவமும் - 1

1990 - களின் ஆரம்பத்தில் நான் பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்தபோது என் அறை நண்பர்களை சித்த மருத்துவ தத்துவத்தின் முதுகெலும்பாக கட்டமைக்கப்பட்டுள்ள வாத, பித்த, கபத்தின் (முக்குற்றம்) அடிப்படையில் வகைப்பாடு செய்து ஒருவரையொருவர் கிண்டல் செய்துகொள்வதுண்டு. அதாவது, இத்தத்துவத்தின் படி மனிதர்கள் இயல்பாகவே மூன்று குணங்களாகப் பிரிக்கப்படுவர் - சத்துவம், ரஜம், தமம் என்பவையே அந்த மூன்று குணங்கள்; சத்துவம் என்பது மிக உயர்ந்த குணம், தமச குணம் மிகக் கீழான குணம். வாதத் தன்மையை மிகுதியாகக் கொண்டவர்கள் தமச குணம் கொண்டவராகயிருப்பர்; மேலும் அவர்கள் நடந்தால் மூட்டுகளிலிருந்து நெட்டி ஒலி கேட்கும், சற்று உயரமாகயிருப்பர், தூங்கும்போது அரைக்கண் திறந்திருக்கும், கெட்ட சொப்பனம் காண்பர் என்பன போன்று மிக நுணுக்கமான விவரிப்புகள் சித்தமருத்துவப் புத்தகங்களில் காணக்கிடைக்கும். ஒருவரை அவர் வாதத் தன்மை மிகுந்தவரா, பித்தத் தன்மை மிகுந்தவரா அல்லது கபத்தன்மை மிகுந்தவரா என்பதை இத்தகைய சித்தரிப்புகள் மூலம் ஒரளவு விளங்கிக்கொள்ளலாம் எனினும், நாடி பிடித்துப் பார்த்து இதை உறுதிசெய்து கொள்ள வேண்டுமென சித்தமருத்துவ நூல்கள் கூறும். அவ்வாறு நாடி பிடித்து ஆய்வதற்கும் - எந்தெந்த நேரங்களில் பார்க்கவேண்டும், எவ்வாறு பார்க்கவேண்டும் எனப் பல விதிமுறைகளுண்டு.

இயற்கையைப் புரிந்து கொள்வதற்கு இவ்வாறு வகைப்பாடு செய்துகொள்ளுதல் இன்றியமையாதது. அதுவே பகுத்தறிவின் முதல்படி எனக் கொள்ளலாம். காட்டாக வானியலில் நாம் கோள்கள், நட்சத்திரங்கள், வால் நட்சத்திரங்கள் என்று பிரித்து வைத்திருக்கிறோம். உயிரியலில் தாவரங்களுக்கு பெந்தம்-ஹூக்கர் வகைப்பாடு உள்ளது. வாத, பித்த, கபம் போன்றே நவீன மருத்துவத்திலும் A வகைப்பிரிவினர் (Type A personality), B வகைப்பிரிவினர், C வகையினர் என ஆளுமையின் அடிப்படையில் மனிதர்களை வகை செய்வதுண்டு. இன்னின்ன வகையினருக்கு இன்னின்ன நோய்கள் வருவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் என்றளவில் அந்தக் கருதுகோள் செல்லும். இவ்வாறு வகைப்பாடு செய்வதில் ஒவ்வொரு பொருட்களுக்கும்/உயிரினத்திற்கும் உரிய தனித்தன்மைகள் இழக்கப்பட்டாலும் இயற்கைப் பொருட்களைப் புரிந்துகொள்வதில் இது இன்றியமையாதது. ஆனால், சித்த மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் சார்ந்து சொல்லப்பட்டுள்ள வகைப்பாடும், நவீன அறிவியல் கைக்கொள்ளும் வகைப்பாடும் ஒன்றிற்கொன்று முரணானவை; முன்னது அகவயமானது (subjective), மேலும் மீப்பொருண்மையியல் (Metaphysical) சார்ந்தது. ஆனால், பின்னது பெரிதும் புறவயமானதும் (Objective), பொருண்மையியல் (Materialistic) சார்ந்ததுமாகும்.

மருத்துவ அறிவியல் ஒரு பருந்துப் பார்வை

சித்த மருத்துவத்தின் இன்றைய பயன்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு உயிரியல் குறித்த சமகால அறிவும் அவசியம். உயிரியலை / மருத்துவத்தைக் குறுக்கினால் அது இயற்பியலாகவும், வேதியியலாகவும்தான் இருக்கும். நமக்கு மிகவும் புதிராகவுள்ள உயிர் என்பது என்ன? நம் சிந்தனைகள் என்பவை யாவை? என்பவை குறித்து அறிவியல் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வந்துவிட்டது. அதாவது இவைகளும் பொருண்மைத் தன்மை வாய்ந்தவைதான் என்பதே அது. ஆயினும் இன்றைய அறிவியலால் சடப்பொருள்களிருந்து வேதிவினைகள் மூலம் ஒரு உயிரையோ அல்லது சிந்தனைகளையோ உருவாக்க முடியவில்லை. ஒரு உயிரியிலிருந்து இன்னொரு உயிரியைப் போலச் செய்யமுடியும் (Cloning), ஆனால் வெறும் சடப்பொருளிலிருந்து முற்றிலும் புதிதாக ஒரு உயிரியை உருவாக்க இன்னும் நம்மால் முடியவில்லை.

அதேபோல ஒரு நோய் எவ்வாறு ஏற்படுகிறது என்பதற்கான முழுமுற்றான அறிவு இன்னும் புலப்படவில்லை. நோய்கள் குறித்த எல்லா அறிதல்களும் பல்வேறு சாத்தியக்கூறு மாதிரிகளைக் (Probabilistic models) கொண்டு உருவாக்கப்பட்டவைதாம். நவீன அறிவியல் / மருத்துவம் எல்லா நோய்களுக்கும் தீர்வு கண்டுவிட்டது என நாம் பொதுவாக நம்புவது ஒரு மாயைதான்; உண்மையல்ல. உண்மையில் அது எந்த நோய் குறித்தும் முடிந்தமுடிவான தீர்வு எதையும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை; கண்டுபிடிக்குமா என்று ஊகிக்கவும் முடியாது. தடுப்பூசிகளும், ஆன்டிபயாட்டிக் மருத்துகளும் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பெருமளவு வெற்றி பெற்றிருந்தாலும் அவை முழுத்தீர்வாகாது. நம் எல்லோருக்கும் தெரியும் எய்ட்ஸ் நோயை HIV வைரஸ் கிருமிதான் உண்டாக்குகிறது என. நாம் நினைப்பதுபோல் HIV வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர் அனைவருக்கும் எய்ட்ஸ் வந்துவிடாது. அதாவது உங்கள் உடலில் HIV வைரஸை நீங்கள் கொண்டிருந்தாலும் உங்களுக்கு எய்ட்ஸ் வராமலேயே இருக்கலாம். வேறுவகையில் சொல்வதானால் வைரஸ் உடலிலிருப்பது எய்ட்ஸ் வருவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறதே தவிர அதுமட்டுமே நோயை உண்டாக்குவதில்லை. இன்னொரு சிறந்த உதாரணம் சொல்லவேண்டுமானால் காச நோயை எடுத்துக்கொள்ளலாம். நம்மில் பலரும் காசநோயை உண்டாக்கும் கிருமியான மைக்கோ பாக்டீரியம் டியூபர்குலோசிஸை உடம்பில் கொண்டிருப்போம். ஏனெனில், இந்நோய் இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் எப்பொழுதுமே சிலருக்கு இருக்கும் (Endemic), ஆனாலும் நம்மில் பலருக்கும், அக்கிருமியை நாம் உடம்பில் கொண்டிருந்தாலும், அந்நோய் வருவதில்லை. காரணம் அக்கிருமியால் நோயை முழுவீச்சில் உருவாக்குவதில் தொழிற்படும் பிறகாரணிகள், காட்டாக குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை, பலருக்கு அமையப்பெறாததே. கிருமியும் மற்ற புறக்காரணிகளும் பொருந்திவரும் சாத்தியக்கூறுகள் கூடிவரும்போது காசநோய் முழுவீச்சில் ஒருவருக்கு ஏற்படுகிறது. அதே சமயம் மற்ற புறக்காரணிகள் இருந்தாலும் கிருமி இல்லாவிட்டால் காசநோய் ஒருவருக்கு ஏற்படாது. வேறுவகையில் சொல்வதானால் கிருமியை இன்றியமையாத காரணியாகவும் (Necessary cause), மற்ற காரணிகளை போதுமான காரணிகளாகவும் (Sufficient cause) கொள்ளலாம்.

இவ்வாறே இன்றியமையாத காரணிகளும், போதுமான காரணிகளும் சேர்ந்தால் உண்டாகும் பல்வேறு சாத்தியக்கூறுகளினாலேயே எல்லா நோய்களுக்கும் உண்டாகின்றன என்பதே தற்போதைக்கு அறிவியலாளர்கள் வந்துள்ள முடிவு. இதை நோய்க்காரணிகளின் வலைப்பின்னல் (Web of disease causation) என்பர். இன்னும் பல நோய்களுக்கு, குறிப்பாக கிருமிகளில்லாமல் (Non-infectious) ஏற்படும் நோய்களுக்கு, இன்றியமையாத காரணிகள் என்னவாக இருக்கலாம் என்ற புரிதல் சரிவர இல்லை. அதுபோன்றே போதுமான காரணிகள் பல புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன.

தடுப்பூசிகளின் பயன்பாடும் மேற்கூறியவாறு சாத்தியக்கூறுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. திரள் நோய் எதிர்ப்பு சக்தி (Herd immunity) என்ற அடிப்படையில் தடுப்பூசிகள் பயன்படுகின்றன. அதாவது, ஒரு குமுகாயத்தில் உள்ள மக்கள் கூட்டத்தின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் (குறைந்த பட்சம் - 80%) மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவும் ஒரு குறிப்பிட்ட நோய்க்கெதிரான எதிர்ப்பு சக்தியைப் பெறும்போது அந்நோய் அச்சமூகத்தில் மேலும் பரவாமல் தடுக்கப்படுகிறது. ஆனால் அச்சமூகத்தில் மேலும் புதிய நபர்கள் சேரும்போது, அதாவது, புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் அல்லது வேறு இடங்களிலிருந்து வந்து குடிபெயர்ந்தோரின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டோரின் சதவிகிதம் குறையும்போது மீண்டும் அந்நோய் அச்சமூகத்தில் பெருமளவில் (Epidemic) ஏற்படுகிறது. இங்கு கவனிக்கப்படவேண்டியது என்னவெனில், அக்குறிப்பிட்ட நோய்க்குக் காரணமான கிருமி எப்போதும் அச்சமூகத்தில் இருந்துகொண்டேயிருக்கும் (Endemic); தடுப்பூசிகள் மூலம் நாம் செய்வதெல்லாம் அக்கிருமிகள் மேலும் பரவுவதற்குத் தேவையான தொடர் சங்கிலிகளில் ஒன்றான அந்நோய்க்கெதிரான எதிர்ப்பு சக்தியற்றோரின் சதவிகிதத்தைப் பெருமளவில் குறைப்பதேயாகும். இதனால் அந்நோய்க்கிருமி முழுதாக அழிந்துவிடுவதில்லை, மாறாக அக்கிருமி நோயைப் பெருமளவில் தோற்றுவிப்பதற்குத் தேவையான சங்கிலியின் கண்ணி அறுக்கப்பட்டுவிடுகின்றது. இவ்வாறுதான் சின்னம்மை ஒழிக்கப்பட்டது. இளம்பிள்ளைவாதத்திற்கெதிரான போரும் இவ்வடிப்படையிலேயே நடந்துவருகிறது. சின்னம்மைக் கிருமிக்கு மனித உடம்பைத் தவிர வேறு உறைவிடம் இல்லாததால் சின்னம்மை ஒழிப்பு சாத்தியப்பட்டது. ஆனால் கிருமிகளால் பரவும் மற்ற நோய்களை முற்றிலும் ஒழிப்பது சற்று கடினம்தான்.

இவ்வாறாக உயிரியல் எண்ணற்ற சாத்தியக்கூறுகளினால் (Infinite probability), பரிமாண இயங்கியலில் மனிதன் தோன்றியது உட்பட, கட்டமைக்கப்பட்டுள்ளது. நாம் நினைப்பது போலல்லாமல், அது மிகவும் நுட்பமும், சிக்கலும் உடையது. இவ்வகையில் அது குவாண்டம் இயற்பியலோடு ஒப்பிடத்தக்கது. குறிப்பாக ஒன்றைமட்டும் வலியுறுத்த வேண்டுமென்றால், அது, நோய்கள் நாம் நினைப்பது போல் ஒரு திட்டவட்டமான ஒழுங்கான வழிமுறையில் காரணிகள் வினைபுரிவதால் ஏற்படுவதில்லை; மாறாக முடிவற்ற காரணிகளின் தீர்மானிக்கமுடியாத (Random/Unpredictable) தொடர்ச்சியான வினைகளினால் விளையும் எண்ணற்ற சாத்தியக்கூறுகளில் ஒன்றாகவே ஏற்படுகின்றன. வேறுமுறையில் சொல்வதானால், நிச்சயிக்கமுடியாத ஒழுங்கற்ற இந்தத் தொடர்ச் சங்கிலியில் ஒரு ஒழுங்கமைவை உருவகித்துக்கொண்டு (Assuming a pattern in the unpredictable chaotic chain of events) நோய்களுக்கு நாம் மருந்துகள் கொடுக்கிறோம்; பல நேரங்களில் அம்மருந்துகள் வேலை செய்வது, குருவி உட்காரப் பனம்பழம் விழுவதைப் போன்ற, தற்செயல் நிகழ்வாகவுமிருக்கலாம். ஒரு நிகழ்வு காரண-காரிய விளைவால் ஏற்பட்டதா (அ) தற்செயலலாக நடந்ததா என்பதைக் கண்டறிய அந்நிகழ்வு காரண-காரிய உறவுகளைக் கண்டறியும் சில வரையறைகளைத் (AB Hill’s Causal criteria) திருப்திப்படுத்தவேண்டும்.

ஒரு காலகட்டத்தில் அறிவியல் எல்லா நிகழ்வுகளையும் ஒரு திட்டவட்டமான, தீர்மானிக்கமுடிந்த, காரண-காரிய வகைகளுக்குள் அடக்கிவிடலாம் எனக் கருதியது. ஆனால், குவாண்டம் இயற்பியல் இந்த நம்பிக்கையைக் கலைத்துப்போட்டது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற கூற்றுகளில் ஒன்று “கடவுள் பகடையாடமாட்டார்” (God does not play dice) என்பது. இது அவர் குவாண்டம் இயற்பியல் குறித்துச் சொன்னது. ஆனால் அவர் நம்பியதற்கு மாறாக குவாண்டம் இயற்பியல் அவரது வாழ்நாளிலேயே தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. குவாண்டம் இயற்பியலின் வரவிற்குப் பிறகு நம் எல்லா அறிவியல் துறைகளும், மருத்துவ அறிவியல் உட்பட, தீர்மானிக்க முடிந்த திட்டவட்டமான மாதிரிகளினால் (Deterministic models) ஆன அறிவுப்புலத்திலிருந்து, பல்வேறு சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் (Probabilistic models) இயங்கும் அறிவுப்புலத்தை வந்தடைந்துள்ளன. எப்படி பாரம்பரிய இயற்பியலின் (Classical physics) விதிகள் குவாண்டங்களின் தளத்தில் (நுண்ணிய அளவில் - micro level) செயலற்றுவிடுகின்றனவோ, அதுபோன்றே உயிரியலிலும் நுண்தளத்தில் நடக்கும் எல்லா செயல்களும் நிச்சயமற்ற தன்மையுடையவை (Uncertain). மேலோட்டமாகப் பார்ப்பதற்கு அவை நூல்பிடித்தாற்போன்று ஒரு ஒழுங்கான லயத்துடன் செயல்படுவதுபோல் தோன்றினாலும் அது நமது கற்பிதமே.

சுருக்கமாகச் சொன்னால் மற்ற அறிவியல் துறைகளைப் போன்றே உயிரியலிலும் ஆன்டிபயாட்டிக்குகள், தடுப்பூசிகள், மரபியல் தொகுப்புகள் எனப் பெரும் பாய்ச்சல்கள் நிகழ்த்தப்பட்டிருப்பினும், நோய்களை வெல்வதில் மனிதன் செல்லவேண்டிய தூரம் இன்னும் நிறையவுள்ளது. அதை என்றாவது நாம் அடைவோமா என்பதற்கு அறிவியலிடம் பதிலில்லை. ஆருடம் தான் கணிக்கவேண்டும்!!

(will continue)

திங்கள், 17 செப்டம்பர், 2007

ராமர் பாலமும், குமரிக் கண்டமும்...

ராமர் பால அரசியல் நாட்டையே அல்லோலகல்லோல படுத்திக் கொண்டிருக்கிறது. ராம சென்ம பூமி பிரச்சனையைக்கொண்டு வட இந்தியாவைக் கூறுபோட்ட பா. ச. க, ராமர் பால பிரச்சனையை வைத்து தென்னிந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும், ஆழக்காலூன்றவேண்டும் என்ற முனைப்பில் செயலாற்றிக்கொண்டிருக்கிறது. கோமாளி சுப்பிரமணிய சாமியும், சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட செயலலிலாதாவும் இதற்கு ஒத்து ஊதிக்கொண்டிருக்கிறார்கள்.

நாட்டிலுள்ள எந்த அரசியல் கட்சியும், எனக்குத் தெரிந்தவரை, சேது சமுத்திரத் திட்டத்தினால் ஏற்படப்போகும் சூழலியல் பாதிப்புகள் குறித்து கவனம் கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்படப்போகும் சுழலியல் பாதிப்புகள், இத்திட்டத்தினால் ஏற்படப்போகும் பொருளாதார ஆதாயங்களைவிட குறைவானதுதானா (பொருளாதார ஏற்றம் (Vs) சூழலியல் பாதிப்புகள் என்பதே கணக்கிட முடியாதுதான் என்றாலும்) என்ற ரீதியில் கூட தஙக்ளது கருத்துக்களை எடுத்துவைக்கவில்லை. முதலில் அ.இ.அ.தி.மு.க சூழலியல் காரணங்களுக்காக இத்திட்டதை எதிர்ப்பதாக நீலிக்கண்ணீர் வடித்தாலும, அதன் தலைமையின் பண்புகளை அறிந்தவர்களுக்கு அது ஒரு பகல் வேசம் என்பது தெரிந்தே இருந்தது. இப்போது அதிமுகவின் அப்பன் குதிருக்குள்ளிருந்து வெளிப்பட்டுவிட்டான்.

அதேநேரத்தில், ராமர் பாலம் என்றழைக்கப்படுவது ராமரால் கட்டப்பட்டதல்ல எனப் பகுத்தறிவுபேசும் தமிழ்த்தேசியவாதிகள் சிலர் குமரிக்கண்டம் என்றுவரும்போது மட்டும் தம் பகுத்தறிவுக்கண்ணை மூடிக்கொண்டுவிடுவர். இவ்விசயத்தில் இந்துத்துவவாதிகளுக்குச் சற்றும் சளைத்தவர்களல்ல நமது தமிழ் தேசியவாதிகள். எப்படி ராமர் பாலம் என்பது ஒரு புராணமோ, அது போன்றே குமரிக் கண்டம் என்பதும். இரண்டுமே அறிவியலால் நிராகரிக்கப்பட்ட கருத்தாக்கங்கள். புராணத்தை வரலாறாகத் திரித்து அதற்குப் போலி அறிவியல் முலாம் பூசி, மக்கள்தம் உணர்ச்சிகளோடு விளையாடுவதற்கு ஒரு கூட்டம் எப்போதும் தயாராகவே உள்ளது. இதில் இந்துத்துவா என்ன, தமிழ்த் தேசியம் என்ன - இரண்டும் அடிப்படைவாதம் என்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

சனி, 15 செப்டம்பர், 2007

அறிவியல் உண்மைகளும், வெகு மக்கள் உணர்ச்சிகளும்

ராமரோ அல்லது ராமாயணக் கதாபாத்திரங்களோ வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லையென இந்திய தொல்பொருள் துறையினர் உச்ச நீதிமன்றத்திற்கு முதலில் தாக்கல் செய்த அறிக்கைக்காக இரண்டு அறிவியலாளர்கள் இடைநீக்கம் செய்ய்ப்பட்டுள்ளர்கள். ராமாயணம் ஒரு புராணம். ஆனால், அது இந்திய மக்களின் உணர்ச்சி சம்பந்தப்பட ஒரு விசயம். இவ்விசயம் குறித்து அறிவியல் அறிக்கை அளிக்கும் பொழுது, ராமர் என்ற 'அவ்வளவு பெரிய ஆகிருதி' வாழ்ந்து மறைந்ததற்கான அறிவியல் ஆதாரங்கள் இல்லாதபட்சத்திலும், தொல்பொருள் துறையினர் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டிருக்கவேண்டும்.

ராமர் பாலம் எனச் சொல்லப்படும் அந்தப்பகுதி ராமரால் கட்டப்பட்டது அல்ல மாறாக அது இயற்கையாய் அமைந்த ஒரு அமைப்பு என்று என்று மட்டும் சொல்லி நிறுத்தியிருந்தால்கூட, இவ்வளவுதூரம் பிரச்சனையாகியிருக்காது. (இந்துத்துவவாதிகள் அதையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது வேறுவிசயம்). ஆனால் ராமரே வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லையெனக்கூறும்போது, பெரும்பான்மையான இந்துக்களுக்களின் உணர்வு மற்றும் சிறுபான்மை இந்துத்துவவாதிகளின் பிழைப்பின் அடிமடியிலேயே கைவைப்பதாகும். இதை அரசு தவிர்த்திருக்கலாம்.

இந்த அறிக்கை, அறிவியல் என்னும் உச்சாணிக்கொம்பிலிருப்பதாக நினைத்துக்கொன்டு, வெகு மக்கள் நம்பிக்கைகளிலிருந்து - அது தவறாகவேயிருந்தாலும், வெகுதூரம் சென்றுவிட்ட சில அறிவியலாளர்களின் முந்திரிக்கொட்டைத்தனத்தால் ஏற்பட விளைவு என்பதே என் எண்ணம். அறிவியல் உண்மைகளை வெளிப்படுத்தும்போது மிகுந்த பொறுப்புணர்ச்சி தேவை என்பதற்கு இந்நிகழ்வு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

இதைத்தான் சொந்தச் செலவில் அரசே தனக்கு சூனியம் வைத்துக்கொண்டது என்பதோ?! (சூனியம் வைப்பது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலுங்கூட)

புதன், 25 ஏப்ரல், 2007

சிசேரியன் பிரசவங்கள் - ஒரு பார்வை

நீண்ட நாட்களாக எழுத நினைத்து, சோம்பேறித்தனத்தினால் இதுவரை எழுதாமல் இருக்கும் விடயங்களில் இதுவும் ஒன்று. நேற்று CNN IBN தொலைக்காட்சியில் சிசேரியன் பிரசவங்கள் குறித்த ஒரு தொகுப்பு நிகழ்ச்சியைப் பார்த்ததால் தூண்டப்பட்டு இவ்விடுகையை இடுகிறேன்.

உலகம் முழுதும், குறிப்பாக வளரும் நாடுகளில், சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார நிறுவனம் எந்த ஒரு நாட்டிலும், எக்காரணத்தைக் கொண்டும், சிசேரியன் பிரசவங்கள் 15 விழுக்காட்டிற்குமேல் இருக்கக்கூடாது என்று சொல்கிறது. ஆயினும் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் இது உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடும் அளவைவிட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதற்கான முதன்மையான காரணியாக பலரும், குமுகவியலாளர்கள் முதல் பொதுமக்கள் வரை, கருதுவது மருத்துவர்களின் பணம் கொள்ளையடிக்கும் ஆசைதான் என்பது. இது பெரிதும் உண்மைதான் என்றாலும் மேலும் பல காரணிகளும் இவ்விசயத்தில் தொழிற்படுகின்றன.

பொதுவாக சிசேரியன் பிரசவங்கள் மகப்பேறு காலத்தில் தாய், சிசு ஆகிய இருவரின் மரணத்தைத் தவிர்ப்பதற்காகவே (Perinatal death) மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால் மிக அதிக சிசேரியன் பிரசவங்கள் நடைபெறும் நாடுகளில் இன்னமும் மகப்பேறு காலத் தாய், சிசு மரணங்கள் அதிகமாகவேயுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்துள்ள அளவிற்கு மகப்பேறு கால தாய், சிசு மரணங்கள் குறையவில்லை என்பதுதான் உண்மை. அப்படியானால் சிசேரியன் பிரசவங்கள் தேவையற்றமுறையில் செய்யப்படுகிறதா என்ற இயல்பான அய்யத்தை இப்புள்ளி விபரம் எழுப்புகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மருத்துவக் கல்லூரியின் பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் சென்னையின் தனியார் மருத்துவ மனைகளில், அரசு மருத்துவமனைகளைவிட மூன்று மடங்கு சிசேரியன் பிரசவங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவந்தது. இது மருத்துவர்களின் பணம் பண்ணும் ஆசை என்ற வாதத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக உள்ளது. அதேபோல் சென்னை சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷன் நடத்திய வேறு ஒரு ஆய்வில் சென்னை அண்ணாநகரில் உள்ள நடுத்தர, உயர் நடுத்தரக் குடும்பங்களில் சிசேரியன் பிரசவங்கள் பரவலாக உள்ளதாகத் தெரியவந்தது.

மேலும் சில ஆராய்ச்சிகள் இன்றைய நடுத்தரவர்க்கத் தாய்மார்கள் தாங்களாகவே முன்வந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்ற உண்மையையும் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. இதற்கு முதன்மையான காரணம் பிரசவ வலியின் வேதனையை அவர்களால் தாங்கமுடியாததுதான் என்றாலும், சில தாய்மார்கள் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தனது அந்தஸ்த்திற்கான ஒரு குறியீடாகக் கொள்வதாகச் சில ஆய்வுகள் சற்று திடுக்கிட வைக்கின்றன. (அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பெருமையாக சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்).

இன்னொரு முக்கியமான விசயம் ஜோசியம் என்ற மூடநம்பிக்கையினால் விளைவது. சில குடும்பங்கள் தங்கள் ஜோசியர்களிடம் ஆலோசனை கேட்டு சிசேரியன் மூலம் இன்ன நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லது என நினைத்து மகப்பேறு மருத்துவர்களிடம் சிசேரியன் பிரசவம்தான் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதும் நடைபெறுவதுமுண்டு.

இதுகுறித்து முழுமுற்றான அறிவியல் முறையிலமைந்த இடுகையொன்றை விரவில் எழுதலாமென்றிருக்கிறேன்.

செவ்வாய், 6 டிசம்பர், 2005

அறிவியலின் வெற்றி

அமெரிக்க நீதிமன்றமொன்று அமெரிக்கப் பள்ளிகளில் அறிவார்ந்த வடிவமைப்பு (Intelligent design) என்ற மத நம்பிக்கை அடிப்படையிலான கோட்பாட்டை, பரிணாமக் கோட்பாட்டிற்கு மாற்றாக பாடமாக வைப்பதைத் தடைசெய்துள்ளது. இது ஒரு முக்கியமான தீர்ப்பாகும்.

பரிணாமக் கோட்பாடு பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களும் பரிணாமத்தால் உருவானவையே என்பதற்கு நம் கண்முன்பு பல்வேறுவிதமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், அதனால் இன்னும் சில விளக்கமுடியாத பகுதிகள் உள்ளன. உதாரணமாகச் சடப்பொருள்களிலிருந்து முதல் உயிர் எவ்வாறு தோன்றியது என்பதை அதனால் இன்னும் தெளிவாக விளக்கமுடியவில்லை. அதாவது டார்வினின் கூற்றுபடி, தகுந்த சூழ்நிலைகள் உருவானபோது (A warm little pond ...) இவ்வுலகில் முதல் உயிரி தோன்றியிருக்கலாம் என நம்மால் யூகிக்கமுடிகிறதே ஒழிய, அறிவியலாளர்களால் இன்னும் சோதனைச்சாலையில் ஒரு உயிரை உருவாக்கிக் காண்பிக்கமுடியவில்லை. இதத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மத நம்பிக்கைவாதிகள், இவ்வுலகமும், அதிலுள்ள உயிர்களும், மனிதனால் அறியவேமுடியாத அதி அறிவுகொண்ட ஒருவரால் படைக்கப்பட்டது எனக்கூற ஆரம்பித்தனர். அதற்கு அறிவார்ந்த வடிவமைப்பு எனவும் பெயரிட்டனர். மேலும், அக்கோட்பாட்டை பரிணாமக் கோட்பாட்டிற்கு மாற்றாக பள்ளிகளில் போதிக்கவேண்டும் எனவும் வாதிட்டும் வந்தனர். (நம்மூர் வேதிக் மேத்தமேடிக்ஸ் மாதிரி) அமெரிக்க பென்சில்வேனிய மாகாணத்தில் தங்களால் நடத்தப்பட்டுவரும் ஒரு பள்ளியில் இதைப்புகுத்தவும் செய்தனர். அவர்களுக்கு இத்தீர்ப்பு ஒரு சாட்டையடி. இத்தீர்ப்பளித்த நீதிபதியின் கூற்று மிகவும் சிந்திக்கக்கூடியவகையில் அமைந்துள்ளது. அதாவது, பரிணாமம் பற்றிய அறிவியல் கோட்பாடு முழுமையடையவில்லை என்பதற்காக 'அறிவார்ந்த வடிவமைப்பை' அறிவியலுக்கு மாற்றாகக் கருதமுடியாது என்பதுதான் அவரது தீர்ப்பின் சாராம்சம். இது பற்றி மேலும் விபரங்கள் அறிய இங்கே சொடுக்கவும்.