பக்கங்கள்

புதன், 22 ஆகஸ்ட், 2007

திநகர் துணிக்கடைகள்


இன்று சென்னை தினம் கொண்டாடப்படுகின்றது. சென்னை மீதான எனது காதல் குறித்து விரிவான இடுகையிட எனக்கு இப்போது அவகாசமில்லையாதலால் நான் கடந்த ஞாயிறன்று திநகரில் எடுத்த சில புகைப்படங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். மேலும் 2 வருடங்களுக்கு முன்பு சென்னையில் வழக்கத்திற்கு மாறாக பெய்த மழையின் விளைவுகள் குறித்த எனது புகைப்படங்களைப் பார்க்க இப்பதிவின் வலப்புறமுள்ள ஃபிலிக்கர் (Flickr) படங்களை அழுத்தவும்.














வியாழன், 5 ஜூலை, 2007

அம்பத்தூர் தொழிற்பேட்டை - இன்று

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுதொழில் முனைவோருக்கான தொழிற்பேட்டையான அம்பத்தூர் தொழிற்பேட்டையின் இன்றைய நிலையை நான் எடுத்த கீழ்க்கண்ட புகைப்படங்கள் சொல்லும். சென்னையின் இரண்டாவது தகவல் தொழில்நுட்ப காரிடார் என அழைக்கப்படும் அளவிற்கு (சென்னையின் GST சாலையும், மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் போட்டியாளர்கள்) மிகப்பெரிய கட்டடங்கள் கணினி மென்பொருள் நிறுவனங்களுக்காகக் கட்டப்பட்டு வருகின்றன.













மேலே கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டடத்தின் வரைபடம் கீழேயுள்ளது. இதை இண்டியா லேண்ட் புராப்பர்ட்டீஸ் என்ற நிறுவனம் கட்டிக்கொண்டிருக்கிறது. வரைபடமும் அவர்களது இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

வியாழன், 28 ஜூன், 2007

சென்னையில் சூல் கொண்ட மேகங்கள்

சென்னை மாநகரத்தில் தற்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. புகைப்படங்கள் பார்க்கவும்















புகைப்படங்கள் என்னுடைய அலுவலகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. (மயிலை சிட்டி சென்டர் அருகே)


வெள்ளி, 22 ஜூன், 2007

அப்துல் கலாமும், ரஜினிகாந்தும்

அறிவு, திறமை ஆகியவைகளைவிட வேறு சில தன்மைகளால் பலரும் பிரபலமடைந்துவிடுகிறார்கள். அத்தன்மைகளில் முக்கியமான ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ள பொதுப்புத்தி சார்ந்து ஒழுகுதல். புனிதம் என்று புனையப்பட்டு சடங்குகளாக இறுகிப் போய்விட்ட பொதுப்புத்தியை தானே வளர்த்துக்கொண்ட தன் தனித்தன்மையாலும், அனுபவத்தாலும் மீறுபவர்களை நம் குமுகாயம் என்றுமே மதிப்பதில்லை. இந்திய குமுகாயத்தின் பொதுப்புத்தியில் எளிமை, சிக்கனம், பிரம்மச்சரியம், ஆன்மீக நாட்டம் போன்ற சில விசயங்கள் புனிதங்களாகக் கட்டமைக்கப்பட்டவை.

எனவே இவைகளைக் கைக்கொள்வதாக நம்பப்படும் கலாமும், ரஜினியும் பிரபலமாகயிருப்பதில் வியப்பேதுமில்லை. பொதுவாக நம் குமுகாயம் இன்னமும் வளர் இளம்பருவ (Adolescent mentality) நிலையைத் தாண்டி சிந்திப்பதேயில்லை.

கலாம் ஒரு அறிவியலாளரா என்றால் இல்லை என்றே நான் சொல்வேன். சரியாகச் சொன்னால் அவர் ஒரு தொழிற்நுட்பவியலாளர். அவர் அறிவியலில் எந்த கருதுகோளையும் (Hypothesis) முன்வைக்ககவில்லை; எதையும் புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை. ஏற்கனவே இருப்பதையே போலச் செய்தார். ஆனால் அவரை ஏதோ இந்திய அறிவியல் வரலாற்றில் வராதுவந்த மாமணியைப் போல் நம் ஊடகங்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றன. அதற்கு அவரது தனிப்பட்ட குணநலன்களும், அவரை தனது சுயநலத்திற்காக அப்போது பயன்படுத்திக்கொண்ட பாரதிய ஜனதாவின் அரசியலும் முக்கியமான காரணம். ஆனால் உண்மையான அறிவியலாளரான பேரண்டவியலாளர் (Cosmologist) ஜெயந்த் நார்லிகர் அவர்களை எத்தனை பேருக்குத் தெரியும்?

கலாமின் கனவுகள் திரைப்பட இயக்குனர் சங்கரின் கனவுலக (Fantacy) சினிமாவைப் போன்றவை. அவைகள் வளர் இளம்பருவ நிலையினருக்கான குதுகூலத்தைத் தருமேயன்றி நடைமுறைச் சாத்தியமற்றவை (காட்டாக - நதி நீரிணைப்பு).


இதே கருத்துக்கள் ரஜினிக்கும் பொருந்தும். ஒரே வித்தியாசம் கலாம், ரஜினியோடு ஒப்பிடும்போது, சமீபத்தில்தான் புகழடைந்ததால் அவர் மீது ரஜினி அளவிற்கு எதிர்மறை விமரிசனங்களில்லை. அறிவுமுதிர்ச்சியடையாத, சரியாகச் சொன்னால், அரசியல், அறிவியல், கலை போன்ற சகல துறைகளிலும் விழிப்புணர்ச்சியற்ற ஊடகங்களும், பெருவாரியான மக்களும் கொண்ட நம் குமுகாயத்தில் இதெல்லாம் சகஜமம்தானெனினும், இத்தகைய மனிதர்கள் உதிர்க்கும் மேலோட்டமான வார்த்தைகள் அதிக கவனம் பெறுவது சற்று கவலையளிக்கிறது.

வியாழன், 7 ஜூன், 2007

தென்பாண்டிச் சீமையிலே...

எனக்கு மிகவும் பிடித்த பாடல். நாயகன் படத்தில் இடம்பெறும் இப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாதது. கடந்த 20 வருடங்களாக, இசை ஞான சூனியமான, என்னைக் கட்டிப்போடும் பாடல் இது என்றால் அது மிகையல்ல. இப்போது என் மகன் பிறந்தபின் இன்னும் அதிகமாக எனக்குப் பிடித்த பாடலாகிவிட்டது. ஏழு மாதமாகும் என் மகனை தாலாட்டி தூங்கவைக்க முயற்சிக்க நான் பாடும் பாடல் இதுதான்.


இன்று ஓசை தளத்திலிருந்து இப்பாடலை எனது கணினிக்கு இறக்கிக் கேட்டுக்கொண்டே இவ்விடுகையை இடுகிறேன். இப்பாடலின் எல்லா அம்சங்களுமே (வரிகள், இசை, குரல், படத்தோடு இயல்பாகப் பொருந்துவது) அத்துணை சிறப்பாக உள்ளன. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானல் கமலின் குரல். மூன்று முறை மூன்று விதமான முறைகளில் இப்பாடல் வருகிறது. முதலில் இளையராசாவின் கிராமத்து தாலாட்டு வடிவத்தில் பின்னணி இசையில்லாமல்; பின்னர் கமலின் குரலில் இரண்டுமுறை, பின்னணி இசையுடன். கமலின் குரலிலுள்ள அந்த ஏற்ற இறக்கங்கள் எத்தனைமுறை கேட்டாலும் சலிப்புத் தட்டாது. கமலுக்குப் பின்னும் சாகா வரம் பெற்ற பாடலாக தென்பாண்டிச் சீமையிலே திகழும் என்பது நிச்சயம். இது குறித்து முன்பு நான் ‘ராயல்’ ராமின் பதிவில் இட்ட பின்னூட்டம்.