பக்கங்கள்

ஊடகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊடகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 ஜனவரி, 2012

கூடங்குளம்: அவதூறும், உண்மையும்

பரப்புரையும் மனித மனங்களும் (Propaganda and the Public Mind) என்றொரு நோம் சோம்ஸ்கியின் புத்தகம் உண்டு. உலகெங்கும் அரசாங்கங்கள் எவ்வாறு தமது மக்களின் மீதான அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றன எனபதைக் குறித்து இப்புத்தகம் பேசும். உண்மையில் பாராளுமன்ற ஜனநாயகம் என்பதே ஊடகங்களைத் தமது பிடியில் வைத்துக் கொண்டு மக்களை மூளைச் சலவை செய்வதின் மூலம் தமது அதிகார, லாப நோக்கங்களுக்கு ஏற்றவகையில் அவர்களின் சிந்த்னையைக் கட்டமைப்பது என்பதே நோம் சோம்ஸ்கியின் கருதுகோள். நமது நாட்டில் தற்போது நடந்துவரும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டஙகளை நடுவணரசு எவ்வகையில் எதிர்கொள்கிறது என்பதைக் கவனித்தாலே சோம்ஸ்கியின் கருத்திலுள்ள உண்மை புலப்படும்.

இவ்வகையில் கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்களியக்கம் மேல் தொடர்ச்சியாக அரசினால் கட்டமைக்கப்பட்டு ஊடகங்கள் மூலமாக நடத்தப்படும் பரப்புரை கவனிக்கப்படவேண்டியது. அண்மையில் தினமலர் மூலம் நடத்தப்பட்ட (நடத்தப்படுகின்ற) இவ்வியகத்திற்கெதிரான தாக்குதலுக்கு நண்பர் சிறில் அலெக்ஸ் தமிழ் பேப்பர் இதழில் பதில் அளித்துள்ளார். "அணு உலை எதிர்ப்பாளார்களுக்கு வெளிநாட்டு பணம் வந்தது அம்பலம்” என்ற தலைப்பிட்டு தினமலர் எழுதியுள்ள கட்டுரை அரசால் இட்டுக்கட்டப்பட்ட கற்பனை என்பதை சிறில் தனக்கு நன்கு தெரிந்த நேரடித் தகவல்கள் மூலம் விளக்கியுள்ளார். பொதுவாக நம் சூழலில் அதீத உணர்ச்சி வசப்பட்டு அக்கட்டுரையை வெளியிட்ட இதழை வாய்க்கு வந்தபடி அர்ச்சித்து பலரும் எழுதுவதுதான் வாடிக்கை. இம்மாதிரியான தகவல்களை அரசாஙகம் வேண்டுமென்றே கட்டமைக்கும்போது அதற்கு உணர்ச்சி வசப்பட்டு எதிர்வினையாற்றாமல் உண்மையைத் தெளிவாகவும், உரத்தும் கூறுவது மிகுந்த அவசியமாகும். அவ்வகையில் சிறிலின் இக்கட்டுரை தனித்து நிற்பதும், பாராட்டப்பட வேண்டியதுமாகும். சிறில் அலெக்ஸிற்கு நன்றி.


சிறில் அலெக்ஸ் கட்டுரை: தினமலரும் இடிந்தகரையும் – விலைபேசப்படும் மக்கள் போராட்டம்

தினமலர் கட்டுரை: அணு உலை எதிர்ப்பாளார்களுக்கு வெளிநாட்டு பணம் வந்தது அம்பலம்

வெள்ளி, 4 மே, 2007

கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமையை ஏற்பவர் யார்?

கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமையை ஏற்பவர் யார் என்ற கேள்வி இயல்பாகவே எல்லோர் மனதிலும் எழுவதுதான்; காரணம் நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனால் சன் டிவி என்ற பூதம் மூலம் திமுக தற்போது செய்துவரும் அரசியல் கண்டிக்கப்படவேண்டியது. ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவின் தலைமையை ஏற்பவர் யார் என்று சன் தொலைக்காட்சி உலகப்புகழ்பெற்ற?! ஏ.சி. நீல்சன் நிறுவனம் மூலம் ஒரு கருத்துக்கணிப்பை (திணிப்பை) நடத்தி முடிவை வெளியிடப்போகிறதாம். இந்தக் கேள்விக்கான அவசியம் என்ன இப்போது?; சன் டிவி என்ற ஊடக மிருகத்தைக் கொண்டு திமுக வேண்டுமென்றே குட்டயைக் குழப்பிக் குளிர்காய நினைப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

சன் தொலைக்காட்சி ஒரு தனி நிறுவனம் அதற்கும் திமுகவிற்கும் தொடர்பு கிடையாது என யாரும் வாதிட வந்துவிட வேண்டாம். சன் தொலைக்காட்சியால் திமுகவிற்கும், திமுக வினால் சன் தொலைக்காட்சிக்கும் கண்டிப்பாக ஆதாயம் இருக்கிறது. சன் தொலைக்காட்சியின் வளர்ச்சி பின்னொரு காலத்தில் நம் ஜனநாயகத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக விளங்குவதற்குவதற்கான அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது. ஏனெனில் நாம் (பெரும்பாலும் அறம் குறைந்த) ஊடகங்களால் கட்டமைக்கப்படும் அவல உலகில் வாழுகிறோம்; அரசியலும் மதமும் போல் அரசியலுடன் இணைந்த ஊடகம் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்விசயத்தில் (தற்போதைக்கு) ஜெயா தொலைகாட்சி குறித்துப் பயப்பட வேண்டியதில்லை; அவர்கள் சன் தொலைக்காட்சியை விடவும் மோசமான கருத்துத் திணிப்புகளைச் செய்தாலும், அவர்களின் வீச்சு ஒரு சிறு கும்பலைத்தாண்டி வெளியே செல்லப்போவதில்லை என்பதால்.

சன் தொலைக்காட்சியோ அல்லது அதனால், தேவையில்லாமல், தலையில் வைத்துக் கொண்டாடப்படும் ஏசி நீல்சன் அமைப்போ, (ஏ.சி. நீல்சன் நிறுவனம், உலகப்புகழ்பெற்றது என்பதே சன் தொலைக்காட்சியால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு புனைவு!) ஒருபோதும் தன் கருத்துக் கணிப்புகள் குறித்த நெறிமுறைகளை (Methodology) வெளிப்படையாகச் சொன்னதில்லை. பொதுவாகப் பெரும்பாலான ஊடகங்களும் பூடகமாகவே இக்கருத்துக் கணிப்புகளைச்/திரிப்புகளைச் செய்தாலும், சன் தொலைக்காட்சியின் வீச்சு காரணமாக அதன் பாதிப்பு அதிகம் இருக்கும். இவ்வாறு வளார்ந்துவரும், முன்பு நினைத்துப் பார்த்திராத, பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கு அரசு விரைவில் சட்டமியற்ற வேண்டும். இவ்வாறு ஒரு நிறுவனம் மட்டுமே, குறிப்பாக அரசியல் பிண்ணனி கொண்ட, அச்சு, மின்னணு ஊடகத் துறைகளில் ஏகபோக உரிமை கொண்டாட அனுமதிக்காதபடி அச்சட்டம் பார்த்துக்கொள்ளவேண்டும். அதற்காக கலாநிதி மாறனின் திறமையை நான் குறைசொல்லவில்லை. ஆயினும் அரசாங்கத்திடம் எப்போதும் ஒரு கடிவாளம் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.

குழலியின் பின்னூட்டத்திற்குப் பிறகான குறிப்பு: இது சற்றுக் கடினம்தான்; மத்திய மாநில உள்ளாட்சி என்ற மூன்றடுக்குகளிலும் அதிகாரம் செலுத்தும் கட்சியின் ஆதிக்கம் இச்சட்டமியற்றுவதில் சில தடங்கல்களை ஏற்படுத்தலாம். ஆனால் முயன்றால் முடியாததில்லை. இதுகுறித்து அரசியல்வாதிகளிடமோ, சட்ட அறிஞர்களிடமோ ஏதேனும் கருத்துக்கள் இருக்கிறதா என்பதே தெரியவில்லை என்பதுதான் கவலையளிக்கக்கூடிய விடயம்.

பின்னிணைப்பு: தினகரன் நாளிதழை சன் தொ.கா வாங்கியபோது திமுக + சன் தொ.கா வின் ஊடக ஆதிக்கம் குறித்து காலச்சுவடு எழுதிய தலையங்கம். அதை ஆதரித்து எம். கே. குமாரும், மறுத்து ராம்கியும் 2005 ல் தங்களது வலைப்பதிவில் எழுதியவற்றை மேற்கண்ட இணைப்பில் சொடுக்கிப் பார்க்கவும். எம்.கே. குமாரின் பின்னூட்டத்தில் நடந்துள்ள விவாதம் கவனிக்கப்பட வேண்டியது. இவ்விசயத்தில் எம். கே. குமாரின் கருத்துக்கள் என் கருத்துக்களுடன் அப்படியே பொருந்திப்போகிறது.

திங்கள், 5 மார்ச், 2007

தமிழக அரசியல் - ராஜீவ்காந்தி படுகொலையை முன்வைத்து

தமிழக அரசியல், 1972 ற்குப் பிறகு, தனிமனித வெறுப்பினை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு அரசியல் தலைவரின் மீதான தனிப்பட்ட காழ்ப்பினை தனது அரசியல் ஆதாயத்திற்கு வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டவர் மறைந்த எம். ஜி. ராமச்சந்திரன். இது அவரின் திரைப்படங்களில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட கதாநாயகன் Vs. வில்லன் என்ற இரட்டை நிலையின் அரசியல் தளத்திலான விரிவாக்கம். திரைப்படங்களில் எம். ஜி. ஆருக்கு வெற்றியைக் கொடுத்த இக்கருத்தாக்கம், சரியாகச் சொன்னால் புனைவு, அரசியல் சூழலிலும் அவருக்குக் கைகொடுத்ததுதான் தமிழக அரசியலில் ஏற்பட்ட ஆகக் கொடுமையான ஒரு நிகழ்வு.

இப்புனைவை தனது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆரை விடவும் பன்மடங்கு அதிகமாக தனது (அரசியல்) ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்பவர் ஜெயலலிதா என்றால் அது மிகையல்ல. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியை முன்வைத்து ஜெ செய்துவரும் அரசியல் ஆகக்கழிவானது. கடந்த சடமன்றத் தேர்தலின்போது 'கலைஞரின் கைமாறு' என்ற அபத்தமான கற்பனையைக்கொண்டு ஜெயா டிவி ஒளிபரப்பிய நிகழ்ச்சியைவிடவும், ஆகக் கேவலமான நிகழ்ச்சியொன்றை நேற்றிரவு 10 மணிக்கு ஜெயா டிவி ஒளிபரப்பியது.

'சென்னை சங்கமம்' என்ற நிகழ்ச்சியை நடத்தியதில் கனிமொழியும், தமிழ் மையம்- ஜெகத் கஸ்பரும் எவ்வாறு அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினர் என்ற வகையில் ஆரம்பித்த அந்திகழ்ச்சி ராஜீவ்காந்தி படுகொலையில் வந்து முடிந்தது. மொட்டைத் தலைக்கும், முழங்காலிற்கும் முடிச்சுப் போடுவது என்பது இதுதான் போலும். கனிமொழியும், ஜெகத் கஸ்பரும் முன்னின்று நடத்திய சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு அரசு இயந்திரம் ஏதேனும் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் (?) அதுகுறித்தான உண்மையான அக்கறையோடு ஜெயா டிவி இந்நிகழ்ச்சியை வழங்கியிருந்தால் ஒரு ஆக்கபூர்வமான பணியை அது செய்திருக்கும். அதுவல்ல ஜெயா டிவியின் (ஜெயலலிதாவின்) நோக்கம், ராஜீவ்காந்தி கொலையை மீண்டும் கிளறி அரசியல் குளிர்காய நினைப்பதே அவரின் உண்மையான நோக்கம். கருணாநிதியை ஒரெ கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதாகக் (கனிமொழியை முன்னிறுத்துவது மற்றும் ராஜீவ்காந்தியைக் கொன்றவர்களுக்குக் கைமாறு!?) கூறிக்கொள்ளும் ஜெ, இத்தகைய நிகழ்ச்சிகளின் மூலம் சாதிக்க நினைப்பதுதான் அபத்தத்தின் உச்சகட்டம்.

தமிழக வரலாற்றில் களப்பிரரின் ஆட்சிக்காலம் இருண்டகாலம் என்ற ஒரு கருதுகோள் உண்டு; அது உண்மையோ இல்லையோ, ஆனால் நிகழ்கால தமிழக வரலாற்றில் ஜெயலலிதா ஒரு கரும்புள்ளி என்றால் அது மிகையல்ல.

புதன், 6 டிசம்பர், 2006

சன் டிவியின் தங்கவேட்டை

சன் தொலைகாட்சியில் சனி, ஞாயிறு இரவுகளில் ஒளிபரப்பப்படும் தங்கவேட்டை நிகழ்ச்சியை அவ்வப்போது பார்ப்பதுண்டு. ஜெயா டிவியில் குஷ்பு நடத்தும் ஜாக்பாட் நிகழ்ச்சிக்கு பதிலடியாக ராதிகாவின் ராடான் நிறுவனத்தால் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை, முதலில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். பின்னர் இடையில் நடிகை ஊர்வசி தொகுத்து வழங்கினார். ஊர்வசியைப் பார்ப்பதற்கே மிகவும் பாவமாக இருந்தது. சுரத்தே இல்லாமல் அவர் நிகழ்ச்சியை நடத்தியவிதம் நன்றாக இல்லை. முன்பு, ராஜ் டிவியில் அவரே பல வேடங்களில் தோன்றி நடத்திய நிகழ்ச்சி ஒன்றை பார்த்திருக்கிறேன். அப்படியிருந்த அவரா இப்படி! எனும் அளவிற்கு ஊர்வசி நிகழ்ச்சியை நடத்தியவிதம் இருந்தது.

பின் சிறிது காலத்திற்குள்ளேயே ஊர்வசி மாற்றப்பட்டு நடிகை கனிகா (பைவ் ஸ்டார்) அமர்த்தப்பட்டார். கனிகாவின் வரவிற்குப் பிறகு தங்கவேட்டை புதுப்பொலிவு பெற்றுள்ளது. என்னைப் பொறுத்தவரை ஒரு தொழில்முறை தொகுப்பாளினியைவிட கனிகா நிகழ்ச்சியை சிறப்பாகவே நடத்துகிறார். ரம்யா, குஷ்புவைப்போல் தேவையில்லாமல் கத்திப்பேசாமல் அதேசமயம், மற்ற பெரும்பாலான (ஆண், பெண்) தொழில்முறை தொகுப்பாளர்களைப் போலல்லாது தேவையற்ற உடல் அசைவுகளை விடுத்து, மிகுந்த யதார்த்தத்துடனும், உயிர்ப்புடனும் நிகழ்ச்சியை நடத்துகிறார். எனக்கு இத்தைகைய நிகழ்ச்சிகளில் பொதுவாக விருப்பம் இல்லாவிடினும், கனிகா நடத்தும் அழகிற்காக இந்நிகழ்ச்சியை சிலமுறைகள் முழுவதும் பார்த்திருக்கிறேன். அவரது தமிழும், சிறு குழந்தையைப்போல் அனைவருடனும் பேசும் பாங்கும் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. மேலும், அவர் பேசும்போது அவரது அழகு இன்னும் அதிகமாகப் பரிமளிக்கிறது.