பக்கங்கள்

அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 ஜனவரி, 2012

கூடங்குளம்: அவதூறும், உண்மையும்

பரப்புரையும் மனித மனங்களும் (Propaganda and the Public Mind) என்றொரு நோம் சோம்ஸ்கியின் புத்தகம் உண்டு. உலகெங்கும் அரசாங்கங்கள் எவ்வாறு தமது மக்களின் மீதான அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றன எனபதைக் குறித்து இப்புத்தகம் பேசும். உண்மையில் பாராளுமன்ற ஜனநாயகம் என்பதே ஊடகங்களைத் தமது பிடியில் வைத்துக் கொண்டு மக்களை மூளைச் சலவை செய்வதின் மூலம் தமது அதிகார, லாப நோக்கங்களுக்கு ஏற்றவகையில் அவர்களின் சிந்த்னையைக் கட்டமைப்பது என்பதே நோம் சோம்ஸ்கியின் கருதுகோள். நமது நாட்டில் தற்போது நடந்துவரும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டஙகளை நடுவணரசு எவ்வகையில் எதிர்கொள்கிறது என்பதைக் கவனித்தாலே சோம்ஸ்கியின் கருத்திலுள்ள உண்மை புலப்படும்.

இவ்வகையில் கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்களியக்கம் மேல் தொடர்ச்சியாக அரசினால் கட்டமைக்கப்பட்டு ஊடகங்கள் மூலமாக நடத்தப்படும் பரப்புரை கவனிக்கப்படவேண்டியது. அண்மையில் தினமலர் மூலம் நடத்தப்பட்ட (நடத்தப்படுகின்ற) இவ்வியகத்திற்கெதிரான தாக்குதலுக்கு நண்பர் சிறில் அலெக்ஸ் தமிழ் பேப்பர் இதழில் பதில் அளித்துள்ளார். "அணு உலை எதிர்ப்பாளார்களுக்கு வெளிநாட்டு பணம் வந்தது அம்பலம்” என்ற தலைப்பிட்டு தினமலர் எழுதியுள்ள கட்டுரை அரசால் இட்டுக்கட்டப்பட்ட கற்பனை என்பதை சிறில் தனக்கு நன்கு தெரிந்த நேரடித் தகவல்கள் மூலம் விளக்கியுள்ளார். பொதுவாக நம் சூழலில் அதீத உணர்ச்சி வசப்பட்டு அக்கட்டுரையை வெளியிட்ட இதழை வாய்க்கு வந்தபடி அர்ச்சித்து பலரும் எழுதுவதுதான் வாடிக்கை. இம்மாதிரியான தகவல்களை அரசாஙகம் வேண்டுமென்றே கட்டமைக்கும்போது அதற்கு உணர்ச்சி வசப்பட்டு எதிர்வினையாற்றாமல் உண்மையைத் தெளிவாகவும், உரத்தும் கூறுவது மிகுந்த அவசியமாகும். அவ்வகையில் சிறிலின் இக்கட்டுரை தனித்து நிற்பதும், பாராட்டப்பட வேண்டியதுமாகும். சிறில் அலெக்ஸிற்கு நன்றி.


சிறில் அலெக்ஸ் கட்டுரை: தினமலரும் இடிந்தகரையும் – விலைபேசப்படும் மக்கள் போராட்டம்

தினமலர் கட்டுரை: அணு உலை எதிர்ப்பாளார்களுக்கு வெளிநாட்டு பணம் வந்தது அம்பலம்

திங்கள், 17 செப்டம்பர், 2007

ராமர் பாலமும், குமரிக் கண்டமும்...

ராமர் பால அரசியல் நாட்டையே அல்லோலகல்லோல படுத்திக் கொண்டிருக்கிறது. ராம சென்ம பூமி பிரச்சனையைக்கொண்டு வட இந்தியாவைக் கூறுபோட்ட பா. ச. க, ராமர் பால பிரச்சனையை வைத்து தென்னிந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும், ஆழக்காலூன்றவேண்டும் என்ற முனைப்பில் செயலாற்றிக்கொண்டிருக்கிறது. கோமாளி சுப்பிரமணிய சாமியும், சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட செயலலிலாதாவும் இதற்கு ஒத்து ஊதிக்கொண்டிருக்கிறார்கள்.

நாட்டிலுள்ள எந்த அரசியல் கட்சியும், எனக்குத் தெரிந்தவரை, சேது சமுத்திரத் திட்டத்தினால் ஏற்படப்போகும் சூழலியல் பாதிப்புகள் குறித்து கவனம் கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்படப்போகும் சுழலியல் பாதிப்புகள், இத்திட்டத்தினால் ஏற்படப்போகும் பொருளாதார ஆதாயங்களைவிட குறைவானதுதானா (பொருளாதார ஏற்றம் (Vs) சூழலியல் பாதிப்புகள் என்பதே கணக்கிட முடியாதுதான் என்றாலும்) என்ற ரீதியில் கூட தஙக்ளது கருத்துக்களை எடுத்துவைக்கவில்லை. முதலில் அ.இ.அ.தி.மு.க சூழலியல் காரணங்களுக்காக இத்திட்டதை எதிர்ப்பதாக நீலிக்கண்ணீர் வடித்தாலும, அதன் தலைமையின் பண்புகளை அறிந்தவர்களுக்கு அது ஒரு பகல் வேசம் என்பது தெரிந்தே இருந்தது. இப்போது அதிமுகவின் அப்பன் குதிருக்குள்ளிருந்து வெளிப்பட்டுவிட்டான்.

அதேநேரத்தில், ராமர் பாலம் என்றழைக்கப்படுவது ராமரால் கட்டப்பட்டதல்ல எனப் பகுத்தறிவுபேசும் தமிழ்த்தேசியவாதிகள் சிலர் குமரிக்கண்டம் என்றுவரும்போது மட்டும் தம் பகுத்தறிவுக்கண்ணை மூடிக்கொண்டுவிடுவர். இவ்விசயத்தில் இந்துத்துவவாதிகளுக்குச் சற்றும் சளைத்தவர்களல்ல நமது தமிழ் தேசியவாதிகள். எப்படி ராமர் பாலம் என்பது ஒரு புராணமோ, அது போன்றே குமரிக் கண்டம் என்பதும். இரண்டுமே அறிவியலால் நிராகரிக்கப்பட்ட கருத்தாக்கங்கள். புராணத்தை வரலாறாகத் திரித்து அதற்குப் போலி அறிவியல் முலாம் பூசி, மக்கள்தம் உணர்ச்சிகளோடு விளையாடுவதற்கு ஒரு கூட்டம் எப்போதும் தயாராகவே உள்ளது. இதில் இந்துத்துவா என்ன, தமிழ்த் தேசியம் என்ன - இரண்டும் அடிப்படைவாதம் என்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

வெள்ளி, 4 மே, 2007

கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமையை ஏற்பவர் யார்?

கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமையை ஏற்பவர் யார் என்ற கேள்வி இயல்பாகவே எல்லோர் மனதிலும் எழுவதுதான்; காரணம் நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனால் சன் டிவி என்ற பூதம் மூலம் திமுக தற்போது செய்துவரும் அரசியல் கண்டிக்கப்படவேண்டியது. ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவின் தலைமையை ஏற்பவர் யார் என்று சன் தொலைக்காட்சி உலகப்புகழ்பெற்ற?! ஏ.சி. நீல்சன் நிறுவனம் மூலம் ஒரு கருத்துக்கணிப்பை (திணிப்பை) நடத்தி முடிவை வெளியிடப்போகிறதாம். இந்தக் கேள்விக்கான அவசியம் என்ன இப்போது?; சன் டிவி என்ற ஊடக மிருகத்தைக் கொண்டு திமுக வேண்டுமென்றே குட்டயைக் குழப்பிக் குளிர்காய நினைப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

சன் தொலைக்காட்சி ஒரு தனி நிறுவனம் அதற்கும் திமுகவிற்கும் தொடர்பு கிடையாது என யாரும் வாதிட வந்துவிட வேண்டாம். சன் தொலைக்காட்சியால் திமுகவிற்கும், திமுக வினால் சன் தொலைக்காட்சிக்கும் கண்டிப்பாக ஆதாயம் இருக்கிறது. சன் தொலைக்காட்சியின் வளர்ச்சி பின்னொரு காலத்தில் நம் ஜனநாயகத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக விளங்குவதற்குவதற்கான அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது. ஏனெனில் நாம் (பெரும்பாலும் அறம் குறைந்த) ஊடகங்களால் கட்டமைக்கப்படும் அவல உலகில் வாழுகிறோம்; அரசியலும் மதமும் போல் அரசியலுடன் இணைந்த ஊடகம் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்விசயத்தில் (தற்போதைக்கு) ஜெயா தொலைகாட்சி குறித்துப் பயப்பட வேண்டியதில்லை; அவர்கள் சன் தொலைக்காட்சியை விடவும் மோசமான கருத்துத் திணிப்புகளைச் செய்தாலும், அவர்களின் வீச்சு ஒரு சிறு கும்பலைத்தாண்டி வெளியே செல்லப்போவதில்லை என்பதால்.

சன் தொலைக்காட்சியோ அல்லது அதனால், தேவையில்லாமல், தலையில் வைத்துக் கொண்டாடப்படும் ஏசி நீல்சன் அமைப்போ, (ஏ.சி. நீல்சன் நிறுவனம், உலகப்புகழ்பெற்றது என்பதே சன் தொலைக்காட்சியால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு புனைவு!) ஒருபோதும் தன் கருத்துக் கணிப்புகள் குறித்த நெறிமுறைகளை (Methodology) வெளிப்படையாகச் சொன்னதில்லை. பொதுவாகப் பெரும்பாலான ஊடகங்களும் பூடகமாகவே இக்கருத்துக் கணிப்புகளைச்/திரிப்புகளைச் செய்தாலும், சன் தொலைக்காட்சியின் வீச்சு காரணமாக அதன் பாதிப்பு அதிகம் இருக்கும். இவ்வாறு வளார்ந்துவரும், முன்பு நினைத்துப் பார்த்திராத, பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கு அரசு விரைவில் சட்டமியற்ற வேண்டும். இவ்வாறு ஒரு நிறுவனம் மட்டுமே, குறிப்பாக அரசியல் பிண்ணனி கொண்ட, அச்சு, மின்னணு ஊடகத் துறைகளில் ஏகபோக உரிமை கொண்டாட அனுமதிக்காதபடி அச்சட்டம் பார்த்துக்கொள்ளவேண்டும். அதற்காக கலாநிதி மாறனின் திறமையை நான் குறைசொல்லவில்லை. ஆயினும் அரசாங்கத்திடம் எப்போதும் ஒரு கடிவாளம் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.

குழலியின் பின்னூட்டத்திற்குப் பிறகான குறிப்பு: இது சற்றுக் கடினம்தான்; மத்திய மாநில உள்ளாட்சி என்ற மூன்றடுக்குகளிலும் அதிகாரம் செலுத்தும் கட்சியின் ஆதிக்கம் இச்சட்டமியற்றுவதில் சில தடங்கல்களை ஏற்படுத்தலாம். ஆனால் முயன்றால் முடியாததில்லை. இதுகுறித்து அரசியல்வாதிகளிடமோ, சட்ட அறிஞர்களிடமோ ஏதேனும் கருத்துக்கள் இருக்கிறதா என்பதே தெரியவில்லை என்பதுதான் கவலையளிக்கக்கூடிய விடயம்.

பின்னிணைப்பு: தினகரன் நாளிதழை சன் தொ.கா வாங்கியபோது திமுக + சன் தொ.கா வின் ஊடக ஆதிக்கம் குறித்து காலச்சுவடு எழுதிய தலையங்கம். அதை ஆதரித்து எம். கே. குமாரும், மறுத்து ராம்கியும் 2005 ல் தங்களது வலைப்பதிவில் எழுதியவற்றை மேற்கண்ட இணைப்பில் சொடுக்கிப் பார்க்கவும். எம்.கே. குமாரின் பின்னூட்டத்தில் நடந்துள்ள விவாதம் கவனிக்கப்பட வேண்டியது. இவ்விசயத்தில் எம். கே. குமாரின் கருத்துக்கள் என் கருத்துக்களுடன் அப்படியே பொருந்திப்போகிறது.

புதன், 25 ஏப்ரல், 2007

இட ஒதுக்கீடு - அரசியல் சுயநலங்களும், குமுகாய நலன்களும்

இவ்விடயம் குறித்து தமிழ் வலையுலகில் ஏற்கனவே பலரும் எழுதிவிட்டார்கள். குழலி இத்தகைய இடுகைகளின் தொகுப்பு ஒன்றை ஒரு தனி இடுகையாகவே இட்டிருக்கிறார். ஜெகத்தும் தன் பொல்லாச் சிறகை வழமைபோல் அருமையான இடுகையொன்றின் மூலம், இவ்விசயத்தில், விரித்துள்ளார்.

நேற்று CNN IBN தொலைக்காட்சியில் இந்தியப் பிரதமர் தனது கூட்டணிக்கட்சிகளிடமிருந்து இடஒதுக்கீடு விசயத்தில் மிகுந்த நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். தமிழக முதல்வரும் நேற்று பலகோடிப்பேரின் வாழ்க்கையை ஒரிருவர் தீர்மானிப்பது சரியானதல்ல என்ற ரீதியில் இடைக்கால்த் தடை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக நாசுக்கான கருத்தைக் கூறியுள்ளார். பேராயக்கட்சியும், பிற கட்சிகளும் பிற்படுத்தப்பட்டவர்களின் ஓட்டுகளைப்பெற இடஓதுக்கீடு விசயத்தில் சுயநலமாகச் செயல்படுவதாக பலர் வாதிடலாம். எனினும், தற்போதைக்கு, இவ்விசயத்தில் அரசியல்வாதிகளின் சுயநலங்களும், குமுகாயத்தின் பொதுநலனில் முடிவது வரவேற்கத்தக்கதுதானே!?

செவ்வாய், 17 ஏப்ரல், 2007

இந்திராவின் வாரிசுகளும் ஏகபோக அரசுரிமையும்

நடந்துகொண்டிருக்கும் உ.பி. சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திருவாளர். ராகுல்காந்தி திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். என்னவோ அவர்கள் குடும்பத்தினர்தான் இந்தியாவை ஆளத் தகுதியானவர்கள் என்ற தொனியில் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. என்ன செய்ய!?, இந்திய அரசியல் சனநாயகத்தன்மை பெறுவதற்கு இன்னும் நீண்டதூரம் பயணிக்கவேண்டியதிருக்கிறது.

மேலதிக விபரங்களுக்கு மேற்குறிப்பிட்ட சுட்டியைச் சொடுக்கவும். அவர் பேசியதின் முதன்மையான சில வரிகள் இங்கே.

"I belong to the family which has never moved backwards, which has never gone back on its words. You know that when any member of my family had decided to do anything, he does it. Be it the freedom struggle, the division of Pakistan or taking India to the 21st century,''

திங்கள், 5 மார்ச், 2007

தமிழக அரசியல் - ராஜீவ்காந்தி படுகொலையை முன்வைத்து

தமிழக அரசியல், 1972 ற்குப் பிறகு, தனிமனித வெறுப்பினை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு அரசியல் தலைவரின் மீதான தனிப்பட்ட காழ்ப்பினை தனது அரசியல் ஆதாயத்திற்கு வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டவர் மறைந்த எம். ஜி. ராமச்சந்திரன். இது அவரின் திரைப்படங்களில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட கதாநாயகன் Vs. வில்லன் என்ற இரட்டை நிலையின் அரசியல் தளத்திலான விரிவாக்கம். திரைப்படங்களில் எம். ஜி. ஆருக்கு வெற்றியைக் கொடுத்த இக்கருத்தாக்கம், சரியாகச் சொன்னால் புனைவு, அரசியல் சூழலிலும் அவருக்குக் கைகொடுத்ததுதான் தமிழக அரசியலில் ஏற்பட்ட ஆகக் கொடுமையான ஒரு நிகழ்வு.

இப்புனைவை தனது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆரை விடவும் பன்மடங்கு அதிகமாக தனது (அரசியல்) ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்பவர் ஜெயலலிதா என்றால் அது மிகையல்ல. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியை முன்வைத்து ஜெ செய்துவரும் அரசியல் ஆகக்கழிவானது. கடந்த சடமன்றத் தேர்தலின்போது 'கலைஞரின் கைமாறு' என்ற அபத்தமான கற்பனையைக்கொண்டு ஜெயா டிவி ஒளிபரப்பிய நிகழ்ச்சியைவிடவும், ஆகக் கேவலமான நிகழ்ச்சியொன்றை நேற்றிரவு 10 மணிக்கு ஜெயா டிவி ஒளிபரப்பியது.

'சென்னை சங்கமம்' என்ற நிகழ்ச்சியை நடத்தியதில் கனிமொழியும், தமிழ் மையம்- ஜெகத் கஸ்பரும் எவ்வாறு அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினர் என்ற வகையில் ஆரம்பித்த அந்திகழ்ச்சி ராஜீவ்காந்தி படுகொலையில் வந்து முடிந்தது. மொட்டைத் தலைக்கும், முழங்காலிற்கும் முடிச்சுப் போடுவது என்பது இதுதான் போலும். கனிமொழியும், ஜெகத் கஸ்பரும் முன்னின்று நடத்திய சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு அரசு இயந்திரம் ஏதேனும் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் (?) அதுகுறித்தான உண்மையான அக்கறையோடு ஜெயா டிவி இந்நிகழ்ச்சியை வழங்கியிருந்தால் ஒரு ஆக்கபூர்வமான பணியை அது செய்திருக்கும். அதுவல்ல ஜெயா டிவியின் (ஜெயலலிதாவின்) நோக்கம், ராஜீவ்காந்தி கொலையை மீண்டும் கிளறி அரசியல் குளிர்காய நினைப்பதே அவரின் உண்மையான நோக்கம். கருணாநிதியை ஒரெ கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதாகக் (கனிமொழியை முன்னிறுத்துவது மற்றும் ராஜீவ்காந்தியைக் கொன்றவர்களுக்குக் கைமாறு!?) கூறிக்கொள்ளும் ஜெ, இத்தகைய நிகழ்ச்சிகளின் மூலம் சாதிக்க நினைப்பதுதான் அபத்தத்தின் உச்சகட்டம்.

தமிழக வரலாற்றில் களப்பிரரின் ஆட்சிக்காலம் இருண்டகாலம் என்ற ஒரு கருதுகோள் உண்டு; அது உண்மையோ இல்லையோ, ஆனால் நிகழ்கால தமிழக வரலாற்றில் ஜெயலலிதா ஒரு கரும்புள்ளி என்றால் அது மிகையல்ல.

சனி, 16 டிசம்பர், 2006

சிறுபான்மையினருக்கு சிறப்பு சலுகைகள் தேவையா?

நீண்ட நாட்களாக எழுத நினைத்திருந்த விசயம், இன்று என் வீட்டருகில் நடந்த நிகழ்வால் உடனே எழுதும்படி தூண்டப்பட்டேன். இன்று காலை ஏழு மணியிலிருந்து என் வீட்டருகில் தீடிரென்று ஒரே சரணம் ஐயப்பா கோஷம். ஏதோ பெரிய இன்னிசை மழைக் கச்சேரியில் (ஸ்பீக்கர்களை அலற வைத்து மக்களை குலை நடுங்க வைக்கும் ஒரு செயலை இன்னிசை மழை என அழைப்பது ஒரு நகை முரண்) வைப்பதுபோல் பெரிய ஸ்பீக்கர்களை வைத்து எங்கள் தெருவையே அல்லோலகல்லோலப் படுத்திக்கொண்டிருந்தார்கள். வீட்டில் ஒருவருக்கொருவர் மிகவும் சத்தமாகப் பேசிக்கொள்ளவேண்டியிருந்தது, அப்போதுதான் ஒருவர் பேசுவது மற்றவருக்குப் புரியும். நியூஸ் கேட்கமுடியவில்லை. தொலைபேசியில் பேச முடியவில்லை. சின்ன வயதில் எனக்கும் ஸ்பீக்கர்கள், அப்பொதெல்லாம் குழாய் ஸ்பீக்கர்கள், அலருவது பிடிக்கும். பின்னர் அதுவே காட்டுமிராண்டித்தனமாகப் புரிய ஆரம்பித்தது.

விசயம் இதுதான், எங்கள் தெருவில் சிலர் சபரிமலைக்குச் செல்கிறார்கள், அதற்குத்தான் இந்த அலப்பரை. என்னதான் இவ்வாறு ஸ்பீக்கர்கள் அலருவது பலருக்கும் இடைஞ்சலாக இருந்தாலும், யாரும் இதை நிறுத்தச் சொல்லவில்லை. இத்தனைக்கும் அருகிலேயே ஒரு பள்ளிவாசல் உள்ளது, முஸ்லீம்களின் வீடுகளும் உள்ளன. அவர்களும் இதைப் பொருட்படுத்தியது மாதிரித் தெரியவில்லை. அப்படியே பொருட்படுத்தியிருந்தாலும் அதைத் துணிச்சலாக வெளிப்படுத்தும் தைரியம் அவர்களில் யாருக்கும் (ஏன், எனக்கே கூட இல்லை) இருந்திருக்காது. ஏனெனில் அப்பகுதியில் அவர்கள் மதச் சிறுபான்மையினர்தானே. சற்று கூர்ந்து கவனித்தோமானால் பெரும்பான்மையினரால், சிறுபான்மையினரின் உரிமைகளும், உணர்வுகளும் புரிந்துகொள்ளப்படாமலோ, புரிந்து கொண்டாலும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாமலோ பல நிகழ்ச்சிகள் இதுமாதிரி தினந்தோறும் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

உதாரணத்திற்குச் சில;

1. நீங்கள் பஸ்ஸில் பயணம் சென்று கொண்டிருக்கிறீர்கள், தீடிரென்று ஒரு கூட்டம் பஸ்ஸை வழிமறித்து தாங்கள் மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுக்க நேர்ந்திருப்பதாகவும் அதற்கு நன்கொடை அளிக்குமாறும் உண்டியல் குலுக்குகிறது.
2. அநேகமாக எல்லா அரசு அலுவலகங்களிலும் ஒரு பிள்ளையார் கோவிலிருக்கும், விநாயக சதுர்த்தியை பிரம்மாண்டமாகக் கொண்டாடுவார்கள்.
3. அதேபோன்று, ஆயுத பூஜையை அலுவலகத்திலேயே கொண்டாடுவார்கள்.

மேற்கண்ட மாதிரி, ஒரு முஸ்லீமோ, கிருத்துவரோ தாங்கள் ஹஜ் செல்வதற்கு நன்கொடை வேண்டியோ, அல்லது புனித மேரிக்கு நேர்த்திக்கடன் செலுத்தவோ என பஸ்ஸை மறிக்கமுடியுமா? அரசு அலுவலகங்களில் ஒரு மசூதியோ, சர்ச்சோ கட்டமுடியுமா? ரம்ஜானையோ, கிறிஸ்துமஸ்ஸையோ கொண்டாடுகிறேன் பேர்வழி என்று ஸ்பீக்கர்களை அலறவைக்க முடியுமா?

முடியாது, ஏனெனில், பெரும்பான்மை மதத்தினரான இந்துக்கள் விரும்ப மாட்டார்கள். அங்கொன்றும், இங்கொன்றுமாக சில நிகழ்ச்சிகள் நடக்க அனுமதிக்கப்பட்டிருக்கலாம். நாங்கள் கூட கல்லூரியில் எங்களுடன் படித்த ஒரு முஸ்லீம் நண்பருக்காக ரம்ஜான் நோன்புக் கஞ்சி ஊற்ற நன்கொடை வசூலித்திருக்கிறோம். ஆனால், பொதுவாக இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தில் இவை அனுமதிக்கப்படுவதில்லை. அதேவேளையில் முஸ்லீம்களோ, கிருத்துவர்களோ பெரும்பான்மையாக உள்ள ஊரில், சிறுபான்மையினரான இந்துக்களின் உரிமைகளும், உணர்வுகளும் புரிந்துகொள்ளப்படாமலிருக்கலாம். இது மனிதனின் இயற்கைகுணம். இதை மனதில் கொண்டே, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் வகையில் அரசியல் சட்டம் இயற்றப்பட்டிருக்க வேண்டும். எனவே சிறுபான்மையினருக்குச் சிறப்புச் சலுகைகள் தேவைதான் என்பது என் எண்ணம். இதுபற்றிய பிறரது கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.

குறிப்பு: மத அடிப்படைவாத கருத்துக்கள் மட்டுறுத்தப்படும்.

ஞாயிறு, 18 டிசம்பர், 2005

தமிழகத்தை அலைக்கழிக்கும் ஊடகப் புயல்கள்

வங்கக் கடலில் தொடர்ச்சியாக ஏற்படும் புயல் சின்னங்களால், தமிழகம் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வரலாறு காணாத மழை வெள்ளத்தால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இயற்கையின் இந்தப் பேரழிவை, எப்படியாவது தாங்கள் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு ஒரு வாய்ப்பாக கருதி, தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளால் நடத்தப்படும் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள், மழை வெள்ளத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான காரணங்கள் பற்றி வெளியிடும் செய்திகள் சகிக்க முடியாத அளவிற்கு உள்ளன. இன்று அதிகாலை சென்னை எம்ஜியார் நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதத்தால் 42 உயிர்கள் பலியான சம்பவத்தை இவ்விரு ஊடகங்களும், அதன் பின்னணியிலுள்ள தலைவர்களும் பயன்படுத்திக்கொள்ளும் முறை அவைகளின் அசிங்கமான செயல்பாட்டிற்கு உச்சகட்ட உதாரணம்.






சென்ற திமுக ஆட்சியின் இறுதிக்காலத்தில், தாம் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற ஒரே காரண்த்திற்காகவே ஆரம்பிக்கப்பட்டது ஜெயா தொலைக்காட்சி. அதுபோன்றே தினபூமி என்ற நாளிதழும் அதிமுகவிற்கு ஆதரவாக அப்போது தொடர்ந்து செய்திகளை தயாரித்து வழங்கியது. அதுபோன்றதொரு வேலையையே, இப்போது சன் தொலைக்காட்சியும், தமிழ் முரசு மாலையிதழும் செய்துவருகின்றன. மத்திய அரசு வழங்கும் வெள்ள நிவாரண உதவித்தொகையை, அதிமுக அரசு வரப்போகும் அடுத்த தேர்தலுக்கு ஓட்டுப் பெறுவதற்கு ஆதாயமாகப் பயன்படுத்திக்கொள்கிறது என கருணாநிதி சன் தொலைக்காட்சியில் சொல்கிறார். ஆனால் ஜெயலலிதாவோ, இன்றைய அசம்பாவிதம் யாரோ சில விஷமிகளின் பொய்ப்பிரச்சாரத்தினால் தூண்டப்பட்டது என ஜெயா தொலைக்காட்சியில் கூறுகிறார். அதிகாரப் போட்டியிலுள்ளவர்கள் இவ்வாறு ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு உலகம் தழுவியது என்றாலும், தமிழகத்தில் இன்று நடப்பது கடைந்தெடுத்த கேவலம். இவ்விரண்டு கட்சிகளும், அவற்றின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களும் செய்யும் சீரழிவிற்கு என்றுதான் சாவுமணி அடிக்கப்படுமோ?