பக்கங்கள்

திங்கள், 17 செப்டம்பர், 2007

ஞான ராசசேகரனின் பெரியார்...

நேற்று, கலைஞர் தொலைக்காட்சியில் ஞான ராசசேகரன் இயக்கிய பெரியார் திரைப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பொதுவாக எனக்கு ஞான ராசசேகரன் இயக்கத்தில் வந்த படங்கள், குறிப்பாக பாரதியார், அவ்வளவாகப் பிடித்ததில்லை. ஏனெனில, அவர் திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம் என்ற நுட்பத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றெனக்கொரு எண்ணம் உண்டு. ஆயினும், அவர் தமிழ் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த அளவில் மாற்றங்களை ஏற்படுத்திய ஆளுமைகள் குறித்து திரைப்படங்களை எடுப்பது குறித்து எனக்கு மதிப்பும் உண்டு.

தொன்னூற்று ஒன்பது ஆண்டுகள் போராட்ட வாழ்க்கை வாழ்ந்த ஒரு பெரும் ஆளுமையை அவ்வளவு எளிதில் மூன்று மணிநேர திரைப்படத்தில் கொண்டுவந்துவிட முடியாதுதானெனினும், படம் ஒரே கோர்வையாக இல்லாமல், தனித்தனியே காட்சிகள், லம்பாடி லுங்கி போல், ஒட்டுச் சேர்க்கப்பட்டதுபோல் இருந்தது. ஞான ராசசேகரனின் படங்களின் பொதுவான அம்சமான காட்சி ஊடகத்தை நுட்பமாகக் கையாளாதது இப்படத்திலும் பெருமளவிலிருந்தது. மாதிரிக்கு ஒரு காட்சி; பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்துகொள்வது குறித்து ராசாசியிடம் ஆலோசனை கேட்டுவிட்டுச் செல்லும்போது, ராசாசி பேசுவதாக அமைக்கப்பட்டுள்ள வசனங்கள் (நானும் ராமசாமி நாயக்கரும் பால்ய சிநேகிதர்கள்... அவர் இபோதுவந்து வந்து என்னைப் பார்த்துச் செல்வது நாளைய தமிழகத்தில் ஒரு வரலாற்று நிகழ்வாக சித்தரிக்கப்படும் என்ற ரீதியில் அமைந்தவை) தேவையற்றது என்பது என் எண்ணம். அவ்வசனம் இல்லாமலே அக்காட்சி எல்லோருக்கும் புரியும். எங்கே இம்முக்கிய நிகழ்வை மக்கள் புரிந்துகொள்ளாமல் போய்விடுவார்களோ என்ற இயக்குநரின் அதீத பயம் தெளிவாகத் தெரிகிறது. இதுபோன்றே பல காட்சிகள் அமைந்துள்ளன.

இப்படத்தில் சத்யராசின் நடிப்பு மிக நன்றாக இருந்தது. எப்பொதுமே பெருங்குரலெடுத்து சினிமாவில் வசனம் பேசும் அவர் இதில் முற்றிலும் வித்தியாசமான முறையில் நடித்திருக்கிறார். அவரது உயரமும் (பெரியாரும் நல்ல உயரமானவர் என்றே என எண்ணுகிறேன்) கதாபாத்திரத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலமைந்திருந்தது. மொத்தத்தில் இப்படத்தைப் பார்த்தபின் பெரியாரின் வாழ்வு குறித்த நம்பத்தகுந்த ஆவணமாகக் கைக்கொள்ளப்படும் வே. ஆனைமுத்துவின் தொகுப்புகளை படிக்க வேண்டுமென்ற என் ஆர்வம் மேலும் அதிகமானது. அதுவே இப்படத்தின் வெற்றியென நினைக்கிறேன்.

ராமர் பாலமும், குமரிக் கண்டமும்...

ராமர் பால அரசியல் நாட்டையே அல்லோலகல்லோல படுத்திக் கொண்டிருக்கிறது. ராம சென்ம பூமி பிரச்சனையைக்கொண்டு வட இந்தியாவைக் கூறுபோட்ட பா. ச. க, ராமர் பால பிரச்சனையை வைத்து தென்னிந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும், ஆழக்காலூன்றவேண்டும் என்ற முனைப்பில் செயலாற்றிக்கொண்டிருக்கிறது. கோமாளி சுப்பிரமணிய சாமியும், சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட செயலலிலாதாவும் இதற்கு ஒத்து ஊதிக்கொண்டிருக்கிறார்கள்.

நாட்டிலுள்ள எந்த அரசியல் கட்சியும், எனக்குத் தெரிந்தவரை, சேது சமுத்திரத் திட்டத்தினால் ஏற்படப்போகும் சூழலியல் பாதிப்புகள் குறித்து கவனம் கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்படப்போகும் சுழலியல் பாதிப்புகள், இத்திட்டத்தினால் ஏற்படப்போகும் பொருளாதார ஆதாயங்களைவிட குறைவானதுதானா (பொருளாதார ஏற்றம் (Vs) சூழலியல் பாதிப்புகள் என்பதே கணக்கிட முடியாதுதான் என்றாலும்) என்ற ரீதியில் கூட தஙக்ளது கருத்துக்களை எடுத்துவைக்கவில்லை. முதலில் அ.இ.அ.தி.மு.க சூழலியல் காரணங்களுக்காக இத்திட்டதை எதிர்ப்பதாக நீலிக்கண்ணீர் வடித்தாலும, அதன் தலைமையின் பண்புகளை அறிந்தவர்களுக்கு அது ஒரு பகல் வேசம் என்பது தெரிந்தே இருந்தது. இப்போது அதிமுகவின் அப்பன் குதிருக்குள்ளிருந்து வெளிப்பட்டுவிட்டான்.

அதேநேரத்தில், ராமர் பாலம் என்றழைக்கப்படுவது ராமரால் கட்டப்பட்டதல்ல எனப் பகுத்தறிவுபேசும் தமிழ்த்தேசியவாதிகள் சிலர் குமரிக்கண்டம் என்றுவரும்போது மட்டும் தம் பகுத்தறிவுக்கண்ணை மூடிக்கொண்டுவிடுவர். இவ்விசயத்தில் இந்துத்துவவாதிகளுக்குச் சற்றும் சளைத்தவர்களல்ல நமது தமிழ் தேசியவாதிகள். எப்படி ராமர் பாலம் என்பது ஒரு புராணமோ, அது போன்றே குமரிக் கண்டம் என்பதும். இரண்டுமே அறிவியலால் நிராகரிக்கப்பட்ட கருத்தாக்கங்கள். புராணத்தை வரலாறாகத் திரித்து அதற்குப் போலி அறிவியல் முலாம் பூசி, மக்கள்தம் உணர்ச்சிகளோடு விளையாடுவதற்கு ஒரு கூட்டம் எப்போதும் தயாராகவே உள்ளது. இதில் இந்துத்துவா என்ன, தமிழ்த் தேசியம் என்ன - இரண்டும் அடிப்படைவாதம் என்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

சனி, 15 செப்டம்பர், 2007

அறிவியல் உண்மைகளும், வெகு மக்கள் உணர்ச்சிகளும்

ராமரோ அல்லது ராமாயணக் கதாபாத்திரங்களோ வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லையென இந்திய தொல்பொருள் துறையினர் உச்ச நீதிமன்றத்திற்கு முதலில் தாக்கல் செய்த அறிக்கைக்காக இரண்டு அறிவியலாளர்கள் இடைநீக்கம் செய்ய்ப்பட்டுள்ளர்கள். ராமாயணம் ஒரு புராணம். ஆனால், அது இந்திய மக்களின் உணர்ச்சி சம்பந்தப்பட ஒரு விசயம். இவ்விசயம் குறித்து அறிவியல் அறிக்கை அளிக்கும் பொழுது, ராமர் என்ற 'அவ்வளவு பெரிய ஆகிருதி' வாழ்ந்து மறைந்ததற்கான அறிவியல் ஆதாரங்கள் இல்லாதபட்சத்திலும், தொல்பொருள் துறையினர் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டிருக்கவேண்டும்.

ராமர் பாலம் எனச் சொல்லப்படும் அந்தப்பகுதி ராமரால் கட்டப்பட்டது அல்ல மாறாக அது இயற்கையாய் அமைந்த ஒரு அமைப்பு என்று என்று மட்டும் சொல்லி நிறுத்தியிருந்தால்கூட, இவ்வளவுதூரம் பிரச்சனையாகியிருக்காது. (இந்துத்துவவாதிகள் அதையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது வேறுவிசயம்). ஆனால் ராமரே வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லையெனக்கூறும்போது, பெரும்பான்மையான இந்துக்களுக்களின் உணர்வு மற்றும் சிறுபான்மை இந்துத்துவவாதிகளின் பிழைப்பின் அடிமடியிலேயே கைவைப்பதாகும். இதை அரசு தவிர்த்திருக்கலாம்.

இந்த அறிக்கை, அறிவியல் என்னும் உச்சாணிக்கொம்பிலிருப்பதாக நினைத்துக்கொன்டு, வெகு மக்கள் நம்பிக்கைகளிலிருந்து - அது தவறாகவேயிருந்தாலும், வெகுதூரம் சென்றுவிட்ட சில அறிவியலாளர்களின் முந்திரிக்கொட்டைத்தனத்தால் ஏற்பட விளைவு என்பதே என் எண்ணம். அறிவியல் உண்மைகளை வெளிப்படுத்தும்போது மிகுந்த பொறுப்புணர்ச்சி தேவை என்பதற்கு இந்நிகழ்வு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

இதைத்தான் சொந்தச் செலவில் அரசே தனக்கு சூனியம் வைத்துக்கொண்டது என்பதோ?! (சூனியம் வைப்பது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலுங்கூட)

புதன், 12 செப்டம்பர், 2007

இரண்டு புகைப்படங்கள் - வெவ்வேறு செய்திகள்




முதலாவது இன்று காலை செய்தித்தாள்களில் (சென்னையில் வால்வோ பேருந்துகளை தமிழக அரசு இயக்க முடிவெடுத்துள்ளது குறித்து) வந்தது. இரண்டாவது இன்று மாலை நான் என் அலுவலகத்திற்கருகே கண்ட காட்சி.