பக்கங்கள்

செவ்வாய், 14 அக்டோபர், 2008

அறிவியலும் சித்த மருத்துவமும் - 2

அறிவியலும் சித்த மருத்துவமும் - 1

மருத்துவம் - அறிவியலா?! கலையா?!

உண்மையில் மருத்துவம் அறிவியலா அல்லது கலையா என்பது இன்றும் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்படும் விடயம். வேறு எந்தத் துறையிலும் இந்தளவு சர்ச்சைகளுக்கு இடமில்லை. உயிரியலின் சிக்கலான அமைப்புதான் (Complexity) இந்த சர்ச்சைகளுக்குக் காரணம். இதே காரணத்தால்தான் நவீன மருத்துவமான ஆங்கில மருத்துவத்திற்கிணையாக மரபு மருத்துவ முறைகளும் இன்னும் பயன்பாட்டிலுள்ளன என்றால் அது மிகையாகாது. இதைப் பின்னர் பார்க்கலாம். பொதுவாக மருத்துவம் கற்பதை அறிவியலாகவும், பயன்படுத்துவதைக் கலையாகவும் கருதுவது நடைமுறை உண்மை (Medicine is a science to learn and an art to practice). ஒரு மருத்துவர் கைராசியான மருத்துவர் எனப் பெயர் வாங்குவதற்கு அவர் நோயாளியிடம் காட்டும் பரிவு உட்பட மேலும் பல மனித மனத்தோடு தொடர்புடைய காரணிகள் தொழிற்படுகின்றன. (உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளின்படி மருத்துவத்தைக் கலையாகக் கையாள்வதில் மாற்று முறை மருத்துவர்கள் சிறந்தவர்கள்).

ஆயினும், தரவு சார்ந்த மருத்துவம் (Evidence based medicine) என்ற ஒருமுறை இப்போதெல்லாம் பரவலாக பயன்பாட்டிற்கு, குறிப்பாக மேலைநாடுகளில், வந்துகொண்டிருக்கிறது. இம்முறையானது மருத்துவம் குறித்த நமது புரிதல்களை அதிகப்படுத்தியுள்ளது; வேறுவகையில் சொன்னால், நோய்கள், அதற்கான காரணீகள், சிகிச்சைமுறைகள் குறித்து நாம் இதுகாறும் கொண்டிருக்கும் நம்பிக்கைகளைக் கட்டுடைக்கின்றது. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்வதானால், வைரஸ் கிருமிகளால் ஏற்படும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றிற்கு ஆன்டிபயாட்டிக்குகளைப் பரிந்துரைப்பதின் அவசியமின்மையை இம்முறை தெளிவுறுத்தியதைக் குறிப்பிடலாம். தரவு சார்ந்த மருத்துவத்தின் முதன்மையான குறிக்கோளே மிகவும் சிக்கலான, நிச்சயத்தன்மையற்ற சூழ்நிலைகளில் முடிந்த அளவிற்கு புறவயமான முடிவுகளை மருத்துவர்கள் எடுப்பதற்கு உறுதுணை புரிவதேயாகும். இம்முறையானது மருத்துவம் செய்வதிலுள்ள கலை அம்சத்தை, குறிப்பாக மருத்துவரது சொந்த முன்தீர்மானங்களைக், குறைத்துவிட்டு அவ்விடத்தில் அறிவியலைப் புகுத்துகின்றது. எனவே இனிவரும் காலங்களில் மருத்துவம் புரிவது மிகுதியும் அறிவியற் சார்ந்ததாகவே இருக்குமேயன்றி கலையாக இராது.

ஏன் இத்தனை மருத்துவ முறைகள்?

சின்ன வயதில் ‘இங்கிலீஸ்’ மருந்துக்கடை என்ற பெயர்ப் பலகைகளைக் காணும்போதெல்லாம் அதென்ன ‘இங்கிலீஸ்’ மருந்துக்கடை என நான் வியப்புற்றிருக்கிறேன். இதற்கான விளக்கம் அநேகமாக நான் சித்த மருத்துவக் கல்லாரியில் சேர்ந்த பிற்பாடுதான் கிடைத்திருக்குமென நினைக்கிறேன். அப்போதுதான் நாட்டு மருந்துக்கடை என்ற ஒன்றிருக்கிறது என்பதே எனக்குத் தெரியவந்தது. இப்போதெல்லாம் ‘இங்கிலீஸ்’ மருந்துக் கடைகளிலேயே அம்மருந்துகளைப் போன்றே பொதி செய்யப்பட்டு நாட்டு மருந்துகளும் கிடைக்கின்றன. ஆங்கில மருந்துக்கடைகளின் பெயர்ப் பலகைகளிலேயே இங்கு சித்தா, ஆயுர்வேத மருந்துகளும் கிடைக்கும் என எழுதப்பட்டுள்ளன. எனவே ‘இங்கிலீஸ்’ மருந்துக்கடை என்ற பெயர்ப்பலகைகளைத் தற்போதெல்லாம் அரிதாகவே காணமுடிகிறது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக நன்றாக உள்ளதால், இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த நிறுவனப் பங்கிலும் கண்ணைமூடிக் கொண்டு முதலீடு செய்தாலும் அது 'நீண்டகால அடிப்படையில்' உறுதியாகப் பலன் தரும் என்று சொல்கிறார்கள். அதுபோன்றே எம்மருந்தை எந்நோயாளிக்குக் கொடுத்தாலும் பெரும்பாலான நேரங்களில் அந்நோய் குணமாகிவிடும் அல்லது கட்டுப்படுத்தப்படும்; இது அம்மருந்தின் உண்மையான வீரியத்தால் அல்ல, மாறாக பெரும்பாலான நோய்கள் தன்னியல்பாகவே குணமாகிவிடுதலாலோ/குறைந்துவிடுவதாலோ அல்லது மனிதமூளை அம்மருந்தை அந்நோய்க்குறியதாகப் பாவித்துக்கொள்வதால் ஏற்படும் விளைவினாலோ இருக்கலாம். இவ்விளைவை மருந்துப்போலி விளைவு (Placebo effect) என்பர். புதிய மருந்துகளின் வீரியமறிய நடத்தப்படும் ஆராய்ச்சிகளில் (Randomised double blind controlled clinical trials) இப்போலிகள் (Placebo) இன்றியமையாத பங்காற்றுகின்றன. மருந்தறிவியலின்படி (Pharmacology) ஒவ்வொரு மருந்திற்கும் நோயைக் குணப்படுத்தவேண்டிய வீரியமிருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக போலிவிளைவும், பக்கவிளைவும் எல்லா மருந்துகளுக்கும் உண்டு.

சீன இயற்பியல் என்றோ அல்லது அரபு வேதியல், ஜெர்மானிய வானியல், இந்திய விலங்கியல் என்றோ அறிவியலில் பிரிவுகள் இல்லை. ஆனால் மருத்துவ முறைகளில் மட்டும் ஏன் இத்தனை பிரிவுகள்? (ஆனால், இப்போது நம்நாட்டில் வேத கணிதம் (Vethic mathematics), வேத வானியல் என்று சொல்லி ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது ஒரு முரண்) இதற்கு, முன்பே விளக்கியது போல, உயிரியலின் இயல்பான சிக்கல்தன்மையும் அதனால் நம் அறிதலில் உள்ள நிலையற்றதன்மையுமேயாகும். உயிரியியல் செயல்கள், வேதியியலிலோ இயற்பியலிலோ பொருள்களுக்கிடையே நடைபெறும் ஒற்றை பரிமாண தன்மையுடைய வினைகளைப் போலல்லாது, பல பரிமாணத் தன்மையுடையவை. விளக்கமாகச் சொன்னால் தண்ணீரை சூடுபடுத்தும்போது 100c செல்ஷியஸில் அது கொதிநிலையை அடைகிறது. இங்கு தண்ணீருக்கும், வெப்பத்திற்குமிடையேயான உறவைக் குலைக்கும் ஒரே காரணி ஆக்சிஜன் அடர்த்தி மட்டுமே. (ஆக்சிஜனின் அடர்த்தி கடல்மட்டத்திலிருந்து ஒரு இடத்தின் உயரத்தினைப் பொறுத்து மாறுபடும்) அதைச் சீராக வைத்துக்கொண்டால் உலகின் எந்தப்பகுதியிலும், எந்த நேரத்திலும் 100 C வெப்பத்தில் தண்ணீர் கொதிநிலையை அடைகிறது. ஆனால் நோய்கள் ஏற்படும்விதம், அவற்றிற்கான மருந்துகள் செயல்படும்விதம் போன்றவை முன்பே குறிப்பிட்டதுபோல் பல பரிமாணத்தன்மையுடையவை. அவற்றை இயற்பியல், வேதியியல் போன்றவற்றை மாதிரிகளாகக் கொண்டு, உயிரியலானது இயற்பியல், வேதியியலின் குறுக்கப்பட்ட வடிவாக இருந்தாலும், மட்டுமே புரிந்துகொள்ள இயலாது.

நோய்களைக் குணப்படுத்துவதைப் பொறுத்தவரை நாம் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற இயல்புள்ளவர்கள். இன்று பெரும்பாலானோர் முதலில் நாடுவது அலோபதி, திருப்தியளிக்காவிட்டால் சித்தா, ஹோமியோபதி. இவற்றிலும் திருப்தியடையாவிட்டால் மசூதிக்குச் சென்று மந்திரித்துக் கொள்வது, பில்லி சூனியம் எடுப்பது என்றளவில் நமது செயல்பாடுகள் இருக்கும். இவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் பெரும்பாலான நோய்கள் கட்டுப்படுத்தப்படுவது போல் தோன்றுவது முன்னர் குறிப்பிட்ட காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். எங்களூர்ப் பகுதிகளில் பார்வை பார்த்தல் என்ற ஒரு ‘மருத்துவம்’ உண்டு. தீராத தோல்நோய்கள், குறிப்பாக கரப்பான், போன்றவற்றிற்கு ‘மருத்துவர்’ ஒரு குச்சியால் நோய்கண்ட இடத்தில் சில மந்திரங்களை முனுமுனுத்துக்கொண்டே தடவுவார். வேறு ஏதும் மருந்துகள் கொடுப்பதில்லை. சென்னையில் சில இடங்களில் சாதாரணக் காய்ச்சல் போன்றவற்றிற்கு மசூதிக்குச் சென்று மந்திரித்துக் கொள்ளும் வழக்கம் உண்டு. இதுபோன்று பல்வேறு பகுத்தறிவிற்கு முரணான, எந்தக் குறிப்பிட்ட முருத்துவ முறையையும் சாராத, பழக்கவழக்கங்கள் எல்லாக் குமூகங்களிலும் உண்டு. அறிவியல் முன்னேறிய இக்காலத்திலும் இத்தனை முறைகளும் புழக்கத்திலிருப்பது, உயிரியலில், பிற அறிவியல் துறைகளோடு ஒப்பிடும்போது, மனிதனுக்கிருக்கும் அறிதல் குறைபாடுதான் (Gaps in knowledge).

தொடர்வேன்...

திங்கள், 13 அக்டோபர், 2008

அறிவியலும் சித்த மருத்துவமும் - 1

1990 - களின் ஆரம்பத்தில் நான் பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்தபோது என் அறை நண்பர்களை சித்த மருத்துவ தத்துவத்தின் முதுகெலும்பாக கட்டமைக்கப்பட்டுள்ள வாத, பித்த, கபத்தின் (முக்குற்றம்) அடிப்படையில் வகைப்பாடு செய்து ஒருவரையொருவர் கிண்டல் செய்துகொள்வதுண்டு. அதாவது, இத்தத்துவத்தின் படி மனிதர்கள் இயல்பாகவே மூன்று குணங்களாகப் பிரிக்கப்படுவர் - சத்துவம், ரஜம், தமம் என்பவையே அந்த மூன்று குணங்கள்; சத்துவம் என்பது மிக உயர்ந்த குணம், தமச குணம் மிகக் கீழான குணம். வாதத் தன்மையை மிகுதியாகக் கொண்டவர்கள் தமச குணம் கொண்டவராகயிருப்பர்; மேலும் அவர்கள் நடந்தால் மூட்டுகளிலிருந்து நெட்டி ஒலி கேட்கும், சற்று உயரமாகயிருப்பர், தூங்கும்போது அரைக்கண் திறந்திருக்கும், கெட்ட சொப்பனம் காண்பர் என்பன போன்று மிக நுணுக்கமான விவரிப்புகள் சித்தமருத்துவப் புத்தகங்களில் காணக்கிடைக்கும். ஒருவரை அவர் வாதத் தன்மை மிகுந்தவரா, பித்தத் தன்மை மிகுந்தவரா அல்லது கபத்தன்மை மிகுந்தவரா என்பதை இத்தகைய சித்தரிப்புகள் மூலம் ஒரளவு விளங்கிக்கொள்ளலாம் எனினும், நாடி பிடித்துப் பார்த்து இதை உறுதிசெய்து கொள்ள வேண்டுமென சித்தமருத்துவ நூல்கள் கூறும். அவ்வாறு நாடி பிடித்து ஆய்வதற்கும் - எந்தெந்த நேரங்களில் பார்க்கவேண்டும், எவ்வாறு பார்க்கவேண்டும் எனப் பல விதிமுறைகளுண்டு.

இயற்கையைப் புரிந்து கொள்வதற்கு இவ்வாறு வகைப்பாடு செய்துகொள்ளுதல் இன்றியமையாதது. அதுவே பகுத்தறிவின் முதல்படி எனக் கொள்ளலாம். காட்டாக வானியலில் நாம் கோள்கள், நட்சத்திரங்கள், வால் நட்சத்திரங்கள் என்று பிரித்து வைத்திருக்கிறோம். உயிரியலில் தாவரங்களுக்கு பெந்தம்-ஹூக்கர் வகைப்பாடு உள்ளது. வாத, பித்த, கபம் போன்றே நவீன மருத்துவத்திலும் A வகைப்பிரிவினர் (Type A personality), B வகைப்பிரிவினர், C வகையினர் என ஆளுமையின் அடிப்படையில் மனிதர்களை வகை செய்வதுண்டு. இன்னின்ன வகையினருக்கு இன்னின்ன நோய்கள் வருவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் என்றளவில் அந்தக் கருதுகோள் செல்லும். இவ்வாறு வகைப்பாடு செய்வதில் ஒவ்வொரு பொருட்களுக்கும்/உயிரினத்திற்கும் உரிய தனித்தன்மைகள் இழக்கப்பட்டாலும் இயற்கைப் பொருட்களைப் புரிந்துகொள்வதில் இது இன்றியமையாதது. ஆனால், சித்த மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் சார்ந்து சொல்லப்பட்டுள்ள வகைப்பாடும், நவீன அறிவியல் கைக்கொள்ளும் வகைப்பாடும் ஒன்றிற்கொன்று முரணானவை; முன்னது அகவயமானது (subjective), மேலும் மீப்பொருண்மையியல் (Metaphysical) சார்ந்தது. ஆனால், பின்னது பெரிதும் புறவயமானதும் (Objective), பொருண்மையியல் (Materialistic) சார்ந்ததுமாகும்.

மருத்துவ அறிவியல் ஒரு பருந்துப் பார்வை

சித்த மருத்துவத்தின் இன்றைய பயன்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு உயிரியல் குறித்த சமகால அறிவும் அவசியம். உயிரியலை / மருத்துவத்தைக் குறுக்கினால் அது இயற்பியலாகவும், வேதியியலாகவும்தான் இருக்கும். நமக்கு மிகவும் புதிராகவுள்ள உயிர் என்பது என்ன? நம் சிந்தனைகள் என்பவை யாவை? என்பவை குறித்து அறிவியல் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வந்துவிட்டது. அதாவது இவைகளும் பொருண்மைத் தன்மை வாய்ந்தவைதான் என்பதே அது. ஆயினும் இன்றைய அறிவியலால் சடப்பொருள்களிருந்து வேதிவினைகள் மூலம் ஒரு உயிரையோ அல்லது சிந்தனைகளையோ உருவாக்க முடியவில்லை. ஒரு உயிரியிலிருந்து இன்னொரு உயிரியைப் போலச் செய்யமுடியும் (Cloning), ஆனால் வெறும் சடப்பொருளிலிருந்து முற்றிலும் புதிதாக ஒரு உயிரியை உருவாக்க இன்னும் நம்மால் முடியவில்லை.

அதேபோல ஒரு நோய் எவ்வாறு ஏற்படுகிறது என்பதற்கான முழுமுற்றான அறிவு இன்னும் புலப்படவில்லை. நோய்கள் குறித்த எல்லா அறிதல்களும் பல்வேறு சாத்தியக்கூறு மாதிரிகளைக் (Probabilistic models) கொண்டு உருவாக்கப்பட்டவைதாம். நவீன அறிவியல் / மருத்துவம் எல்லா நோய்களுக்கும் தீர்வு கண்டுவிட்டது என நாம் பொதுவாக நம்புவது ஒரு மாயைதான்; உண்மையல்ல. உண்மையில் அது எந்த நோய் குறித்தும் முடிந்தமுடிவான தீர்வு எதையும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை; கண்டுபிடிக்குமா என்று ஊகிக்கவும் முடியாது. தடுப்பூசிகளும், ஆன்டிபயாட்டிக் மருத்துகளும் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பெருமளவு வெற்றி பெற்றிருந்தாலும் அவை முழுத்தீர்வாகாது. நம் எல்லோருக்கும் தெரியும் எய்ட்ஸ் நோயை HIV வைரஸ் கிருமிதான் உண்டாக்குகிறது என. நாம் நினைப்பதுபோல் HIV வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர் அனைவருக்கும் எய்ட்ஸ் வந்துவிடாது. அதாவது உங்கள் உடலில் HIV வைரஸை நீங்கள் கொண்டிருந்தாலும் உங்களுக்கு எய்ட்ஸ் வராமலேயே இருக்கலாம். வேறுவகையில் சொல்வதானால் வைரஸ் உடலிலிருப்பது எய்ட்ஸ் வருவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறதே தவிர அதுமட்டுமே நோயை உண்டாக்குவதில்லை. இன்னொரு சிறந்த உதாரணம் சொல்லவேண்டுமானால் காச நோயை எடுத்துக்கொள்ளலாம். நம்மில் பலரும் காசநோயை உண்டாக்கும் கிருமியான மைக்கோ பாக்டீரியம் டியூபர்குலோசிஸை உடம்பில் கொண்டிருப்போம். ஏனெனில், இந்நோய் இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் எப்பொழுதுமே சிலருக்கு இருக்கும் (Endemic), ஆனாலும் நம்மில் பலருக்கும், அக்கிருமியை நாம் உடம்பில் கொண்டிருந்தாலும், அந்நோய் வருவதில்லை. காரணம் அக்கிருமியால் நோயை முழுவீச்சில் உருவாக்குவதில் தொழிற்படும் பிறகாரணிகள், காட்டாக குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை, பலருக்கு அமையப்பெறாததே. கிருமியும் மற்ற புறக்காரணிகளும் பொருந்திவரும் சாத்தியக்கூறுகள் கூடிவரும்போது காசநோய் முழுவீச்சில் ஒருவருக்கு ஏற்படுகிறது. அதே சமயம் மற்ற புறக்காரணிகள் இருந்தாலும் கிருமி இல்லாவிட்டால் காசநோய் ஒருவருக்கு ஏற்படாது. வேறுவகையில் சொல்வதானால் கிருமியை இன்றியமையாத காரணியாகவும் (Necessary cause), மற்ற காரணிகளை போதுமான காரணிகளாகவும் (Sufficient cause) கொள்ளலாம்.

இவ்வாறே இன்றியமையாத காரணிகளும், போதுமான காரணிகளும் சேர்ந்தால் உண்டாகும் பல்வேறு சாத்தியக்கூறுகளினாலேயே எல்லா நோய்களுக்கும் உண்டாகின்றன என்பதே தற்போதைக்கு அறிவியலாளர்கள் வந்துள்ள முடிவு. இதை நோய்க்காரணிகளின் வலைப்பின்னல் (Web of disease causation) என்பர். இன்னும் பல நோய்களுக்கு, குறிப்பாக கிருமிகளில்லாமல் (Non-infectious) ஏற்படும் நோய்களுக்கு, இன்றியமையாத காரணிகள் என்னவாக இருக்கலாம் என்ற புரிதல் சரிவர இல்லை. அதுபோன்றே போதுமான காரணிகள் பல புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன.

தடுப்பூசிகளின் பயன்பாடும் மேற்கூறியவாறு சாத்தியக்கூறுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. திரள் நோய் எதிர்ப்பு சக்தி (Herd immunity) என்ற அடிப்படையில் தடுப்பூசிகள் பயன்படுகின்றன. அதாவது, ஒரு குமுகாயத்தில் உள்ள மக்கள் கூட்டத்தின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் (குறைந்த பட்சம் - 80%) மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவும் ஒரு குறிப்பிட்ட நோய்க்கெதிரான எதிர்ப்பு சக்தியைப் பெறும்போது அந்நோய் அச்சமூகத்தில் மேலும் பரவாமல் தடுக்கப்படுகிறது. ஆனால் அச்சமூகத்தில் மேலும் புதிய நபர்கள் சேரும்போது, அதாவது, புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் அல்லது வேறு இடங்களிலிருந்து வந்து குடிபெயர்ந்தோரின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டோரின் சதவிகிதம் குறையும்போது மீண்டும் அந்நோய் அச்சமூகத்தில் பெருமளவில் (Epidemic) ஏற்படுகிறது. இங்கு கவனிக்கப்படவேண்டியது என்னவெனில், அக்குறிப்பிட்ட நோய்க்குக் காரணமான கிருமி எப்போதும் அச்சமூகத்தில் இருந்துகொண்டேயிருக்கும் (Endemic); தடுப்பூசிகள் மூலம் நாம் செய்வதெல்லாம் அக்கிருமிகள் மேலும் பரவுவதற்குத் தேவையான தொடர் சங்கிலிகளில் ஒன்றான அந்நோய்க்கெதிரான எதிர்ப்பு சக்தியற்றோரின் சதவிகிதத்தைப் பெருமளவில் குறைப்பதேயாகும். இதனால் அந்நோய்க்கிருமி முழுதாக அழிந்துவிடுவதில்லை, மாறாக அக்கிருமி நோயைப் பெருமளவில் தோற்றுவிப்பதற்குத் தேவையான சங்கிலியின் கண்ணி அறுக்கப்பட்டுவிடுகின்றது. இவ்வாறுதான் சின்னம்மை ஒழிக்கப்பட்டது. இளம்பிள்ளைவாதத்திற்கெதிரான போரும் இவ்வடிப்படையிலேயே நடந்துவருகிறது. சின்னம்மைக் கிருமிக்கு மனித உடம்பைத் தவிர வேறு உறைவிடம் இல்லாததால் சின்னம்மை ஒழிப்பு சாத்தியப்பட்டது. ஆனால் கிருமிகளால் பரவும் மற்ற நோய்களை முற்றிலும் ஒழிப்பது சற்று கடினம்தான்.

இவ்வாறாக உயிரியல் எண்ணற்ற சாத்தியக்கூறுகளினால் (Infinite probability), பரிமாண இயங்கியலில் மனிதன் தோன்றியது உட்பட, கட்டமைக்கப்பட்டுள்ளது. நாம் நினைப்பது போலல்லாமல், அது மிகவும் நுட்பமும், சிக்கலும் உடையது. இவ்வகையில் அது குவாண்டம் இயற்பியலோடு ஒப்பிடத்தக்கது. குறிப்பாக ஒன்றைமட்டும் வலியுறுத்த வேண்டுமென்றால், அது, நோய்கள் நாம் நினைப்பது போல் ஒரு திட்டவட்டமான ஒழுங்கான வழிமுறையில் காரணிகள் வினைபுரிவதால் ஏற்படுவதில்லை; மாறாக முடிவற்ற காரணிகளின் தீர்மானிக்கமுடியாத (Random/Unpredictable) தொடர்ச்சியான வினைகளினால் விளையும் எண்ணற்ற சாத்தியக்கூறுகளில் ஒன்றாகவே ஏற்படுகின்றன. வேறுமுறையில் சொல்வதானால், நிச்சயிக்கமுடியாத ஒழுங்கற்ற இந்தத் தொடர்ச் சங்கிலியில் ஒரு ஒழுங்கமைவை உருவகித்துக்கொண்டு (Assuming a pattern in the unpredictable chaotic chain of events) நோய்களுக்கு நாம் மருந்துகள் கொடுக்கிறோம்; பல நேரங்களில் அம்மருந்துகள் வேலை செய்வது, குருவி உட்காரப் பனம்பழம் விழுவதைப் போன்ற, தற்செயல் நிகழ்வாகவுமிருக்கலாம். ஒரு நிகழ்வு காரண-காரிய விளைவால் ஏற்பட்டதா (அ) தற்செயலலாக நடந்ததா என்பதைக் கண்டறிய அந்நிகழ்வு காரண-காரிய உறவுகளைக் கண்டறியும் சில வரையறைகளைத் (AB Hill’s Causal criteria) திருப்திப்படுத்தவேண்டும்.

ஒரு காலகட்டத்தில் அறிவியல் எல்லா நிகழ்வுகளையும் ஒரு திட்டவட்டமான, தீர்மானிக்கமுடிந்த, காரண-காரிய வகைகளுக்குள் அடக்கிவிடலாம் எனக் கருதியது. ஆனால், குவாண்டம் இயற்பியல் இந்த நம்பிக்கையைக் கலைத்துப்போட்டது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற கூற்றுகளில் ஒன்று “கடவுள் பகடையாடமாட்டார்” (God does not play dice) என்பது. இது அவர் குவாண்டம் இயற்பியல் குறித்துச் சொன்னது. ஆனால் அவர் நம்பியதற்கு மாறாக குவாண்டம் இயற்பியல் அவரது வாழ்நாளிலேயே தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. குவாண்டம் இயற்பியலின் வரவிற்குப் பிறகு நம் எல்லா அறிவியல் துறைகளும், மருத்துவ அறிவியல் உட்பட, தீர்மானிக்க முடிந்த திட்டவட்டமான மாதிரிகளினால் (Deterministic models) ஆன அறிவுப்புலத்திலிருந்து, பல்வேறு சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் (Probabilistic models) இயங்கும் அறிவுப்புலத்தை வந்தடைந்துள்ளன. எப்படி பாரம்பரிய இயற்பியலின் (Classical physics) விதிகள் குவாண்டங்களின் தளத்தில் (நுண்ணிய அளவில் - micro level) செயலற்றுவிடுகின்றனவோ, அதுபோன்றே உயிரியலிலும் நுண்தளத்தில் நடக்கும் எல்லா செயல்களும் நிச்சயமற்ற தன்மையுடையவை (Uncertain). மேலோட்டமாகப் பார்ப்பதற்கு அவை நூல்பிடித்தாற்போன்று ஒரு ஒழுங்கான லயத்துடன் செயல்படுவதுபோல் தோன்றினாலும் அது நமது கற்பிதமே.

சுருக்கமாகச் சொன்னால் மற்ற அறிவியல் துறைகளைப் போன்றே உயிரியலிலும் ஆன்டிபயாட்டிக்குகள், தடுப்பூசிகள், மரபியல் தொகுப்புகள் எனப் பெரும் பாய்ச்சல்கள் நிகழ்த்தப்பட்டிருப்பினும், நோய்களை வெல்வதில் மனிதன் செல்லவேண்டிய தூரம் இன்னும் நிறையவுள்ளது. அதை என்றாவது நாம் அடைவோமா என்பதற்கு அறிவியலிடம் பதிலில்லை. ஆருடம் தான் கணிக்கவேண்டும்!!

(will continue)

வெள்ளி, 4 ஏப்ரல், 2008

சீனாவின் கருத்துச் சுதந்திரம் - பெய்ஜிங்கில் திபெத்தியருடனான என் நேரடியனுபவம்

2005 செப்டம்பரில் ஒரு மருத்துவ அறிவியல் கருத்தரங்கிற்காக நான் பெய்ஜிங்கிற்குச் சென்றிருந்தேன். முதல் வெளிநாட்டுப் பயணம், குறிப்பாக முதல் விமானப் பயணம் என்பதாலும், மேலும் முதல்முறையாக தனியாக வெளிநாடு செல்லும்போதே ஆங்கிலம் அதிகம் புழங்காத (எனக்கு ஆங்கிலம் ததிகினத்தான் என்பது வேறுவிசயம்) தெரியாத நாட்டிற்குச் செல்வதும், சீனர்களின் உணவுமுறை குறித்து பல்வேறு நபர்கள் தெரிவித்த கருத்துக்களும் சற்று பயத்தைக் கொடுத்தன. எனினும் நம்மைப்போன்றே கலாச்சாரப் பழமையையும், அதிவேக பொருளாதார வளர்ச்சியையும் (பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் பார்த்த வானளாவிய கட்டிடங்கள், உள் கட்டமைப்பு வசதிகளைப் பார்த்தபிறகு அது ஏதோ வளர்ந்த நாடாகவே எனக்குத் தெரிந்தது) கொண்ட நாட்டைக் காணப்போகின்றோம் என்ற மகிழ்ச்சியில் அவ்வளவாக பயம் தெரியவில்லை.

கருத்தரங்க சுவரொட்டிகள் (Conference poster session) பார்வைப் பிரிவில் ஒரு திபெத்திய பெண் மகப்பேறு மருத்துவரும், சாலமோன் என்ற சமூகநல ஊழியருமிணைந்து அவர்களது சுவரொட்டியையும் பார்வைக்கு வைத்திருந்தனர். அப்போதுதான் தலாய் லாமா அறிவியலுக்கு ஏற்றமாதிரி புத்தமதத்திலும் மாற்றம்கொண்டு வருவதை தான் வரவேற்பதாக கருத்துத் தெரிவித்திருந்தார். அதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது தலாய் லாமா என்ற பெயரை நான் உச்சரித்த உடனேயே சாலமோன் சற்று பின்வாங்கினார். பின்னர் எங்கள் அறைக்குச் செல்லும் வழியில் என்னைத் தனியாக அழைத்து தலாய் லாமா குறித்து தன்னிடம் பேசவேண்டாம் எனவும், வேண்டுமெனில் Mr. D என்ற சங்கேதக் குறியீட்டைப் பயன்படுத்தி அவர் குறித்து பேசலாம் எனச் சற்று பதட்டத்துடன் கூறினார். அதற்குக் காரணமாக அவர் சொன்னது நீங்கள் ஒரு இந்தியன், நான் ஒரு திபெத்தியன் -அதனால் நம்மிருவரையும் சில சீன அதிகாரிகள் கண்காணிக்கக் கூடும், அதனால் நாம் தலாய்லாமா குறித்துப் பேசுவது தேவையற்ற சிக்கல்களை இருவருக்கும் உண்டாக்குமெனக் கூறினார். இந்தியனான எனக்கு இதைப் புரிந்துகொள்ளவோ, நம்பவோ முடியவில்லை. சாலமோன் தேவையில்லாமல் பயப்படுகிறாரோ என்று நினைத்தேன். பின்னர் Mr. D குறித்து அவரிடம் பேசுவதை நானும் தவிர்த்துவிட்டேன்.

பின்னர் இருவரும் அந்த 4 நாட்களுக்குள் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களாயினர். பெண் மருத்துவருக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. சாலமோன்தான் எங்களிருவருக்குமிடையே துபாஷி. அவர்கள் இருவருக்கும் ஒரு இந்தியன் என்பதால் என்னை மிகவும் பிடித்துவிட்டது. திபெத்தியர்களுக்கு இந்தியர்கள் மேல் எப்போதும் பாசமதிகம் என்று இருவரும் சொன்னார்கள். அந்தப் பெண் சொன்னார் நான் அவருடைய சகோதரனைப் போல் இருப்பதாக. அதிகம் என்னுடன் அவரால் உரையாட முடியாவிட்டாலும் அவரது கண்ணில் தெரிந்த அன்பை என்னால் உணர முடிந்தது. கடைசி நாளன்று இருவரும் என் அறைக்கு வந்து எனக்கு அங்கவஸ்திரம் போன்ற ஒரு சில்க் துணியை எனக்கு அணிவித்து (அவர்கள் விருந்தினரை உபசரிக்கும் முறையாம்), வாழ்த்திச் சென்றனர்.




திபெத் குறித்த தற்போதைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது சாலமோன் அன்று பயப்பட்டதன் அர்த்தம் எனக்கு நன்கு விளங்குகிறது.

திங்கள், 15 அக்டோபர், 2007

சு.ரா. - சில குறிப்புகள்

2005 ஆம் வருடம், அக்டோபர் மாதம் 16ம் நாள் இந்து செய்தித்தாளில் சுந்தர ராமசாமி மரணம் என்ற செய்தியைப் பார்த்தவுடன் என்னால் நம்பமுடியவில்லை. வேறு ஏதேனும் சுந்தர ராமசாமியாக இருக்கலாமோ என மனது ஒரு கணம் யோசித்தது. (இதை எழுதும்போது, ஒருமுறை, கமல் குமுதம் - தீராநதி செவ்வியில் தனக்குப் பிடித்த எழுத்தாளர் சு.ரா. என்று கூறினதைப் படித்த சு.ரா.வின் பக்கத்து வீட்டுக்காரர் நீங்கள் எழுத்தாளரா எனக்கேட்டதாக - அவருக்கேயுரிய எள்ளலுடன் சு.ரா. குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது.) மீண்டும் செய்தியைப் படித்து உறுதிசெய்து கொண்டபோதும் நம்புவதற்குச் சற்று கடினமாகவேயிருந்தது. பின்னர் பேராசிரியர் ஆ. இரா. வெங்கடாசலபதியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, சு.ரா சிறிதுகாலமாகவே உடல் நலமின்மைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததாகவும், மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாகவும் மிகுந்த சோகத்துடன் கூறினார்.

பத்து வருடங்களுக்கு முன்பு (1996 - 97), எனது தோழியின் தகப்பனார் திரு. நாராயணன் (எனக்கும் தந்தை போன்றவர்) காஞ்சிபுரத்தில் நடத்திவரும் இலக்கிய வட்டம் என்ற அமைப்பின் கூட்டமொன்றில் தற்செயலாகக் கலந்து கொண்டதின் மூலம், எனக்கு நவீனத் தமிழிலக்கியம் அறிமுகமாயிற்று. இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் அந்நிகழ்வு என் வாழ்க்கையின் மிக முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகத் தெரிகிறது; காரணம் அதுதான் எனக்கு தமிழ்ச் சிந்தனை மரபு, குறிப்பாக சிற்றிதழ் சார்ந்த, குறித்து வேறுபட்ட கண்ணோட்டத்தை அளிக்கக் காரணமாயிருந்தது. (அன்று அக்கூட்டத்தில் கலந்துகொள்ளாயிராவிட்டால், நான் தமிழ் வலைப்பதிவே ஒருவேளை ஆரம்பிக்காமல் இருந்திருக்கலாம் - நீங்களும் தப்பித்திருக்கலாம்) பிற்பாடு ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று நடைபெற்றுக் கொண்டிருந்த அவ்விலக்கியக் கூட்டங்களில் நான் தவறாது கலந்துகொள்வதை வழமையாகக் கைக்கொள்ள ஆரம்பித்தேன். அங்கு புத்தக விற்பனையும் 20% தள்ளுபடி விலையில், அதுவும் பல தவணைகளில் திருப்பித்தரும் முறையில், வழங்கப்பட்டு வந்தது. நான் அப்புத்தகங்கள் விற்பதற்கான கல்லாவில் உட்கார்ந்துகொண்டு புத்தகங்களைப் படித்துக்கொண்டும், அவ்வப்போது கூட்டம் நடப்பதைக் கவனித்துக் கொண்டுமிருப்பேன்.

அக்காலங்களில், நான் பார்த்தவரை, தமிழின் பெரும்பாலான வெகுசனப் பதிப்பகங்கள் வெளியிடும், ஆங்கிலப் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகங்களை ஒப்பிடும்போது, படைப்பூக்கமற்ற புத்தகங்கள் - குறிப்பாக உள்ளடக்கம், மேலட்டை, உள்ளிருக்கும் தாள்கள், அச்சுக்கோர்வை முதலியவை, குறித்து எனக்கு நல்ல எண்ணங்கள் ஏதுமில்லை. ஆனால், அக்கூட்டங்களில் நான் காணக்கிடைத்த பெரும்பாலான பதிப்பக நூற்கள் - குறிப்பாக க்ரியா, காலச்சுவடு, தமிழினி - தமிழ்ப் புத்தகங்கள் குறித்த எனது பார்வையை மாற்றியமைத்தன. புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு ஏற்ப அதன் அட்டை, அச்சுக்கோர்வை முதலியனவும் படைப்பூக்கத்தோடு ‘செம்பதிப்பாக’ அமைந்து கவனத்தை ஈர்ப்பதாகயிருந்தன. (இப்போது சில வெகுசன பதிப்பகங்களும் செம்பதிப்புகளை வெளியிடுகின்றன - பெரும்பாலான புத்தகங்களில் சாரம் தான் இல்லை) அப்போதுதான், காலச்சுவடு வெளியீடாக வந்த ‘விரிவும் ஆழமும் தேடி’ என்ற சு.ரா.வின் கட்டுரைத் தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. அதற்கு முன்பு வரை சுந்தர ராமசாமி என்ற எழுத்தாளரைக் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. நவீன தமிழின் தீவிரமான எழுத்தாளர்களாக எனக்கு அதுவரை அறிமுகமாகியிருந்தவர்கள், பலருக்கும் போலவே, ஜெயகாந்தன், கி.ரா., பிரபஞ்சன், சுசாதா போன்றவர்கள் மட்டுமே. (புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி போன்றவர்களும் பள்ளியில் சொல்லித்தரப்படும்? தமிழ்த்துணைபாட நூலகள் மூலம் ஏற்கனவே அறிமுகமாயிருந்தார்கள்)

விரிவும் ஆழமும் தேடி என்ற தலைப்பும், அதன் மேலட்டையில் கோட்டோவியமாகத்? தீட்டப்பட்டிருந்த ஒரு தாடிக்காரரின் முகமும், அதன் அச்சுக்கோர்வையும் என்னை அப்புத்தகத்தை வாசிக்கத் தூண்டியிருக்கலாம் என இப்போது தோன்றுகிறது. அப்புத்தகத்தின் அட்டைப்படத்திலிருப்பவர் சு. ரா. வாகயிருக்கலாம் என்பதனையும் அப்போதே ஊகித்தேன் என ஞாபகம்.



வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து, அதன் மாறுபட்ட தமிழ் உரைநடையால், என்னை அப்புத்தகம் சுண்டியிழுக்க ஆரம்பித்தது. அதன் பின்னர் சு.ரா. எழுதிய பிற புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். கட்டுரைகள் அளவிற்கு புனைகதைகளில் அதிக ஆர்வமில்லாத எனக்கு ‘ஒரு புளியமரத்தின் கதை’ மிகவும் சுவராசியமாக இருந்தது. சு. ரா. அதில் நாகர்கோவில் தமிழை, அவரது பெரும்பாலான புனைகதைகளைப் போல, வெகுவாகக் கையாண்டிருப்பார். நாகர்கோவில் எங்களுருக்கு (பணகுடி) அருகாமையில் உள்ளதால் அந்தத் தமிழை என்னால் இரசிக்க முடிந்தது. மேலும் அதில் கதையின் நாயகமாக வரும் புளியமரம், நாகர்கோவிலில் உண்மையிலேயே உள்ள (இன்றுமுள்ள) வேப்பமூடு (ஜங்ஷன்) என்பதையும் நான் அப்போது ஊகித்து உணர்ந்து கொண்டேன் என்றே எண்ணுகிறேன். ஒருமுறை நேரில் சு.ரா.விடம் இதுபற்றிக் கேட்டபோது அவரும் ஆமாம் என்றே சொன்னதாக ஞாபகம்.

தொடர்வேன்....

குறிப்பு: இன்று சு.ரா. இறந்த இரண்டாவது ஆண்டு நினைவு தினம்.

ஞாயிறு, 7 அக்டோபர், 2007

அறிஞர் சோதிப்பிரகாசம்

நேற்று திண்ணையில் ஜெயமோகன் எழுதிய அறிஞர் சோதிப்பிரகாசம் குறித்த அஞ்சலிக் கட்டுரையை கண்டதும் திடுக்கிட்டேன். ஒரு கணம் மீண்டும் தலைப்பை வாசித்து அது அஞ்சலிக் குறிப்புதான் என்பது உறுதியானவுடன் மிகுந்த கவலையுற்றேன். அவர் திண்ணையில் தொடர்ச்சியாக எழுதிவந்த கார்ல் பாப்பரின் வெங்காயம் குறித்து அவருடன் விவாதிக்கவேண்டுமென நினைத்திருந்தேன்.

முன்பொருமுறை, (3-4 வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன்) சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவொன்றில் தற்செயலாக அவருடன் நேரிடையான அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அதற்குமுன்பு, அவர், ஜெயமோகனின் ஆறு தரிசனங்கள் நூலுக்கு எழுதிய முன்னுரை ஒன்றைப் படித்திருக்கிறேன். அதை எழுதியவர் இவரா என்று அவரைப் பார்த்தமாத்திரத்தில் ஆச்சிரியப்பட்டுப் போனேன். நான் உருவகம் செய்து வைத்திருந்த தோற்றத்திற்கு நேரெதிரான எளிமையான தோற்றம், பேச்சும் அவ்வாறே. அப்போது பார்த்தபோது நல்ல உடல்நிலையிலேயே அவர் காண்ப்பட்டார். அதனால் அவர் கார்ல் பாப்பர் குறித்து எழுதியதை நன்றாக வாசித்துவிட்டு பின்னர் அவரைச் சந்தித்து உரையாடலாம் எனக் காலத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டேவந்தேன். ஜெயமோகனின் அஞ்சலிக் கட்டுரையைப் படித்ததும் அவரைச் சந்தித்து உரையாடமல் காலந்தாழ்த்திவிட்டேனே என்ற வருத்தம் மேலிடுகிறது. மேலும், அவர் எனது ஊருக்கு அண்மைய ஊரான காவல்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் என்ற, அவ்வஞ்சலிக் கட்டுரை மூலம் அறியப்பெற்ற, கூடுதல் தகவலும் வருத்தத்தை மேலும் அதிகமாக்குகிறது.