பக்கங்கள்

வெள்ளி, 24 நவம்பர், 2006

வலைப்பதிவர் சந்திப்பு நடத்திய பாலபாரதிக்குக் கண்டனங்கள்

சென்னையில் கடந்த ஞாயிரன்று வலைப்பதிவர் சந்திப்பை, சென்னைப்பட்டிண நண்பர்களுடன் சேர்ந்து ஏற்பாடு செய்து, முன்னின்று நடத்தி நொந்து நூலாகி, அந்து அவலாகியிருக்கும் பாலபாரதியின் மேல் எனக்கு ஒரு வருத்தம். என்னடா ஏற்கனவே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறானே என நினைக்கிறீர்களா? அப்புறம் என்னுடய கோபத்தையும் (நியாயமான?!) பதிவு செய்யவேண்டாமா?

சரி சரி மேட்டருக்கு வாடான்னு நீங்க சொல்றது என் காதில் விழுகிறது. விசயம் இதுதான்; வலைப்பதிவர் சந்திப்பு முடிந்ததும், ஒரு சிறு குழு மட்டும் (வேற வேலை வெட்டி இல்லாத பசங்க - என்னையும் சேர்த்துத்தான்) ஏதாவது ஒரு உணவகத்திற்குச் (நன்றாகக் கவனிக்கவும் - உணவகம்) சென்று சாப்பிட்டுக்கொண்டே பேசலாம் எனத்தீர்மானிதோம். எங்கே செல்லலாம் என நடு ரோட்டில் விவாதம் நடைபெற்றது. எழும்பூர் தவிர வேறு எங்கு கூப்பிட்டாலும் நான் வரமாட்டேன் எனக் குழந்தை பாலபாரதி மட்டும் அடம்பிடித்தது. அப்பதான் எனக்குப் புரிந்தது, அவருக்கு ஏன் குழந்தை பட்டம் சூட்டினார்கள் என்று. ஆனால், அக்குழுவில் பெரும்பாலோர், என்னையும் பாலபாரதியையும் தவிர, தென் சென்னைகாரர்களாக இருந்ததால், தி. நகரிலுள்ள ஏதாவது ஒரு உணவகத்திற்குச் செல்லலாம் என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. நாங்களெல்லாம் எந்த உணவகம் வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கு பக்கம் என ஆராய்ந்து கொண்டிருந்தால், முத்து தமிழினி மட்டும் ஹாயாக இருந்தார். என்னன்னு விசாரிச்சப்பதான் தெரிஞ்சது; லக்கியார், முத்துவை அவரது வீட்டில் டிராப் பண்ணப்போகிறார் என்ற விசயமே.

ஒருவழியாக உணவகம் போய்ச்சேரும்போதே இரவு மணி எட்டாகிவிட்டது. நான், அன்று சவேரா ஹோட்டலில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு கவிதைப் புத்தக வெளியீட்டுவிழாவை, எனக்கு அழைப்பிதழ் இருந்தும், இவ்வலைப் பதிவர் சந்திப்பினால் தவிர்த்துவிட்டேன். ஏற்கனவே அந்தக் கடுப்பில் இருந்த என்னை, மேலும் கடுப்பேற்றும் விதமாக பாலபாரதி, நான் வீட்டிற்குப் போகும் வழியில் தன்னையும் இறக்கிவிட்டுவிட வேண்டுமென கண்டிப்புடன் கூறிவிட்டார். என்னால் முடியாது எனக்கூறவும் தர்மசங்கடமாகிவிட்டது. ஏனெனில் அன்று எனக்குப் பிறந்தநாள் வேறு, அதை உளறித் தொலைத்துவிட்டால் மொத்த பில்லையும் நம் தலைமேல் கட்டிவிடுவார்களே என்ற பயம்தான்? ஏற்கனவே ஓகை வேறு, உங்களுக்கு இப்போதுதான் குழந்தை பிறந்துள்ளதால் நீங்கள்தான் பார்ட்டி கொடுக்கிறீர்களா எனக் கேட்டிருந்தார். நல்லவேளையாக அவர் கேட்டது வரவணையான் காதில் விழவில்லை (அவர்தானே பார்ட்டிக்கு எல்லாரையும் கூப்பிட்டது). ஒருமணி நேரத்தில் கிளம்பி விடலாம் என பாலபாரதி சொன்னதை நம்பி அங்கு வந்தது எவ்வளவு தப்பு என்பது போகப்போகத்தான் தெரிந்தது. ஒன்பது, ஒன்பதரை ஆகி இரவு பத்தும் ஆகிவிட்டது.

ஆனால் ஒருவரும் கிளம்புவது மாதிரி தெரியவில்லை. அதற்குள் என் துணைவியாரிடமிருந்து செல்பேசியில் அழைப்புகள் வரத்தொடங்கியிருந்தன. எங்களுக்கு குழந்தை பிறந்த பின்பு எனக்கு வரும் முதல் பிறந்தநாள் அல்லவா, மூன்று பேரும் செர்ந்து கொண்டாடலாம் என துணைவியார் திட்டம் போட்டிருந்தார். நானோ எட்டு மணிக்கெல்லாம் அங்கு வந்துவிடுகிறேன் எனக்கூறிவிட்டு, அவ்வளவு நேரமாகியும் வராததால் அவரும் பொறுமையிழந்து, உங்களுக்கு பொண்டாட்டி புள்ளையைவிட உங்கள் நண்பர்கள்தான் முக்கியம் எனத் திட்ட ஆரம்பித்துவிட்டார். இதற்கிடையில் என் அப்பாவிடமிருந்து வேறு எப்போ வர்ற என அழைப்புகள். நான் மறுநாள் அதிகாலை பூனா செல்ல வேண்டியிருந்தது. அதற்கு நான் அதுவரை என் துணிமணிகள் எதையும் எடுத்து வைத்திருக்கவில்லை. அதற்குத்தான் அவர் என்னை செல்பேசியில் அழைத்து, உனக்கு எப்பவும் எல்லாவற்றையும் கடைசி நேரத்தில் செய்வதே வாடிக்கையாகிவிட்டது என திட்டிக்கொண்டிருந்தார். எல்லாவற்றையும் சாமாளித்து ஒரு வழியாகக் கிளம்பலாம் என நினைக்கையில், பாலபாரதியின் (திருமணம் ஆகாதவர் என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது) செல் செல்லமாகச் சிணுங்கியது. அந்த ரிங் டோனைக் கேட்டதும், பாலபாரதி ஓரமாக ஒதுங்கி ஏதோ குசு குசுவென்று பேசினார். இதைக் கவனித்துவிட்ட முத்து தமிழினி, வரவனையானிடம் ஏதோ சைகை செய்தார். உடனே வரவனையான், பாலபாரதி அருகில் செல்ல முயற்சிக்க, பாலா அவரை விரட்டிவிட்டார். ஒருவழியாக அவர் பேசிமுடித்ததும், அவரை இழுத்து நேரமாகிவிட்டது என உணர்த்தினேன். அதற்குள் மணி 10.45 ஆகிவிட்டிருந்தது. பின்பு நானும், அவரும் மட்டும் கிளம்பி வீட்டிற்குச் சென்றோம். பாலபாரதியை கெல்லீஸ் சிக்னலில் இறக்கிவிட்டு விட்டு நான் வீடு போய்ச் சேரும்போது 11.30 ஆகிவிட்டது. என் மனைவிக்கு, நான் மறுநாள் காலை பூனா செல்லும்முன்பு அவரையும், குழந்தையையும் பார்க்க வருகிறேன் என ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டேன். தொலைபேசினால், திட்டுவாங்கனுமே அதான். (என் மனைவி, தற்போதுதான் குழந்தை பிறந்துள்ளதால், அவரது அம்மா வீட்டில் உள்ளார்) பின்பு என் வீட்டிற்குச் சென்று அப்பாவிடம் திட்டுவாங்கிக் கொண்டே துணிமணிகளை சூட்கேசில் அடுக்கினேன்.

இவ்வாறு, அன்று வலைப்பதிவர் சந்திப்பு நடத்தியதன் மூலம் என்னை பல்வேறு தர்ம சங்கடங்களுக்கு ஆளாக்கியதற்காக பாலபாரதியைக் கண்டித்து ஒரு பதிவு போடாவிட்டால் நான் என் கடமையிலிருந்து தவறியவனாவேன். எனவே தான் இந்தப் பதிவு.

குறிப்பு: என்னதான் என் மனைவியிடமும், அப்பாவிடமும் நான் திட்டுவாங்கி இருந்தாலும், (வழக்கமாக வாங்குவதுதான், ஹி! ஹி!) அவ்வலைப் பதிவர் சந்திப்பின் மூலம் அதுவரை முகம் தெரியாத பல நல்ல நண்பர்களை நேரில் சந்திக்க முடிந்தது. அதுவே நான் வாங்கிய திட்டையெல்லாம் மறக்கச் செய்துவிட்டது. அதற்கு வழிவகை செய்த பாலபாரதிக்கும், ஏனைய சென்னைப் பட்டிண நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

வியாழன், 16 நவம்பர், 2006

நான் தந்தையானபோது...

கடந்த ஒன்றாம் தேதி (01/11/2006) எங்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அன்று என் மனைவிக்கும் பிறந்த நாள் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. நவம்பர் ஒன்றுதான் டுஎ டடெ என ஏற்கனவே எங்களுக்கு தெரியும். ஆயினும் அக்டோபர் 24ம் தேதியே குழந்தை பிறந்துவிட்டால் நல்லது என நினைத்தோம். ஏனெனில் அன்று எங்களுக்குத் திருமணநாள். ஆனால் மகப்பேறு மருத்துவர், அதற்கு முந்தைய பரிசோதனையன்று கண்டிப்பாக குழந்தை 24ஆம் தேதியன்று பிறக்காது என்றும், நவம்பர் 1ஆம் தேதி தாண்டினாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை எனவும் கூறிவிட்டார். ஆதனால் நவம்பர் ஒன்று அன்று ஒரு ஸ்கேன் செய்துவிட்டு ஆஸ்பிட்டலில் வந்து சேர்ந்துகொள்ளும்படியும் கூறிவிட்டார். என் மனைவிக்கு இரத்தத்தில் சிறிது சர்க்கரை அளவு கூடுதலாகயிருந்ததால் (Gestational diabetes) நவம்பர் 1ஆம் தேதியே பிரசவ வலியை வரவழைத்து, குழந்தைக்கு ஏதும் பிரச்சனைகள் வராமல் தடுக்கும் பொருட்டு, குழந்தையை பிரசவித்துவிடலாம் எனச் சொல்லியிருந்தார். ஆனால், நல்லவேளையாக நவம்பர் 1ஆம் தேதி அன்று அதிகாலை 3 மணிக்கே வலி ஏற்பட்டு என் மனைவியை ஆஸ்பிட்டலில் சேர்த்து விட்டோம். பிரசவ வலி விட்டு விட்டு வந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அதிகமாகிக் கொண்டிருந்தது. வலி தெரியாமல் இருக்க என் மனைவிக்கு பெத்தடின் ஊசி போட்டிருந்தார்கள். அதையும் மீறி அவர் வலியால் துடிப்பதைப் பார்க்க பாவமாக இருந்தது. பெண்களால் மட்டும்தான் அதை உணர முடியும். மாலை 3 மணியாகியும் குழந்தை பிறக்கவில்லை. Cardiotocography - CTG என்ற கருவியைக் கொண்டு தொடர்ந்து கருப்பை சுருங்கி விரிதலையும், கருவின் இதயத்துடிப்பையும் கண்காணித்துக் கொண்டிருந்தனர். 4.30 மணிக்குள் பிறந்துவிடும் என மருத்துவர் கூறியிருந்தார்.

3.30 மணிவரை பிரசவ அறையிலேயே என் மனைவியுடன் இருந்தேன். எனக்கு தலைவலி அதிகமாக இருந்ததால் சற்று தூரம் நடந்து சென்று ஒரு காபி அருந்தினால் நன்றாகயிருக்கும் என்றெண்ணி சற்று வெளியில் வந்தேன். 4.30 மணிக்குத்தானே இன்னும் நேரமிருக்கிறதே என்றெண்ணி சாலையின் மறுபுறம் கடந்து சற்றுதொலைவு சென்றிருப்பேன், திடீரென்று ஆஸ்பிட்டலில் இருந்த எனது உறவினரிடமிருந்து எனக்கு செல்பேசியில் அழைப்பு. உடனே வரும்படியும் குழந்தைக்கு ஆபத்து என்பதால் அறுவை சிகிச்சை செய்யப்போவதாகவும் கூறினார். ஆஸ்பிட்டல் அமைந்திருந்த பூந்தமல்லி நெடுஞ்சாலையின் எதிர்புறம் செல்வதற்குள் இரண்டுமுறைகள் செல்பேசியில் அழைப்பு; விரைந்து வரும்படியும் என் மனைவியை ஆப்பரேசன் தியேட்டருக்குள் அழைத்துச் செல்வதாகவும் அவசரப்படுத்தினார். எனக்கோ சாலையைக் கடக்கும்போது, மனித வாழ்க்கையின் இந்த அருமையான தருணத்தில், எனக்கேதேனும் விபத்து நடந்து விடக்கூடாதே என்ற பயம் வேறு சேர்ந்துகொண்டது. ஒருவழியாக ஓட்டமும் நடையுமாய் 3வது மாடியிலிருந்த பிரசவ அறையை அடையும் போது என் மனைவியை கிட்டத்தட்ட அறுவை சிகிச்சை அறைக்குள் கூட்டிச் சென்றிருந்தார்கள். கிட்டத்தட்ட மயக்க நிலையிலிருந்த என்மனைவியைப் பார்க்க கவலையாக இருந்தது. என்னால் அந்தநிலையை ஜீரணிக்கவே முடியவில்லை. ஏனெனில், கண்டிப்பாக அறுவை சிகிச்சை கூடாது என்பதில் நாங்கள் மிக உறுதியுடன் இருந்தோம். எங்கள் மகப்பேறு மருத்துவரும், என் மனைவிக்கு சுகப்பிரசவம் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருப்பதாகவே கூறியிருந்தார். மேலும், ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளர் என்றவகையிலும் எனக்கு உலகம் முழுதும் நடைபெறும் 'தேவையற்ற' பிரசவ அறுவை சிகிச்சைகளின் மீது ஒரு வெறுப்பு உண்டு. ஆனால், என் மனைவிக்கோ பிரசவத்தின் இறுதிப்பகுதியில் தீடிரென்று கருவின் இதயத்துடிப்பு குறையத் தொடங்கிவிட்டது. அது ஒரு நிமிடத்திற்கு 70 - 80 (சராசரியாக 120 - 140 இருக்கும்) துடிப்புகளென மிக அதிகமாகக் குறையத்தொடங்கியதால் குழந்தையைக் காப்பாற்றும் பொருட்டு, வேறுவழியின்றி அறுவை சிகிச்சை செய்யவெண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாக, மருத்துவர் அறுவை சிகிச்சை கூடத்திற்குச் செல்லும் வழியில் என்னிடம் கூறிச் சென்றார். ஆயினும், சுகப்பிரசவம்தான் என்ற ஒருவகையான obession ல் இருந்த என்னால் அச்சமயத்தில் அதை ஜீரணிக்கமுடியவில்லை.


மேலும், குழந்தை பிறக்கும்போது உடனிருந்து அக்குழந்தையின் முதல் அழுகையைப் பார்க்க வேண்டும் என்றுநினைத்திருந்தேன். எங்கள் மருத்துவரும் ஒத்துக்கொண்டிருந்தார். கடைசியில் அறுவை சிகிச்சை என்று சொன்னவுடன் எனக்கு சகலமும் மறந்து, என் ஆசையை அந்த மருத்துவரிடம் (எங்கள் மருத்துவர் அப்போது அருகில் இல்லாததால், வேறு மருத்துவர் பிரசவம் பார்த்தார்) வெளிப்படுத்தாமலே இருந்துவிட்டேன். சிறிது நேரத்தில், ஒரு செவிலியர் என்னை அழைத்து பிறந்த குழந்தையை எனக்குக் காண்பித்தார்கள். குழந்தையைப் பார்த்த மாத்திரத்தில் என்னிடம் பெரிதாக உணர்ச்சி ஏதும் வெளிப்படவில்லை. அப்போதைய மனநிலை அப்படியிருந்தது. குழந்தை பிறந்து இரண்டு வாரங்களாகியும் அவனது முதல் அழுகையைப் பார்க்கமுடியவிலையே என்ற வருத்தம் எனக்கு இன்னும் இருக்கிறது. நாங்கள் நினைத்ததற்கு மாறாக மூன்றே நாட்களில் தாயையும், சேயையும் வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். இப்போது தாயும், சேயும் நல்ல நலமுடன் உள்ளார்கள்.