பக்கங்கள்

திங்கள், 30 அக்டோபர், 2006

சென்னை மழை எனது அனுபவங்கள்

கடந்த சனியன்று இரவு பெய்த மழை, சென்றவருடம் அக்டோபர் 26ஆம் தேதி பெய்த மழையை நினைவூட்டியது. சனிக்கிழமை இரவு 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள் 110 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த ஒரு மணி நேரத்தில், இடி மின்னலுடன், காற்றும் சுழன்றடித்தது. எங்கள் வீட்டில் ஈரக்கசிவால் சுவிட்சுகளில் மின்சாரக்கசிவு இருந்ததால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருந்தது. மேலும் என் துணைவியாரும் பிரசவத்திற்காக அவரது தந்தை வீட்டிற்குச் சென்றிருப்பதால் இந்த நேரத்தில் எனக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதே என்று அச்சமாகவும் இருந்தது. நவம்பர் 1ஆம் தேதிதான், பிரசவம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக மகப்பேறு மருத்துவர் கூறியிருந்த போதிலும், அன்று காலையில்தான் பிரசவ வலி ஏற்படுவதற்கு முன்னர் ஏற்படும் பொதுவான குறிகுணங்கள் தனக்கு ஏற்பட்டதாகத் துணைவியார் கூறியிருந்தார். துணைவியார் வீடிருக்கும் வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகர் மழையால் சென்னையில் மோசமாகப் பாதிக்கப்படும் இடங்களில் ஒன்று என்பதால் கவலை சற்று அதிகமாகயிருந்தது. ஏனெனில் அங்கிருந்து நாங்கள் பார்க்கும் மருத்துவமனைக்குச் செல்வது என்பது அன்றைய நிலையில் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான சவால்களையொத்தது. நல்லவேளயாக அவ்விதம் ஏதும் நடக்கவில்லை.

நான் குடியிருக்கும் ஆழ்வார்ப்பேட்டை சீத்தாம்மாள் காலனிப் பகுதியிலோ இரண்டடி உயரத்திற்கும்மேல் மழைநீர் சூழ்ந்திருந்தது. பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டது. மழை நின்று 12 மணி நேரமாகியும் வெள்ள நீர் வடிந்தபாடில்லை. இத்தனைக்கும் இப்பகுதியில் சென்றமாதம் தான் வெள்ள நீர் வடிகால்களை நன்கு தூர்வாரியிருந்தனர். குறிப்பாக டி.டி.கே ரோடு, திருவள்ளுவர் சாலை, கவிஞர் பாரதிதாசன் சாலை, எல்டாம்ஸ் ரோடு ஆகிய நான்கு சாலைகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியிருந்தது. டி.டி.கே ரோடு ஒன்றுதான் இவற்றில் குறைவாகப் பாதிக்கப்பட்ட இடம். எல்டாம்ஸ் ரோட்டிலுள்ள கமல்ஹாசனின் அலுவலகத்திற்குள்ளும், தண்ணீர் புகாமலிருக்க அடுக்கப்பட்டிருந்த மணல்மூட்டைகளையும் மீறி, தண்ணீர் புகுந்து விட்டது. சீதாம்மாள் காலனிப்பகுதியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக. அனைத்துப் படங்களும் மழை நின்று பலமணி நேரம் கழித்து எடுக்கப்பட்டவை. சென்னையில் சென்ற வருடம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்ப்பதற்கு இங்கே சொடுக்கவும்.





வெள்ளி, 27 அக்டோபர், 2006

பெரியோர் என வியத்தலும் இலமே...

"பெரியோர் என வியத்தலும் இலமே, சிறியோர் என இகழ்தலும் இலமே" - என்ன அருமையான வரிகள். இந்த வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் அண்மையில் எனக்கொரு சம்பவம் நடந்தது. என் துறை சார்ந்த ஒரு சிறிய கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நான் ஒழுங்கு செய்யவேண்டியிருந்தது. எம் துறை சார்ந்த பிற துறைகளில் வல்லுநர்களான சிலரை அதற்கு அழைத்திருந்தோம். 10 நாட்கள் இடைவெளியில் நடத்தவேண்டியிருந்ததால் அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தோம். மேலும், தொலைபேசி வழியாகவும் கூட்டம் நடைபெறுவதாகயிருந்த நேரத்தை இரண்டு நாட்கள் முன்பே அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தோம். ஆனால், கூட்டத்திற்கு இருவரைத்தவிர மற்ற அனைவரும் வந்திருந்தனர். வராத இருவரும் சென்னையில் தத்தமது துறைகளில் பெரும் புகழுடன் விளங்குபவர்கள். அவர்களிருவரின் மேல் எனக்கு பயம் கலந்த மரியாதையுண்டு.
ஏன் வரவில்லையென அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது, தான் வரமுடியாது என்பதைத் தன்னுடய காரியதரிசி மூலம் எனக்குத் தெரியப்படுத்திவிட்டதாக ஒருவர் கதையளந்தார்; மற்றொருவரோ தன்னுடைய காரியதரிசி கூட்டம் நடைபெறுவதாகயிருந்த நேரத்தைத் தனக்குத் தெரியப்படுத்தவில்லை எனவும், நாங்கள் அனுப்பிய கடிதம் அவருக்கு மிகத் தாமதமாகத்தான் கிடைத்தது எனவும் கூறினார். அவரது காரியதரிசியிடம் கேட்டபோது, இது உண்மையில்லை எனத் தெரியவந்தது. இவ்விருவர் வராததற்கும் வேறு உண்மையான காரணம் இருந்திருக்கலாம்; ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்லாமல் அவ்வாறு பூசி மழுப்பியது எனக்கு மிகுந்த வருத்தத்தையளித்தது. இதில் இவர்களுக்கு தத்தமது துறைகளில் அறநெறியில் ஒழுகுபவர்கள் என்ற நற்பெயர்வேறு உண்டு. இந்நிகழ்ச்சி எனக்கு கணியன் பூங்குன்றனாரின் மேற்சொன்ன கவிதை வரிகளை ஞாபகப்படுத்திற்று.

புதன், 18 அக்டோபர், 2006

நான் புரட்சித்தலைவி ஜெயலலிதாவைச் சந்தித்தபோது!...

நேற்று காலை அ.இ.அ.தி.மு.க. வின் 35 ஆம் ஆண்டு தொடக்கவிழாவைத் தொடங்கி வைக்க அதிமுகவின் பொதுச்செயலாளர் செல்வி. ஜெயலலிதா அக்கட்சி தலைமை அலுவலகம் வந்திருந்தார். நான் வேலை பார்க்கும் அலுவலகமும் அதே சாலையில் அமைந்திருப்பதால், சில சமயங்களில் அவரை எதேச்சையாக பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும். அவர் அங்கு வரும்போதெல்லாம் அவரது அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையின் பகுதி வண்ண வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவு பெறும். ரத்தத்தின் ரத்தங்கள் அப்பகுதி முழுவதும் நிறைந்(த்)திருப்பார்கள். தாரை தப்பட்டை, பேண்டு வாத்தியங்கள் முழங்கும். அப்பகுதியே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். போலீஸ் கெடுபிடிகள் வேறு அதிகமாக இருக்கும். பல நேரஙகளில் வண்டியை ஓரம் கட்டிவிட்டு, நடந்து அலுவலகம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எங்கள் அலுவலகக் காவலாளி முன்னெச்சரிக்கையாக பிரதான வாயில் கதவைச் சாத்திவிடுவார். இல்லையெனில், ரத்தத்தின் ரத்தங்கள் தங்களது வாகனங்களை எங்கள் அலுவலக வளாகத்திற்குள் வந்து நிறுத்திவிடுவர். 'அம்மாவை' வரவேற்க அவரது நற்குணங்களையும்!? வீரதீர பராக்கிரமங்களையும்?! பட்டியலிட்டு போஸ்டர்கள் ஒட்டப்படும். போட்டி போட்டுக்கொண்டு அம்மாவின் அணுக்கத்தொண்டர்கள் அவருக்கு பட்டம் சூட்டியிருப்பார்கள். தாயே, தமிழே, தவமே என்றும், கலைத்தாய் என்றும், காவிரித்தாய் என்றும், சமூகநீதி காத்த வீராங்கனை என்றும் பலவகைத்தான அம்மாவின் புகழ் பாடும் நாமகரணங்கள் அவர் வரும் வழியில், அவரின் கடைக்கண் பார்வையில்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். சும்மாவா, அம்மாவிற்கு பெயர் பிடித்துவிட்டது என்றால், அப்பெயர் சூட்டியவரை அழைத்து பெரும் பதவிகள் கொடுப்பாரே. இப்படித்தான் அவரை 'பெண் பெரியார்' எனப் புகழும் (பெரியாரை இகழும்) போஸ்டரை ஒட்டியவரை அழைத்து போனமுறை மந்திரி பதவி கொடுத்ததாக தமிழின் புலனாய்வு?! வார இதழொன்றில் படித்த ஞாபகம். அம்மாவின் கார் தெருமுனையில் நுழைந்ததுமே, வாழ்க கோஷங்கள் விண்ணைப்பிளக்கும். எனக்குத்தெரிந்து தமிழகத்தில் வேறு எந்தத் தலைவருக்கும் தனது கட்சி அலுவலகம் வரும்போது இந்தளவு வரவேற்புக் கொடுக்கப்படுவதில்லை. அம்மா, அத்தி பூத்தாற்போலத்தானே கட்சியலுவலகத்திற்கு வருகிறார், அதனால்தானோ என்னவோ? நேற்றும் இதுபோன்ற அலங்(கோல)காரக் காட்சிகள் நடந்தேறின. இக்காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு 12 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியொன்று ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.

1994 ஆம் வருடம் என்று நினைக்கிறேன், நான் அப்போது பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் நான்காமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த அம்மா, பாளையங்கோட்டையில் அனைத்து மகளிர் காவல் நிலையமொன்றை திறப்பதிற்காக வருகை புரிந்திருந்தார். திருநெல்வேலியே அல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. என் அறைத் தோழர்களில் ஒருவர், அப்போதைய பாளையங்கோட்டை எம் எல் ஏவாக இருந்த தர்மலிங்கம் என்பவரைப் பார்த்து (இப்போது அவர் எங்கே எனத் தெரிந்தவர் சொல்லுங்கள்) அம்மாவிடம் (அப்போது மிகப் பிரபலமாக இருந்த நாமகரணம் – புரட்(டு)சித்தலைவி) சித்தமருத்துவ முன்னேற்றத்திற்காக ஓரிரு கோரிக்கைகள் வைக்கவேண்டும் எனக் கேட்டிருந்தார். அதற்குத்தான் வழியேற்படுத்திக் கொடுப்பததாக உறுதியாகச் சொன்ன அந்த எம். எல். ஏ, உங்கள் கல்லூரித்தோழர்களை அழைத்து வாருங்கள், சித்த மருத்துவ பட்டதாரி மாணவர் அணியொன்று அமைத்து புரட்சித் தலைவிக்கு வரவேற்புக் கொடுங்கள், பு. த. மனம் மகிழ்ந்து உங்கள் கோரிக்கையை ஏற்று உறுதியாக நடவடிக்கையெடுப்பார் எனச் சொன்னார். நாங்களும், எங்கள் துறையைப் பீடித்திருக்கும் அவலங்களை முதலமைச்சர் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு செல்ல ஒரு சந்தர்ப்பம் கிட்டுகிறதேயென்றெண்ணி, சரியென்று சொன்னோம். அதன்படி எங்களில் ஒரு 20 பேரைத் தேர்ந்தெடுத்து பு.தலைவிக்கு வரவேற்பு கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. எம்.எல்.ஏ செலவில் (ஊரார் வரிப்பணத்தில்) எங்களுக்கெல்லாம் ஒரு சிவப்புக் கலர்த் தொப்பியும் (ஆளவந்தானில் கமல் அணிந்திருப்பாரே அதுபோன்று), வெள்ளை canvas சூவும் வழங்கப்பட்டது. அதைப்பெறுவதற்காக, நாங்கள் எம் எல் ஏ தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குச் சென்றோம். அன்று தான் முதன்முதலில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட சூட் அறையைப் பார்த்தேன். எங்களுக்கு வழங்குவதற்காக இருந்த தொப்பியையும், காலணியையும் பெறுவதற்கு எம் எல் ஏவின் தொண்டரடிப் பொடிகளும் (குண்டாந்தடிகளும்?) போட்டிபோட்டதால் அந்த இடமே ஒரே அதகளமாக இருந்தது. இந்த லட்சணத்தில் எனது நண்பர்கள் மூவர், அவர்களுக்கும் சேர்த்து காலணியையும், தொப்பியையும் எடுத்துவருமாறு கேட்டிருந்தனர். எப்படியோ 3 சோடி காலணிகள் என் கைக்கு வந்து சேர்ந்தன. ஆனால் அவற்றில் ஒரு சோடி காலணி மட்டும் ஒரே காலுக்குறியதாக அமைந்துவிட்டது. பின்னர் நாங்கனைவரும் வெள்ளைச் சீருடை, வெள்ளைக் காலணி, சிவப்புத்தொப்பியும் அணிந்து, புரட்(டு)சித் தலவியை வரவேற்க, அவர் திறந்து வைக்க இருக்கிற மகளிர் காவல் நிலைய வாசலில் காத்து நின்றோம். முதலில் நாங்களும், பின்னர் சீருடையணிந்த அதிமுகவினரும், அதன்பின் மற்ற ரத்தத்தின் ரத்தங்களும் அணிவகுத்து நின்றோம். (நாங்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்களாயிற்றே!) இதற்கிடையில் என் நண்பன் மாணவியர் அணியொன்றையும் தாயார் செய்து அவர்களை எங்கள் கல்லூரி வாசலில் நிற்கவைத்திருந்தான். அவ்வழியேதான் பு. த வரவேண்டும்.

நண்பகல் 12 மணியிருக்குமென நினைக்கிறேன், டாடா சியரா காரில் புரட்டுத்தலைவி, சாரி புரட்சித்தலைவி வந்தார். கீ கொடுக்கப்பட்ட பொம்மைகள் போல் ரரக்கள் விண்ணதிர வாழ்க கோஷங்கள் எழுப்பினர். பு.தலைவி காரை விட்டிறங்கினார் (உடன் உடன்பிறவா தோழி வந்தாரா என ஞாபகமில்லை). அவரது பார்வை எங்கள் மீது படும்முன்பு உயர்போலீஸ் அதிகாரிகள், அவரை திறப்புவிழாவிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். நாங்கள் நினைத்தது நடக்கவில்லை. ஏமாற்றத்துடன் எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாப்பாட்டையாவது சாப்பிடலாம் என அவ்விடத்திற்குச் சென்றோம். அங்கு அதற்கு முன்பே அதிமுக மகளிரணியினர் ஆக்கிரமித்திருந்தனர். அவர்களோடு போட்டி போட நம்மால் முடியாது என நினத்து, நாங்கள் வழக்கமாகச் சாப்பிடும் மெஸ்ஸைப் பார்த்து நடையைக்கட்டினோம். ஆனால் இதெல்லாம் நடப்பதற்கு முன்பு, எங்கள் தோழிகள் பு.தலைவியிடம் நாங்கள் சொல்லநினைத்திருந்த கோரிக்கைகளை முறையிட்டிருந்தனர். எப்படியெனில், சாலையோரம் அணிவகுத்து நின்ற மாணவியரைப் பார்த்ததும், தனது காரை சிறிது நிறுத்தச் சொல்லி அவர்களை புரட்சித்தலைவி அழைத்திருக்கிறார். பு.தலைவியிடம் பேசியதில் என் தோழி ஒருவர் 'பெறுதற்கரிய பேறு' பெற்றதாக எண்ணி பெருமிதப்பட்டுக் கொண்டிருந்தார். எங்களுக்கோ, நம்முயற்சி வீண் போகவில்லை என்ற மகிழ்ச்சி. ஆனால் அதற்குப்பிறகு எங்கள் கோரிக்கை என்னவானது என்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ.
இந்நிகழ்ச்சியப் பற்றி நினைத்தால் முன்பெல்லாம் அவமானமாக இருக்கும். ஆனால் இப்போது சிரிப்புத்தான் வருகிறது. அதுசரி, நான் எங்கே 'அம்மாவை' சந்தித்தேன் என்று கேட்கிறீர்களா. அப்படியெல்லாம் தலைப்பு வைத்தால்தானே எல்லோரும் படிப்பீர்கள், ஹி! ஹி! அதுதான்.

வியாழன், 5 அக்டோபர், 2006

திருவாளர் கமல்ஹாசன் குறித்து எனது ஆதங்கம்

சர்ச்சைக்குரியவராக இருப்பது ஒன்றும் திருவாளர் கமல்ஹாசனுக்குப் புதிதல்ல. மூடத்தனங்களும், கட்டுப்பெட்டித்தனங்களும் நிறைந்த ஒரு சமூகத்தில், தன்னுடைய கருத்துக்களாலும், செயல்பாடுகளாலும் நல்ல சலனங்களை ஏற்படுத்தமுனையும் கலைஞனை சராசரி வெகுசன மனோபாவம் சர்ச்சைக்குரியவராகவே கருதும். ஆயினும், 'வேட்டையாடு விளையாடு' ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை அவ்வகைத்தானதல்ல. அப்படத்தில் கமல் ஏற்றிருக்கும் ராகவன் எனும் பாத்திரம் ஒரு காட்சியில் பேசும் வசனம், ஒருபாலின ஈர்ப்புடையோரை, இச்சமூகம் அவர்களைப்பற்றி ஏற்கனவே கொண்டிருக்கும் தவறான (அப்படித்தான் அறிவியல் சொல்கிறது) கருத்தாங்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாகவே அமைக்கப்பட்டுள்ளது. அக்காட்சியில் வரும் வசனம் ராகவன் எனும் பாத்திரம் பேசும் வசனமாக எடுத்துக்கொள்ளப்படாமல் கமல்ஹாசனின் கருத்தாகவே எடுத்துக்கொள்ளப்படும் வாய்ப்பேயதிகம். அக்குறிப்பிட்ட வசனத்திற்கு கிடைக்கும் கைதட்டலே இதற்குச் சான்று. ராகவன் பாத்திரத்தை வேறொரு நடிகர் ஏற்று நடித்திருந்தால் அவ்வசனம் இத்தகைய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்திருக்காது. ஏனெனில், மற்றைய நடிகர்களைப் போல் கமல் சமூகத்தை ஒற்றைபரிமாணக்கோணத்தில் பார்ப்பவரல்ல. அவரது திரைப்படங்களில், குறிப்பாக அவரது சொந்தத் தாயாரிப்பில் வெளிவருபவற்றில் இதனை அவதானிக்கலாம். சமூக ஓர்மையுள்ள கமல் எவ்வாறு இவ்வசனம் பேசி நடிக்க சம்மதித்தார் என்பது எனக்கு ஆச்சிரியமாகவேயுள்ளது. முன்பொருமுறை செவ்வியொன்றில், திரைப்படப் படப்பிடிப்புக் காட்சியொன்றில் நடிகைகளக் குறித்து அவதூறாகப் பேசிய பார்வையாளர் ஒருவரை தான் அடித்துவிட்டதால், தனக்கு நீண்ட நாட்கள் தொடர்ந்த மன உளைச்சலைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அதுபோன்றே, சில ஆண்டுகளுக்கு முன்புவரை தொடர்ந்த தென்மாவட்ட சாதிக்கலவரங்களுக்கு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தனது 'தேவர் மகன்' திரைப்படமும் ஒரு காரணம் என்பதையுணர்ந்து, தான் இனிமேல் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய கமல், வே-வி படத்தில் அப்படியொரு வசனத்தை பேசி நடித்திருப்பது மிகுந்த துரதிர்ஷ்டவசமானது. திருவாளர் கமல்ஹாசனை எனது ஆதர்சங்களில் ஒருவராக நான் கொண்டிருந்தாலும், அவரது இச்செயல் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையேயளிக்கிறது.