பக்கங்கள்

செவ்வாய், 28 அக்டோபர், 2008

பண்டிகைகளும் நானும்

கடந்த சில வருடங்களாக எந்தப் பண்டிகைகளிலும், குறிப்பாகத் தீபாவளி, விருப்பம் இருந்ததேயில்லை. அதற்குப் பல காரணங்கள். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக இதில் மாற்றம்; காரணம் என் இரண்டு வயது மகன். இன்று இதே பொருளில் மூன்று இடுகைகளைப் படித்தேன். என் தற்போதைய மனநிலையை அப்படியே அவை பிரதிபலிப்பதால், அவற்றிற்கு இங்கு இணைப்பு தருகிறேன். மூவரும் அவர்களது பாணியில், ஒத்த கருத்துடன் தீபாவளி குறித்து அணுகியிருக்கிறார்கள். படித்துப் பாருங்கள். பிறிதொரு சந்தர்ப்பத்தில் இது குறித்து என் எண்ணங்களை விரிவாக எழுதும் எண்ணமுண்டு.

1. ஜெயமோகனின் இடுகை
2. ரோசா வசந்த்
3. வெங்கட்

வெள்ளி, 17 அக்டோபர், 2008

அறிவியலும், தமிழரும் (அறிவியலும் சித்த மருத்துவமும் - 3)

அறிவியலும் சித்த மருத்துவமும் - 1
அறிவியலும் சித்த மருத்துவமும் - 2

நம்மிடையே அறிவியல் குறித்த சரிதான புரிதல் இல்லை என்பதே என் எண்ணம். ஆன்மீகம் என்பது புலன் இன்பத்தைக் கடந்த ‘பேரின்பத்தைத்’ தரவல்லது, ஆகவே அது மேலானது. ஆனால் அறிவியல் வெறும் புலன் இன்பம் தரக்கூடியது, ஆகவே அது ஆன்மீகத்தைவிட ஒருபடி கீழானது என்றே நமது பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது எப்படியெனின் கணினிகளுக்கான கட்டளைகளை எப்படி நிரலிகளைக் (Codes) கொண்டு கட்டமைக்கிறார்களோ (Programmed), அப்படியே அறிவியல் என்றவுடன் அது லெளகீக இன்பம் தரக்கூடியது, ஆகவே அது மெய்ப்பொருள் காண்பதற்கு எதிரானது என்ற எண்ணத்தை நமக்கு பல (ஆன்மீகக்) கட்டுக்கதைகளினால் ஆன நிரலிகள் மூலம் கட்டமைத்துள்ளார்கள் நம் இடைக்கால முன்னோர்கள். அதனால் அறிவியல் என்ற பொத்தானை அழுத்தியவுடன், மூளை என்னும் நமது கணினியில் அது லெளகீக இன்பம் தரக்கூடியது என்ற பதில் ஆயத்தமாக வருகிறது. ஆனால் நமது பாரம்பரியத்தில் ஒருகாலத்தில் இன்றைய அறிவியல் சிந்தனைகளின் முன்னோடியான உலகாயுதம் எனப்படும் பொருள் முதல்வாத தத்துவமே மேலோங்கியிருந்தது. மெய்யியல் என்றால் உண்மையை அறிய முயல்தல் எனப்பொருள்படும். உண்மையையறிதல் என்பது, நாம் யார்? ஏன் பிறக்கிறோம்? ஏன் இறக்கிறோம்? இறந்த பின் நம் சிந்தனைகள் என்ன ஆகின்றன? என்பன போன்ற மேலும் பல கேள்விகளுக்கு விடையறிய முயல்தல் ஆகும். இந்த உண்மைகளை அறிவதற்கு ஆன்மீகம் என்ற கருத்து முதல்வாதமும், அறிவியல் என்ற பொருள்முதல்வாதமும் இரண்டு வழிமுறைகள். உயிரும், சிந்தனைகளும் பொருண்மைத்தன்மை வாய்ந்தவையாகவே இருக்கமுடியும் என்ற முடிவிற்கு அறிவியல் வந்துவிட்டபோதே ஆன்மிகப் பாதை தவறாகிவிடுகிறது. இதுபுரியாமல் நாம் இன்னமும் ஆன்மீகமே உண்மை மெய்ஞானம் அடைவதற்கான ஒரேவழி எனத் தொடர்ந்து அபத்தமாக நம்பிக்கொண்டிருக்கிறோம். நம் நவீன கால ஆன்மீக வியாபாரிகளும், பாபாக்களும், மாதாக்களும் இந்த அபத்தத்தைத் (அவர்கள் பிழைப்பிற்காகத்) தொடர்ந்து கூவிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இச்சிந்தனை சித்த மருத்துவர்களிடம் மட்டுமல்ல நம் குமுகாயம் முழுவதுமே புரையோடிப் போயிருக்கிறது. நாம் அறிவியல் எனப் புரிந்துகொள்வது அதன் பயனுறு விளைவான தொழில் நுட்ப வளர்ச்சியின் நீட்சியான அலைபேசி, தொலைக்காட்சி போன்ற இன்னபிற உபகரணங்களையே. என்னே ஒரு அறிவீனம்!!

சித்த மருத்துவம் சில மாற்றுச் சிந்தனைகள்

சித்த மருத்துவம் என்ற பெயர் மிகச் சமீபகாலத்தியதொன்றாகவே இருக்கவேண்டும் என்றே நான் நம்புகிறேன். அதாவது சித்தர்கள் என்று குறிக்கப்படுபவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்ததாகக் கருதப்படும் 13-14 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிற்பாடுதான் இச்சொல் வழக்கிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இம்மருத்துவ முறை கண்டிப்பாக காலத்தால் மிகவும் முந்தியது; தமிழர் பண்பாடு, கலாச்சாரம் என்று தோன்றியதோ அன்றே இம்மருத்துவமும் தோன்றியிருக்கவேண்டும். சித்தமருத்துவம் என்று நாம் இப்போது படிப்பது, குறிப்பாக கல்லூரியில், பல்வேறு வகைகளைத் தொகுத்து அவ்வகைகளை சித்த மருத்துவம் என்ற ஒரே குடையின் கீழ் ஒரு அமைப்பாக மாற்றியதின் வெளிப்பாடே என்பது என் எண்ணம்; எப்படி இந்துமதம் என்று ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளதோ அவ்வாறே. இத்தகைய தொகுப்பு எப்போது நடந்திருக்க வேண்டும் என்பது குறித்து என்னால் ஊகிக்கமுடியவில்லை. ஆனால் இம்முயற்சி ஒருவராலோ அல்லது பலராலோ வெவ்வேறு கால கட்டங்களில் நடந்திருக்க வேண்டுமென நான் நம்புகிறேன். காரணம்: சித்தமருத்துவத்தின் அடிப்படைகளாகக் கட்டமைக்கப்பட்டுள்ள கொள்கைகளிலுள்ள முரண்பாடே.

நான் இன்றைய சித்த மருத்துவத்தை பொருண்மைத் தன்மை வாய்ந்த புறவயமான அடிப்படையைக் கொண்ட ஒருபகுதியாகவும், அரூபமான, குறிப்பாக மீப்பொருண்மைத் தன்மை வாய்ந்ததான, அதனால் அகவயமான மற்றொரு பகுதியாகவும் பிரிப்பேன். தமிழர் பண்பாட்டிலும், சங்க இலக்கியங்களிலும் அவர்கள் பெரிதும் புறவயமான, இன்றைய மொழியில் சொல்வதானால் லெளகீக, வாழ்க்கையையே வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் லெளகீகம் என்பதையே ஒரு கெட்டவார்த்தையாக இன்றைய பெரும்பான்மையான தமிழர்கள் கருதுவது ஒரு நகைமுரண்; இதைப் பின்னர் பார்க்கலாம். சுருக்கமாகச் சொன்னால் இன்று சித்தமருத்துவம் என்று வழங்கப்படுவது பொருள் முதல்வாதத்தையும், கருத்து முதல்வாதத்தையும் கலந்தளிக்கும் ஒரு காக்டெயில்தான்.

மனிதன் தோன்றியபோதே அவனுக்கான நோய்களும் தோன்றிவிட்டன. நோய்களும் இயற்கையின் ஒரு அம்சம்தானே. மனிதனைப் போன்றே எல்லா உயிரிகளுக்கும், குறிப்பாகக் கிருமிகளுக்கும் இப்பூவுலகில் வாழ அனைத்து உரிமையுமுண்டு. ஆனால் இயற்கையின் ‘உன்னதப் படைப்பான’ மனிதமூளை தன்னியல்பிலேயே பேராசை கொண்டது. அது தான் தோன்றியது முதல், தன் உடலை வருத்தியும், மரித்தும் போக வைக்கும் நோய்களைப் புரிந்துகொள்வதின் மூலம் அவற்றை வெல்லத் துடித்துக் கொண்டிருக்கிறது. இச்சிந்தனையின் தொடக்க காலகட்டங்களில், அதாவது, வரலாற்றுக் காலத்திற்கு முன்பு, நோய்கள் ஏற்படுவதற்குக் காரணம் துர் தேவதைகள், பில்லி சூனியங்கள், செய்வினை என்ற நம்பிக்கை எல்லாச் சமூகங்களிலும் பலமாக இருந்திருக்கவேண்டும் என அறிஞர்கள் கருதுகிறார்கள். இவற்றின் எச்சங்கள் இன்னும் எல்லாச் சமூகங்களிலும் உண்டு. இப்படியான நம்பிக்கைகளிலிருந்து விலகி, நோய்கள் உண்டாவது குறித்து இருவேறு விதமான பெரும் சிந்தனைப் போக்குகள் அக்காலத் தமிழ்ச் சமூகத்தில் நிலவியிருந்திருக்க வேண்டும். முதலாவது, பொருள் முதல்வாத அணுகுமுறையான அய்ந்திணைக் கோட்பாடு; இரண்டாவது, கருத்து முதல்வாத அணுகுமுறையான முக்குற்ற சமநிலை குலைதல். இவ்வாறான புரிதலுக்கு நம்முன்னோர் வந்தடைந்தது, அதுவரையிலும் நம்பப்பட்ட பில்லி, சூனிய அடிப்படையையே முற்றிலும் தகர்த்த (Paradigm Shift) நிகழ்வாகும். இவ்வாறே சீனர்களின் யின், யாங் கோட்பாடுகள் போன்றவையும் மனிதர்களின் சிந்தனையில் ஏற்பட்ட குறிப்பிடத் தகுந்த மாற்றங்களாகும்.

தமிழர்களின் அய்ந்திணைக் கோட்பாடு, நானறிந்தவரை, மிகுந்த தனித்துவம் வாய்ந்தது. ஏனெனில் வேறெந்த இனத்திலும் இவ்வளவுதூரம் நிலம், பொழுது ஆகியவற்றையும், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் போன்ற மற்ற உயிரினங்களையும் புறவயமாக (Objective) வகைப்பாடு செய்யும் முறையில்லை. இவ்வகைப்பாடு ஒருவகையில் இன்றைய அறிவியல் சிந்தனைகளுக்கு ஒரு முன்னோடி. இன்றைய அறிவியலில், பூமியின் சில குறிப்பிட்ட பகுதிகளில் சில குறிப்பிட்ட நோய்கள் எல்லாக் காலத்திலுமிருக்கும் (Endemic), அதுபோன்றே சில குறிப்பிட்ட பருவகாலங்களில் சில குறிப்பிட்ட நோய்கள், குறிப்பாக கிருமிகளால் பரவும் நோய்கள், அவற்றின் இயல்பான அளவிலிருந்து அதிகரித்துக் காணப்படும் (Epidemic) என்ற புரிதல் உண்டு. இதை அன்றே குறிஞ்சி தொடங்கி அய்வகை நிலங்களில் வாழ்பவர்களுக்கு இன்னின்ன நோய்கள் வரும் என்றும், அதேபோல் கார்காலம் போன்ற வெவ்வேறு பெரும்பொழுதுகளில் இன்னின்ன நோய்கள் பரவும் என நம்முன்னோர் புரிந்து வைத்திருந்தது, இன்றைய அறிவியலின் நோய்விபரவியல் (Epidemiology) சொல்லும் கருத்துக்களோடு ஒப்புநோக்கத்தக்கது. ஆனால், இம்முறை வளர்த்தெடுக்கப்படவில்லை.

நோய்கள் ஏற்படுவதற்கு வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குற்றங்களின் சமநிலை குலைவதுதான் என்றும் அவைகளை நாடிபிடித்து பார்ப்பதின் மூலம் அறிந்துகொள்ளமுடியும் என்ற புரிதலை கருத்து முதல் வாதக் கோட்பாட்டுடன் பொருத்திக்கொள்ளலாம். இதன் தொடர்ச்சியான முக்குணங்கள், ஆறு ஆதாரங்கள், ஐந்து கோசங்கள், வர்மப் புள்ளிகள் போன்றவற்றையும் இவ்வகையிலேயே அடக்கலாம். வேறுவகையில் சொல்வதானால் கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன; பதில்களும் புதிதாக வந்துகொண்டேயிருக்கின்றன. இயற்கையைப் பற்றிய நமது புரிதல் அதிகரிக்கும்போது நமது பதிலிலும் அதிகத் தெளிவு ஏற்படுகிறது. கேள்விகள் அதேதான், பதில்கள் தான் காலந்தோறும் மாற்றம் அடைந்து கொண்டேயிருக்கின்றன. ஆகவே நோய்கள் குறித்த இன்றைய நமது புரிதல் நாளை மாறலாம். அதற்காகச் சிலர் நினைப்பதுபோல் ‘சித்தர்கள் ஞான திருட்டியில் கண்டு சொன்ன பதில்கள்’ நாளை மீண்டும் உறுதிப்படுத்தப்படமாட்டாது. இயற்கையைப் பற்றிய நமது புரிதல் என்பது ஏணிப்படி போன்றது, அதன் உச்சம் மெய்ஞானமடைதல். அதை என்றாவது அடைவோமா என்பதை, இன்றைய நிலையில், கணிக்க முடியாது என்பதே உண்மை. ஆனால், நாம் வாதம், பித்தம், கபம் என்பவை உண்மை என இன்றும் நம்புவது, ஏணியில் பாதிதூரம் ஏறிவிட்டு அங்கேயே நின்றுவிடுவதற்கு ஒப்பாகும்.

இரண்டுவிதமான போக்குகளும் அக்காலத் தமிழரிடையே இருந்ததா, அன்றி கருத்து முதல்வாதம் வெளியிலிருந்து வந்ததா என்பது போன்ற சிக்கலான விடயங்களுக்குள் நான் நுழையவிரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை முற்றிலும் புறவயமான பொருள் முதல்வாதக் கோட்பாட்டை புறக்கணித்துவிட்டு முற்றிலும் அகவயமான முக்குற்றம் என்ற கருத்துமுதல்வாதக் கோட்பட்டை நம் முன்னோர் கைக்கொள்ள ஆரம்பித்ததை ஒரு பெரும் தீயூழாகக் கருதுகிறேன். கருத்து முதல்வாதத்தின் ஈர்ப்பு அத்தகையதாக இருந்திருக்க வேண்டும் அல்லது அதற்கான புறக்காறணிகளை அக்காலத் தமிழ் பண்பாட்டுச் சூழலுடன் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒரு மருத்துவ வரலாற்றாசிரியனின் வேலை. இன்று சித்த மருத்துவதின் அடிப்படையாக கருதப்படுவது கருத்து முதல்வாதக் கோட்பாடுகளே. ஐந்திணைக் கோட்பாடு முற்றிலும் அருகிவிட்டது. எனவே, இத்தொகுப்பில் இன்று சித்த மருத்துவமாகப் புரிந்துகொள்ளப்படும் முக்குற்றத்தை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத்தை என் புரிதலில் விளக்க முயல்கின்றேன்.

தொடர்வேன்...

செவ்வாய், 14 அக்டோபர், 2008

அறிவியலும் சித்த மருத்துவமும் - 2

அறிவியலும் சித்த மருத்துவமும் - 1

மருத்துவம் - அறிவியலா?! கலையா?!

உண்மையில் மருத்துவம் அறிவியலா அல்லது கலையா என்பது இன்றும் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்படும் விடயம். வேறு எந்தத் துறையிலும் இந்தளவு சர்ச்சைகளுக்கு இடமில்லை. உயிரியலின் சிக்கலான அமைப்புதான் (Complexity) இந்த சர்ச்சைகளுக்குக் காரணம். இதே காரணத்தால்தான் நவீன மருத்துவமான ஆங்கில மருத்துவத்திற்கிணையாக மரபு மருத்துவ முறைகளும் இன்னும் பயன்பாட்டிலுள்ளன என்றால் அது மிகையாகாது. இதைப் பின்னர் பார்க்கலாம். பொதுவாக மருத்துவம் கற்பதை அறிவியலாகவும், பயன்படுத்துவதைக் கலையாகவும் கருதுவது நடைமுறை உண்மை (Medicine is a science to learn and an art to practice). ஒரு மருத்துவர் கைராசியான மருத்துவர் எனப் பெயர் வாங்குவதற்கு அவர் நோயாளியிடம் காட்டும் பரிவு உட்பட மேலும் பல மனித மனத்தோடு தொடர்புடைய காரணிகள் தொழிற்படுகின்றன. (உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளின்படி மருத்துவத்தைக் கலையாகக் கையாள்வதில் மாற்று முறை மருத்துவர்கள் சிறந்தவர்கள்).

ஆயினும், தரவு சார்ந்த மருத்துவம் (Evidence based medicine) என்ற ஒருமுறை இப்போதெல்லாம் பரவலாக பயன்பாட்டிற்கு, குறிப்பாக மேலைநாடுகளில், வந்துகொண்டிருக்கிறது. இம்முறையானது மருத்துவம் குறித்த நமது புரிதல்களை அதிகப்படுத்தியுள்ளது; வேறுவகையில் சொன்னால், நோய்கள், அதற்கான காரணீகள், சிகிச்சைமுறைகள் குறித்து நாம் இதுகாறும் கொண்டிருக்கும் நம்பிக்கைகளைக் கட்டுடைக்கின்றது. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்வதானால், வைரஸ் கிருமிகளால் ஏற்படும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றிற்கு ஆன்டிபயாட்டிக்குகளைப் பரிந்துரைப்பதின் அவசியமின்மையை இம்முறை தெளிவுறுத்தியதைக் குறிப்பிடலாம். தரவு சார்ந்த மருத்துவத்தின் முதன்மையான குறிக்கோளே மிகவும் சிக்கலான, நிச்சயத்தன்மையற்ற சூழ்நிலைகளில் முடிந்த அளவிற்கு புறவயமான முடிவுகளை மருத்துவர்கள் எடுப்பதற்கு உறுதுணை புரிவதேயாகும். இம்முறையானது மருத்துவம் செய்வதிலுள்ள கலை அம்சத்தை, குறிப்பாக மருத்துவரது சொந்த முன்தீர்மானங்களைக், குறைத்துவிட்டு அவ்விடத்தில் அறிவியலைப் புகுத்துகின்றது. எனவே இனிவரும் காலங்களில் மருத்துவம் புரிவது மிகுதியும் அறிவியற் சார்ந்ததாகவே இருக்குமேயன்றி கலையாக இராது.

ஏன் இத்தனை மருத்துவ முறைகள்?

சின்ன வயதில் ‘இங்கிலீஸ்’ மருந்துக்கடை என்ற பெயர்ப் பலகைகளைக் காணும்போதெல்லாம் அதென்ன ‘இங்கிலீஸ்’ மருந்துக்கடை என நான் வியப்புற்றிருக்கிறேன். இதற்கான விளக்கம் அநேகமாக நான் சித்த மருத்துவக் கல்லாரியில் சேர்ந்த பிற்பாடுதான் கிடைத்திருக்குமென நினைக்கிறேன். அப்போதுதான் நாட்டு மருந்துக்கடை என்ற ஒன்றிருக்கிறது என்பதே எனக்குத் தெரியவந்தது. இப்போதெல்லாம் ‘இங்கிலீஸ்’ மருந்துக் கடைகளிலேயே அம்மருந்துகளைப் போன்றே பொதி செய்யப்பட்டு நாட்டு மருந்துகளும் கிடைக்கின்றன. ஆங்கில மருந்துக்கடைகளின் பெயர்ப் பலகைகளிலேயே இங்கு சித்தா, ஆயுர்வேத மருந்துகளும் கிடைக்கும் என எழுதப்பட்டுள்ளன. எனவே ‘இங்கிலீஸ்’ மருந்துக்கடை என்ற பெயர்ப்பலகைகளைத் தற்போதெல்லாம் அரிதாகவே காணமுடிகிறது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக நன்றாக உள்ளதால், இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த நிறுவனப் பங்கிலும் கண்ணைமூடிக் கொண்டு முதலீடு செய்தாலும் அது 'நீண்டகால அடிப்படையில்' உறுதியாகப் பலன் தரும் என்று சொல்கிறார்கள். அதுபோன்றே எம்மருந்தை எந்நோயாளிக்குக் கொடுத்தாலும் பெரும்பாலான நேரங்களில் அந்நோய் குணமாகிவிடும் அல்லது கட்டுப்படுத்தப்படும்; இது அம்மருந்தின் உண்மையான வீரியத்தால் அல்ல, மாறாக பெரும்பாலான நோய்கள் தன்னியல்பாகவே குணமாகிவிடுதலாலோ/குறைந்துவிடுவதாலோ அல்லது மனிதமூளை அம்மருந்தை அந்நோய்க்குறியதாகப் பாவித்துக்கொள்வதால் ஏற்படும் விளைவினாலோ இருக்கலாம். இவ்விளைவை மருந்துப்போலி விளைவு (Placebo effect) என்பர். புதிய மருந்துகளின் வீரியமறிய நடத்தப்படும் ஆராய்ச்சிகளில் (Randomised double blind controlled clinical trials) இப்போலிகள் (Placebo) இன்றியமையாத பங்காற்றுகின்றன. மருந்தறிவியலின்படி (Pharmacology) ஒவ்வொரு மருந்திற்கும் நோயைக் குணப்படுத்தவேண்டிய வீரியமிருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக போலிவிளைவும், பக்கவிளைவும் எல்லா மருந்துகளுக்கும் உண்டு.

சீன இயற்பியல் என்றோ அல்லது அரபு வேதியல், ஜெர்மானிய வானியல், இந்திய விலங்கியல் என்றோ அறிவியலில் பிரிவுகள் இல்லை. ஆனால் மருத்துவ முறைகளில் மட்டும் ஏன் இத்தனை பிரிவுகள்? (ஆனால், இப்போது நம்நாட்டில் வேத கணிதம் (Vethic mathematics), வேத வானியல் என்று சொல்லி ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது ஒரு முரண்) இதற்கு, முன்பே விளக்கியது போல, உயிரியலின் இயல்பான சிக்கல்தன்மையும் அதனால் நம் அறிதலில் உள்ள நிலையற்றதன்மையுமேயாகும். உயிரியியல் செயல்கள், வேதியியலிலோ இயற்பியலிலோ பொருள்களுக்கிடையே நடைபெறும் ஒற்றை பரிமாண தன்மையுடைய வினைகளைப் போலல்லாது, பல பரிமாணத் தன்மையுடையவை. விளக்கமாகச் சொன்னால் தண்ணீரை சூடுபடுத்தும்போது 100c செல்ஷியஸில் அது கொதிநிலையை அடைகிறது. இங்கு தண்ணீருக்கும், வெப்பத்திற்குமிடையேயான உறவைக் குலைக்கும் ஒரே காரணி ஆக்சிஜன் அடர்த்தி மட்டுமே. (ஆக்சிஜனின் அடர்த்தி கடல்மட்டத்திலிருந்து ஒரு இடத்தின் உயரத்தினைப் பொறுத்து மாறுபடும்) அதைச் சீராக வைத்துக்கொண்டால் உலகின் எந்தப்பகுதியிலும், எந்த நேரத்திலும் 100 C வெப்பத்தில் தண்ணீர் கொதிநிலையை அடைகிறது. ஆனால் நோய்கள் ஏற்படும்விதம், அவற்றிற்கான மருந்துகள் செயல்படும்விதம் போன்றவை முன்பே குறிப்பிட்டதுபோல் பல பரிமாணத்தன்மையுடையவை. அவற்றை இயற்பியல், வேதியியல் போன்றவற்றை மாதிரிகளாகக் கொண்டு, உயிரியலானது இயற்பியல், வேதியியலின் குறுக்கப்பட்ட வடிவாக இருந்தாலும், மட்டுமே புரிந்துகொள்ள இயலாது.

நோய்களைக் குணப்படுத்துவதைப் பொறுத்தவரை நாம் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற இயல்புள்ளவர்கள். இன்று பெரும்பாலானோர் முதலில் நாடுவது அலோபதி, திருப்தியளிக்காவிட்டால் சித்தா, ஹோமியோபதி. இவற்றிலும் திருப்தியடையாவிட்டால் மசூதிக்குச் சென்று மந்திரித்துக் கொள்வது, பில்லி சூனியம் எடுப்பது என்றளவில் நமது செயல்பாடுகள் இருக்கும். இவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் பெரும்பாலான நோய்கள் கட்டுப்படுத்தப்படுவது போல் தோன்றுவது முன்னர் குறிப்பிட்ட காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். எங்களூர்ப் பகுதிகளில் பார்வை பார்த்தல் என்ற ஒரு ‘மருத்துவம்’ உண்டு. தீராத தோல்நோய்கள், குறிப்பாக கரப்பான், போன்றவற்றிற்கு ‘மருத்துவர்’ ஒரு குச்சியால் நோய்கண்ட இடத்தில் சில மந்திரங்களை முனுமுனுத்துக்கொண்டே தடவுவார். வேறு ஏதும் மருந்துகள் கொடுப்பதில்லை. சென்னையில் சில இடங்களில் சாதாரணக் காய்ச்சல் போன்றவற்றிற்கு மசூதிக்குச் சென்று மந்திரித்துக் கொள்ளும் வழக்கம் உண்டு. இதுபோன்று பல்வேறு பகுத்தறிவிற்கு முரணான, எந்தக் குறிப்பிட்ட முருத்துவ முறையையும் சாராத, பழக்கவழக்கங்கள் எல்லாக் குமூகங்களிலும் உண்டு. அறிவியல் முன்னேறிய இக்காலத்திலும் இத்தனை முறைகளும் புழக்கத்திலிருப்பது, உயிரியலில், பிற அறிவியல் துறைகளோடு ஒப்பிடும்போது, மனிதனுக்கிருக்கும் அறிதல் குறைபாடுதான் (Gaps in knowledge).

தொடர்வேன்...

திங்கள், 13 அக்டோபர், 2008

அறிவியலும் சித்த மருத்துவமும் - 1

1990 - களின் ஆரம்பத்தில் நான் பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்தபோது என் அறை நண்பர்களை சித்த மருத்துவ தத்துவத்தின் முதுகெலும்பாக கட்டமைக்கப்பட்டுள்ள வாத, பித்த, கபத்தின் (முக்குற்றம்) அடிப்படையில் வகைப்பாடு செய்து ஒருவரையொருவர் கிண்டல் செய்துகொள்வதுண்டு. அதாவது, இத்தத்துவத்தின் படி மனிதர்கள் இயல்பாகவே மூன்று குணங்களாகப் பிரிக்கப்படுவர் - சத்துவம், ரஜம், தமம் என்பவையே அந்த மூன்று குணங்கள்; சத்துவம் என்பது மிக உயர்ந்த குணம், தமச குணம் மிகக் கீழான குணம். வாதத் தன்மையை மிகுதியாகக் கொண்டவர்கள் தமச குணம் கொண்டவராகயிருப்பர்; மேலும் அவர்கள் நடந்தால் மூட்டுகளிலிருந்து நெட்டி ஒலி கேட்கும், சற்று உயரமாகயிருப்பர், தூங்கும்போது அரைக்கண் திறந்திருக்கும், கெட்ட சொப்பனம் காண்பர் என்பன போன்று மிக நுணுக்கமான விவரிப்புகள் சித்தமருத்துவப் புத்தகங்களில் காணக்கிடைக்கும். ஒருவரை அவர் வாதத் தன்மை மிகுந்தவரா, பித்தத் தன்மை மிகுந்தவரா அல்லது கபத்தன்மை மிகுந்தவரா என்பதை இத்தகைய சித்தரிப்புகள் மூலம் ஒரளவு விளங்கிக்கொள்ளலாம் எனினும், நாடி பிடித்துப் பார்த்து இதை உறுதிசெய்து கொள்ள வேண்டுமென சித்தமருத்துவ நூல்கள் கூறும். அவ்வாறு நாடி பிடித்து ஆய்வதற்கும் - எந்தெந்த நேரங்களில் பார்க்கவேண்டும், எவ்வாறு பார்க்கவேண்டும் எனப் பல விதிமுறைகளுண்டு.

இயற்கையைப் புரிந்து கொள்வதற்கு இவ்வாறு வகைப்பாடு செய்துகொள்ளுதல் இன்றியமையாதது. அதுவே பகுத்தறிவின் முதல்படி எனக் கொள்ளலாம். காட்டாக வானியலில் நாம் கோள்கள், நட்சத்திரங்கள், வால் நட்சத்திரங்கள் என்று பிரித்து வைத்திருக்கிறோம். உயிரியலில் தாவரங்களுக்கு பெந்தம்-ஹூக்கர் வகைப்பாடு உள்ளது. வாத, பித்த, கபம் போன்றே நவீன மருத்துவத்திலும் A வகைப்பிரிவினர் (Type A personality), B வகைப்பிரிவினர், C வகையினர் என ஆளுமையின் அடிப்படையில் மனிதர்களை வகை செய்வதுண்டு. இன்னின்ன வகையினருக்கு இன்னின்ன நோய்கள் வருவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் என்றளவில் அந்தக் கருதுகோள் செல்லும். இவ்வாறு வகைப்பாடு செய்வதில் ஒவ்வொரு பொருட்களுக்கும்/உயிரினத்திற்கும் உரிய தனித்தன்மைகள் இழக்கப்பட்டாலும் இயற்கைப் பொருட்களைப் புரிந்துகொள்வதில் இது இன்றியமையாதது. ஆனால், சித்த மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் சார்ந்து சொல்லப்பட்டுள்ள வகைப்பாடும், நவீன அறிவியல் கைக்கொள்ளும் வகைப்பாடும் ஒன்றிற்கொன்று முரணானவை; முன்னது அகவயமானது (subjective), மேலும் மீப்பொருண்மையியல் (Metaphysical) சார்ந்தது. ஆனால், பின்னது பெரிதும் புறவயமானதும் (Objective), பொருண்மையியல் (Materialistic) சார்ந்ததுமாகும்.

மருத்துவ அறிவியல் ஒரு பருந்துப் பார்வை

சித்த மருத்துவத்தின் இன்றைய பயன்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு உயிரியல் குறித்த சமகால அறிவும் அவசியம். உயிரியலை / மருத்துவத்தைக் குறுக்கினால் அது இயற்பியலாகவும், வேதியியலாகவும்தான் இருக்கும். நமக்கு மிகவும் புதிராகவுள்ள உயிர் என்பது என்ன? நம் சிந்தனைகள் என்பவை யாவை? என்பவை குறித்து அறிவியல் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வந்துவிட்டது. அதாவது இவைகளும் பொருண்மைத் தன்மை வாய்ந்தவைதான் என்பதே அது. ஆயினும் இன்றைய அறிவியலால் சடப்பொருள்களிருந்து வேதிவினைகள் மூலம் ஒரு உயிரையோ அல்லது சிந்தனைகளையோ உருவாக்க முடியவில்லை. ஒரு உயிரியிலிருந்து இன்னொரு உயிரியைப் போலச் செய்யமுடியும் (Cloning), ஆனால் வெறும் சடப்பொருளிலிருந்து முற்றிலும் புதிதாக ஒரு உயிரியை உருவாக்க இன்னும் நம்மால் முடியவில்லை.

அதேபோல ஒரு நோய் எவ்வாறு ஏற்படுகிறது என்பதற்கான முழுமுற்றான அறிவு இன்னும் புலப்படவில்லை. நோய்கள் குறித்த எல்லா அறிதல்களும் பல்வேறு சாத்தியக்கூறு மாதிரிகளைக் (Probabilistic models) கொண்டு உருவாக்கப்பட்டவைதாம். நவீன அறிவியல் / மருத்துவம் எல்லா நோய்களுக்கும் தீர்வு கண்டுவிட்டது என நாம் பொதுவாக நம்புவது ஒரு மாயைதான்; உண்மையல்ல. உண்மையில் அது எந்த நோய் குறித்தும் முடிந்தமுடிவான தீர்வு எதையும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை; கண்டுபிடிக்குமா என்று ஊகிக்கவும் முடியாது. தடுப்பூசிகளும், ஆன்டிபயாட்டிக் மருத்துகளும் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பெருமளவு வெற்றி பெற்றிருந்தாலும் அவை முழுத்தீர்வாகாது. நம் எல்லோருக்கும் தெரியும் எய்ட்ஸ் நோயை HIV வைரஸ் கிருமிதான் உண்டாக்குகிறது என. நாம் நினைப்பதுபோல் HIV வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர் அனைவருக்கும் எய்ட்ஸ் வந்துவிடாது. அதாவது உங்கள் உடலில் HIV வைரஸை நீங்கள் கொண்டிருந்தாலும் உங்களுக்கு எய்ட்ஸ் வராமலேயே இருக்கலாம். வேறுவகையில் சொல்வதானால் வைரஸ் உடலிலிருப்பது எய்ட்ஸ் வருவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறதே தவிர அதுமட்டுமே நோயை உண்டாக்குவதில்லை. இன்னொரு சிறந்த உதாரணம் சொல்லவேண்டுமானால் காச நோயை எடுத்துக்கொள்ளலாம். நம்மில் பலரும் காசநோயை உண்டாக்கும் கிருமியான மைக்கோ பாக்டீரியம் டியூபர்குலோசிஸை உடம்பில் கொண்டிருப்போம். ஏனெனில், இந்நோய் இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் எப்பொழுதுமே சிலருக்கு இருக்கும் (Endemic), ஆனாலும் நம்மில் பலருக்கும், அக்கிருமியை நாம் உடம்பில் கொண்டிருந்தாலும், அந்நோய் வருவதில்லை. காரணம் அக்கிருமியால் நோயை முழுவீச்சில் உருவாக்குவதில் தொழிற்படும் பிறகாரணிகள், காட்டாக குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை, பலருக்கு அமையப்பெறாததே. கிருமியும் மற்ற புறக்காரணிகளும் பொருந்திவரும் சாத்தியக்கூறுகள் கூடிவரும்போது காசநோய் முழுவீச்சில் ஒருவருக்கு ஏற்படுகிறது. அதே சமயம் மற்ற புறக்காரணிகள் இருந்தாலும் கிருமி இல்லாவிட்டால் காசநோய் ஒருவருக்கு ஏற்படாது. வேறுவகையில் சொல்வதானால் கிருமியை இன்றியமையாத காரணியாகவும் (Necessary cause), மற்ற காரணிகளை போதுமான காரணிகளாகவும் (Sufficient cause) கொள்ளலாம்.

இவ்வாறே இன்றியமையாத காரணிகளும், போதுமான காரணிகளும் சேர்ந்தால் உண்டாகும் பல்வேறு சாத்தியக்கூறுகளினாலேயே எல்லா நோய்களுக்கும் உண்டாகின்றன என்பதே தற்போதைக்கு அறிவியலாளர்கள் வந்துள்ள முடிவு. இதை நோய்க்காரணிகளின் வலைப்பின்னல் (Web of disease causation) என்பர். இன்னும் பல நோய்களுக்கு, குறிப்பாக கிருமிகளில்லாமல் (Non-infectious) ஏற்படும் நோய்களுக்கு, இன்றியமையாத காரணிகள் என்னவாக இருக்கலாம் என்ற புரிதல் சரிவர இல்லை. அதுபோன்றே போதுமான காரணிகள் பல புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன.

தடுப்பூசிகளின் பயன்பாடும் மேற்கூறியவாறு சாத்தியக்கூறுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. திரள் நோய் எதிர்ப்பு சக்தி (Herd immunity) என்ற அடிப்படையில் தடுப்பூசிகள் பயன்படுகின்றன. அதாவது, ஒரு குமுகாயத்தில் உள்ள மக்கள் கூட்டத்தின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் (குறைந்த பட்சம் - 80%) மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவும் ஒரு குறிப்பிட்ட நோய்க்கெதிரான எதிர்ப்பு சக்தியைப் பெறும்போது அந்நோய் அச்சமூகத்தில் மேலும் பரவாமல் தடுக்கப்படுகிறது. ஆனால் அச்சமூகத்தில் மேலும் புதிய நபர்கள் சேரும்போது, அதாவது, புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் அல்லது வேறு இடங்களிலிருந்து வந்து குடிபெயர்ந்தோரின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டோரின் சதவிகிதம் குறையும்போது மீண்டும் அந்நோய் அச்சமூகத்தில் பெருமளவில் (Epidemic) ஏற்படுகிறது. இங்கு கவனிக்கப்படவேண்டியது என்னவெனில், அக்குறிப்பிட்ட நோய்க்குக் காரணமான கிருமி எப்போதும் அச்சமூகத்தில் இருந்துகொண்டேயிருக்கும் (Endemic); தடுப்பூசிகள் மூலம் நாம் செய்வதெல்லாம் அக்கிருமிகள் மேலும் பரவுவதற்குத் தேவையான தொடர் சங்கிலிகளில் ஒன்றான அந்நோய்க்கெதிரான எதிர்ப்பு சக்தியற்றோரின் சதவிகிதத்தைப் பெருமளவில் குறைப்பதேயாகும். இதனால் அந்நோய்க்கிருமி முழுதாக அழிந்துவிடுவதில்லை, மாறாக அக்கிருமி நோயைப் பெருமளவில் தோற்றுவிப்பதற்குத் தேவையான சங்கிலியின் கண்ணி அறுக்கப்பட்டுவிடுகின்றது. இவ்வாறுதான் சின்னம்மை ஒழிக்கப்பட்டது. இளம்பிள்ளைவாதத்திற்கெதிரான போரும் இவ்வடிப்படையிலேயே நடந்துவருகிறது. சின்னம்மைக் கிருமிக்கு மனித உடம்பைத் தவிர வேறு உறைவிடம் இல்லாததால் சின்னம்மை ஒழிப்பு சாத்தியப்பட்டது. ஆனால் கிருமிகளால் பரவும் மற்ற நோய்களை முற்றிலும் ஒழிப்பது சற்று கடினம்தான்.

இவ்வாறாக உயிரியல் எண்ணற்ற சாத்தியக்கூறுகளினால் (Infinite probability), பரிமாண இயங்கியலில் மனிதன் தோன்றியது உட்பட, கட்டமைக்கப்பட்டுள்ளது. நாம் நினைப்பது போலல்லாமல், அது மிகவும் நுட்பமும், சிக்கலும் உடையது. இவ்வகையில் அது குவாண்டம் இயற்பியலோடு ஒப்பிடத்தக்கது. குறிப்பாக ஒன்றைமட்டும் வலியுறுத்த வேண்டுமென்றால், அது, நோய்கள் நாம் நினைப்பது போல் ஒரு திட்டவட்டமான ஒழுங்கான வழிமுறையில் காரணிகள் வினைபுரிவதால் ஏற்படுவதில்லை; மாறாக முடிவற்ற காரணிகளின் தீர்மானிக்கமுடியாத (Random/Unpredictable) தொடர்ச்சியான வினைகளினால் விளையும் எண்ணற்ற சாத்தியக்கூறுகளில் ஒன்றாகவே ஏற்படுகின்றன. வேறுமுறையில் சொல்வதானால், நிச்சயிக்கமுடியாத ஒழுங்கற்ற இந்தத் தொடர்ச் சங்கிலியில் ஒரு ஒழுங்கமைவை உருவகித்துக்கொண்டு (Assuming a pattern in the unpredictable chaotic chain of events) நோய்களுக்கு நாம் மருந்துகள் கொடுக்கிறோம்; பல நேரங்களில் அம்மருந்துகள் வேலை செய்வது, குருவி உட்காரப் பனம்பழம் விழுவதைப் போன்ற, தற்செயல் நிகழ்வாகவுமிருக்கலாம். ஒரு நிகழ்வு காரண-காரிய விளைவால் ஏற்பட்டதா (அ) தற்செயலலாக நடந்ததா என்பதைக் கண்டறிய அந்நிகழ்வு காரண-காரிய உறவுகளைக் கண்டறியும் சில வரையறைகளைத் (AB Hill’s Causal criteria) திருப்திப்படுத்தவேண்டும்.

ஒரு காலகட்டத்தில் அறிவியல் எல்லா நிகழ்வுகளையும் ஒரு திட்டவட்டமான, தீர்மானிக்கமுடிந்த, காரண-காரிய வகைகளுக்குள் அடக்கிவிடலாம் எனக் கருதியது. ஆனால், குவாண்டம் இயற்பியல் இந்த நம்பிக்கையைக் கலைத்துப்போட்டது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற கூற்றுகளில் ஒன்று “கடவுள் பகடையாடமாட்டார்” (God does not play dice) என்பது. இது அவர் குவாண்டம் இயற்பியல் குறித்துச் சொன்னது. ஆனால் அவர் நம்பியதற்கு மாறாக குவாண்டம் இயற்பியல் அவரது வாழ்நாளிலேயே தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. குவாண்டம் இயற்பியலின் வரவிற்குப் பிறகு நம் எல்லா அறிவியல் துறைகளும், மருத்துவ அறிவியல் உட்பட, தீர்மானிக்க முடிந்த திட்டவட்டமான மாதிரிகளினால் (Deterministic models) ஆன அறிவுப்புலத்திலிருந்து, பல்வேறு சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் (Probabilistic models) இயங்கும் அறிவுப்புலத்தை வந்தடைந்துள்ளன. எப்படி பாரம்பரிய இயற்பியலின் (Classical physics) விதிகள் குவாண்டங்களின் தளத்தில் (நுண்ணிய அளவில் - micro level) செயலற்றுவிடுகின்றனவோ, அதுபோன்றே உயிரியலிலும் நுண்தளத்தில் நடக்கும் எல்லா செயல்களும் நிச்சயமற்ற தன்மையுடையவை (Uncertain). மேலோட்டமாகப் பார்ப்பதற்கு அவை நூல்பிடித்தாற்போன்று ஒரு ஒழுங்கான லயத்துடன் செயல்படுவதுபோல் தோன்றினாலும் அது நமது கற்பிதமே.

சுருக்கமாகச் சொன்னால் மற்ற அறிவியல் துறைகளைப் போன்றே உயிரியலிலும் ஆன்டிபயாட்டிக்குகள், தடுப்பூசிகள், மரபியல் தொகுப்புகள் எனப் பெரும் பாய்ச்சல்கள் நிகழ்த்தப்பட்டிருப்பினும், நோய்களை வெல்வதில் மனிதன் செல்லவேண்டிய தூரம் இன்னும் நிறையவுள்ளது. அதை என்றாவது நாம் அடைவோமா என்பதற்கு அறிவியலிடம் பதிலில்லை. ஆருடம் தான் கணிக்கவேண்டும்!!

(will continue)